நடனத்தின் நுணுக்கத்தில் துளிர்விட்ட தெய்வீகம்!
இரண்டு நாட்களாய் இசைக் கச்சேரிகளில் அமர்களப்பட்ட யக்ஷா இன்று மிக நளினமான நடன அமைப்புகளுடன் களைக் கட்டியது. கண்களுக்கு விருந்தாய் அமைந்த இந்ந நிகழ்ச்சியிலிருந்து சில துளிகள்...
நம் கலாச்சாரத்தில் ஆடலும் பாடலும் கூட முக்தியை நோக்கியதே!
இசையின் இன்பத்தில் திளைத்த நம் தியான அன்பர்களுக்கு நடனத்தின் நளினத்தில் இறைவனின் இன்னொரு பரிமாணத்தை உணர்த்த ஒடிசி நடனம்!
ஒடிசி நடனம் பாரம்பரியமாக நம் நாட்டின் கோயில்களில் ஆடப்பட்டு வரும் நடனம்.
Subscribe
கலை என்றாலே சினிமா, பிரபலங்கள் என்றாலே திரைப்பட நடிகர்கள் தான் என்றாகிவிட்ட நிலையில், நம் நாட்டின் பாரம்பரிய கலைகளுக்காக தன் வாழ்நாளையே அர்பணித்த சிறந்த கலைஞர்களை தேடி அவர்களுக்கு மிகுந்த மரியாதையையும் அவர்களது தெய்வீகத்தை வெளிப்படுத்த மேடையையும் அளிக்கிறது இந்த யக்ஷா திருவிழா!
தனது 4 வயதிலிருந்தே நடனமாடும் மாதவி முட்கல் அவர்கள் முதலில் பரதநாட்டியமும், கதக்கும் கற்றாலும் பின்னர் ஒடிசி நடனத்தை தன் வாழ்வாக ஆக்கிக் கொண்டார்.
இவர் இக்கலைக்கு ஆற்றிய சேவைக்காக 1990ம் ஆண்டு, பத்ம ஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.
இன்று இவரது நடனத்தில் மக்கள் சிவனைக் கண்டு மெய் சிலிர்த்திட, மங்களசந்திரன் எனப்படும் நடனத்துடன் துவங்கினார்.
சிவனின் அதிர்வுகள் இந்த பிரபஞ்சத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை தன் நடன அசைவுகளால் இவர் வெளிப்படுத்திய விதம் காண்பதற்கு மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது.
பின்னர் பல்லவியில் இவரது நுணுக்கமான அசைவுகள் ஏற்படுத்திய பிரம்மிப்பில் எவரும் கண் இமைக்க மறந்தனர்.
மெல்லிய கண் அசைவுகள், நுணுக்கமான பாத அசைவுகள் என கண்களுக்கு விருந்தாய் அமைந்தது.
அதன் பிறகு கீத கோவிந்தத்திலிருந்து அஷ்டபதி எனப்படும் பாடலுக்கு இவர் ஆடிய நடனத்தில் கிருஷ்ணனின் புன்னகையையும் கோபப்படும் ராதையின் முகபாவத்தையும் அவரை சமாதானப்படுத்தும் கிருஷ்ணனின் முகக் குறும்பையும் இவர் வெளிப்படுத்திய விதம் அழகுக்கு அழகு சேர்த்தது.