'அரசு விடுமுறை; தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள்; தியேட்டரில் அலைமோதும் கூட்டம்' தொழிலாளர் தினத்தில் இவைமட்டுமே கொண்டாட்ட அறிகுறிகளாகிவிட்ட நிலையில், தொழிலாளர்களின் இன்றைய நிலை குறித்தும், ஈஷாவில் சத்குரு தொழிலாளர்களிடத்தில் கொண்டுள்ள பிணைப்பு குறித்தும் இங்கே ஒரு பார்வை...


தினந்தினம் மே தினம்!

காவிரி வெள்ளப்பெருக்கு
கண்டு நாளாச்சு...
இவனின் வியர்வைப் பெருக்கு
தீராத கதையாச்சு!

சாக்கடையைத் தூர்வாரி
சாலையையும் சலவை செய்து
டீக்கடைக்குப் போனால்,
அங்கே அவனுக்குத் தனி டம்ளர்.

கொத்தனாருக்கு வீடும் டிரைவருக்குக் காரும்
உழவனுக்கு நல்ல சோறும்
கிடைப்ப தெப்போது?!

நாளை இவன் இல்லை என்றால்
நாறிவிடும் நம் பொழப்பு!

இவனுக்காக இன்று,
வீதி எங்கும் பொதுக் கூட்டம்
நாடெங்கும் ஊர்வலங்கள்
நடக்கிறது ஜோராக...

'மே 1' மட்டுமல்ல
எல்லா(மே) அவனின் தினம்தான்.

-  ராஜா கண்ணன், சிவகாசி

 

செருப்போ, சோப்போ, பற்பசையோ, முகம் துடைக்கும் கைக்குட்டையோ நாளை முதல் விற்பனைக்கு இல்லையென்றால், அப்போது நம் நிலை என்னவாகும்? நமது அன்றாட வாழ்வென்பது, எங்கோ உலகின் கடைக்கோடியில் இருக்கும், ஒவ்வொரு மனிதனின் உழைப்பையும் சார்ந்ததாகவே உள்ளது. ஆனால், நாம் உழைப்பாளர்களுக்குத் தகுந்த மதிப்பளிக்கிறோமா?

சேவாதார்...

‘சேவாதார் வந்துட்டாங்களா...?’

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

‘அந்த சேவாதார் அண்ணாகிட்ட இதக் குடுத்திடுங்க...’

இப்படி, ஈஷாவில் ‘சேவாதார்’ என்ற வார்த்தை மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.


நம்மால் மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாது; வெயிலில் செருப்பு இல்லாமல் நாலு அடிகூட எடுத்து வைக்க முடியாது. ஆனால் எங்கோ ஒருவர் நமக்காக செங்கல் சுமக்கிறார். கொளுத்தும் வெயிலில் ஒருவர் ரோடு போடுகிறார். நாம் சாப்பிட்ட தட்டினை ஒருவர் எடுத்துச் சுத்தம் செய்கிறார். மருத்துவமனைகளில் நோயாளிகளின் காயத்தை, தன் கைகளால் சுத்தம் செய்கிறாள் ஒரு பெண்.

இவர்களை நாம் வெறும் தொழிலாளர்களாகப் (லேபர்ஸ்) பார்த்தால், அது நம் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. அவர்களின் உழைப்பில்லாமல், எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் நாம் சொகுசாக வாழ்வதென்பது சாத்தியப்படாது.

‘இந்தாப்பா ஆட்டோ...!’

‘ஏய்... சர்வர்! இந்த டேபிள நல்லா க்ளீன் பண்ணு.’

‘டேய்...! லோடு வந்திருக்கு, மூட்டை எல்லாத்தையும் குடோன்ல இறக்கி வை!’

ஏன் இவர்களை இப்படி அழைக்க வேண்டும்?

‘வேலை செய்யறதுக்கு சம்பளம் வாங்குறாங்கல்ல, அப்புறம் என்ன...?’ என்ற மனோபாவம் நம்மிடையே இருந்தால், நமது வாழ்க்கை வாழ்க்கையாக இல்லாமல் வியாபாரக் கணக்குகளுக்குள் சிக்கிச் சிதைந்துவிடும். நம்மால் செய்ய இயலாத வேலையை இன்னொருவர் செய்கிறார் என்பதை உணர்ந்தாலே, அவர் மீது நிச்சயம் மதிப்பு வரும். நாம் சிறுநீர் கழித்த இடத்தை, ஒரு மனிதர் தன் கைகளால் சுத்தம் செய்யவிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தால், நமது வார்த்தைகளில் தானாக மரியாதை பிறக்கும்.

சேவாதார்...

‘சேவாதார் வந்துட்டாங்களா...?’

‘அந்த சேவாதார் அண்ணாகிட்ட இதக் குடுத்திடுங்க...’

இப்படி, ஈஷாவில் ‘சேவாதார்’ என்ற வார்த்தை மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. ‘யார் இந்த சேவாதார்கள்...?’ ‘இது என்ன புதுப் பதவியா?’ என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம், ஈஷாவில் பணிபுரியும் தொழிலாளர்களை சேவாதார் (சேவை செய்பவர்) என்றே அழைக்கிறோம்.

இது சத்குருவின் வேண்டுகோள்.

ஈஷாவில் ஆதியோகி ஆலயம், சூரியகுண்டம் என தியானலிங்கப் பரிக்கிரமப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக இரவும் பகலும் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல தன்னார்வத் தொண்டர்களின் ஒத்துழைப்பு இருந்தாலும், எங்கெங்கோ வெளிமாநிலத்திலிருந்து, தங்கள் குடுமபங்களைப் பிரிந்து, பிழைப்பு தேடி வந்துள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இல்லையென்றால் ஈஷாவில் நடக்கும் பணிகள் அவ்வளவு எளிதல்ல!

கடுமையான வார்த்தைகளுடன் விரட்டி விரட்டி வேலை வாங்கும் மேஸ்திரிகள் இங்கே கிடையாது. ஏதோ வாங்குகிற சம்பளத்திற்கு வேலை செய்வோம் என்றில்லாமல், இங்கே நடக்கும் பணியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டுள்ள சேவாதார்கள், தங்களின் முழு விருப்பத்தோடு சிரித்த முகங்களுடன் பணியாற்றுவதைக் காணமுடிகிறது.

பல ஆண்டுகளாக ஈஷாவில் துப்புரவுப் பணிபுரியும் பெரியவர் ‘கருப்பு’. தரிசன நேரத்தின்போது, சேவாதார் கருப்பைக் கடந்து செல்லும் சத்குரு, எப்போதும் ஸ்பெஷலாக அவரை நமஸ்காரம் செய்துவிட்டுப் போவார்.

“மூனு மாசத்துக்கு முன்னால, ‘என்னம்மா முகம் ரொம்ப வாடிப்போயிருக்கு, எதாவது கவலையா?’ ன்னு போற வழியில ஏங்கிட்ட கேட்டாரு குருசாமி (சத்குரு).

‘நீங்க இருக்கும்போது எனக்கென்ன சாமி கவல...’ன்னு நான் சொன்னவுடனே, அப்புடி சிரிக்குறாருய்யா குருசாமி! அவரு அப்படிக் கேட்டவுடனே எங் கவலயெல்லாம் பறந்து போயிருச்சுயா!” என உணர்ச்சி பொங்கக் கூறிக்கொண்டிருந்த அந்த சேவாதார் அம்மாவிற்கு 60 வயதிற்கு மேல் இருக்கும்.

ஈஷாவில் தொழிலாளர்கள் என்றோ, கூலிகள் என்றோ எந்தப் பிரிவினையும் இல்லை, எல்லோரும் தங்களால் முடிந்த உழைப்பை முழு ஈடுபாட்டுடன் கொடுத்து, புன்னகை பூக்கும் முகங்களுடன் வலம் வருகிறார்கள். உங்களுக்கு முடி திருத்தம் செய்பவரை சேவாதார் என அழைப்பதற்கு சங்கோஜமாகக் கருதினால், அண்ணா என்றோ, தம்பி என்றோ அழைக்கலாம். உண்மையில், நீங்கள் அப்படி அழைக்கும்போது, உங்கள் மனமும் முகமும் ஒருவித இறுக்கத்திலிருந்து விடுபடுவதை உணர முடியும்.

இந்த உலகில் முதலாளிகள் என்று யாருமில்லை, நாம் செய்யும் முதலீடுகள் எதுவாயினும் இந்த இயற்கையிலிருந்து எடுக்கப்பட்டதே!

நம் அனைவருக்கும் ஒரே முதலாளி, இயற்கை மட்டும்தான்!


இந்தக் கட்டுரை "காட்டுப் பூ" இதழில் வெளியாகியுள்ளது.
ஆன் லைனில் 'காட்டுப் பூ' சந்தா செலுத்த...