என்னதான் கர்நாடக இசைக் கச்சேரிகளும், ஆண்டாளின் திருப்பாவை பாடல்களும் மார்கழியின் மகத்துவத்தை உணர்த்தினாலும், பலருக்கு மார்கழி என்றால் குளிர், பனி, சைனஸ், ஜலதோஷம் தொந்தரவுதான் ஞாபகம் வருகிறது! ஆனால் உடல்நலம் குறித்த சில விஷயங்களைக் கற்றுக்கொண்டால் 'மாதங்களில் அவள் மார்கழி' என பெண்ணை ஒரு கவிஞன் கொண்டாடியது போல் நீங்களும் மார்கழியைக் கொண்டாடலாம் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது!

டாக்டர். சாட்சி சுரேந்தர்:

ஆறு வகைக் காலங்களில் தற்போது கார்காலத்தில் இருந்து முன்பனிக் காலத்திற்கு (கார்த்திகை - மார்கழி) மாறிக் கொண்டிருக்கிறோம். அதிகாலைப் பனியில் குளித்து முடித்து பல வண்ண மாக்கோலம் இடுவதும்; இறை நாமம் சொல்லி வழிபாட்டுத் தலங்களில் கூட்டு பஜனைகளில் ஈடுபடுவதும்; மாலை வேளைகளில் சங்கீதம், நாட்டியம் என கலைகளை அரங்கேற்றி அவற்றில் லயிப்பதும் என ரசனையாய் நகரும் மார்கழிப்பொழுதுகளின் செயல்முறைகளை உற்று நோக்கினால், பரந்த ஆன்மீக அறிவியலின் பின்புலத்தை அறியலாம்.

தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்திற்கு காலம் பெயர்ச்சி செய்யும் வேளையில் பக்தி எனும் விதையை மக்கள் மனதில் தீவிரமாக மார்கழியில் விதைத்து விட்டால், தையில் அதன் பலன்களை அறுவடை செய்யலாம் என்கிற ஒரு மென்மையான ஆன்மீக செயல்முறைதான் மார்கழியோ என எண்ணத் தோன்றுகிறது.

நவீன மார்கழி!

கல்லூரிகளின் ரங்கோலி போட்டியைத் தவிர வண்ணக் கோலங்கள் இட ஐ.போன் கால மாணவிகளுக்கும், சாஃப்ட்வேர் யுவதிகளுக்கும் எங்கே நேரம்? ஆண்களுக்கோ அதிகாலைக் குளிரில் போர்வையை இழுத்துப் போர்த்தி தூங்குவதில்தான் எத்தனை இன்பம், அடியேன் உட்பட! L.R. ஈஸ்வரி, புஷ்பவனம் குப்புசாமி என தெருமுனை கோவில் ஸ்பீக்கர்கள், பக்திப் பாடல்களை உச்ச ஸ்தாயியில் வீட்டினுள் கொட்டினாலும், நம்மில் பலரும் அசருவதில்லை!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குளிரில் நடுங்கும் ஆரோக்கியம்!

இவ்வாறு மார்கழிக் கால ஆன்மீக அடிப்படையிலிருந்து நாம் சற்று தொலைவில் வந்தாலும் கூட, சமீப வருடங்களில் நம் ஆரோக்கிய அடிப்படையும் அல்லவா குளிரில் ஆட்டம் காண்கிறது! ஆம், 50% குழந்தைகளும், 30% பெரியவர்களும் பனிக்காலங்களில் சுவாசம் அல்லது மூட்டுவலி அல்லது தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்களாம்.

  • காது, மூக்கு தொண்டையில் கிருமித் தொற்று (Infection)
  • சைனஸ், அதனால் உண்டாகும் தலைவலி, மூக்கடைப்பு
  • அலர்ஜியால் தும்மல், மூக்கில் நீர்வடிதல்
  • ஆஸ்துமா, வீசிங்

போன்றவைக்கு வயதானோர், குழந்தைகள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தோர் எளிதாக சிக்குகின்றனர். பருவ நிலை மாற்றங்களால் ஏற்படும், இயல்புக்கு அதிகமான பனிப் பொழிவும், பெருகிவரும் மோட்டார், தொழிற்சாலை புகைக்கு ஏற்ற விகிதத்தில் பசுமை பரப்பு பெருகாமல் இருப்பதும், சுவாச பிரச்சனைகள் ரூபத்தில் பெரும்பாலானோரை வீழ்த்தி விடுகின்றன. தொண்டைக் கம்மல், சளி எனத் தொடங்கும் இவை சிலருக்குக் காய்ச்சல், நெஞ்சிரைப்பு எனத் தீவிரமடையலாம்.

இயல்பிலேயே, குளிர்ச்சி அதிகமாகும் சமயம், உடலின் மூட்டுகள் இறுகும் தன்மை (Joint Stiffness) அடைகின்றன. ஏற்கனவே மூட்டு வலி தொடர்புடைய தொந்தரவுகள் இருப்பின் குளிர் காலங்களில் வலி, வீக்கம் அதிகரிக்கின்றன.

காற்றின் ஈரப்பதம் குறைவதாலும், உடல் வெப்பம் அதிகரிப்பதாலும் சருமத்தில் வறட்சி, வெடிப்பு, அரிப்பு ஏற்படுவதும், கரப்பான் (eczema), காளாஞ் சகப்படை (psoriasis) முதலிய தோல் நோய்கள் இருந்தால், அவற்றின் தீவிரத்தை அதிகரிப்பதும் பனிக்காலத்தின் இயல்பு.

நோய் தடுக்கும் உபாயங்கள்:

சுவாசக் கோளாறுகள்:

உடல் வெப்பத்தைத் தக்க வைத்து, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக் கூடிய உணவு முறைகளை அறிந்து கொள்வது அவசியம்.

  • “பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்கிறது தமிழர் வாழ்வியல். சுவாசக் கோளாறுகளை தடுக்கவும் வந்த பின்னரும், பிற மருந்துகளோடு துணை மருந்தாய்க் கொள்ள மிகவும் ஏற்றது மிளகு.
  • 3-5 மிளகுகளை இரவு வேளையில் தேனில் ஊற வைத்து (8-10 மணி நேரம்), பின் அவற்றை வெறும் வயிற்றில் மென்று உண்டால் சிறந்த பலன்களை அடையலாம். தேன், மஞ்சள் வேம்புடன் சேர்த்து உட்கொள்வதும் நல்லது. மேலும் சமைக்கும் குழம்பு, ரசம், பொரியலில் கூட மிளகுத் தூளை தூவி உபயோகிப்பது கபத்தைக் கட்டுப்படுத்தும்.
  • தொண்டை கம்மலுக்கு தாளிசபத்திரி மெல்வதும், தலை பாரத்திற்கு சுக்கு, மஞ்சள் அரைத்துப் பற்று போடுவதும், ஜலதோஷம் கூடிய சுரத்திற்கு சுக்கு, மிளகு, துளசி, அதிமதுரம், சிற்றரத்தை சம அளவில் எடுத்து 4 பங்கு நீர்விட்டு கொதிக்கவிட்டு ஒரு பங்காய் வற்ற வைத்து எடுப்பதும் எளிய முறை கை வைத்தியங்கள்.
  • வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவை உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. இவை தோல் பராமரிப்பிற்கும் ஏற்றது.
  • கோதுமை உணவுகள், பப்பாளி, அன்னாசி, கொள்ளு போன்றவை உடலின் வெப்பத்தை தக்கவைக்கிறது. இவை சுவாச நோயாளிகளுக்கு ஏற்றது.
  • உணவை கூடியமட்டும் சூடாக உண்பதும், குடிநீரை காய்ச்சிக் குடிப்பதும் கிருமி தொற்றை பெருமளவு குறைக்கும். அது கேன்களின் so called மினரல் வாட்டராக இருந்தாலும் சரி.
  • அதிகாலை பனியிலிருந்து காக்க, மஃப்ளர் உதவியுடன் காது மடல்களை அடைத்துக் கொள்வது நலம்.
  • சுவாச ஆரோக்கியத்திற்கு தினசரி பிராணாயாம பயிற்சிகளை நவீன அறிவியலும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துவிட்டது.

தவிர்க்க வேண்டியவை

  • ஃப்ரிட்ஜ் உணவுகள், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள். “இதுகூட தெரியாதா டாக்டர்?” என்போருக்கு, ‘உங்களுக்கு தெரிந்திருப்பதைவிட அவற்றை உட்கொள்ளாது இருப்பதில்தான் விஷயம் இருக்கிறது பாஸ், இது நினைவூட்டல்தான்!’
  • வாழைப்பழங்கள் (பூவன்பழம், பச்சை வாழை), திராட்சை
  • பீர்க்கன், பூசணி, சுரைக்காய் போன்ற நீர்க் காய்கறிகள்.
  • பால். பால் பதார்த்தங்களின் கோழை உருவாக்கும் தன்மையால் அவற்றின் பக்கமே தலை வைக்காதிருப்பது சர்வ உத்தமம்! ‘உடல் மண்ணுக்கு, உயிர் பல மாட்டு பாக்கெட் பாலுக்கு’ என்கிற வகையறாவைச் சேர்ந்தவர்கள், குறைந்தபட்சம் மிளகு, மஞ்சள் தூளை பாலில் சேர்த்து பருகவும்.

மேற்கண்ட எளிய வழிகளில் சுவாச பிரச்சனைகளைக் கூடியவரை தவிர்க்க முடியும். இதைத் தாண்டி நோய் தீவிரமடைந்தால் தகுந்த மருத்துவ ஆலோசனை அவசியம்.

சரும பராமரிப்பு

  • சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வுத் தன்மையை பராமரிக்கவும், தினசரி குளிப்பதற்கு முன் கை, கால், முகம், கழுத்துப் பகுதிகளில் தேங்காய் எண்ணெய் அல்லது அது சார்ந்த தரமான மூலிகை எண்ணெயைப் பயன்படுத்தலாம். தரமான எண்ணெய் என்பதற்கு எண்ணெய் புட்டியில், GMP Certified என்கிற வாசகம் ஒரு குறைந்தபட்ச உத்திரவாதம். குளிக்க வெதுவெதுப்பான நீர் சிறந்தது.
  • நீங்கள் உபயோகிக்கும் சவர்க்காரக் கட்டியினால் (அதாங்க டமில்ல சோப்பு...!) வறட்சி ஏற்படுமாயின், கடலை மாவு, பச்சை பயறு மாவு கலந்த குளியல் பொடிகளைப் பயன்படுத்தலாம். மேலும், வறட்சி நீடித்தால் மருத்துவர் ஆலோசனை தேவை.
  • குளித்தபின் கிளிசரின், பெட்ரொலியம் ஜெல்லி, சார்பிடால் சார்ந்த Moisturising Creamகளை உபயோகிக்கலாம். ஆய்வு முடிவுகளில், இவற்றின் வேலையை நம் முதல் தர தேங்காய் எண்ணெயே எளிதாக செய்து முடிக்கின்றது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. எப்போதும், உடலின் வெளிப்பாகங்களில் எண்ணெய் பற்றை தக்கவைப்பது சிறந்தது.
  • தோல் வறட்சியைத் தாண்டி, தோல் நோய்கள் இருப்பின், ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை நாடுவது அவசியம்.

மூட்டுகளின் குளிர்கால பராமரிப்பு

  • உடல் எனும் இயந்திரத்தின் நட்டு, போல்ட்டுக்களான மூட்டுகளுக்கு பனிக்காலத்தில் ஏற்படும் விரைப்புத் தன்மையைக் குறைத்து, அவற்றின் இலகுவான அசைவுகளுக்கு, நல்லெண்ணையை சிகப்பு மிளகாய், சீரகம் சேர்த்து காய்ச்சி வைத்துக் கொள்ளலாம். தினசரி குளிப்பதற்கு முன், இந்த எண்ணெயை மூட்டுப் பகுதிகளில் தேய்த்து, 10 நிமிடம் ஊற வைத்த பின் வெந்நீரில் குளிப்பது நிச்சயம் கைமேல் பலன் தரும்.
  • வாழைக்காய், புளி, குளிர்ச்சியான உணவு, கிழங்கு வகைகளை கூடிய வரை உணவில் குறைத்துக் கொள்வது வலி, வீக்கத்தை கட்டுப்படுத்த துணையாய் இருக்கும் என்கிறது சித்த உணவியல்.
  • எள்ளு, முளை கட்டிய பயறு வகைகள், கீரை வகைகள், முந்திரி, அத்தி, ஊற வைத்த கடலை, பாதாம் போன்றவை சைவ உணவு வகைகளில் மூட்டுகள் வலுப்பட உதவுகின்றன.
  • ஆசனப் பயிற்சிகளை முறையாய் கற்று தினசரி செய்தலும், ஒவ்வொரு மூட்டுக்கு ஏற்ற குறிப்பிட்ட வகை எளிமையான தளர்வு பயிற்சிகளை பிசியோதெரபி வல்லுனரை அணுகி கற்றுக்கொண்டு பின்பற்றினால், மூட்டுகள் குறித்த கவலையே தேவை இல்லை.
  • ஈஷா ஹட யோகப் பயிற்சிகளின் ஓர் அங்கமான உபயோகா பயிற்சிகளை மூட்டுகள் பலப்பட பரிந்துரைக்கிறேன்.

ஆஸ்பிட்டல் சீசனா? ஆன்மீக சீசனா?

பொதுவாக மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், கால்களில் ரெக்கை கட்டிக் கொண்டு பறக்கும் காலம் வருடத்தின் இறுதியான நவம்பர், டிசம்பர் மாதங்கள்தான். மார்கழியில்தான் பெரும்பான்மை மக்கள் சிறு, சிறு உபாதைகளுக்காவது மருத்துவமனைகளை மொய்த்த வண்ணம் இருக்கிறோம். ஆன்மீக சீசனாய் இருந்த மார்கழி தற்போது ஆஸ்பிட்டல் சீசனாய் மாறிவிட்டதே!

நம்மிடையே குளிர்கால ஆரோக்கியத்தின் உணவு, பயிற்சி குறித்த சிறு விழிப்புணர்வு ஏற்பட்டால் கூட, இந்த நிலையில் பெருமளவு மாற்றத்தை நாம் காணமுடியும்! ஜலதோஷம், மூட்டு வலி தாண்டி, பாடல், ஆடல் என உற்சாகமாய் வரவேற்கலாம், குளிரை!

ஈஷா ஆரோக்யா மையங்களில் பனிக்கால ஆரோக்கிய பராமரிப்பு குறித்தும், தோல், மூட்டு, சுவாச நோய் சிகிச்சைக்கும், நவீன மற்றும் சித்த மருத்துவரின் ஒருங்கிணைந்த மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

ஈஷா ஆரோக்யா மருத்துவ மையங்கள்:

சென்னை (044) 42128847; 94425 90099
கோவை 83000 55555; (0422) 4218852
சேலம் 94425 48852; (0427) 2333232