இரண்டாம் நாள் யக்ஷா திருவிழா நிகழ்வுகள் குறித்து சில வரிகள்...

தெய்வீக இசை மற்றும் நாட்டியத் திருவிழாவான 'யக்ஷா' கொண்டாட்டத்தில் இரண்டாம் நாள் இரவான இன்று, மல்லாடி சகோதரர்களின் கர்நாடக குரலிசை நிகழ்ச்சி அரங்கேறியது!

மாலை 6.50 மணியளவில் ஆதியோகி சிலை முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை, சத்குருவுடன் ஆயிரக்கணக்கான மக்கள் இரசித்து மகிழ்ந்தனர். இன்றைய நிகழ்ச்சியில், மல்லாடி சகோதரர்கள் திரு.ஸ்ரீராம் பிரசாத் மற்றும் ரவி ஆகிய இருவரும் வழங்கிய கர்நாடக குரலிசை நிகழ்ச்சி இசைப் பிரியர்களுக்கு நல்ல இசைவிருந்தாய் அமைந்தது. கர்நாடக இசையில் தாங்கள் கொண்டுள்ள தேர்ச்சியின் காரணமாக அங்கிருந்த அனைவரையும் தங்கள் இசையால் கட்டிப்போட்டனர் சகோதரர்கள்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து, வருகைதந்த அனைவருக்கும் இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த யக்ஷா திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.

மூன்றாம் நாள் விழாவான நாளை திரு. அஜோய் சக்ரபோர்த்தி அவர்களின் பாரம்பரிய இந்துஸ்தானி குரலிசை நிகழ்ச்சி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.