இந்த வார ஈஷா நிகழ்வுகள் சில, சுருக்கமாகவும் சுவையாகவும் இங்கே...
ஈஷாவில் யந்திர வைபவம்
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று ஈஷாவில் ‘யந்திர வைபவம்’ நிகழ்ச்சி வெகு சிறப்பாக நிகழ்ந்தேறியது. குடும்பத்திலுள்ள அனைவரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்விற்காகவும் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவி யந்திரங்களை சத்குருவிடமிருந்து நேரடியாக பெறும் அரிய வாய்ப்பினை அன்று பலர் பெற்றனர். தேவி யந்திரங்கள் மூலம் பைரவியின் அருளை தங்கள் வீட்டிற்கும் தொழிற்கூடங்களுக்கும் எடுத்துச்செல்லும் பேற்றினைப் பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
நன்மை உருவம் வழங்கும் நிகழ்ச்சி!
ஈஷாங்கா-7%த்தில் ஒரு அங்கமாக இருப்பவர்கள் தங்களது வருமானத்தில் 7%த்தை தங்கள் விருப்பத்துடன் முன்வந்து வழங்குவதன் மூலம் ஈஷாவின் பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்கு தங்கள் பங்களிப்பை தொடர்ந்து வழங்குகிறார்கள்.
அனைத்து ஈஷாங்கா பங்காளர்களுக்கும் ‘நன்மை உருவம்’ என்ற சக்தி உருவத்தை வருடம் ஒருமுறை சத்குரு வழங்குகிறார். இந்த ஆண்டு நன்மை உருவம் வழங்கும் நிகழ்ச்சி ஜூலை 30ல் ஈஷா யோகா மையத்தில் சிறப்பாக நிகழ்ந்தது. இதில் 2000க்கும் மேற்பட்டோர் நன்மை உருவத்தை பெற்றதோடு, நன்மை உருவம் செயல்முறைக்கான தீட்சையையும் சத்குருவிடமிருந்து பெற்றனர்.
விழுப்புரத்தில் பசுமைப் பள்ளி இயக்கம்!
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து துவங்கியதுதான் 'பசுமைப்பள்ளி இயக்கம்'. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தை மையப்படுத்தி செயல்படுகிறது. இந்த ஆண்டு கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று, சென்னை பாஃமேல் (Pharmaell) நிறுவனத்தின் உதவியுடன் விழுப்புரம் மாவட்டத்தில் பசுமைப் பள்ளி இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் தொடர்புகொள்ளப்பட்டு, இறுதியில் குறிப்பிட்ட பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு பங்கேற்ற 175 பள்ளிகளில் 40 பள்ளிகள் சேம்பியன் பசுமைப் பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.
Subscribe
இத்திட்ட்த்தின் மூலம் மாணவர்கள் தங்கள் பள்ளியில் சிறிய நாற்றுப்பண்ணை உருவாக்கி, மரக்கன்றுகளை உற்பத்தி செய்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் இந்த செயல்திட்டத்தின் மூலம் 2000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவையான விதைகள், பிளாஸ்டிக் பைகள், தொழில்நுட்ப உதவி, நிகழ்விற்குப் பின்னரான கண்காணிப்பு ஆகியவை ஈஷா பசுமைக் கரங்களால் வழங்கப்படுகிறது. இதன்மூலம் மரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் பெறுகிறார்கள்.
ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி!
இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தும் பசுமைக் கரங்களின் முயற்சியின்பேரில், கடந்த ஜூலை 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் திருப்பூரிலுள்ள விக்னேஷ் மஹாலில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. உற்பத்தி செய்த பொருட்களை சேமித்தல், இயற்கை வழியில் பூச்சி தடுப்பு, நீர் மேலாணமை, மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல், 50க்கும் மேற்பட்ட ரகங்களில் நெல் உற்பத்தி மற்றும் நாட்டு விதைகளைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு பயிற்சிகளை வல்லுநர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்கள். சுமார் 700 விவசாயிகள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தெளியும்வகையில் கேள்வி-பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அக்ரி இன்டெக்ஸ் விவசாய கண்காட்சியில் ஈஷா!
கோவையில் கடந்த ஜூலை 15 முதல் 18 வரை, 4 நாட்கள் நிகழ்ந்த அக்ரி இன்டெக்ஸ் என்ற சர்வதேச விவசாய கண்காட்சியில் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் பங்கேற்றது. 45 விதமான மரக் கன்றுகளை பார்வைக்கு வைத்த பசுமைக் கரங்கள், பார்வையாளார்களுக்கு சுமார் 18,830 மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினர். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 2 லட்சம் பேர் இந்த கண்காட்சியைப் பார்வையிட்டுச் சென்றனர்.
வேலூர் வேளாண் கண்காட்சியில் ஈஷா!
வேலூரில் ஜூலை 22 முதல் 25 வரை, தினமலர் நாளிதழ் நடத்திய 3 நாட்கள் வேளாண் கண்காட்சியில் ஈஷா பசுமைக் கரங்கள் பங்கேற்றது. 50 வகையான மரக்கன்றுகளை பார்வைக்கு வைத்த பசுமைக் கரங்கள், சுமார் 3,500 மரக்கன்றுகளை பார்வையாளர்களுக்கு வழங்கியது.