முதியவர்களின் மன உறுதியை பறைசாற்றும் 5 கதைகள்!
கிராமப்புற சமுதாயங்களில் வாழும் பல முதியவர்கள் தங்களின் உடல் ஒத்துழைக்கும் வரை அவர்களால் இயன்ற அளவு உழைத்து தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்தக் கொரோனா வைரஸ் காலத்தில் அந்த வாய்ப்பு அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. இது அவர்கள் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துவிட்டது. இந்த நோய்த்தொற்று ஏற்படுத்திய பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த முதியவர்கள் வலிமையோடு சேர்ந்து நின்று நம்பிக்கையும் கருணையையும் விதைத்து இந்த நிச்சயமற்ற காலத்திலும் அனைவருக்கும் ஊக்கமாக விளங்குகின்றனர்.
சமுதாயத்தின் அனைத்து செயல்பாடுகளையும் தலைகீழாகத் திருப்பிப் போட்டுள்ள இந்த நோய்த்தொற்று காலம், முதியவர்களுக்கு தனிப்பட்ட சவால்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுபோன்ற காலத்தில் அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பும் எதிர்த்து நிற்கும் மனோதிடமும் தடுமாற்றமே இல்லாமல் இருக்கிறது. குறையாத உற்சாகத்துடன் அனைவருக்கும் ஊக்கமாய் இருப்பதிலிருந்து கருணையை வெளிப்படுத்தியபடி எங்களுக்கு முன்னோடியாக இருப்பது வரை வைரஸைவெல்வோம் என்ற நோக்கில் இந்த முதியவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். நம்மை பராமரித்த முதிய தலைமுறையினரின் ஊக்கமளிக்கும் ஐந்து சக்திவாய்ந்த கதைகள் இதோ.
1. கருணை கற்றுத்தரும் பாடம்
கோவையின் புறநகர் பகுதியிலுள்ள நரசீபுரம் என்ற கிராமத்தில் உள்ளூர் மக்களும் தன்னார்வலர்களும் ஒரு தனித்துவமான சம்பவத்தை கண்டனர். அது அவர்களுக்கு அன்பு மற்றும் பரிவின் விலைமதிப்புமிக்க பாடத்தை கற்றுத் தந்தது. கிராம மக்களுக்கு உணவு பொட்டலங்களை நமது தன்னார்வலர்கள் விநியோகித்து வந்தபோது, குயிலாத்தாள் என்ற 80 வயதான மூதாட்டிக்கு உணவு பொட்டலம் கிடைக்கப்பெறவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தனர். அப்போது 65 வயதான ராமசாமி என்பவர் முன்னே வந்து எந்த தயக்கமுமின்றி தன்னுடைய உணவு பொட்டலத்தை குயிலாத்தாளுக்கு வழங்கினார். அவருடைய இந்த இரக்க குணத்தைக் கண்டு, அருகிலிருந்த மற்றவர்கள் தங்களுடைய பங்கிலிருந்த உணவை அவருடன் பகிர்ந்து கொண்டனர்.
2. எல்லா முரண்பாடுகளுக்கும் எதிரான போராட்டம்
விராலியூரைச் சார்ந்த இந்த வயதான முதியவருக்கு ஊரடங்கு காலமும் அவருடைய தீராத கால் வலியும் நம்பமுடியாத அளவுக்கு மிகவும் இக்கட்டானச் சூழலை அவருக்கு உருவாக்கிவிட்டது. நமது தன்னார்வலர்கள் நிலவேம்பு கசாயத்தை விநியோகிப்பதற்காக அவரின் வீட்டுக்கு சென்றபோது, அவர் தன் உடல்நிலை குறித்தும், தான் இருக்கும் இக்கட்டானச் சூழலை பற்றியும் அவர்களிடம் பகிர்ந்துகொண்டார். அவருடைய மகன் 10 வருடங்களுக்கு முன்பாகவே வீட்டைவிட்டுச் சென்றுவிட்டபோதிலும், இத்தனை நாட்களாக தன்னையும் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் பயின்று வரும் தன் பேத்தியையும் அவர்தான் பராமரித்து வந்திருக்கிறார். நமது தன்னார்வலர்கள் தங்களின் வாகனத்தை வழங்கி கிராம தன்னார்வலர்கள் இருவரின் உதவியோடு அவரை நரசீபுரம் முதன்மை சுகாதார மையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்ற அந்த முதியவர் கொஞ்சம் உடல் திடம்பெற்று, தன் பேத்தியை கவனித்துக்கொள்ளும் பொருட்டு அதே நாளில் வீடு திரும்பினார்.
Subscribe
3. குடும்பம் போன்ற பழக்கம்
புத்தூரில் தன் தினசரி பணிகளுக்காக நமது தன்னார்வலர் பிரதாப் அங்கு சென்றபோது, ஒரு வயதான மூதாட்டி அவரை அணுகினார். அந்த மூதாட்டி அவரிடம் மிகப் பழக்கப்பட்டவர் போல பேசியபோது, அந்த சந்திப்பு அவருக்கு மிக ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தன் துயரங்களை பிரதாப்போடு பகிர்ந்துகொண்ட அந்த மூதாட்டி, தன்னால் சரியாக நடக்க முடியாத சூழ்நிலையை விளக்கியதோடு, எழுந்திருக்கும் போதெல்லாம் விழுந்து விடுவோமோ என்பதுபோல உணர்வதாகக் கூறினார்.
"நாளைக்கு வரும்போது எனக்கு ஒரு கைத்தடி கொண்டு வா" என பிரதாப்பிடம் அவர் கேட்டுக்கொண்டார். பின்னர் மற்ற தன்னார்வலர்களைச் சந்தித்தபோது, அந்த மூதாட்டி தன்னை ஒரு குடும்ப உறுப்பினராக உணர்த்து உரையாடியதைப் பற்றி குறிப்பிட்டார். எல்லா கிராமத்தினரும் ஈஷா தன்னார்வலர்களை இப்போது தங்களின் சுற்றமாகவே கருதுவதாக அவர் கூறி சிலாகித்தார். இந்த உணர்வின் உந்துதலாலேயே அந்த மூதாட்டி அவரிடம் அந்த உதவியைக் கேட்டிருக்க வேண்டும் - முக்கியமாக உதவிக்கு யாரும் இல்லாத இந்த கடுமையான காலத்தில். அடுத்த நாளே தன்னார்வலர்கள் அவருக்கு கைத்தடியை வாங்கிக் கொடுத்தபோது, அவர் மறுபடி நடக்க ஆரம்பித்தார்.
4. மகராசன் நல்லா இருக்கணும்
எந்தவொரு உத்வேகத்தில் நமது தன்னார்வலர்கள் - கொளுத்தும் வெயிலிலும் துரிதகதியில் ஆபத்தான இந்த சூழ்நிலையில் - தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள் என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா?
"மகராசன் நல்லா இருக்கணும்" - பதிலுக்கு கொடுப்பதற்கு ஏதும் இல்லாத கிராமப்புற சமுதாயங்களில் வாழும் முதியவர்களின் இந்த ஆசிதான் அவர்களை இந்த அளவு உத்வேகத்தோடு பணியாற்ற வைக்கிறது.
5. ஒருமைப்பாடும் கருணையும்
ஜாகீர்நாயக்கன்பாளையத்தில் ஒரு வயதான மூதாட்டி நம் தன்னார்வலர்களோடு அவருக்கு இருக்கும் ஒருமைப்பாட்டை பறைசாற்றும் வண்ணம் ஒரு சிறிய நன்கொடையை அளிக்க விரும்பினார். அவர் மிக சிரத்தையோடு சில ரப்பர் பேண்ட்களை சேர்ந்து வைத்திருந்தார். களப்பணி புரியும் தன்னார்வலர்கள் அந்த பகுதிக்கு உணவும் நிலவேம்பு கசாயமும் வழங்க சென்றபோது, அந்த மூதாட்டி அவர்களிடம் அந்த ரப்பர் பேண்ட்களைக் கொடுத்தார். "நான் இவற்றை உங்களுக்காக சேகரித்து வைத்துள்ளேன். எங்களுக்கு நீங்கள் தினமும் கொடுக்கும் உணவு பொட்டலங்களைக் கட்ட இவற்றை உபயோகித்துக் கொள்ளுங்கள்," என்று அந்த மூதாட்டி கூறினார்.
தேவராயபுரத்தில் வாழும் ஒரு முதியவரின் மன உறுதியைக் கண்டு நமது தன்னார்வலர்கள் வியந்து போனார்கள். அந்த தள்ளாத வயதிலும் சில கிலோமீட்டர் தூரம் அவர் நம் தன்னார்வலர்களின் வேகத்துக்கு ஈடு கொடுத்து சென்று, அங்குள்ள மற்ற கிராம மக்களுக்கு உணவு மற்றும் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்ய உதவினார்.
இன்றைய தலைமுறைக்காக தங்களுடைய நேரத்தையும் கனவையும் தியாகம் செய்த இவர்களுக்கு இப்போதுதான் முன்னெப்போதையும் விட நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். வயதான காலத்தில் கனவுகள் தடைபடும் என்று மக்கள் தவறாக எண்ணுகிறார்கள். இந்த முதியவர்கள் தங்கள் மக்களின் நாளைய சிறப்பான வாழ்க்கைக்காக இப்போதும் கனவு காண்கிறார்கள்.