வைரஸை வெல்வோம் - களத்தில் இறங்கிய கல்லூரி மாணவர்கள்!
அருகிலுள்ள பல கல்லூரிகளைச் சேர்ந்த தன்னலமற்ற மாணவ மாணவியர் தங்கள் சமூகங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். உணவு பரிமாறுவது, உணவுப் பொட்டலங்களைக் கட்டுவது, உணவுப் பொட்டலங்களைக் கொண்டுசெல்வது மற்றும் மூத்த குடிமக்களுக்கும் பாதிக்கப்படக்கூடிய மற்றவர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பது என கால்களில் சக்கரங்களைக் கட்டியதுபோல இந்த மாணவ தன்னார்வத் தொண்டர்கள் எப்போதும் துடிப்புடன் செயலாற்றுகிறார்கள்.
சமூகம் முதன்மையாக நிற்கிறது…
செம்மேடு கிராமத்தில் வசிக்கும் மாணவி மஞ்சுளா ஒரு ஆடை வடிவமைப்பாளராக விரும்புகிறார். தனது கல்லூரிப் பட்டம் பெறுவதற்காக அவர் தற்போது ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதோடு, தனது குடும்பத்தினருக்காக அன்றாட வீட்டு வேலைகளைச் செய்வதிலும் உதவுகிறார். ஆனால், இந்த மாணவி அத்துடன் நின்றுவிடாமல், தனது சமூகத்தில் ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவுவதற்காக தனது செயலில் இறங்கியுள்ளார். சமூகம் தன் கண்முன்னே ஒரு நெருக்கடியை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும்போது, தான் ஓர் ஓரமாக உட்கார்ந்துகொள்ள இயலாது என்பதை மஞ்சுளா புரிந்துகொண்டார்.
அவரது தந்தை ஒரு பெயிண்ட்டர், அவரது தாயார் தினசரி கூலித் தொழிலாளி மற்றும் அவரது சகோதரி 11ம் வகுப்பில் படிக்கிறார். மஞ்சுளாவைப் போலவே, இந்த மாணவர்களில் சிலர் தன்னார்வத் தொண்டு புரிவதற்கான வாய்ப்பைப் பற்றி அறிந்தபோது, அவர்களின் உத்வேகம் மிகுந்து எழுந்தது. அவர்களில் பலர் மாதக்கணக்கில் ஈஷா குழுவில் சேவையாற்றி வருகின்றனர்.
Subscribe
சமூகத்தின் பாதுகாவலர்
ஈச்சனாரியைச் சேர்ந்த மாணவர் ஹரிஹரசுதன் எப்போதுமே ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுகளுடன் இருக்கிறார். ஒரு பிபிஏ மாணவரான இவர் தற்போது தனது தன்னார்வத் தொண்டின் மூலம் சமூகத்தின் பாதுகாவலராக இருப்பதாக உணர்கிறார். ஈஷாவின் களப்பணி குழுவுடன் இணைந்திருப்பதை அவர் பெருமையாக கருதுகிறார். விளையாட்டுகளில் அதிக ஆர்வமுள்ள இவரது தந்தை பூலுவப்பட்டி பஞ்சாயத்தில் பணிபுரிகிறார், அவரது தாயார் தினசரி கூலி தொழிலாளி.
கோவையிலுள்ள சேரன் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் படிக்கும் மாணவர் நந்தக்குமாரைப் பொறுத்தவரை, வயதானவர்களுக்கு உதவுவது அவரது இதயத்திற்கு நெருக்கமான ஒரு செயலாகும். நான்காம் ஆண்டு பிசியோதெரபி மாணவரான இவர், தனது தந்தை, தாய், தம்பி மற்றும் பாட்டியுடன் ஆலந்துரையில் வசிக்கிறார். ஈஷாவுக்காக தன்னார்வத் தொண்டு செய்வதற்கான வாய்ப்பைப் பற்றி அவரது நண்பர் அரவிந்த் அவரிடம் கூறியபோது, அவர் சற்றும் யோசிக்கவில்லை. அவர் இப்போது ஈஷாவின் நிவாரணப் பணிகளில் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கிறார். உணவை பொட்டலம் கட்டுவதோடு, ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை உணவுப் பொட்டலங்களை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கிறார்.
அவர்களைப் போலவே, நல்லூர்வயலைச் சேர்ந்த ரமேஷ், மத்வராயபுரத்தில் வசிக்கும் ரஞ்சித், கோயம்புத்தூரைச் சேர்ந்த காயத்ரி, ஆலந்துரையைச் சேர்ந்த ராம்பிரபா, ஸ்வேத்தா மற்றும் செம்மேட்டைச் சேர்ந்த பிரவீன்குமார் ஆகிய மாணவர்கள் வைரஸை வெல்வோம்(#BeatTheVirus) இயக்கத்துடன் இணைந்து தங்கள் நேரத்தையும் அர்ப்பணிப்பையும் வழங்குகிறார்கள்.
தங்களின் தன்னார்வப் பணிகளோடு, இந்த கல்லூரி மாணவர்கள் தவறாமல் தங்கள் ஆன்லைன் வகுப்புகளிலும் பங்கேற்று வருகின்றனர், தன்னார்வத் தொண்டினை காரணம்காட்டி அவர்களின் படிப்பு மற்றும் கல்வி ஆராய்ச்சி பணிகளை அவர்கள் நிறுத்தி விடவில்லை. அவர்களில் பெரும்பாலோர் பின்தங்கிய சூழலிலிருந்து வந்தவர்கள். அவர்களால் கிராமப்புறங்களில் பாதிக்கப்படக் கூடியவர்களின் அவலநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஈஷாவின் பணிகளை மேலும் அறிய: Isha.co/BeatTheVirus