நிலவேம்பு கசாயத்திற்கு உருவான ரசிகர் மன்றம்! வைரஸை வெல்வோம் - ஈஷா டைரி - பாகம் 26
நிலவேம்பு கஷாயம் கொடுக்கச் சென்ற நமது தன்னார்வத் தொண்டர்களை ஆட்டுக்கல் பகுதி பழங்குடி கிராம மக்கள் நடனமாடி கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். நிலவேம்பு கஷாயத்திற்கு பெரிய ரசிகர் பட்டாளம் திரண்டுவிட்டதை காட்டும் இந்நிகழ்வு குறித்தும், மனதைத் தொடும் சில நெகிழ்ச்சியான நிகழ்வுகள் குறித்தும் தொடர்ந்து படித்தறியுங்கள்!
கொரோனா நடனம்
தொண்டாமுத்தூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த பழங்குடி கிராமமான ஆட்டுக்கல் பகுதி மக்களின் மனங்களில் கொரோனாவின் அச்சத்தைப் போக்கி உற்சாகமடையச் செய்யும் வகையில், கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை ஈஷா தன்னார்வலர்கள் ஒலிபெருக்கி மூலம் ஒவ்வொரு தெருவாக ஒலிபரப்பியபடி சென்றார்கள். இதைக் கேட்ட குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பாகுபாடின்றி அனைவரும் மகிழ்ச்சியுடன் தெருக்களில் நடனமாடினர். வயதானவர்கள் கூட பாடலுக்கு ஏற்ப கால்களில் தாளம் போட்டு மகிழ்ந்தனர். அந்த பாடல் மற்ற பல கிராமங்களிலும் இதைப்போலவே வயது வித்தியாசமின்றி அனைவருக்குள்ளும் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது.
சமூக மலர்ச்சி
பலர் தங்களது ஊரில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களை பசியிலிருந்து பாதுகாப்பதற்காக உணவு தானியங்களை நமது தன்னார்வத் தொண்டர்களிடம் வழங்கியது மகிழ்ச்சி நிறைந்த ஆச்சர்யத்தை தந்தது. வேடப்பட்டியிலுள்ள ஸ்ரீராம் கார்டனில் வசிக்கும் மூன்று பெண்கள் அரிசி, சர்க்கரை போன்றவற்றை நன்கொடையாக அளித்தனர்.
பெண்மணிகள் செல்வி, குமுதா ஆகியோர் முறையே 20 கிலோ மற்றும் 30கிலோ அரிசியை வழங்கினார்கள். சித்ரா என்ற பெண்மணி 5 கிலோ சர்க்கரை, கொஞ்சம் மிளகு மற்றும் மளிகைப் பொருள்களையும் வழங்கினார். தன்னார்வத் தொண்டர்கள் திரும்பி வரும்வழியில், விக்ராந்த் என்பவரின் குடும்பத்தினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி தங்கள் வீட்டிலிருந்து 20 கிலோ அரிசி மற்றும் கொஞ்சம் மிளகுகளை அளித்தனர். இந்த நிகழ்வு ஒரு சமூக மலர்ச்சியாக விளங்கியது மட்டுமல்லாது நம்பிக்கையையும் கொடுப்பதாக இருந்தது.
Subscribe
பாதுகாப்பான பயணம்
பொதுப் போக்குவரத்து சேவைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததையடுத்து, நமது தன்னார்வத் தொண்டர்களால் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கையுறைகள் மற்றும் பாதுகாப்பு முகமூடிகள் விநியோகிக்கப்பட்டன. கட்டுப்பாடற்ற மண்டலங்களில், 50% பொதுப் போக்குவரத்து வாகனங்கள் 60% பயணிகளுடன் இயக்க அனுமதிக்கப்படுகிறது.
தொற்றிக்கொண்ட உற்சாகம்
ஈஷா வித்யா பள்ளியில் படிக்கும் அமுதேஷ் என்ற ஒரு சிறுவன் நமது குழுவில் சேர்ந்து உதவிக்கரம் நீட்டினான். அமுதேஷின் உற்சாகமும் உயிர்த்துடிப்பும் அனைவருக்கும் உத்வேகம் தருவதாக அமைந்தது. ஏனெனில், அவன் உணவு மற்றும் நிலவேம்பு கஷாயம் விநியோகிப்பது போன்ற பல்வேறு பொறுப்புகளை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டான். அந்த சிறுவன் காலையிலிருந்து சாயங்காலம் வரை புன்னகையுடன் மக்களுக்கு உதவினான்.
இளகிய மனங்கள் வழங்கிய இளநீர்
நரசீபுரம் பஞ்சாயத்தில் நமது தன்னார்வத் தொண்டர்களில் ஒருவர் கடந்து செல்லும்போது அங்கு ஒரு குடும்பத்தினர் இளநீர் அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த குடும்பத்தினர் நமது தன்னார்வலரை நிறுத்தி, சற்று இளைப்பாறிவிட்டு அவர்களுடன் இளநீரைப் பருகவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்கி அந்த தன்னார்வலர் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார்.
கஷாயம் எப்போதும் வேண்டும்
நிலவேம்பு கஷாயம் தினமும் குடிப்பதால் தனது சில நாள்பட்ட வியாதிகளை வெல்ல உதவியதாக குப்பனூரில் வசிக்கும் மரகதம் என்ற பெண்மணி, நமது தன்னார்வத் தொண்டர்களில் ஒருவரிடம் கூறினார். அவர் இவ்வாறு கூறினார்: “கடந்த 40 நாட்களாக கஷாயத்தை தவறாமல் குடித்த பிறகு, நான் மிகவும் நன்றாக உணர்கிறேன், இனி நான் மாத்திரைகள் எடுக்கத் தேவையில்லை. எதிர்காலத்திலும் கஷாயம் தொடர்ந்து குடிக்க திட்டமிட்டுள்ளேன்.”
நிலவேம்பு கஷாயத்தின் பன்முக பலன்கள் காரணமாக இந்த நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை பானத்திற்கு கிராமப்புற மக்களிடத்தில் பெரிய ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளன. நல்லூர்பதியில் வசிக்கும் மற்றொரு பெண்மணி, ஊரடங்கு முடிந்த பிறகும் நிலவேம்பு கஷாயத்தை தொடர்ந்து விநியோகிக்க வேண்டுமென்று ஈஷா தன்னார்வத் தொண்டர்களை வலியுறுத்தினார்.
அனைத்து கிராமவாசிகளின் ஆரோக்கியத்திலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் துணைநிற்பதால், வாரத்திற்கு ஒரு முறையாவது மூலிகை பானத்தை ஈஷா விநியோகிக்க வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்தார். ஒரு தன்னார்வத் தொண்டரான தினேஷ் அண்ணா கூறும்போது, “இதே கோரிக்கையை தீத்திபாளையத்தில் வசிப்பவர்கள் சிலரும் முன்வைத்தார்கள். அவர்கள் கஷாய விநியோகம் இன்னும் சில காலம் தொடர வேண்டுமென்று வலியுறுத்தினர்” என்றார்
பேனாவைத் தந்து நன்றி வெளிப்பாடு
வேடப்பட்டி கிராமத்தில் பணிபுரிந்தபோது, தன்னார்வலர்களில் ஒருவர் தனது பேனாவில் மை தீர்ந்துகொண்டிருப்பதைக் கண்டார். புதிய ஒரு பேனாவை வாங்குவதற்காக அவர் அருகிலுள்ள கடையை அணுகியபோது, அந்த கடைக்கு சொந்தக்கார பெண்மணி பாண்டியம்மாள், அவருக்கு ஒரு புதிய பேனாவை வழங்கினார், ஆனால் அதற்கு பணம் வாங்க மறுத்துவிட்டார். ஈஷாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் இதைச் செய்தார். “நீங்கள் எங்கள் கிராமவாசிகளுக்காக இவ்வளவு செய்கிறீர்கள், இதற்கெல்லாம் நீங்கள் பணம் கொடுக்கத் தேவையில்லை” என்றார். இந்த அன்பின் செயலால் தன்னார்வலர் நெகிழ்ந்தார்.
ஈஷாவின் முயற்சிகளைப் பற்றி மேலும் அறிய: Isha.co/BeatTheVirus