அரவணைக்கும் கைகள் வழிபடும் உள்ளங்கள்: வைரஸை வெல்வோம் - ஈஷா டைரி - பாகம் 13
மாதம்பட்டி கிராம மக்களுக்கு உணவு வழங்க வரும் ஈஷா தன்னார்வலர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, சேர்ந்து நின்று தங்கள் கரங்களை குவித்து நமஸ்காரம் செய்து தினமும் வரவேற்பர். தேவராயபுரத்திலும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வண்ணம் உள்ளூர் மக்கள் மோர் மற்றும் தண்ணீர் வழங்குவர்.

நமஸ்காரம் செய்து நன்றி வெளிப்பாடு
கிராம மக்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்களுக்கு இடையே உள்ள நல்லியல்பு மற்றும் மரியாதையுடன் கூடிய உறவு ஒரு புனிதத்துவத்தை அடைந்து வருகிறது. மிக அர்ப்பணிப்பு உணர்வோடு தன்னார்வலர்கள் மக்களுக்கு தொண்டு செய்வதை பார்க்கும் மக்கள் அதற்கு பதில்வினையாக நெகிழ்ச்சியான செயல்களை வெளிப்படுத்துகிறார்கள்.
சமீபத்தில் மாதம்பட்டி கிராமத்தில் நமது தன்னார்வலர்கள் நெகிழ்ச்சியான ஒரு செயலை அங்குள்ள மக்களிடமிருந்து பெற்றார்கள். அவர்களின் அன்றாட வேலைகளை முடிந்துவிட்டு அந்த கிராமத்திலிருந்து அவர்கள் அன்று புறப்படும்போது மக்கள் நன்றியுணர்வோடு கைகளை கூப்பி வணங்கி நின்றது கண்டு தன்னார்வலர்கள் நெகிழ்ந்து போனார்கள்.
Subscribe
அது பற்றி கூறுகையில் மகேஷ் அண்ணா இவ்வாறு கூறினார்: "மாதம்பட்டியில் உணவு வழங்கிவிட்டு பின்னர் அங்குள்ள மற்ற வேலைகளையும் முடித்துவிட்டு நாங்கள் கிளம்பியபோது, அங்குள்ள மக்கள் அனைவரும் நமஸ்காரம் செய்யும் முறையில் தங்கள் கரங்களை குவித்து வணங்கினர். நாங்கள் அவர்களின் பார்வையைவிட்டு மறையும் வரை அப்படியே நின்றிருந்தனர். இந்த ஒரு தனித்துவமான அனுபவம் எங்களுக்கு பெரும் நிறைவையும் நன்றியுணர்வையும் ஏற்படுத்தியது."
"கிராம மக்களுக்கு உணவு வழங்கும்போது நம் சத்குருவுக்கு சேவை செய்வதாகவே எண்ணி அதை செய்தோம். மேலும் நாங்கள் மக்களை காக்க வைக்காமல் எப்போதும் சரியான நேரத்துக்கு சென்றுவிடுவோம்" என்று மகேஷ் அண்ணா கூறினார்.

எளிய மனிதர்களின் நன்றிப் பெருக்கு
தேவராயபுரத்தை அடைந்தபோது நம் தன்னார்வலர்களுக்கு இன்னும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் காத்திருந்தது. அங்கிருந்த கிராம மக்கள் அவர்களுடைய பணிகளில் உதவியது மட்டுமல்லாமல், அவர்களுக்கு மோர் மற்றும் தண்ணீர் கொடுத்து உபசரித்தனர்.
ஈஷா தன்னார்வலர்கள் மீது கிராம மக்கள் காட்டிய அக்கறை பல்வேறாக வெளிப்பட்டது. ஒவ்வொரு நாளும் உணவு வழங்கவும் மற்ற உதவிகள் புரியவும் கிராமங்களுக்கு செல்லும் தன்னார்வலர்கள் அங்குள்ள மக்கள் அவர்களிடம் அன்போடும் அக்கறையோடும் வெளிப்படுத்திய அனுபவங்களைச் சந்திக்காமல் இருந்ததில்லை.
அவ்வாறுதான் ஒருநாள் தேவராயபுர கிராம மக்கள் வெயிலைப் பொருட்படுத்தாமல் உழைக்கும் நம் தன்னார்வலர்கள் களைப்பு நீங்க தாங்கள் வழங்கும் சிற்றுண்டியை அருந்த வேண்டும் என்று வற்புறுத்தினர். "எங்கள் பசி போக்க நீங்கள் தினமும் சமைத்து கொண்டுவரும் உணவுக்காக நாங்கள் நன்றியோடு இருக்கிறோம். எங்கள் நன்றியை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அந்த மக்களில் ஒருவர் கூறினார்.
தென்னமநல்லூரில் உள்ள தூய்மை பணியாளர்களும் நம் தன்னார்வலர்களின் தளராத உழைப்புக்கு நன்றி தெரிவித்தனர். சமீபத்தில் அங்கு எப்போதும் போல நிலவேம்பு கசாயம் விநியோகித்து வரும்போது, அந்த பணியாளர்கள் நம் தன்னார்வலர்கள் அந்த சமூகத்துக்கும் அவர்களுக்கும் செய்யும் உதவியை பெரிதும் பாராட்டி நன்றி கூறினர்.
