3,500 அணிகள், 40,000 வீரர்கள், 62 லட்சம் பரிசுத் தொகை… ஈஷா கிராமோத்சவம்!
ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், வெற்றிபெறுபவர்கள் பெறப்போகும் பரிசுத் தொகை குறித்த சுவாரஸ்ய தகவல்களோடு, விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர் மற்றும் தமிழ் தலைவாஸ் அணியுடனான கபாடிப்போட்டி என பல்வேறு தகவல்களை தாங்கியபடி ஒரு அப்டேட் உங்களுக்காக!
கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், அதன்மூலம் அவர்களின் வாழ்வில் உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் கொண்டுவரும் நோக்கிலும் ’ஈஷா கிராமோத்சவம்’ எனும் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவை ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் ஆண்டுதோறும் நடத்திவருகிறது.
இதில் ஆண்களுக்கு வாலிபால் போட்டியும், பெண்களுக்கு த்ரோபால் போட்டியும் பிரதான போட்டிகளாக நடத்தப்படுகிறது. இதுதவிர, கபாடி, பாரா ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் கிராமப்புற விளையாட்டு போட்டிகளும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
அதன்படி இந்த ஆண்டு (2018) 14-வது ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 20ம் தேதியன்று தமிழகம் முழுவதும் தொடங்கின. முதற்கட்டப் போட்டிகள் (Cluster) மாவட்ட (Divisional), மண்டல (Zonal) மற்றும் மாநில (Finals) அளவில் என பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் இந்த கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் டிசம்பர் 8 மற்றும் டிசம்பர் 9 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளன.
Subscribe
போட்டிகள் குறித்த ஒரு அட்டவணை
பிரிவு | போட்டிகளின் எண்ணிக்கை | அணிகள் | வீரர்கள் | பார்வையாளர்கள் |
---|---|---|---|---|
முதற்கட்ட போட்டிகள் | 100 | 3500 | 40,000 | 60,000 (தமிழகம் முழுவதும்) |
டிவிஷனல் போட்டிகள் | 16 | 256 | 2560 | 6400 |
மண்டல போட்டிகள் | 4 | 32 | 320 | 1000 |
மண்டல போட்டிகள் | 4 | 32 | 320 | 1000 |
இறுதி போட்டிகள் | 1 | 8 | 80 | 50,000 (ஈரோட்டில் எதிர்பார்க்கப்படுகிறது) |
லட்சக்கணக்கில் பரிசினை அள்ளும் கிராமத்து அணிகள்…
இதில் ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் இருந்தும் 3,500 கிராம அணிகளும், 40,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். மொத்தம் ரூ.62 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. ஆண்களுக்கான வாலிபால் மற்றும் பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது. மேலும், தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழகத்துடன் இணைந்து கபாடி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் ஆண்கள் அணிக்கு ரூ.2 லட்சமும், பெண்கள் அணிக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட உள்ளது.
மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் வழக்கம்போலவே இவ்வாண்டும் ஈரோட்டில் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட உள்ளது. சத்குரு முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்வில், சர்வதேச அளவில் சாதனை படைத்த விளையாட்டு பிரபலங்கள் மற்றும் முக்கிய ஆளுமைகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.
ஈஷா கிராமோத்சவத்தை ஊக்குவித்த ஆளுமைகள்!
இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த கிராமோத்சவ இறுதிப் போட்டிகளில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் திரு.கருணாநிதி அவர்கள், கிரிக்கெட் ஜாம்பவான் திரு.சச்சின் டெண்டுல்கர், இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ் அதிகாரி திருமதி.கிரண் பேடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.ராஜ்யவர்தன் ரத்தோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2018 ஈஷா கிராமோத்சவத்தில் தமிழக ஆளுநர்…
ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் மற்றும் ராம்கோ நிறுவனம் சார்பில் வரும் டிசம்பர், 9ம் தேதி ஈரோட்டில் (டெக்ஸ்வேலி) நடைபெற உள்ள ஈஷா கிராமோத்சவ திருவிழாவில் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். மேலும், கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளை காண்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈரோட்டுக்கு வருகைதர உள்ளனர்.
“தமிழ் தலைவாஸ்” உடன் ஒரு கபாடிப் போட்டி…
4,000 வருட பாரம்பரியம் கொண்ட நம் வீர விளையாட்டான கபாடியை போற்றிப் பாதுகாக்கும் வகையில், ஈஷா கிராமோத்சவத்தை ஆதரித்து ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு புரோ கபாடி அணியான ‘தமிழ் தலைவாஸ்’ அணியினர், திருவிழாவிற்கு வருகைதருவதோடு, கபாடிப்போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் ஒரு நட்பு ரீதியான போட்டியில் விளையாட உள்ளனர்.
கேலோ இந்தியாவில் ஈஷாவிற்கு அங்கீகாரம்!
தமிழக கிராமங்களில் விளையாட்டு குறித்த ஆர்வத்தை அதிகரிக்க ஈஷா அவுட்ரீச் மேற்கொண்ட பணிகளை அங்கீகரிக்கும் விதமாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சமீபத்தில் ‘ராஷ்ட்ரிய கேல் புரோத்சாஹன் புரஸ்கார்’ விருதை வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மத்திய அரசின் ‘கேலோ இந்தியா’ திட்டத்திலும் ஈஷா அவுட்ரீச்-க்கு அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் குறிப்பு:
- ‘காளியூர்’ எனும் அந்த சிறிய கிராமத்தை 10 ஆண்டுகளுக்குள் முற்றிலும் மாற்றிய ஒரு பந்து மற்றும் ஒரு விளையாட்டு அணி - எப்படி? இந்தப் பதிவில்...
- மேலும் விவரங்களுக்கு கிராமோத்சவம் இணையதளத்திற்கு வருகை தாருங்கள்!