காது... மூக்கு... தொண்டை... பிரச்சனையா? - பகுதி 2

இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் சளி சமந்தப்பட்ட பிரச்சனைகளைப் பார்த்தோம். இந்த பகுதியில், "சைனஸ் பிரச்சனை வராமல் எப்படி தடுப்பது? இதற்கு யோகா எவ்வாறு உதவுகிறது? சத்குரு இதனைப்பற்றி என்ன சொல்கிறார்?" ஆகியவற்றை விளக்குகிறார் டாக்டர். பவானி பாலகிருஷ்ணன்.

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சைனஸ் பிரச்னை வராமல் எப்படித் தடுப்பது?

  1. சளி மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி)யால் ஏற்படும் மூக்கடைப்பு தொடர்ந்து இருக்குமானால் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.
  2. மதுப் பழக்கம், புகைப் பழக்கத்தைக் கைவிடவும். இது மூக்கில் உள்ள மெல்லிய சவ்வுகளைப் பாதித்து, வீங்கச் செய்யும்.
  3. ஒவ்வாமை இருக்குமானால், எதனால் ஏற்படுகிறது என்று கவனிக்கவும்.

யோகா எவ்வாறு உதவுகிறது

  1. ‘அம்’ மந்திர உட்சாடனை சைனஸ் பிரச்சனைகள் தீர உதவுவதுடன், வராமலும் தடுக்கிறது. உட்சாடனையின்போது ஏற்படும் அதிர்வுகள் சைனஸ்களில் கிருமிகள் சேராவண்ணம் தடுத்து, சைனஸ்களை ஆரோக்கியமாக்குகின்றன. இதனால் மூக்குக்கும் சைனஸ்களுக்கும் எவ்விதத் தடையும் இல்லாமல் காற்று சென்று வருகிறது. காற்று தடையில்லாமல் செல்வதால் சுரக்கப்படும் திரவங்கள் சைனஸ்களில் இருந்து எளிதாக அகற்றப்படுகின்றன.
  2. ஆசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள்: இவை அனைத்துமே உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், தளர்வு நிலையையும் அளிக்கின்றன. அது மட்டுமில்லாமல் உடலின் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிப்பதாக ஆரம்ப நிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றை உடற்பயிற்சிபோல் செய்யாமல், தகுந்த விழிப்பு உணர்வுடன் மூச்சு, உடல் மற்றும் மனம் ஒருங்கிணைந்தாற்போல் இருக்குமாறு செய்ய வேண்டும். இவை மேற்கூறியது போல் சைனஸ்களின் காற்றோட்டத்தைப் பாதுகாக்கின்றன.
  3. யோகா, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்வதால் சைனஸ்களால் ஏற்படும் தலைபாரம், முகத்தில், கண்களில் வலி போன்றவற்றுக்கு உதவுகின்றன.
  4. ஹடயோகாவில் உள்ள ஹடகிரியைகளில் ஒன்றாகக் கருதப்படும் நேத்திக் கிரியைகள் சைனஸ் வியாதிகள் வராமல் தடுப்பதற்கும், அதில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.

நேத்தி என்பது மூக்கு, தொண்டைப் பகுதியை, திரவம் அல்லது நூல்கொண்டு சுத்தம் செய்வது. இது சளியை அகற்றுவதுடன் சவ்வுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, மூக்குக்கும் சைனஸ்களுக்கும் உள்ள தடையை அகற்றுகிறது. நேத்திக் கிரியைகளை சரியான முறையில் பயின்று பின்பற்றவும்!

சத்குரு சொல்வது....

மூக்குத் துவாரங்களை சுத்தமாகவைத்துக்கொள்வதும், சரியாகச் சுவாசம் செய்வதும், ஆரோக்கியமான சுவாசப் பயிற்சியும் மிக முக்கியம். நவீனச் சமூகம் இதை மறந்துவிட்டது. எப்படியோ மூக்கில் காற்று போய் வந்தால் போதும் என்று நினைக்கின்றனர். அது மிகவும் தவறு.

கபம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால், கபத்தை முழுமையாக அகற்றலாம். மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்போது, கபத்தை எரிக்க முடிவதை உணர முடியும்.

சைனஸ்

உங்களுக்கு சைனஸ் போன்றவற்றால் பல வருடங்களாக சளி பிரச்சனை இருந்தாலும், போதுமான அளவில் கபாலபதியைச் செய்யும்போது, அதிகப்படியான சளியை எரித்து மூக்குத் துவாரங்கள் சுத்தமாகும்.

ஈஷா யோகாவில் சொல்லிக்கொடுக்கப்படும் ஷக்தி ஷலனக் கிரியை பயின்றவர்கள், ஒவ்வொரு நாளும் 10, 15 என அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஒரு நாளில் 1000 கபாலபாதி வரை செய்யலாம். இப்படிச் செய்யும்போது சைனஸ் போன்றவற்றால் பல வருடங்களாக இருக்கும் சளித் தொந்தரவும் சரியாகும். மூக்குத் துவாரங்கள் சுத்தமாகிவிடும். மனதும் தெளிவாக இருக்கும்.

கபாலபாதி அதிகமாகச் செய்தாலும், ஒவ்வாமையால் அவதிப்படும் சிலருக்கு சளிப் பிரச்னை குறையாமல் இருக்கலாம். அவர்கள் எதற்கு ஒவ்வாமையுடன் இருக்கிறார்களோ, அதில் இருந்து சில நாட்கள் விலகி இருந்து மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவர, சளிப் பிரச்சனை விலகிவிடும்.

மிளகு, மஞ்சள், தேன்

சளிப் பிரச்சனையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள 10 முதல் 12 முழு மிளகு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை உடைத்துக்கொள்ள வேண்டும், பவுடராக்கக் கூடாது. அதை 2 ஸ்பூன் தேனில் ஓர் இரவு அல்லது எட்டரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். காலையில் அதை எடுத்து மென்று தின்றால் சளி கரைந்துவிடும். இத்துடன் கபாலபாதி பயிற்சியும் செய்து வர, சளிப் பிரச்சனையில் இருந்து எளிதாக வெளிவர முடியும்.

அல்லது மஞ்சளை இரண்டு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடலாம். அல்லது மிளகு, மஞ்சள் மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து சாப்பிடலாம். அனைத்துப் பால் பொருட்களையும் விட்டாலே சளி மிகவும் குறைந்துவிடும்.

எந்தவித அலர்ஜியாக இருந்தாலும், தோல் அலர்ஜி என்று மட்டுமல்ல, வேப்பிலையை உருண்டை செய்து தேனில் நனைத்து முழுங்கிவர ஒவ்வாமை சரியாகும்.

தினமும் தேன் சாப்பிடுவது சளி தொடர்பான பிரச்சனைகளுக்கு மிகவும் உதவி செய்யும்.