இப்போதெல்லாம், மன அழுத்தத்தை நம் வாழ்வில் ஓர் அங்கமாகவே கருதத் தொடங்கிவிட்டோம். இந்த மன அழுத்தத்திற்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வினை எடுத்துரைக்கிறது இக்கட்டுரை...

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

மனஅழுத்தம் (Stress) என்றால் என்ன?

ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது, அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும். இந்த அதிகப்படியான சக்தியும் வலிமையும் அவருக்கு மிக உதவியாக இருக்கும். ஆனால், இந்த சூழ்நிலை அடிக்கடி அல்லது தொடர்ந்து நீடிக்குமானால், அது மன அழுத்தமாக மாறிவிடும்.

மன அழுத்தத்துக்கான பொதுவான காரணங்கள் என்னென்ன?

உடல் அல்லது உயிருக்கு ஆபத்து: உடல் அல்லது உயிருக்கு ஆபத்தை உணரும்போது இந்த வகையான மன அழுத்தம் ஏற்படுகிறது.

கவலை: நம் கட்டுப்பாட்டுக்குள் வராத விஷயங்கள் குறித்துக் கவலைப்படுவது. பதட்டமும் அவசரமும் நிறைந்த வாழ்க்கை முறையால் பொதுவாக இப்படி நேர்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சுற்றுப்புறச் சூழ்நிலை: சப்தம், கூட்டம், குடும்பம் மற்றும் தொழில் நெருக்கடிகளால் நேர்வது.

அதிக வேலைப்பளு: இந்த வகையான மன அழுத்தம் உடலை மிகவும் பாதிக்கும். கூடுதல் பணிச்சுமை ஏற்படும்போது இது நிகழ்கிறது. பணிகளை எப்படிச் சீரமைத்துக்கொள்வது, எப்படி ஓய்வுக்கு நேரம் ஒதுக்குவது என்று தெரியாதபோது இந்த வகை மன அழுத்தம் நேரும்.

மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்ன?

மன அழுத்தத்தின் அறிகுறிகள் உடல், மற்றும் மனதளவில் வெளிப்படுகிறது. மன அழுத்தத்தின் வீரியம் நபருக்கு நபர் வேறுபடும்.

மனதளவில் வெளிப்படும் அறிகுறிகள்:

பதட்டம், எரிச்சல், மனம் ஒருமுகப்படுத்த முடியாதது, அதிகக் களைப்படைவது, தூக்கமின்மை.

உடலளவில் வெளிப்படும் அறிகுறிகள்:

வாய் உலர்ந்துவிடுவது, மூச்சுவிடுவதில் சிரமம், அஜீரணக் கோளாறு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உள்ளங்கை வேர்ப்பது, இருதயம் வேகமாகத் துடிப்பது, உடல் தசைகள் இறுகுவது.

மன அழுத்தம் எப்படி நம்மைப் பாதிக்கும்?

மன அழுத்தத்துக்கான பதில் வினைகளை நம் உடலின் தானியங்கி நரம்பு மண்டலம் ஒருங்கிணைக்கிறது. இதனுடன் சேர்ந்து நாளமில்லாச் சுரப்பிகளும் அழுத்தத்தின்போது சுரக்கின்றன.

இவை நம் உடலில் பல்வேறு ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதனால், அதிக இதயத்துடிப்பு, அதிக ரத்த அழுத்தம், வயிற்றில் அதிக அமிலம் சுரப்பது, அதிகமாகத் தசைநார்கள் விரைப்படைவது, ரத்தத்தில் சர்க்கரையும் கொழுப்பும் அதிகரிப்பது, ரத்தத்தின் தடிமன் அதிகரிப்பது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது போன்ற பல விளைவுகள் உடலில் ஏற்படுகின்றன.

மன அழுத்தத்தின் சில விளைவுகள்:

  • கடுமையான சோர்வு, ஜீரணக் கோளாறுகள், தலைவலி மற்றும் முதுகுவலி
  • தொற்றுநோயை எதிர்க்கக் கூடிய ரத்த அணுக்கள் பாதிக்கப்படுவதால் கபம் மற்றும் இதர நோய்கள் அதிகம் வருவது.
  • தொடர்ந்த மன அழுத்தமானது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வாய்ப்பை அதிகப்படுத்தி அதனால் வாதம் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.
  • மாரடைப்பு வரக்கூடிய ஆபத்தை அதிகப்படுத்தும். ஆஸ்த்துமா பாதிப்பைத் தீவிரமாக்கும். புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், அளவுக்கதிகமாக உண்ணுதல் போன்ற நடத்தைகளைத் தூண்டிவிடுவதிலும் முக்கியக் காரணமாக இருக்கிறது.

மன அழுத்தத்துக்காக யோகப் பயிற்சி செய்யும்போது ஏற்படும் பலன்கள்:

  • யோகப் பயிற்சிகள் தளர்வு நிலையை அளிப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமான வழியில் அழுத்தத்தை எதிர்கொள்ளவும் நம் உடலைத் தயார்செய்கிறது.
  • யோகப் பயிற்சிகள் நமது தானியங்கி நரம்பு மண்டலத்தைச் சமன் செய்வதால் அழுத்தம் ஏற்படும்போது, நமது உடலும் மனமும் அதை நன்றாக எதிர்கொள்கின்றன.
  • யோகப் பயிற்சிகள் தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. ஓய்வு நிலையை ஏற்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைச் சீர்செய்கிறது.
  • பதட்டத்தைக் குறைத்து ஓய்வு நிலையை ஏற்படுத்துகிறது. சுவாசத்தைச் சீர் செய்கிறது.
  • தவிர, உடலுக்கும் மனதுக்கும் விழிப்பு நிலையை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்பு நிலையில் இருக்கும்போது, எதிர்ப்படும் எவ்விதச் சூழ்நிலையையும் அமைதியாகவும் பதட்டமில்லாமலும் எதிர்கொள்ள முடியும். இதனால் உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவில் குறையும்.
  • உடல் நலம், மன நலம் இரண்டும் மலரும்!
மன அழுத்தம் பற்றி சத்குரு...

நாட்டின் பிரதமரைக் கேட்டால், தான் மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறுவார். அலுவலகத்தில் எளிமையான வேலைகளைச் செய்யக்கூடிய கடைநிலை ஊழியரைக் கேட்டால், அவரும் தான் மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறுவார். மன அழுத்தம் என்பது நீங்கள் செய்யக்கூடிய வேலையின் தன்மையால் வருவதில்லை. உங்களை நீங்கள் சரியாகக் கையாளத் தெரியாததால்தான் மன அழுத்தம் வருகிறது. உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் சக்திநிலையை எப்படி வைத்துக்கொள்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை. எனவேதான் உங்களுக்கு மன அழுத்தம் வருகிறது. ஒருவர் தனக்குள் ஒரு தெளிவான தன்மையில் இருக்கும்போது, மன அழுத்தம் என்பதே வராது.

நீங்கள் உங்களை எப்போதும் தளர்வுநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் செய்யும் பணி உங்களைப் பாதிக்கக் கூடாது. உடலளவில் நீங்கள் களைப்படையலாம். ஆனால், அது உங்களை மன அழுத்தத்தில் கொண்டு விடக் கூடாது. தளர்வு நிலையில் இருப்பதற்காக உங்கள் பணிகளை நீங்கள் குறைத்துக்கொள்ளக் கூடாது. தீவிரமாக வேலை செய்பவராகவும், அதே நேரத்தில் தளர்வானவராகவும் இருப்பதே மிகவும் சிறந்தது. தளர்வாக இருப்பதற்காகப் பணிகளைக் குறைத்துவிட்டால் அதில் எந்த சிறப்பும் இல்லை.

இதற்கு தியானம் மிகவும் உதவி செய்யும். தியானம் மன அழுத்தத்துக்கு மட்டும் தீர்வாக இல்லாமல், அடுத்த பரிமாணத்துக்கு நீங்கள் நகரவும் உதவி செய்யும். அந்த அடுத்த பரிமாணத்தில் மன அழுத்தம் என்பதே கிடையாது. சில எளிய யோகப் பயிற்சிகளைச் செய்தாலே, 4 மாதங்களுக்குள் உங்கள் நாடித்துடிப்பு 8 முதல் 20 எண்ணிக்கை குறைந்துவிடும். இதிலிருந்தே, உங்கள் உடல் துடிப்பாகவும் அதே நேரத்தில் தளர்வாகவும் இருக்க முடியும் என்பதை அறிய முடியும்.

எந்தப் போராட்டமும் இல்லாமல், உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் உணர்ச்சி நிலை ஆகியவை இந்த வாழ்க்கையின் சவால்களை மேற்கொள்ள வேண்டுமானால், முதலில் நீங்கள் உங்கள் உள்தன்மையை ஒரு குறிப்பிட்ட வழியில், ஒரு குறிப்பிட்ட உறுதியுடன் நிலைநிறுத்த வேண்டும். உள்நிலையில் போராட்டம் இல்லாதபோதுதான், உள்நிலையில் பிரச்னைகள் இல்லாதபோதுதான், வெளிப்புறப் பிரச்னைகளையும் நீங்கள் நன்கு கையாள முடியும்!