சுதந்திர தினத்தில் எல்லையற்ற சுதந்திரம் நோக்கி...
பெரும்பான்மையோர் வாழ்க்கையின் இடிபாடுகளில் அடிபட்டு நொறுங்கினால் ஒழிய விடுதலை பற்றிய நினைவுகளுக்குத் தள்ளப்படுவதில்லை. பட்டுத் தெளியும்போதுதான் மாறுபட்டுச் செல்ல மனம் வழியை நாடுகிறது.
சத்குரு:
ஆனந்தமாய் மாறி ஆகாயத்தில் பறப்பதும், அல்லது சிரமங்களைச் சிரமேற்கொள்வதும் எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது. எந்த நிமிடத்திலும், எப்படி வேண்டுமானாலும் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் 90 சதவீத மக்கள் நான் நரகமாகத்தான் வாழ்க்கையை வாழ்வேன் என்று பிடிவாதமாக இருந்தால் என்ன செய்வது? நிச்சயமாக இது படைப்பின் குறையல்ல! நீங்கள் மனிதராகப் பிறந்த கணத்திலேயே, எல்லைக்குட்பட்ட உங்களை எல்லையற்ற தன்மைக்கு அழைத்துச் செல்வதற்கான சுதந்திரம் உங்களுக்கு வரப்பிரசாதமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மற்ற விலங்கினங்கள் போல், விடுபட முடியாமல் உள்ள இயற்கையின் தூண்டுதல்களில் நீங்கள் சிக்கவில்லை. உங்களுக்கு உடலை வளர்த்து வாழ்வதற்கான சில நியதிகள் உண்டு. ஆனாலும், அவற்றைத் தாண்டி பிற நிலைகளைப் பெறவும் வளமான வாய்ப்புகள் உண்டு. அந்த நிலைகளைப் பெற நீங்கள் முயற்சிக்காவிடில் நீங்கள் இன்னமும் உங்கள் வாழ்க்கையில் தேவையான துன்பங்களை அனுபவிக்கவில்லை என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் துன்பம் வரும்போதுதான் வேறு வாய்ப்புகளை யோசிக்கிறீர்கள். துன்பங்கள் அனுபவிக்கும் முன்பே, தங்கள் சுய அறிவால், அந்த நிலைகளை எட்டப் பார்ப்பவர்கள், துரதிர்ஷ்டவசமாக மிகவும் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.
பெரும்பான்மையோர் வாழ்க்கையின் இடிபாடுகளில் அடிபட்டு நொறுங்கினால் ஒழிய விடுதலை பற்றிய நினைவுகளுக்குத் தள்ளப்படுவதில்லை. பட்டுத் தெளியும்போதுதான் மாறுபட்டுச் செல்ல மனம் வழியை நாடுகிறது. எனவே நான் உங்களைக் கேட்பதெல்லாம், வாழ்க்கையின் இடிபாடுகளில் நசுங்கும்வரை காத்திராமல், எல்லையற்ற தன்மையை நோக்கி, நீங்கள் உடனே அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும் என்பதுதான்!
Subscribe