சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 14

"தாலியெல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷன், ரிங் மாத்திக்குவோம்" எனக் கூறிக்கொள்ளும் தற்காலப் பெண்மணிகள் அறியாமையில் இருப்பதை இந்த வாரப் பகுதி நமக்கு உணர்த்துகிறது. ஆம்! இந்த வாரப் பதிவில், திருமணத்தின்போது சொல்லப்படும் மந்திரம் பற்றியும், கணவன் மனைவியைப் பிணைக்கும் மஞ்சள் கயிற்றின் விஞ்ஞானம் குறித்தும் சேகர் கபூருக்கு விளக்குகிறார் சத்குரு.



சேகர்:
ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் நெடுங்காலம் சேர்ந்து வாழ்வதில் ஏதாவது முக்கியத்துவம் உள்ளதா?

சத்குரு: இரண்டு மனிதர்கள் இணைந்து, தங்கள் வாழ்க்கையை ஓருவர் மீது ஒருவர் அமைத்துக் கொள்வதில் ஒருவித அழகு இருக்கிறது. நீங்கள் உண்மையாகவே யாரோ ஒருவரோடு ஒருமித்து இருக்கவேண்டும் என்றால், உங்களின் ஒரு பகுதியை ஏதோ ஒரு வழியில் விட்டுக்கொடுக்க வேண்டும். "காதலில் விழுவது" (falling in love) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது மிகவும் முக்கியமானது. உங்களால் இதில் விழ மட்டுமே முடியும். உங்களால் இதில் நிற்க முடியாது, ஏற முடியாது, இதில் விழ வேண்டும். (சிரிக்கிறார்)

விழவேண்டும் என்றால் உங்களின் ஏதோ ஒரு பகுதியை இழக்கவேண்டும் என்று பொருள். மற்றொருவருக்கு இடமளிப்பது ஒரு மனிதருக்கு மிகவும் நல்லது. தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவர் அன்பாக இருக்கமுடியாது. அன்பு நிலைக்குச் செல்ல நீங்கள் உங்களுடைய ஒரு பகுதியை சரணடையச் செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது அது மிகவும் அழகாக இருக்கும்.

சேகர்: ஆனால் இப்படி அவர்கள் அமைத்துக் கொள்ளும் வாழ்வு அவர்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்கும் ஒரு வாய்ப்பாக இருக்க முடியுமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
"காதலில் விழுவது" (falling in love) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது மிகவும் முக்கியமானது. உங்களால் இதில் விழ மட்டுமே முடியும். உங்களால் இதில் நிற்க முடியாது, ஏற முடியாது, இதில் விழ வேண்டும்.

சத்குரு: நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது, ஆனால் அது ஒரு கடினமான வாய்ப்பு. பல சிக்கல்களை உடைய இந்த உறவில், உங்கள் இறுதித் தன்மையை உணர்வதற்க்குப் பதிலாக நீங்கள் அந்த உறவில் சிக்கித் தொலைந்து போகலாம். அதற்கான வாய்ப்பு மிகவும் இருக்கிறது. அதனால்தான் இந்தியாவில், திருமணத்தின்போது மாங்கல்யம் கட்டப்படுகிறது.

ஆனால் இன்று அது வெறும் கயிறாக, ஒரு சடங்கு கயிறாக இருக்கிறது. ஆனால் அது ஆரம்பத்தில் அப்படித் துவங்கப்படவில்லை. உங்களிடமிருந்தும் உங்களுக்கு துணையாக வருபவரிடமிருந்தும் சக்தியை ஒரு விதத்தில் எடுத்து இணைத்து மாங்கல்யமாக கட்டப்பட்டது. எனவே உங்களுடைய காரண அறிவைக் கடந்து, உங்களுடைய புரிந்துகொள்ளும் தன்மையைக் கடந்து, உங்களுடைய மனரீதியான, உடல் மற்றும் உணர்ச்சியின் தேவைகளைக் கடந்து, எங்கோ ஆழமான நிலையில் இரண்டு உயிர்களும் இணைக்கப்படுகின்றன.

அதனால்தான், அவர்களுக்குள் ஒரு பொதுவான தன்மை எதுவும் இல்லாமல் இருந்தாலும் தம்பதிகளாக பலர் எப்படி தொடர்ந்து இணைந்திருக்கிறார்கள், ஒன்றாக இயங்குகிறார்கள் என்று பல நேரங்களில் புரிந்துகொள்ள முடிவதில்லை.

உடல் நிலையில் அருகாமையில் இருப்பதாலும் உடல்ரீதியான உறவுமுறையாலும் இது நடக்கமுடியும். ஆனால் அதற்கு முன்பே கூட, எப்படி இரண்டு உயிர்களை இணைப்பது என்பதற்கான முழு விஞ்ஞானமும் நம்மிடம் இருக்கிறது.

அதனால்தான், "இந்த உறவு வாழ்நாள் முழுவதும் தொடர்வது; நீங்கள் இதை முறிக்கமுடியாது" என்று எப்போதும் நாம் சொல்வோம். இந்த உறவுமுறையை முறிக்க வேண்டுமானால், இரண்டு உயிர்களையும் கிழித்தாக வேண்டும்.

ஏனென்றால் திருமணத்தின்போது உச்சரிக்கப்படும் எல்லா மந்திரங்களையும் நீங்கள் கவனித்தால், 'எப்படி இந்த இரண்டு உயிர்களும் ஒன்றாகப் பிணைக்கப்படுகின்றன' என்று உச்சரிப்பின்போது கூறுவார்கள், அப்படித்தானே? 25, 30 வருடங்கள் முன்பு கூட பாலிவுட் பாடல் வரிகள் "ஜனம் ஜனம் ஜனம்..." (திருமண பந்தம் ஆயுளுக்கும்) என்றுதான் இருக்கும். இப்போது அவர்கள் காலாவதி தேதி பற்றி பேசுகிறார்கள். (இருவரும் சிரிக்கிறார்கள்)

சேகர்: சரி

சத்குரு: தற்போது, உறவுமுறைகளின் முழு தன்மையும் மாறிவிட்டது. இது வருந்தத்தக்கது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு உயிர் மற்றொரு உயிரோடு பிணைந்திருக்கும் ஆழ்ந்த தன்மை தற்போது இழக்கப்பட்டு வருகிறது. சுதந்திரம், தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் என்று சொல்லிக் கொண்டு மக்கள் ஒருவித கட்டாயத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

"இந்த உறவு வாழ்நாள் முழுவதும் தொடர்வது; நீங்கள் இதை முறிக்கமுடியாது" என்று எப்போதும் நாம் சொல்வோம். இந்த உறவுமுறையை முறிக்க வேண்டுமானால், இரண்டு உயிர்களையும் கிழித்தாக வேண்டும்.

இந்த திருமணச் சடங்குகள் எப்படி உருவாக்கப்பட்டிருந்தன என்றால், இந்த உறவே, நான் ஆணுக்காக என்று பெண் நினைப்பார். நான் பெண்ணுக்காக என்று ஆண் நினைப்பார். இப்படி இருவரும் பிறர்நலம் கருதி இருந்தால் அந்த உறவு மிக அழகானதாக இருக்கும். ஆனால் இந்த உறவு, நான் அடுத்தவருக்காக என்று ஒருவர் மட்டும் நினைத்து மற்றவர் அப்படி நினைக்கவில்லை என்றால், பிறகு அந்த உறவு சுயநலமானதாக, ஒருவரை அடுத்தவர் சுரண்டுவதாக அமைந்துவிடும். இருவருமே 'எனக்காக' என்று நினைத்தால் பிறகு அந்த திருமண பந்தம் ஒரு கட்டாயத்தில் நிகழ்வதாக இருக்கும். எப்போதும் அங்கு போராட்டம்தான் நிகழும்.

சேகர்: நீங்கள் முன்பு கூறினீர்கள், நமக்குள் உள்ள ஹார்மோன்களின் தேவை முடிந்ததும், நமக்கு இயற்கையின் உதவி மிகக்குறைவாகவே உள்ளது என்று. இயற்கை இனப்பெருக்கம் செய்யவே எப்போதும் விரும்புகிறது. எங்கள் மூலமாக அந்த விருப்பம் நிறைவேறிவிட்ட போதும்கூட நாங்கள் உடலோடு இருப்பதற்கான சக்தியை இயற்கை ஏன் எங்களுக்கு கொடுக்கிறது. இயற்கைக்கு எங்களிடம் வேறு என்ன தேவையிருக்கிறது?

சத்குரு: இல்லை, இல்லை, இனப்பெருக்கம் என்பது இயற்கையின் பல தேவைகளில் ஒன்று. நீங்கள் இனப்பெருக்கம் செய்யவேண்டும் என்று இயற்கை கட்டாயமாக விரும்புகிறது. ஏனென்றால் அது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகிறது. இதனை சிலர் நல்லது என்று நினைக்கிறார்கள், சிலர் சரியானதல்ல என்று நினைக்கிறார்கள். இது நல்லதும் இல்லை தீயதும் இல்லை. இது இயற்கையின் ஒருவிதத் தேவை. இந்த முழு உலகமும் துறவறம் மேற்கொண்டால், அப்போது நாம் எல்லோரையும் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்துவோம், இல்லையா? (சிரிக்கிறார்)


அடுத்த வாரம்...

இயற்கை நம்மை எப்போதும் உயிருடன் வைத்திருக்க உதவுமா? என்று சேகர் கபூர் கேட்க இயற்கையைப் பற்றியும் ஆரோக்கியம் பற்றியும் சத்குரு கூறும் பதில் அடுத்த வாரப் பதிவில்!