ஈஷாவில் நடந்தவை…
ஈஷா வித்யா ஆசிரியர்களுக்கு கிடைத்த பரிசுகள் என்னென்ன? சத்குரு ஜெயந்தி விழா, ஆசிரியர் தினம் மற்றும் ஓணம் விழா எப்படிக் கொண்டாடப்பட்டன? இன்னும் சில சுவையான நிகழ்வுகளின் சில துளிகள் இங்கே!
ஈஷா வித்யா ஆசிரியர்களுக்கு கிடைத்த பரிசுகள் என்னென்ன? சத்குரு ஜெயந்தி விழா, ஆசிரியர் தினம் மற்றும் ஓணம் விழா எப்படிக் கொண்டாடப்பட்டன? இன்னும் சில சுவையான நிகழ்வுகளின் சில துளிகள் இங்கே!
ஆசிரியர் தினம் மற்றும் ஓணம் திருவிழா கொண்டாட்டங்கள்!
Subscribe
ஈஷா பள்ளிகளில் ஆசிரியர் தினம் மற்றும் ஓணம் திருவிழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. சந்தேகவுண்டம் பாளையம் பள்ளியில், மாணவர்கள் ஆசிரியர் தினத்திற்காக அழைப்பிதழ் வழங்கி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தனர். மாணவர்களால் நடத்தப்பட்ட வினாடிவினா நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் ஒரு மேடை நாடகத்தை அரங்கேற்றியதோடு ஆசியர்களுக்கான பலவித விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தினர்.
சேலத்தில் பயிற்சிபெற்ற பசுமை மாணவர்கள்!
சேலம் மாவட்டத்தில் பசுமைப்பள்ளி இயக்கம் துவங்கப்பட்டதைத் தொடர்ந்து, இம்மாதம் 10ஆம் தேதி வரை அதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. 500 பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் (தேசிய பசுமைப் படை/ Eco club உறுப்பினர்கள்) மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மண்ணை தயார்படுத்துதல், பாக்கெட்டுகளில் நிரப்புதல், விதை ஊன்றுதல், தண்ணீர் விட்டு பராமரித்தல், இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சிக் கொல்லிகளை தயாரித்தல் போன்ற செயல்முறைகள் நிகழ்ச்சியில் கற்றுத்தரப்பட்டன. ஒவ்வொரு பள்ளியும் 2000 மரக்கன்றுகள் உருவாக்கும் இலக்கை நோக்கி செயல்படுகின்றன. இவ்வாண்டு சேலம் மாவட்ட பள்ளிகள் மூலம் சுமார் 1 மில்லியன் மரக்கன்றுகள் உருவாக்கி நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சிறுகதை பரிசும், சிறந்த ஆசிரியர் பரிசும்!
நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனம் (NLC) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியில், நிகழ்ந்த சிறுகதைப் போட்டியில் கடலூர் ஈஷா வித்யா பள்ளி ஆசிரியரான திருமதி.குந்தவை அவர்கள் கலந்துகொண்டு, சிறந்த எழுத்தாளருக்கான விருதைப் பெற்றுள்ளார். திருமதி.குந்தவை வருடந்தோறும் தனது எழுத்திற்காக விருதுபெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கரடி பாதை கற்பித்தல் வழிமுறையில் சிறந்த ஆங்கில ஆசிரியருக்கான மூன்றாம் பரிசை திரு.கனகராஜ் அவர்கள் பெற்றுள்ளார்.
ஈஷா வித்யா பள்ளிகளில் சத்குரு ஜெயந்தி விழா!
நாகர்கோயில் மற்றும் கடலூர் ஈஷா வித்யா பள்ளிகளில் சத்குரு ஜெயந்தி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குருபூஜையுடன் துவங்கிய விழாவில் மாணவர்கள் சத்குருவின் பொன்மொழிகளைக் கூறியதோடு அவரது கருத்துக்களையும் எடுத்துரைத்தனர்.
கடலூர் ஈஷா வித்யா பள்ளியில் சத்குருவின் பிறந்த நாளான செப்டம்பர் 3ஆம் நாளை கொடையாளர் தினமாகக் கொண்டாடினர். ரங்கோலி கோலங்களாலும் வண்ண மலர்களாலும் பள்ளி அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. பள்ளியின் முன்னாள் முதல்வர் சித்ரலேகா அவர்கள் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவிவரும் நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.