ஈஷா கிராம மருத்துவமனையின் 8ம் ஆண்டு விழா!
சேலம் ஈஷா கிராம மருத்துவமனையின் 8ம் ஆண்டு துவக்க விழாவைப் பற்றி ஒரு பார்வை...
சேலம் ஈஷா கிராம மருத்துவமனையின் 8ம் ஆண்டு துவக்க விழாவைப் பற்றி ஒரு பார்வை...
Subscribe
ஈஷா கிராம மருத்துவமனை, தனது 8 ஆம் அண்டு துவக்க விழாவினை ஜுன் 28 அன்று கொண்டாடியது. இம்மருத்துவமனை கடந்த 7 வருடங்களாக சேலம், குள்ளப்பநாயக்கனூர் பகுதியில் பல்வேறு சமூக நல மேம்பாட்டுத் திட்டங்களைச் செயலாற்றி வருகின்றது. பொது மக்களின் ஆர்வத்தினாலும் பங்களிப்பினாலும் உருவாக்கப்பட்ட இம்மருத்துவமனையில் அடிப்படை இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கான ஆய்வு மையம், ஈ.சி.ஜி வசதி, மருந்தகம், கண்காணிப்பு பிரிவு, அவசர சிகிக்சை வசதி போன்ற வசதிகளை தரமாக அதே சமயம் குறைந்த கட்டணத்தில் வழங்கிவருகின்றது.
இம்மருத்துவமனையின் மூலம் மக்களுக்கு முழு உடல் பரிசோதனை, ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்கள், யோகா, விளையாட்டுப் போட்டிகள், மரக்கன்றுகள் நடுதல், பள்ளிக்குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்புகள், அரசுப் பள்ளிகள் தத்தெடுப்புத்திட்டம் ஆகியவற்றையும் செயல்படுத்தி வருகின்றது.
தற்பொழுது 8ம் ஆண்டு துவக்கவிழாவினை முன்னிட்டு இதன் செயல்பாடுகளின் மேலும் ஒரு படிக்கல்லாக கணினி பயிற்சி மையத்தினை கிராம மாணவர்களின் மேம்பாட்டிற்காக துவக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில், சேலம் ஜெயம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர். கிருபாகரன், சேலம் SKS மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர். தன்ராஜ் மற்றும் டாக்டர். நாராயணி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இவ்வாண்டு விழாவில் ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான கைப்பந்து போட்டிகளும் குழந்தைகளுக்கான கேளிக்கை விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.
இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு திப்பம்பட்டி ஊராட்சி தலைவர் திரு. பழனிசாமி அவர்களும், கவுன்சிலர் திரு. இராஜேந்திரன் அவர்களும் பரிசினை வழங்கி விழாவினை சிறப்பித்தனர். மாலை 6 மணி அளவில் நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இம்மருத்துவமனையின் சாதனைகள்:
- பயன்பெற்ற நோயாளிகள்: 51,000க்கும் மேல்
- இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் - 11,352
- ஈ.சி.ஜி. - 378
- வாலிபால் & கைப்பந்து போட்டிகள் - தொடர்ந்து 5 வருடங்களாக
- யோகப் பயிற்சிகள் கற்றவர்கள் - 800