ஈஷா ருசி

எல்லோரும் விரும்பி உண்ணக்கூடிய, எளிதில் தயாரிக்கக் கூடிய, சுவையான சாதப் பொடிகளை வீட்டில் வைத்துக் கொண்டால் சில நொடிகளில் ருசியான உணவு தயார். நீங்களே தயாரித்து ருசிக்க ஈஷா ருசியின் இரண்டு சாதப் பொடிகள் இங்கே...

தவணப்பொடி

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையான பொருட்கள்:

முற்றிய தேங்காய் - 1
மிளகாய் வற்றல் - 20
தனியா - 50 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
புளி - சிறிய எலுமிச்சம்பழம் அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
எண்ணெய் - வறுப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

  • அடுப்பில் வடைச் சட்டியை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியாவைப் போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.
  • அதே கடாயில் முதலில் கடலைப் பருப்பையும், பின்னர் உளுத்தம் பருப்பையும் சிவக்க வறுத்து எடுக்கவும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை (அதிகமாக இருந்தால் நல்லது) சேர்த்து அத்துடன் புளியையும் சேர்த்து சிவக்க வறுக்கவேண்டும்.
  • முதலில் தனியா, மிளகாயை மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வேண்டும் (நைசாக).
  • அத்துடன் கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவேண்டும். இந்த கலவையுடன் வறுத்த தேங்காயை சேர்த்து (புளியுடன்) கரகரப்பாக பொடித்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி ஒரு தடவை கிளறவும்.
  • இந்த கலவையுடன் எண்ணெயில் பொரித்த கடுகு சேர்த்து பொடித்துக் கிளறி, ஆறவிட்டு நன்கு உலர்ந்த பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
  • இந்தப் பொடி சாம்பார் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் தயிர்சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
  • டிபன் வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். பல மாதங்கள் ஆனாலும் கெடாது.

வேர்கடலை, எள்ளு சாதப் பொடி

Instant சாதப்பொடி மிக்ஸ், Instant saathappodi mix

தேவையான பொருட்கள்:

வேர்கடலை - 250 கிராம்
எள்ளு - 50 கிராம்
புளி - 2 நெல்லிக்காயளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - 6
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

  • வேர்கடலையையும் (தோல் நீக்கியது), எள்ளையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும். வாணலியை காய வைத்து புளியை பிசுபிசுப்பு போக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் கறிவேப்பிலை மற்றும் மிளகாய் வற்றலை போட்டு வறுத்தெடுக்கவும்.
  • எல்லா பொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  • இதை சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.