Question: காலையில் வேலை ஆரம்பிக்கும்போது நன்றாகத்தான் உள்ளது, ஆனால் மாலை ஆக ஆக சோர்வாகிவிடுகிறது. ஒரு நாள் முழுக்க நல்ல சக்தியுடன், சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லையே. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நாம் உயிருடன் இருப்பதே சக்தியினால்தான். இந்தச் சக்தி தன்னை பலவிதங்களிலும் வெளிப்படுத்திக்கொள்கிறது. அதனுடன் நீங்கள் எத்தனை லாவகமாக விளையாடுகிறீர்கள் என்பதுதான் நீங்கள் எவ்வளவு சக்தியுடன் இருப்பீர்கள் என்பதனை நிர்ணயிக்கும். நீங்கள் உணவு உண்ணக் காரணம், சக்தியுடன் இருப்பதற்காகத்தான். பெட்ரோல் கார் வாங்கிவிட்டு, அதற்கு கெரோசினை ஊற்றினால் வண்டி ஓடும், ஆனால் அதன் முழு திறனிற்கு ஓடாது. பல இடங்களில் நிற்கும், தேவைக்கு அதிகமான பராமரிப்பு வேண்டியிருக்கும். நான் தற்போது பேசிக் கொண்டிருக்கிறேன், என்னுடைய நாடித்துடிப்பு சராசரியாக 45லிருந்து 48 வரை இருக்கிறது. நான் அமைதியாக அமர்ந்தால், 40திற்கு கீழ் சென்றுவிடும். உணவு உண்டபின், 55லிருந்து 60 வரை இருக்கும். தற்சமயம், நீங்கள் உங்களுடைய நாடித்துடிப்பை சரிபாருங்கள்... நிச்சயமாக 80ஐ சுற்றி இருக்கும். எதுவும் செய்யாத போதும் உங்கள் வண்டி ஓடிக்கொண்டே இருக்கிறதல்லவா? இப்படியிருந்தால், உங்கள் எரிவாயு டேங்க் சீக்கிரமே காலியாகிவிடும். சக்தியை குறைவாக பயன்படுத்தும்போது, அதிகமாக சேகரிப்பு இருக்கும். எனக்கும், என்னுடன் வாழும் பலருக்கும் வாரத்தில் 7 நாட்களும் இடைவிடாத வேலை, தூக்க நேரம் 4 மணி நேரத்திற்கும் குறைவு, நன்றாகத்தானே இருக்கிறோம். என்னைப் பார்த்தால் தூக்கத்தைத் தொலைத்தவனைப் போல் உள்ளதா என்ன? என் வேலையையே நான் விடுமுறையாகப் பார்க்கிறேன். இப்படி வாழும்போது, விடுப்பு தேவையில்லை, விடுமுறை தேவையில்லை.

தேவையில்லாமல், ஏதோவொரு விதத்தில் உங்கள் சக்தியை விரயமாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். வண்டியை ஓட்டும் டிரைவரை பொருத்துதானே எரிவாயு விரயம் இருக்கும்? வாகனம் எப்படி ஓட்டப்படுகிறது, அதற்குள் எம்மாதிரியான எரிவாயு இடப்படுகிறது, அதனை எவ்வாறு தூய்மைப்படுத்துகிறீர்கள், அதனை எப்படி கையாளுகிறீர்கள் போன்ற பல விஷயங்கள் ஒரு வாகனத்தின் வல்லமையை நிர்ணயிக்கின்றன. இது மனிதனுக்கும் பொருந்தும். பல ஆயிரம் வருடங்களாக, இந்த தேசத்தில் மட்டும்தான், மனிதன் தன் உள்நிலையை எப்படி வைத்துக் கொள்வது என்பதற்கு ஓர் அறிவியலே வகுத்திருக்கிறார்கள். அந்த அறிவையும் ஞானத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், இந்தத் தலைமுறையில் அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு எதை எதையோ பொறுக்கி எடுத்துக் கொள்கிறார்கள். நீங்களும் நானும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருந்தால்தான் சமூகமும் வளமாய் இருக்கும். சமூகம் என்பது ஒரு வார்த்தை மட்டுமே, நாம் துன்பமாய் இருந்துவிட்டு சமூகம் நலமாய் இருக்க வேண்டும் என முனைந்தால் அது நடக்காது. ஒன்றாய் கூடிக் களித்து, குடித்து, நடனமாடி வாழ்வதனால் மட்டும் நன்மை வந்துவிடாது. மனித நன்மைக்கு, உகந்த செயல்களையும் அதற்கு உண்டான அடிப்படை கலாச்சாரத்தையும் காப்பது அவசியம்.

Question: சத்குரு, நான் தொடர்ந்து ஈஷா யோகா பயிற்சிகள் செய்து வருகிறேன், ஆனால்... எனக்கு உங்கள் மேல் சந்தேகமாக உள்ளது. என்ன செய்வது என்று தெரியவில்லை? பயிற்சியை விட்டு விடட்டுமா?

சத்குரு:

என்னை நம்புங்கள் என என்றாவது நான் உங்களிடம் கேட்டிருக்கிறேனா? அல்லது நான் சொல்வதை நம்புங்கள் என்றிருக்கிறேனா? நான் சொல்வதை உங்கள் அறிவெனும் பூதக்கண்ணாடியின் கீழ் வைத்துப் பாருங்கள். அந்தப் பரீட்சையை நான் வென்றால், உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வேலை செய்யாது போனால் விட்டுவிடுங்கள், அவ்வளவுதானே? இன்னொருவருக்கு அது வேலை செய்யலாம், அதனால் உங்கள் குப்பைகளை அவர்களுக்குள் போடாதீர்கள். நீங்கள் பயன்படுத்துவது பிளாக்பெர்ரி போன் எனச் சொன்னீர்கள், பிளாக்பெர்ரி அலைபேசி செய்தவரை நீங்கள் நேரில் பார்த்து, அவரை நம்பித்தான் அந்த அலைபேசியை வாங்கினீர்களா? இல்லை. அந்த அலைபேசியைச் செய்தவர் எவ்வளவு மோசமான மனிதராய் இருந்தாலும் அது வேலை செய்கிறது என்பதால் அலைபேசியை பயன்படுத்தத்தானே செய்கிறீர்கள்? நான் வழங்கும் யோகப் பயிற்சிகளையும் அதே கண்ணோட்டத்துடன் பார்க்கலாமே! என் மீது நம்பிக்கை இல்லாததால் யோகப் பயிற்சிகளை நிறுத்த வேண்டாம், அது உங்களுக்கு அற்புதமான பலன்களை வழங்கும். ப்ளாக்பெர்ரி நிறுவனத்துடன் நீங்கள் கூட்டு வைக்கப் போகிறீர்கள் என்றால் அலசி, ஆராய்ந்து, பின்னர் அவர்களுடன் சேர்வது உசிதமானது. நீங்கள் ஒன்றும் என்னுடன் எவ்விதத்திலும் கூட்டு வைத்துக்கொள்ளப் போவதில்லையே!