சென்னையில் யோகா அலை!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை வணிக வரித்துறை அலுவலகத்தில் நடந்த யோகா வகுப்பினைப் பற்றிய ஒரு சில துளிகள் இங்கே...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை வணிக வரித்துறை அலுவலகத்தில் நடந்த யோகா வகுப்பினைப் பற்றிய ஒரு சில துளிகள் இங்கே...
சர்வ தேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுக்க உள்ள ஈஷா தன்னார்வ தொண்டர்கள், சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக யோக வகுப்பினை இலவசமாக மக்களுக்கு அளிக்க பல இடங்களில் யோகா வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக சென்னை வணிகவரித்துறையில் யோக வகுப்புகள் நடத்த சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் அணுகிய போது, இதனை மிகவும் ஊக்குவித்த ஆணையர் திரு. ராஜா ராம் I.A.S அவர்கள், "சென்னை அலுவலகத்தில் உள்ள 2000 அதிகாரிகள் மட்டுமல்லாமல் வேலூர், மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலத்தைச் சேர்ந்த சுமார் 10,000 பணியாளர்களும் இந்த பயிற்சியை கற்றுக் கொண்டு பயன் பெற வேண்டும்" என்று கூறினார்.
தமிழக அரசாங்கத்தின் மிகப் பெரிய அங்கமான வணிக வரித்துறை, அரசாங்கத்தின் பெரும் முக்கிய முடிவுகளை எடுக்கும், உயர் பதவிகளில் இருக்கும் உயர் அதிகாரிகள், முதல் முறையாக நேற்று தங்களுக்குள் உள்நோக்கிய பயணத்தை துவங்கினர்.
முக்கிய பதவியில் இருக்கும் இணை ஆணையர், உதவி ஆணையர், துணை ஆணையர், I.A.S அதிகாரிகள் மேலும் பல உயர் பதவியைச் சேர்ந்த சுமார் 50 பங்கேற்பாளர்களுடன் இந்த வகுப்பு நேற்று துவங்கியது.
மிகவும் ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் வகுப்பில் பங்கேற்ற இவர்கள், இந்த வகுப்பு மிகவும் நிறைவாகவும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது எனக் கூறினர்.
Subscribe
இணை ஆணையர் திருமதி. சரஸ்வதி அவர்கள் கூறும் போது “நான் பலமுறை தியானம் செய்ய முயற்சித்திருக்கிறேன். நானாகவே புத்தகத்தைப் பார்த்து மற்றும் இணையதளத்தில் தேடி பயிற்சி செய்திருக்கிறேன். ஆனால் இது போல எப்போதும் உணர்ந்ததில்லை. முறையாக ஒரு வழிகாட்டுதலுடன் செய்யும் போது அது ஆழ்ந்த அனுபவத்தை அளித்தது. யோகாவை சரியான வழிகாட்டுதலுடன் தான் செய்ய வேண்டும் என்று தற்போது புரிந்து கொண்டேன்.” என்றும் ஈஷா யோகாவில் நடைபெறும் பிற வகுப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.
உதவி ஆணையரான திருமதி மீனாக்ஷி அவர்கள் கூறும் போது “மனதில் ரிலேக்ஸாக உணர்ந்தேன்” என்றார்.
மற்றொரு உதவி ஆணையர் திருமதி தேன்மொழி அவர்கள் இதைப் பற்றிக் கூறும் போது “இது ஒரே ஒரு வகுப்பாக அல்லாமல் குறைந்த பட்சம் ஒரு வாரமாவது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் யோகாவிற்கென ஒரு தனியறை ஏற்படுத்திக் கொடுத்தால் நாங்கள் தினமும் பயிற்சியை விடாமல் தொடர்ந்து செய்ய உதவியாக இருக்கும்” என்று கூறினார்.
மாண்புமிகு ஆணையர் திரு ராஜாராம் IAS அவர்கள் கூறும் போது, "இது ஒரே நாள் வகுப்பாக அல்லாமல் தினம்தோறும் தொடரும் பயிற்சியாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து திருமதி தேன்மொழி அவர்கள் Whats app yoga group மற்றும் மின்னஞ்சல் மூலம் தினமும் யோகாவை தொடர்ந்து செய்வதை ஊக்குவிப்பதற்கான செயல்களை செய்யவிருப்பதாகக் கூறினார். உயர் பதவியில் இருக்கும் இவர்கள், வாழ்வின் உச்சத்தை எட்டிய இவர்கள், மிகவும் திறந்த மனநிலையில் இருப்பதும் உள்நிலையில் தேடுதலில் இருப்பதும் தன்னார்வ தொண்டர்களுக்கு பெரும் ஊக்கத்தைத் தருவதாக அமைந்தது.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு துளி ஆன்மீகமாவது கிடைத்திட வேண்டும் என்ற சத்குருவின் கனவோடு ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு தேடுதலில் தான் இருக்கிறது என்ற நிஜம் சேரும் போது மாபெரும் யோக அலை இந்த தேசத்தில் பரவ இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
"சர்வதேச யோகா தினத்தன்று நம் நாட்டில் ஒவ்வொருவரும் யோகா செய்ய வேண்டும்." இந்நோக்கத்தோடு சத்குரு அவர்கள் எளிய யோகப்பயிற்சி ஒன்றை வடிவமைத்துள்ளார். இதனை அனைவருக்கும் கொண்டு செல்ல ஆயத்தமாகியுள்ளனர், ஈஷா தன்னார்வத் தொண்டர்கள். இவர்கள் அந்தந்த ஊர்களில் நடக்கும் சிறப்பு யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, பின்னர் இவர்களே அனைத்து இடங்களுக்கும் சென்று இந்தப் பயிற்சியை இலவசமாக கற்றுத்தரவிருக்கிறார்கள்.
இந்த யோகாவை வெறும் 1 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். விருப்பம் இருந்தால் அவரவர் வீட்டிலேயே வகுப்பு நடத்திடலாம். உங்கள் அலுவலகத்தில், அப்பார்ட்மென்ட்டில், வீடுகளில், எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். இவ்வகுப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது!
ஜூன் 21 - சென்னையில் சத்குரு...
சென்னையில் யோகா தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடும் வகையில் சத்குருவின் மகாசத்சங்கம் நிகழவிருப்பது யோகா தினத்திற்கு இன்னும் சிறப்பு சேர்க்கிறது. இது ஈஷாவின் கொண்டாட்டமாக இல்லாமல், உலக மக்களின் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். இந்நிகழ்வில் நீங்களும் கலந்துகொள்ளலாம்.
இவ்வுன்னத செயலில், நீங்கள் பல வழிகளில் துணைபுரியலாம்...
நீங்கள் வசிக்கும் இடங்களிலும், பணிபுரியும் அலுவலகங்களிலும் இலவச ஈஷா யோகா வகுப்பு நடத்த வழி வகுத்துக் கொடுக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு பின் வரும் எண்களில் தொடர்பு கொள்ளவும்:
சென்னை 83000 11000
மேற்கு மண்டலம் 83000 45000
வடக்கு மண்டலம் 83000 31000
தெற்கு மண்டலம் 83000 98444
கிழக்கு மண்டலம் 83000 98222
சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் இணைய உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஆனந்தமான ஆரோக்கியமான வாழ்வு - அனைவருக்கும் ஒரு துளி யோகா! நாம் இதனை நிகழச் செய்வோம்.