சத்குரு:

ஆன்மீகத்தில் வளர வேண்டுமென்றால் உறவுகளை விட்டுவிட வேண்டுமா என்று சிலர் கேட்கிறார்கள். ஆன்மீகம் என்பது உள்நிலை சார்ந்தது. உறவுகளோ புறவுலகம் சார்ந்தவை. எனவே ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகுமா என்னும் கேள்விக்கே இடமில்லை.

அந்த மனிதர் ஆன்மீகத்தில் இன்னும் ஆழமாக செல்லச் செல்ல, அவரால் கண்மூடி அமர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்பது தெரியும்போது, சிக்கல்கள் ஆரம்பிக்கின்றன.

ஆன்மீகத்தில் வளர முதலில் உங்களுக்கு உங்களைப் பற்றிய புரிதல் வேண்டும். மற்றவர்கள் உங்களை எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை. உங்கள் வலிகள் போராட்டங்கள் எல்லாமே தனிமனிதர் சார்ந்த விஷயம். எனவே, ஒவ்வொருவரும் தன்னைத்தானே பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆன்மீகம் என்பது உங்கள் உள்நிலையில் நிகழ்வது. வெளியே என்ன செய்ய வேண்டுமென்பது உங்கள் விருப்பம். உறவுகளுடன் இருப்பதா, தனிமையில் இருப்பதா, நகரத்தில் வாழ்வதா மலைகளுக்குப் போய் சேர்வதா என்பதெல்லாம் நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு. அதற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அடுத்து யாருடன் உங்களுக்கு எந்தவிதமான உறவு இருக்கிறது என்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பத்தையும் தேவையையும் பொறுத்தது. எனவே, ஆன்மீகத்தையும் உறவுகளையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். இரண்டும் வெவ்வேறு அம்சங்கள்.

ஆன்மீகப் பாதையில் நடையிடும் பலரும் உறவுகளை உதறக் காரணம், ஆன்மீகமல்ல. அவர்களால் உறவுகளின் நிபந்தனைகளையும் நெருக்கடிகளையும் தாங்க முடிவதில்லை. உறவுகளை விட்டுவிட்டு வருமாறு ஆன்மீகம் வலியுறுத்துவதில்லை. ஆனால், பல நேரங்களில், ஆன்மீகத்தை விட்டுவிட்டு வருமாறு உறவுகள் வலியுறுத்துகின்றன. எனவே, இரண்டில் ஏதாவது ஒன்றை விட்டுவிடுவதென மனிதர்கள் தீர்மானிக்கிறார்கள்.

இதில் துரதிருஷ்டம் என்னவென்றால், ஆன்மீகத்திற்காக உறவுகளைத் துறந்தவர்களை விட உறவுகளுக்காக ஆன்மீகத்தைத் துறந்தவர்கள்தான் அதிகம். உண்மையில் இவையிரண்டும் ஒன்றுடனொன்று முரண்பட்டவையே அல்ல. உங்கள் உள்நிலையில் நிகழும் ஒன்று, யாருடனாவது அல்லது எதனுடனாவது உங்களுக்கிருக்கும் உறவுடன் முரண்படப் போவதேயில்லை. ஆனால், நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென ஓர் உறவு நிபந்தனை விதிக்கும் போதுதான் அது தடையாக மாறுகிறது.

இது பல இடங்களில் நிகழ்வதைப் பார்த்திருக்கிறோம். ஒருவர் தியானம் செய்யத் தொடங்குகிறார் என்றால், முதலில் அவருடைய குடும்பம் மகிழ்ச்சியடைகிறது. அவரது நிபந்தனைகள் குறைகின்றன. அமைதியாய் இருக்கிறார். முன்பைவிட நன்றாக செயல்படுகிறார். ஆனால், அந்த மனிதர் ஆன்மீகத்தில் இன்னும் ஆழமாக செல்லச் செல்ல, அவரால் கண்மூடி அமர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்பது தெரியும்போது, சிக்கல்கள் ஆரம்பிக்கின்றன.

என்னைச் சுற்றியிருக்கும் பலரோடும் தீவிரமும் ஈடுபாடும் மிக்க உறவுகள் எனக்கு உண்டு. அவை பல்வேறு தளங்களிலும் பரிமாணங்களிலும் செயல்படுகின்றன. ஆனால், என் ஆன்மீகத் தன்மையுடன் அவை எவ்விதத்திலும் முரண்படுவதில்லை.

இதே மனிதர் வேறு ஒருவர் பின்னால் போனால் அவருடைய மனைவிக்கு அந்தச் சூழலை எப்படி கையாள்வதென்று தெரியும். ஆனால், ஒரு மனிதர் அவராகவே மகிழ்ச்சியாய் இருக்கும்போது மற்றவர்களின் பாதுகாப்பு உணர்ச்சி கேள்விக்குள்ளாகிறது. அதை ஓர் அபாயமாகவே அவர்கள் கருதுகிறார்கள். “இனிமேல் இந்த வீட்டில் தியானம் செய்யக்கூடாது,” என்கிறார்கள். அந்த மனிதர், “சரி! நான் அமைதியாக அமர்ந்திருக்கிறேன்,” என்கிறார். உடனே “அதெல்லாம் முடியாது. ஒன்று, ஏதாவது வேலை செய்யுங்கள், அல்லது என்னுடன் பேசுங்கள்,” என்கிறார்கள். இப்படி எளிய விஷயங்களுக்குக்கூட வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கும்போது விசித்திரமாகத் தோன்றும். சிலர் முட்டாள்தனமாக எதையாவது செய்யும்போது பிரிவு நேரிடும்.

என்னைச் சுற்றியிருக்கும் பலரோடும் தீவிரமும் ஈடுபாடும் மிக்க உறவுகள் எனக்கு உண்டு. அவை பல்வேறு தளங்களிலும் பரிமாணங்களிலும் செயல்படுகின்றன. ஆனால், என் ஆன்மீகத் தன்மையுடன் அவை எவ்விதத்திலும் முரண்படுவதில்லை. ஏனென்றால், அவை இரண்டுமே வாழ்வின் வெவ்வேறு அம்சங்கள். உறவுகள் என்பவை வெளியுலகம் சார்ந்தவை என்பதால், அவற்றை முழுத் திறமையுடன் நீங்கள் கையாள வேண்டும். நீங்கள் ஆன்மீகப் பாதையில் போனாலும், உங்கள் வாழ்க்கைத் துணைவர் ஆன்மீகப் பாதையில் போனாலும் அதன் காரணமாக உங்கள் வாழ்வில் எவ்வித முரண்பாடும் ஏற்படக் கூடாது.

ஆன்மீகத்தில் ஈடுபடுவதில் ஒரு விஷயம் என்னவென்றால், உங்களுக்குள் ஏதோ ஒன்றின் சுவையை உணர்ந்து விட்டீர்களென்றால், அதுவே உங்கள் வாழ்வின் மையமாக மாறிவிடுகிறது. ஆனால், உங்களுடன் உறவில் இருக்கும் ஒருவர், தானே உங்கள் வாழ்வின் மையமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். அப்படி இல்லையெனும் போது பாதுகாப்பற்ற உணர்வு அவர்களைத் தொற்றிக் கொள்கிறது.

மனிதர்கள் கடவுளை நம்புவதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் கடவுள்தானே அவர்கள் வாழ்வின் மையமாக இருக்க வேண்டும்? இதில் சிக்கல் உறவுகளல்ல. உறவுகளின் பாதுகாப்பற்ற உணர்வுதான். உறவுகள் அன்பின் அடிப்படையில் உருவாகும்போது சிக்கலில்லை. ஆனால், அவை எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும்போது, சிக்கல் வருகிறது. மனிதர்கள் ஒருவரிடமிருந்து எதையோ பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். அதைப் பெற முடியாதபோது வருந்துகிறார்கள்.

மாறாக, நீங்கள் ஆன்மீகப் பாதையில் இருக்கும்போது உங்கள் உறவுகள் மிகவும் மனமுதிர்ச்சியோடும் அற்புதமாகவும் அமையும். ஏனென்றால், மற்ற மனிதர்கள் மீது அபத்தமான எதிர்பார்ப்புகள் ஏதும் உங்களுக்கு இருக்காது. ஏனெனில், அந்த மனிதரை இன்னோர் உயிராக மதித்து நடத்துவீர்கள். இங்கே மிகவும் மதிக்கப்பட வேண்டியது உயிர்தான். மற்ற மனிதர்களையும் இன்னோர் உயிராகப் பார்த்து நடத்தினால் சிக்கல் இருக்காது.