ஆசியாவிலிருந்து அமெரிக்காவிற்கு
இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிற்கு கடந்த வாரம் பயணம் செய்தது குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சத்குரு. அத்துடன் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் துவங்கவிருக்கும் புதிய சகாப்தங்கள் குறித்தும் பகிர்ந்துகொள்கிறார்.
இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிற்கு கடந்த வாரம் பயணம் செய்தது குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சத்குரு. அத்துடன் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் துவங்கவிருக்கும் புதிய சகாப்தங்கள் குறித்தும் பகிர்ந்துகொள்கிறார்.
Subscribe
சிங்கப்பூரில் ஒரு நாள் இருந்து F1 ரேஸ் பார்த்தது, முந்தைய வாரத்தின் இடைவெளியற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சிறிது ஆசுவாசமாக இருந்தது. வியத்தகு இந்த எந்திரங்கள், கண்ணுக்கு நிச்சயம் விருந்து. இந்த விளையாட்டின் சப்தமும், ஆக்ரோஷமும் உங்கள் இதயத்தில் தீயை பற்றவைத்திடும். புதிய விதிமுறைகளால் இம்முறை சப்தம் சற்று குறைந்திருக்கும் போதிலும், அதன் ஆக்ரோஷம் அப்படியே இருக்கிறது. ஃபெராரி பந்தய அரங்கில் இருந்த அனுபவம் நன்றாக இருந்தது. இங்கு ஜெர்மானிய இயந்திரங்களின் சலனமற்ற செயல்திறன் ஆதிக்கம் செலுத்தும்போதிலும், இத்தாலிய கார்களின் வாசனையே தனி. சிங்கப்பூர் ரேஸ் தடம் அதிக சாகசத்திற்கு இடம் தராத காரணத்தால், வரிசையில் இருந்த இரண்டாவது கார் ஸ்டார்ட் ஆகாத பரபரப்பு தவிர, கிட்டத்தட்ட ஆரம்பித்த அதே வரிசையில் கார்கள் திரும்பி ரேஸ் முடிவடைந்தது.
அடுத்த இரண்டு நாட்களில், ஒரு நாள் உத்தர்காண்டிலும், ஒரு நாள் தில்லியிலும் இடையறா செயல்களில் கடந்தோடியது. இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோதி வருகையையொட்டி இங்கு பெரும் பரபரப்பு. முன்னெப்போதும் இருந்திராத ஒரு வரவேற்பு. அவரும் எழுச்சிகொண்டு இந்த அரசியல் பயணத்தை ஒரு நட்சத்திர நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார். ஒரு தனிமனிதர் பலதரப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையளித்து எதிர்பார்ப்புகளை வளர்த்திருப்பதை பார்க்கையில் பூரிப்பாக இருக்கிறது. இந்திய மக்களிடமும், வெளியே வர்த்தக உலகிலும், அவர் உருவாக்கியிருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பூர்த்தியடைய வேண்டும். பெருந்திரளான மக்களின் நல்வாழ்வு அவர் வெற்றியை சார்ந்திருப்பதால்.அரசியல் சூழநிலைகள் அவரை அமிழ்த்திவிடாமல், அவர் வெற்றியடையட்டும். மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து நம் நாட்டை வழிநடத்த உயர்ந்திருக்கும் இந்த மனிதரின் கதை வியக்கத்தக்கது. இதுவே நம் தேசத்தின் கதையாகவும் மாறட்டும்.
iii இல் உலக அமைதி தின கொண்டாட்டங்கள் மிக விமரிசையாக நடைபெற்றன. மாலையில் பட்டாசுகள் மட்டும் திட்டமிட்டிருந்தபடி வெடிக்கவில்லை. அவைகூட அமைதி காக்க விரும்பியனவோ என்னவோ.
ஆதி யோகி சூயஸ் கால்வாயைக் கடந்து அட்லாண்டிக் சமுத்திரத்தை நுழைந்துள்ளார். இன்னும் சில வாரங்களில் இங்கே இருப்பார். அதாவது, இன்னொரு சகாப்தத்தின் ஆரம்பம்...