கைலாஷ் மானசரோவர் - சத்குருவின் பகிர்தல்...
டாக்டர். ராதா மாதவி அவர்களின் கைலாஷ் பயணத் தொடர் சென்ற வாரத்துடன் முடிவடைந்த நிலையில், கைலாஷ் மானசரோவர் பற்றி இன்னும் சில சுவாரஸ்ய தகவல்களுடன் சத்குருவின் பகிர்தல் இந்த வாரம்...
டாக்டர். ராதா மாதவி அவர்களின் கைலாஷ் பயணத் தொடர் சென்ற வாரத்துடன் முடிவடைந்த நிலையில், கைலாஷ் மானசரோவர் பற்றி இன்னும் சில சுவாரஸ்ய தகவல்களுடன் சத்குருவின் பகிர்தல் இந்த வாரம்...
டாக்டர்.ராதா மாதவி:
கைலாயம் சிவனின் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இதனால் சிவன் அங்கே அமர்ந்திருக்கிறார் என்றோ, நடனமாடிக்கொண்டு இருக்கிறார் என்றோ பொருள் இல்லை. கைலாயம் ஒரு ஞானக் களஞ்சியம் என்பதால் அவ்வாறு கூறப்படுகிறது.
சராசரிப் புரிதலைவிட பல மடங்கு அதிகமாய் தன்னை உணர்ந்த ஞானிகள், அந்தப் புரிதலை உடன் இருப்பவர்களுக்கு முழுவதுமாக உணரவைக்க முடியாது. சிறு பகுதியைத்தான் வழங்க முடியும்.
தென்னிந்தியாவில் வாழ்ந்த 63 நாயன்மார்களில், ஒரு பெண் நாயன்மார் உட்பட பலரும் கைலாயத்துக்குச் சென்றிருக்கிறார்கள். சமூகச் சூழல்கள் காரணமாகத் தங்கள் ஞானச் செல்வத்தை, சுற்றி இருப்பவர்களிடம் அவர்களால் வழங்க முடியவில்லை.
எனவே, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே தன்னை உணர்ந்தவர்கள் கைலாயம் சென்று, தங்கள் ஞானத்தை சக்தி வடிவமாக அங்கே பதித்து வருகிறார்கள். இது தொடர்ந்து நடைபெறுகிறது. அந்த வகையில் கைலாயம் ஒரு ஞானக் களஞ்சியம்!
Subscribe
அனைத்து ஆன்மீகப் பாரம்பரியங்களில் வந்தவர்களும் தங்கள் ஞானத்தைக் கைலாயத்தில் பதித்திருக்கிறார்கள். அதனால்தான் பௌத்தர்கள், ஜைனர்கள், திபெத்தைச் சேர்ந்த பான் மதத்தினர் மற்றும் இந்துக்கள் அனைவருமே தங்கள் குருமார்கள் அங்கு வாழ்ந்து வருவதாகச் செல்கின்றனர்.
புரிதலில் நீங்கள் உச்சம் அடைந்தவராக இருந்தால், உள்நிலைப் பரிமாணத்தைப் பொறுத்தவரையில், நீங்கள் எதை அறிந்துகொள்ள விரும்பினாலும் அதைக் கைலாயத்தில் அறிந்து கொள்ள முடியும்.
உலகின் பல புனிதத் தலங்களுக்கு அல்லது சக்திமிக்க இடங்களுக்கு சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் தலை வணங்கும்போது உண்மையாகவே வணங்குகிறேன். அது கேதார்நாத்தாக இருந்தாலும் சரி, கௌதம புத்தரே என் எதிரில் வந்தாலும் சரி, அவர்களை உண்மையாக வணங்குகிறேன். ஆனால், என் குருவை வணங்குவதைக் காட்டிலும் ஒரு படி குறைவாகவே வணங்குகிறேன். ஆனால், கைலாயத்தை வணங்கும்போது மட்டும் என் குருவை எப்படி வணங்குவேனோ, அப்படி வணங்கினேன். இதற்கு முன் வேறு யாருக்கும் எதற்கும் அந்த அளவு நான் தலை வணங்கியது இல்லை.
மானசரோவர்
எல்லோரும் என்னைத் தர்க்கரீதியான குருவாகத்தான் அறிந்திருக்கிறார்கள். நானும் அப்படித்தான் இருந்திருக்கிறேன். சின்ன வயது முதல் யக்ஷர்கள், கணங்கள், முப்பத்து முக்கோடித் தேவர்கள் என்று எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறேன். அந்தக் கதைகளை ரசித்திருக்கிறேனே தவிர நம்பியது இல்லை.
வேற்றுலகில் இருந்து பலரும் இந்த உலகுக்கு வந்து போன கதைகளை நம் புராணங்கள் பேசுகின்றன. ஒரு கதைக்குள் பல நூறு கிளைக் கதைகளைக்கொண்டு இருக்கும் மகாபாரதத்துக்கு நிகராக ஒரு கதை இல்லை. இந்தியர்கள் இணையற்ற கதை சொல்லிகள் என்ற அளவில் அவற்றைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால், முதல் முறையாக மானசரோவர் போனபோது, அங்கு நிகழும் சூட்சுமமான விஷயங்களைப் பார்த்தபோது, இந்தக் கதைகள் வெறும் கதைகள் அல்ல என்பதை உணர்ந்தேன். மண்ணில் வானம் இறங்கி வரும் மகத்துவம், மானசரோவரில் நிகழ்கிறது. அதிகாலை 2.30 முதல் 3.45 வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் அங்கு நிகழ்பவை பிரமிப்பூட்டுகிறது.
ஆன்மீகத்தில் ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் மானசரோவர் பயணம் மகத்தானத் திருப்புமுனையாக அமையும். விவரிக்க முடியாத அற்புதங்களின் விஸ்வரூபம் என்று மானசரோவரைச் சொல்வேன்.
மானசரோவரில் உங்களுக்குள் ஒரு விதை விதைக்கப்படுகிறது. நல்ல வேளையாக அந்த விதையை அழிக்கும் சக்தி உங்களுக்கு இல்லை. என்ன செய்தாலும் அந்த விதை முளைத்திடும்.
உங்கள் விருப்பு, வெறுப்பு, வேண்டுதல், வேண்டாமை போன்றவற்றைக் கைவிடுவீர்களெனில், அந்த விதை விரைவாய் வளரும். இந்த விதை மரங்களை முளைக்கவைக்கும் விதை அல்ல. ஒரு மலையையே முளைக்கவைக்கும் விதை.
ஆன்மீகம் என்று வரும்போது, மிகப் பிரம்மாண்டமான வாய்ப்பாக விரிந்து கிடக்கிறது கைலாஷ் மற்றும் மானசரோவர்.
கைலாஷ் - மானசரோவர் யாத்திரை தொடருக்காக பயணக் குறிப்புகள் தந்து உதவிய திருவண்ணாமலையைச் சேர்ந்த டாக்டர் ராதா மாதவி அவர்களுக்கு நன்றி!
கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்கான தேதிகள்:
2013 ஆகஸ்ட் 14 முதல் 26 வரை (A1) முன் பதிவு நிறைவுற்றது
2013 ஆகஸ்ட் 16 முதல் 28 வரை (A2) முன் பதிவு செய்யலாம்
2013 ஆகஸ்ட் 10 முதல் 22 வரை (B1) முன் பதிவு செய்யலாம்
முன் பதிவு செய்யக் கடைசி தேதி: 2013 மே-31 ம் தேதி
தொடர்பு எண்கள்:
தமிழ்நாடு - 9488111333
பிற மாநிலங்கள் - 9488111555
இ - மெயில்:
தமிழ்நாடு - tn@sacredwalks.org
பிற மாநிலங்கள் - india@sacredwalks.org