“Incredible India”வில்… ஆதியோகி!
பார்ப்பவர்கள் கண்ணில் பதிந்து, பின் இதயத்துள் நுழைந்து மறக்க இயலா வடிவான திருமுகத்தை கொண்டிருக்கும் ஆதியோகி, செல்ஃபியாகவும் அவரவர் கேலரிகளில் சேமிக்கப்படுகிறார். அனைவரையும் ஈர்க்கும் ஆதியோகிக்கு இந்திய சுற்றுலாத் துறை வழங்கியுள்ள ஒரு பெருமை பற்றி…
இந்திய சுற்றுலாத்துறை ஈஷாவில் அமையப்பெற்றுள்ள 112 அடி உயர ஆதியோகி திருவுருவச் சிலையை “Incredible India” சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய மார்பளவு சிலைக்கான கின்னஸ் சாதனையை படைத்துள்ள ஆதியோகி, தற்போது இன்னுமொரு பெருமையோடு, இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த அடையாளமாகியுள்ளது!
சத்குரு அவர்கள் கூறும்போது, "மகிமை பொருந்திய ஆதியோகி திருமுகம், ஆன்மீகத்தின் முக்கிய அம்சமான நிஷ்சலனத்தையும், உவகை மற்றும் பரவசத்தையும் ஒருசேர வெளிப்படுத்துகிறது. ஆதியோகி திருமுகம் இப்போது Incredible India பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஆகியுள்ளது. இதனை நிகழச்செய்த அனைவருக்கும் வாழ்த்துகள்," என்றார்.
Subscribe
ஆதியோகி திருமுகத்தினை சத்குரு இரண்டரை வருடங்களில் வடிவமைத்தார். ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் இதன் கட்டுமானப் பணிகளை எட்டு மாதங்களில் நிறைவுசெய்தனர். கடந்த 2017 மஹாசிவராத்திரி நாளன்று சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆதியோகி திருமுகம், மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
ஆதியோகியின் முக்கியத்துவம் பற்றி சத்குரு கூறுகையில், “வரும் தலைமுறையினர் நம்பிக்கை கொண்டிருப்பவர்களாக இல்லாமல், தேடுதல் உடையவர்களாய் இருப்பது முக்கியமானது. வரும் காலங்களில், தத்துவங்கள் கருத்தியல் கோட்பாடுகள், நம்பிக்கை முறைகள் ஆகியவை காரண அறிவுக்கும் அறிவியல் பரிசோதனைகளுக்கும் தாக்குப்பிடிக்காத பட்சத்தில், அவை சரியத் துவங்கும்; முக்தி அடைவதற்கான ஏக்கம் மேலெழும்பும். அந்த ஏக்கம் எழும்போது ஆதியோகியும் யோக விஞ்ஞானமும் மிக முக்கியமானவைகளாக ஆகும்."
யோக மரபில், ஆதியோகியை யோகத்தின் மூலமானவராக கருதுகிறோம். 15,000 வருடங்களுக்கு முன்னால், மதங்கள் தோன்றுவதற்கு முன்பே, முதல் யோகியான ஆதியோகி, யோக அறிவியலை தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு வழங்கினார். 112 அடி உயரமுள்ள இந்த ஒளிபொருந்திய திருமுகம், ஒருவர் நல்வாழ்வு, முக்தி அடைய ஆதியோகி நமக்கருளிய 112 வழிகளைக் குறிக்கிறது.
எளிமையாக பராமரிக்கக்கூடிய விதத்தில் இத்திருமுகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கியதன் நோக்கம் ஒரு நினைவுச் சின்னம் அமைப்பதல்ல. மாறாக, யோக விஞ்ஞானத்தின் வாயிலாக மனிதனில் உள்நிலை மாற்றத்தை தூண்டும் கருவியாகவே இச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆதியோகி திருமுகத்தின் முன்பாக சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி வடிவமான யோகேஸ்வர லிங்கம் அமைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் போதுமான பரப்புடன் அமைந்துள்ள ஆதியோகி வளாகம்,. 11 டிகிரி அட்சரேகையில் அமைதிருப்பதால் இவ்விடம் ஆன்மீகத் தேடுதல் உள்ளவர்களுக்கு மிக முக்கியமான சாதகமான இடமாகும். ஆதியோகி கின்னஸ் சாதனை பற்றிய நாளிதழ் செய்தி...
ஆசிரியர் குறிப்பு: சமீபத்தில் ஆதியோகி திருமுகத்தை பார்வையிட்டீர்களா? அல்லது விரைவில் பார்வையிட உள்ளீர்களா? நாங்கள் உங்களது அனுபவத்தை அறிய விரும்புகிறோம்! ஆதியோகியுடனான உங்களது அனுபவங்களையும் ஆதியோகியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் எங்களுக்கு அனுப்புங்கள்! (இ-மெயில் blog@ishafoundation.org) உங்களது பகிர்தல்களை ஈஷா வலைதளத்தில் பதிவிடுகிறோம்! மேலும் உங்களது அனுபவங்களை கீழே கமெண்ட் செய்யலாம்!