40 லட்சம் - இலக்கை எட்ட ஒரு வருடம்
2014ம் வருடத்திற்கான ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் இலக்கு 40 லட்சம் மரக் கன்றுகள் நடுவது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஈஷா பசுமைக் கரங்கள் சார்பாக தமிழகத்தில் பல இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேறின. இவற்றை உங்கள் பார்வைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்...

ஈஷாவில் நடந்தவை…
2014ம் வருடத்திற்கான ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் இலக்கு 40 லட்சம் மரக் கன்றுகள் நடுவது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஈஷா பசுமைக் கரங்கள் சார்பாக தமிழகத்தில் பல இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேறின. இவற்றை உங்கள் பார்வைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்...
ஜூன் 1
மலையை தூய்மைப் படுத்திய ஈஷா...
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா பசுமைக் கரங்களும் SACON (Salim Ali Centre for Ornicology and Natural History) நிறுவனமும் சேர்ந்து வெள்ளியங்கிரி மலையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் திட்டத்தை இவ்வாண்டு நடைமுறைப்படுத்த உள்ளன. இதன் முதல் கட்டமாக, ஜூன் 1ம் தேதி, 200க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்களும், பல கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் வெள்ளியங்கிரி மலையேறி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு ஆரம்பித்த இந்தப் பணி மாலை 4 மணி வரை நடைபெற்றது.
கோவையில்...
அன்று மாலை, கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற நிறைவு விழாவில் ஈஷாவின் இசைக் குழுவான சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசைக் கச்சேரியும் வேறு சில கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. கோவை மாநகர பாராளுமன்ற உறுப்பினர் திரு. பி.நாகராஜன் இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். திரு.நாகராஜன் அவர்கள் முதல் மரக்கன்றினை அப்பகுதியில் வாழும் ஒரு நபருக்கு வழங்கி நிகழ்ச்சியினை துவங்கி வைத்தார். 2014ம் வருடத்திற்கான ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் இலக்கு 40 லட்சம் மரக் கன்றுகள் நடுவது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe
சென்னையில்...
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மற்றும் தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுனர் சங்கமும் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வாகனங்களால் உண்டாகும் மாசு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக சென்னையில் சைக்கிள் பேரணி நடத்தியது. ‘Cycle 2 Work’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பேரணி காலை 7 மணிக்கு சென்னை மத்திய கைலாஷ் பகுதியிலுள்ள VHSல் ஆரம்பித்து சிறுசேரி வரை நடைபெற்றது.
இந்தப் பேரணியை திரு. R. நடராஜ் IPS (Retd.) அவர்கள். கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இவ்வருட இலக்கான 40 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் முதல் மரக்கன்றை SPARRC நிறுவனத் தலைவர் டாக்டர் திரு. கண்ணன் புகழேந்தி அவர்களும், திரு. R. நடராஜ் அவர்களும் நட்டு துவக்கி வைத்தனர்.
ஜூன் 5
திருச்சியில்...
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டமும், பள்ளி கல்வித்துறையும் இணைந்து, திருச்சி மாநகராட்சியுடன் சேர்ந்து பசுமைப் பள்ளி இயக்கம் மூலம் 8 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் நிறைவு விழாவை நேற்று கொண்டாடியது. இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து திருச்சியில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இந்தப் பசுமைப் பள்ளி இயக்கத்தில் பங்குபெற்ற மாணவர்களுக்கு இவ்விழாவில் அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 438 அரசு மற்றும் உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து தோராயமாக 18,000 மாணவர்கள் நேரடியாக இந்தப் பசுமைப் பள்ளி இயக்கத்தில் செயலாற்றியுள்ளனர்.
இவ்விழாவிற்கு, திருச்சி மாநகர ஆணையர் திரு. V.P. தண்டபாணி அவர்கள் தலைமை தாங்கினார். மேலும், திருச்சி தலைமை கல்வி அதிகாரி திரு. K. செல்வகுமார் அவர்கள், திருச்சி மாவட்ட கல்வி அதிகாரி திருமதி. சொர்ணலதா அவர்கள், லால்குடி மாவட்ட கல்வி அதிகாரி திரு. தண்டாயுதபாணி அவர்கள், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் திருமதி. P. வசந்தா அவர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதுவையில்...
புதுவையில் இந்த ஆண்டு 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளது ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம். புதுவையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில், மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் திரு. P. ராஜவேலு அவர்கள் முதல் மரக்கன்றினை நட்டு துவக்கி வைத்தார். மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. N.G. பன்னீர்செல்வம் அவர்கள், ஆளுநர் செயலாளர் திரு. P.R. மீனா IAS அவர்கள், பத்மஸ்ரீ திரு. விவேக் (நடிகர் மற்றும் க்ரீன் குளோப் அறக்கட்டளை நிறுவனர்) ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், பத்மஸ்ரீ நடிகர் திரு. விவேக் அவர்களின் க்ரீன் குளோப் அறக்கட்டளையுடன் இணைந்து மரம் நடுதலில் ஈடுபடவுள்ளது. அதுமட்டுமல்லாமல், பிரான்ஸ் நாட்டின் சர்வதேச அமைப்பான Yves Rocher அறக்கட்டளையுடன் இணைந்து தமிழகத்திலும், புதுவையிலும் மரக்கன்றுகளை நடவுள்ளது.
ஈரோட்டில்...
ஈரோட்டில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டு இந்த திட்டத்தை இவ்வருடம் செயல்படுத்தவுள்ளது ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம். இத்திட்டத்தின் துவக்க விழா, ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணியளவில் நடந்தது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. V.K. சண்முகம், IAS அவர்கள் முதல் மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார்.
மதுரையில்...
மதுரையில் இந்த ஆண்டு 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளது ஈஷா பசுமைக் கரங்கள். இந்த திட்டத்தின் துவக்க விழாவில், மதுரை திருப்பாளையில் அமைந்துள்ள SDH ஜெயின் வித்யாலயா பள்ளி முதல்வர் திருமதி. R.அனிதா அவர்களும், சௌராஷ்ட்ரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், A.K.R கல்வி அறக்கட்டளையின் தாளாளர் திரு. A.R. பாலாஜி அவர்களும் முதல் மரக்கன்றினை நட்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் 500 பேருக்கு 500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் புவி வெப்பமடைதலைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாணவர்களுக்கு ஒரு காணொளியும் ஈஷா அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.