இப்போது இருக்கும் நிலை, அநீதியின் உச்சம்
அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் நம்பிக்கை என்னவாக இருந்தாலும், எவருடைய வழிபாட்டுத் தலத்தையும் எடுத்துக்கொள்வதற்கும் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில், மக்கள்தொகையில் எண்பத்தியேழு சதவிகிதத்தினருக்கு, அவர்கள் வழிபடும் இடங்கள் துரதிருஷ்டவசமாக அரசாங்கத்தின் கைகளில் இருக்கின்றன. இது இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மை குறித்த விஷயம். ஏனென்றால் என் புரிதலில், மதச்சார்பின்மை கொள்கை என்றால், அரசாங்க விஷயங்களில் மதம் தலையிடாது - மதம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அரசாங்கம் தலையிடாது.
ஒரு கோவிலை நிர்வகிப்பது என்றால், அதைக் கூட்டிப் பெருக்குவது அல்லது இரண்டு வேளை பூஜை செய்வதோடு முடிந்துவிடுவதில்லை - அதிநுட்பமான ஒரு அறிவியல் அது. கடந்த காலத்தில் எந்த ஒரு இயந்திரங்களின் உதவியும் இல்லாதபோதும், மாபெரும் முயற்சியுடனும், அறிவியல் ஆளுமையுடனும் உருவாக்கப்பட்டு, மகத்தான நல்வாழ்வு, வளம், அறிவியல் பூர்வமான வளர்ச்சி மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, உற்சாகம் கொப்பளிக்கும் கலாச்சாரம் ஆகியவற்றுக்குக் காரணமாக இருந்த ஒரு விஷயம், இன்றைக்கு அழிவின் பாதையில் இருப்பதைக் கண்டு என் இதயம் இரத்தம் சிந்துகிறது.
ஒருவர் எந்த நம்பிக்கை முறையை சார்ந்தவராக இருந்தாலும், அவரது மதத்தை கடைபிடிப்பதற்கான உரிமையை பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் நமது அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது, பெரும்பான்மை மக்களின் கோவில்கள் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுவது மிகவும் அவமானகரமானது. நீங்கள் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், ஒவ்வொரு உணர்வுள்ள இந்தியரும் இது குறித்து செயல்பட வேண்டும். நான் வழக்கமாக கோவிலுக்குச் செல்லும் நபர் அல்ல. ஆயினும், இது ஒரு அப்பட்டமான அநீதி என்ற காரணத்தால், நான் இதைப் பற்றி பேசுகிறேன். சமீபத்தில், அமெரிக்காவை சேர்ந்த கவிஞர் அமண்டா கார்மன் இந்த அற்புதமான வரியுடன் கவிதை ஒன்றைக் கூறினார்: “…இன்றைக்கு சாதாரணமாக அப்படி இருக்கிறது என்பதால், அதுவே எப்போதைக்கும் நீதியாகிவிடாது.” (“…what just is, isn’t always justice.") தற்போது கோவில்கள் இருக்கும் விதத்தைப் பார்த்தால், பிரிட்டிஷ் காலத்திலிருந்து “அப்படியே நீடித்திருக்கிறது”. இது நீதி அல்ல – ஒரு குறிப்பிட்ட சமுதாயம் அவர்களுக்கே உரிய வழிபாட்டுக்கான இடத்தை அவர்களிடமே வைத்துக்கொள்ள முடியாது என்பது முற்றிலும் அநீதியானது.