மே 2021

பிற மொழிகளில் வாசிக்க:

Hindi | English

Subscribe Now

ஆசை

அழிவில்லா பசி கொண்ட நெருப்பு
தான் தொடக்கூடியவை அனைத்தையும்
தொடர்ந்து ருசித்து
படைப்பையே உட்கொண்டு
எரித்துவிட எத்தனிக்கிறது.

முடிவற்ற தன் பசியை போக்க
முடிவில்லாமல் முயன்ற போதும்
முடிவில் பசியோடே இருக்கிறது.
முடிந்தால் படைப்பையே புசிக்க
முயற்சிக்கும் இப்பசி - அதுவே
ஆசையின் இயல்பும்.

ஆசையில் எதையோ
நிரப்பவோ நிறைவேற்றவோ
நீங்கள் தேடவில்லை - ஆனால்
படைப்பையும் படைத்தவரையும்
தேடிச் சுவைத்திட விழைகின்றீர்.

விழிப்புணர்வான குளிர் நெருப்பாய்
நீ கொழுந்துவிட்டெரி -
நாசம் விளைவிக்க அல்ல,
நிச்சயமாய் உலகுக்கு ஒளியூட்ட.

- சத்குரு

உங்கள் இமெயிலில் டிஜிட்டல் காட்டுப்பூ மாத இதழை பெற இப்போதே சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!

பகிருங்கள்

Twitter

Facebook

Copy Link

© 2021 Isha Foundation. All rights reserved. • isha.sadhguru.org

இந்த இதழில்

சிறப்புக் கட்டுரை

நமது கோவில்கள் பக்தர்களின் கரங்களில் இருக்கவேண்டியது அவசியம். ஏன் என்பதற்கான காரணங்கள் இங்கே.

‍

பழமையின் பெருமையை பறைசாற்றும் விதமாக நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் நமது கோவில்களில் நம் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட எண்ணற்ற பல அம்சங்கள் உள்ளன.

வாசிக்க

வாழ்வின் சூட்சுமங்கள்

விழிப்புணர்வாக வாழ்தல்

நாம் வாழும் விதத்தில் என்ன மாற்றம் நிகழ வேண்டும்?

சந்திரன்: இதன் மாய, மறைஞான சக்தியை நீங்கள் ஏன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்?

வாசிக்க

வாசிக்க

யோகா & ஞானக்கருத்துகள்

மனம் & விழிப்புணர்வு

யோகப் பயிற்சிகளில் ஈடுபடும் தீவிரத்தை எப்படி தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது?

உங்கள் எண்ணங்கள் ஏன் முடிவில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன? அது பற்றி உங்களால் என்ன செய்ய இயலும்?

வாசிக்க

வாசிக்க

கலந்துரையாடல்

லீலா 154

இக்கட்டான சூழலில் அருள் நம்மை காப்பாற்றுமா?

உங்கள் வாழ்க்கை அனுபவம் எவ்வளவு ஆழமானதாக இருக்கிறது?

இலத்தீன் சூப்பர் ஸ்டார் மாலுமா சத்குருவுடன் கலந்துரையாடுகிறார்


வாசிக்க

வாசிக்க

நடப்புகள்

நடப்புகள்

வாழ்வின் லயம்: உங்கள் உடல், உயிர் மற்றும் வாழ்க்கைக்கு நீங்கள் அதிகபட்சமாக என்ன செய்யமுடியும்

டிஃப்பானி ஹத்தீஷ், கெரி ஹில்சன் & சக்கபார்ஸ் - சத்குருவுடன் கலந்துரையாடல்

எழுத்தாளர் சேத்தன் பகத் சத்குருவுடன் "கர்மா" புத்தகம் பற்றி உரையாடுகிறார்

‍

வாசிக்க

வாசிக்க

IN WHISPERS

IN WHISPERS

பகிர்வுகள்

நடப்புகள்

ஈஷா சமையல்

பகிர்வுகள்

கோவில் மீட்பு இயக்கத்துக்கு தோள் கொடுக்க களம் புகுந்த இளைஞர்!

விஞ்ஞானிகளை தியானத்தில் ஈடுபடுத்துவது - என்னில் துவங்கி

சத்குருவை தொடருங்கள்

மொறுமொறுப்பான காய்கறி வறுவல்

வாசிக்க

வாசிக்க

வாசிக்க

வாசிக்க

சிறப்புக் கட்டுரை

நமது கோவில்கள் பக்தர்களின் கரங்களில் இருக்கவேண்டியது அவசியம். ஏன் என்பதற்கான காரணங்கள் இங்கே.

இந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் அறிவுத்திறம் மற்றும் ஆற்றலின் பழம்பெருமையை பறைசாற்றும் விதமாக நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் நமது கோவில்களில் நம் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட எண்ணற்ற பல அம்சங்கள் உள்ளன. அதனாலேயே சமீபத்தில் சத்குரு, #கோவில்அடிமைநிறுத்து இயக்கத்தை உருவாக்கினார். இது சப்தமில்லாமல் மரணித்துக்கொண்டிருக்கும் கட்டிடக்கலையின் ஒப்பில்லா அற்புதங்கள் மற்றும் கைத்திறன்களுக்கு புத்துயிர் கொடுப்பது பற்றிய விஷயம் மட்டுமல்ல. அல்லது காலனி ஆதிக்க காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட முரட்டுத்தனமான அநீதியை திருத்தம் செய்வதற்கானதும் அல்ல. இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே கலங்கரை விளக்கமாக திகழும் திறன் வாய்ந்த ஆழமான கலாச்சாரத்தின் ஆணிவேர் நம் கண்முன் சிதைபட்டு போய்விடக்கூடிய அபாயத்திலிருந்து காப்பதே நம் #கோவில்அடிமைநிறுத்து இயக்கத்தின் நோக்கம். மேலும் அறிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.

தற்போதைய நிலைமை: ஒட்டுமொத்த அலட்சியம்

இந்து சமய அறநிலையத்துறை, 2020 ஆம் வருடத்தில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த ஒரு அறிக்கையில், 11,999 கோவில்களில் நிதிப்பற்றாக்குறையால் ஒருகால பூஜை அல்லது சடங்கைக்கூட நடத்தமுடியவில்லை என்று கூறியிருந்தது. மேலும் 34,000 கோவில்களின் ஆண்டு வருமானம் ரூ.10,000 க்கும் குறைவாக இருக்கிறது என்றும், 37,000 கோவில்களில், கோவில் பணிகளைச் செய்வதற்கு ஒரு நபருக்கும் அதிகமாக நியமிக்க முடியவில்லை என்பதையும் வெளிப்படுத்தி இருந்தது. அதாவது, ஒரேயொரு நபர் பூஜை செய்வது, கோவிலைச் சுத்தம் செய்வது, நிர்வாகம் செய்வதுடன் மற்றுமுள்ள எல்லாப் பணிகளையும் ஏற்று நடத்தவும் வேண்டியிருக்கிறது.

கோவில்களை அரசின் பிடியிலிருந்து விடுவித்து, பொறுப்பும், திறனும் கொண்ட பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த நாட்டில் அரசர்களே கோவில்களை எழுப்பி, பராமரித்த காலம் ஒன்று இருந்தது. இப்போது கோவில்கள் அரசாங்கத்தின் கீழ் இருப்பதும் அதே போன்றதுதான் என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இன்றைய நிலை அப்படிப்பட்டது அல்ல. அரசர்களின் பக்தி எந்தளவு இருந்ததென்றால், பல இராஜ்ஜியங்களில் கோவிலில் இருந்த தெய்வத் திருவுருவம் ஆட்சியாளராக இருக்க, அந்த தெய்வத் திருவுருவிற்கு தன்னை அர்ப்பணிக்கும் சேவையாக கருதி, அரசர்கள் நாட்டை ஆட்சி செலுத்தினர். அதுதான் அவர்களது பக்தியின் அளவுகோலாக இருந்தது.

நமது எதிர்காலத்துக்கு இந்தப் பழமையான பண்பாடு ஏன் முக்கியமானதாக உள்ளது

அடிப்படையில், பிரார்த்தனை நடத்துவதற்கான இடங்களாக இந்தியக் கோவில்கள் உருவாக்கப்படவில்லை. பெரும்பாலும், வெவ்வேறு விதமான சக்தி அதிர்வு கொண்ட மையங்களாக, அந்த சக்தி அதிர்வுகளில் மக்கள் தங்களையே நனைத்துக்கொள்ளும் இடங்களாகவே கோவில்கள் உருவாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான வருடங்களாக, இலட்சக்கணக்கான மக்களின் அனுபவமாக இது இப்படி இருந்து வருகிறது. எல்லாவற்றையும் நடத்திச்செல்லும் பேராற்றல் ஒன்று மேலே இருக்கிறது என்று நம்புகிற ஒரு கலாச்சாரம் இங்கே இல்லை. இங்கே, “உங்கள் கர்மாதான் உங்களது வாழ்க்கை. எது நடந்தாலும், அது உங்கள் உருவாக்கம்தான்” என்றே எப்போதும் நமக்கு சொல்லப்படுகிறது. ஆனால் ஆன்மீகம் மற்றும் பக்தியின் துணையோடு, நீங்கள் விரும்பும் விதத்தில் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் மிக்கவராக உங்களை நீங்களே மாற்றியமைத்துக் கொள்ள முடியும். நமது புராதனமான கலாச்சாரத்தின் இந்த அம்சம் எதிர்காலத்திற்கும் மிக முக்கியமானதாக இருப்பதால், பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி மையங்கள் அந்த அம்சத்திற்கு பக்கபலமாக திகழ்வதால் கோவில்கள் நன்முறையில் பராமரிக்கப்படுவது மக்களின் நல்வாழ்வுக்கு எப்போதும் அவசியமாகிறது.

இப்போது இருக்கும் நிலை, அநீதியின் உச்சம்

அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் நம்பிக்கை என்னவாக இருந்தாலும், எவருடைய வழிபாட்டுத் தலத்தையும் எடுத்துக்கொள்வதற்கும் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில், மக்கள்தொகையில் எண்பத்தியேழு சதவிகிதத்தினருக்கு, அவர்கள் வழிபடும் இடங்கள் துரதிருஷ்டவசமாக அரசாங்கத்தின் கைகளில் இருக்கின்றன. இது இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மை குறித்த விஷயம். ஏனென்றால் என் புரிதலில், மதச்சார்பின்மை கொள்கை என்றால், அரசாங்க விஷயங்களில் மதம் தலையிடாது - மதம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அரசாங்கம் தலையிடாது.

ஒரு கோவிலை நிர்வகிப்பது என்றால், அதைக் கூட்டிப் பெருக்குவது அல்லது இரண்டு வேளை பூஜை செய்வதோடு முடிந்துவிடுவதில்லை - அதிநுட்பமான ஒரு அறிவியல் அது. கடந்த காலத்தில் எந்த ஒரு இயந்திரங்களின் உதவியும் இல்லாதபோதும், மாபெரும் முயற்சியுடனும், அறிவியல் ஆளுமையுடனும் உருவாக்கப்பட்டு, மகத்தான நல்வாழ்வு, வளம், அறிவியல் பூர்வமான வளர்ச்சி மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, உற்சாகம் கொப்பளிக்கும் கலாச்சாரம் ஆகியவற்றுக்குக் காரணமாக இருந்த ஒரு விஷயம், இன்றைக்கு அழிவின் பாதையில் இருப்பதைக் கண்டு என் இதயம் இரத்தம் சிந்துகிறது.

ஒருவர் எந்த நம்பிக்கை முறையை சார்ந்தவராக இருந்தாலும், அவரது மதத்தை கடைபிடிப்பதற்கான உரிமையை பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் நமது அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது, பெரும்பான்மை மக்களின் கோவில்கள் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுவது மிகவும் அவமானகரமானது. நீங்கள் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், ஒவ்வொரு உணர்வுள்ள இந்தியரும் இது குறித்து செயல்பட வேண்டும். நான் வழக்கமாக கோவிலுக்குச் செல்லும் நபர் அல்ல. ஆயினும், இது ஒரு அப்பட்டமான அநீதி என்ற காரணத்தால், நான் இதைப் பற்றி பேசுகிறேன். சமீபத்தில், அமெரிக்காவை சேர்ந்த கவிஞர் அமண்டா கார்மன் இந்த அற்புதமான வரியுடன் கவிதை ஒன்றைக் கூறினார்: “…இன்றைக்கு சாதாரணமாக அப்படி இருக்கிறது என்பதால், அதுவே எப்போதைக்கும் நீதியாகிவிடாது.” (“…what just is, isn’t always justice.") தற்போது கோவில்கள் இருக்கும் விதத்தைப் பார்த்தால், பிரிட்டிஷ் காலத்திலிருந்து “அப்படியே நீடித்திருக்கிறது”. இது நீதி அல்ல – ஒரு குறிப்பிட்ட சமுதாயம் அவர்களுக்கே உரிய வழிபாட்டுக்கான இடத்தை அவர்களிடமே வைத்துக்கொள்ள முடியாது என்பது முற்றிலும் அநீதியானது.

புனிதத்தன்மைக்கு அபாயம் விளைவிக்கும், வலி உண்டாக்கும் செயல்கள்

சிலர் கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் அவை ஈட்டும் வருமானம் பற்றி மட்டும்தான் சிந்திக்கின்றனர். என்னுடைய வருத்தமெல்லாம், புனிதமான வெளிகள் அனைத்தும் படிப்படியாக அபாயத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன என்பதுதான். இந்தக் கோவில்களின் கட்டமைப்பில் இணைந்திருக்கும் கலைரசனை அற்புதமானது. தமிழ்நாட்டின் கோவில்களில், அவர்கள் மிகவும் கடினமான பாறைகளாகிய கிரானைட் கற்களில், ஈடு இணையில்லாத நேர்த்திமிகுந்த கலை வடிவங்களை செதுக்கியுள்ளனர். ஆனால் இன்றைக்கு, கோவில்களை நிர்வாகம் செய்பவர்கள், இந்த கற்சிற்பங்கள் மீது ஆயில் பெயிண்ட் அல்லது எனாமல் பெயிண்ட்டை பூசியுள்ளனர். அதுதான் கலைரசனை குறித்த அவர்களின் கருத்து. அதோடு, அங்கே இங்கே என்று நினைத்த இடங்களிலெல்லாம் சுவர்களையும் எழுப்பியுள்ளனர். கோவிலின் புனிதத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் அபாயங்களை ஏற்படுத்தியுள்ளதோடு, கோவில் கட்டமைப்பின் அறிவியலை சிந்தித்தும் பாராமல், கோவிலின் செயல்முறைகள் மாற்றப்பட்டுள்ளன. அவ்வளவு நுணுக்கமான செயல்முறைகளும், கலைநுட்பங்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய கோவில்களை உங்களால் மீண்டும் உருவாக்க முடியாது. கோவில்கள் எப்படி கட்டப்பட்டன‌ என்பதைவிட, அவைகள் எப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பதன் பின்னணியில் மிக ஆழமான ஒரு விஞ்ஞானம் இருக்கிறது. தமிழ்நாட்டில், அகத்திய முனிவர், பதஞ்சலி மகரிஷி மற்றும் நாயன்மார்கள் உள்ளிட்ட எண்ணற்ற பல முனிவர்களும், துறவியரும் பிரதிஷ்டை செய்த கோவில்கள் நம்மிடம் இருக்கின்றன. இது அழிக்கக்கூடாத பாரம்பரியமான ஒரு சொத்து. ஆனால் துரதிருஷ்டவசமாக, மிக அதிகளவு சேதம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதனால், கோவில்களை விடுவிப்பதற்கான நேரம் வந்திருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.

நமது ஜனநாயக உரிமையும், கடமையும்

நமது கோவில்களை விடுவிப்பதற்கான இந்த இயக்கம், எதையும் எதிர்த்து, கிளர்ச்சி செய்வதற்கான ஒரு முயற்சியோ அல்லது எவரையும் குறி வைத்தோ அல்ல. நமது பழமைமிக்க பாரம்பரிய கோவில்களுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலத்தை காணச் சகியாமல் எழுந்த ஆழமான வேதனையின் வெளிப்பாடு இது. ஒரு ஜனநாயக நாட்டில், ஒவ்வொரு பொறுப்பான குடிமகனும், தங்களது மாநிலம் அல்லது நாட்டில் நிகழ்ந்தாக வேண்டிய சில விஷயங்கள் என்ன என்பதை தேர்தலுக்கு முன்பாகவே தெளிவாக எடுத்துக்கூற வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மக்களுக்கு இதுதான் வேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுடன், அதன் அடிப்படையில் அவர்கள் தமது வாக்குறுதிகளைத் தயார் செய்யவேண்டும். மக்களால் தேர்வு செய்யப்படுபவர் யாராக இருந்தாலும், இந்த விஷயம் அதன் அறிவார்ந்த முடிவை எட்டுவதற்கு அவர்களுடன் நாம் இணைந்து செயல்படுவோம். இது நிகழ்ந்தாக வேண்டும் என்பது மக்களின் இதயபூர்வமான விருப்பம். இதுவரையிலும் 3.32 கோடி மக்கள் மிஸ்டுகால் கொடுத்தும், மற்ற தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் மக்கள் ஒன்றை விரும்பும்போது, எந்த அரசாங்கமும் எப்படி அதை அலட்சியம் செய்யமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.


விழிப்புணர்வாக வாழ்தல்

நாம் வாழும் விதத்தில் என்ன மாற்றம் நிகழ வேண்டும்?

நகைச்சுவை நடிகர் ரஸ்ஸல் பிராண்ட் சத்குருவுடன் கலந்துரையாடுகிறார்.

சமீபத்தில், ஆங்கில நகைச்சுவை நடிகர் ரஸ்ஸல் பிராண்ட் தன் 'அண்டர் தி ஸ்கின்' வலையொலி (Podcast) நிகழ்ச்சியில் சத்குருவோடு இணைந்து, சாதாரணமாக வெளிப்பார்வைக்கு தென்படுவதைத் தாண்டி, உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கினார். நமது சமூகமும் பொருளாதாரமும் கட்டமைக்கப்பட்டுள்ள விதம் நம்மை பைத்தியமாக்குகின்றதா? முதலாளித்துவத்துக்கும் பொது உடமை கொள்கைக்கும் உள்ள ஆச்சர்யம் தரும் பொதுவான நோக்கம் என்ன? நாம் எங்கே தவறு செய்துவிட்டோம்? இந்த உலகை இன்னும் சிறந்ததாக மாற்றுவதற்காக அடிப்படையாக நாம் எதை மாற்ற வேண்டும்? என ரஸ்ஸல் பிராண்ட் அடுக்கிய கேள்விகளுக்கு சத்குரு வழங்கிய பதில்கள் இங்கே.

நவீன வாழ்க்கைமுறை நம்மை மனநோய்க்கு இட்டுச் செல்கிறதா?

ரஸ்ஸல் பிராண்ட்: பெரும்பாலான அமெரிக்கர்கள் ஏதோ ஒரு வகை மருந்தின் உதவியை (தங்கள் மனநலத்திற்கு) எடுத்துக் கொள்கிறார்கள் என்று நீங்கள் கூறும்போது, அது பரிந்துரைக்கப்பட்டதாக இருந்தாலும் சரி அல்லது தடை செய்யப்பட்டதாக இருந்தாலும் சரி, எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ள கலாச்சாரத்தில், பொருளாதார ரீதியில் ஆதரவு அளிக்கப்பட்டுள்ள, கலாச்சாரத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ள, பிரச்சாரம் மூலம் கருத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ள, ஆழமாக வேரூன்றியுள்ள முதலாளித்துவ நுகர்வோரிசம் உள்ள கலாச்சாரத்தில் - இத்தகைய ஒன்று நிகழ்வது தற்செயலான ஒன்றாக எனக்கு தோன்றவில்லை. மேலும், நான் செய்யக்கூடிய அர்த்தமுள்ள ஒரே ஒரு செயல் என்னுடைய பரிமாண வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துவதுதான் என்று நான் அறிந்திருந்தபோதிலும் - மேலும் இதற்கு சுற்றுச்சூழல் நன்மைகளும் உள்ளது என்று நான் நம்புகிறேன் - இருந்தபோதிலும், இத்தகைய கலாச்சார கருத்தாக்கங்கள் போதைக்கு அடிமையானவர்களையும் மனநோயையும் உருவாக்குவதை பாராமல் விட்டுவிடுவது அலட்சியமான போக்கு என்றே நான் கருதுகிறேன்.

மனித விழிப்புணர்வு சமூகத்தை வடிவமைக்க வேண்டும். சமூகம் ஒரு தனிமனித விழிப்புணர்வை வடிவமைக்கக்கூடாது.

இந்த சூழல்கள் ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் நிகழ்வதாக நான் எண்ணவில்லை - கருத்தாக்கங்கள் வலுவின்றி உடையும் காரணத்தால் பெரும் தொற்றுநோய் போல எங்கும் பரவியுள்ளது. இந்த கருத்தாக்கங்களின் சிதைவும் விழிப்புணர்வற்ற நிலையின் வெளிப்பாடாக, பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. கலாச்சார ரீதியாகவும் தனிமனித ரீதியாகவும் இதை நாம் இன்னும் ஆராய வேண்டியிருக்கிறது.

சத்குரு: எல்லா கருத்தாக்கங்களும் தடம்புரண்டு போன ஆன்மீகம் என்றே நான் கூறுவேன். அடிப்படையில் இரண்டு கருத்தாக்கங்கள் உள்ளன: முதலாளித்துவ வழியில் செய்யும் செயல்பாடுகள் - அது யாதெனில் அடிப்படையில் அதிகமாக உற்பத்தி செய்து அதிகமாக நுகர்வது. மற்றொன்று பொதுவுடைமைத் தத்துவம் - அது யாதெனில் பகிர்ந்து அளிப்பது மற்றும் சமூகத்தை உருவாக்குவது.

முதலாளித்துவம், தடம் புரண்ட ஒரு ரயில்

ஒரு ரயில் தண்டவாளத்தின் மீது இருக்கும் வரை அது நன்மை தரும் - அதிலிருந்து தடம் புரண்டுவிட்டால், அதுவே பேரழிவை கொடுக்கும். முதலாளித்துவம் அல்லது நுகர்வோரிசம் என்பது தடம்புரண்ட ஒரு ஆன்மீகத்தேடல். மனித விழிப்புணர்வின் இயல்பு என்பது இப்போது இருக்கும் நிலையிலிருந்து உயர விரும்புவது தான் - ஏனெனில் ஒரு மனிதன் அடக்கி வைக்கப்பட விரும்புவதில்லை - அவன் எல்லாமுமாக ஆக விரும்புகிறான். ஆனால் நாம் தவணை முறையில் அங்கு சென்று கொண்டிருக்கிறோம். நீங்கள் முடிவிலியை நோக்கி செல்ல விரும்பினால், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று எண்ணிக்கொண்டே சென்று ஒருநாள் முடிவிலியை அடைந்துவிட முடியுமா? முடியாது, நீங்கள் முடிவில்லாத ஒரு எண்ணிக்கையாக மாறிவிடுவீர்கள். இதுதான் நுகர்வோரிசம். ஒரு காலத்தில் 10 ரூபாய் என்பது மிகப்பெரிய ஒரு வருமானமாக இருந்தது. இன்று நீங்கள் ஆயிரம் கோடி என்று சொல்லக்கூடும். ஆனால் உண்மையில் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை - ஏனெனில் மக்களின் துயரங்கள் அவர்கள் எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தது இல்லை. உங்களிடம் இருநூறு கோடி இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அதில் ஒரு நூறு கோடியை தொலைத்துவிட்டால், நீங்கள் மிகப் பரிதாபகரமான துயர நிலைக்கு சென்றுவிடுவீர்கள். ஆனால் எங்கேயோ தூரத்தில் உள்ள ஒரு சமூகத்தில் இரண்டு பசுக்களை மட்டுமே வைத்திருக்கும் ஒருவர் அதில் ஒன்றை தொலைத்துவிட்டால், அதே பரிதாபகரமான துயர நிலைக்குதான் அவரும் செல்வார். ஏனெனில் தனிமனித அனுபவத்தை வைத்துப் பார்த்தால் இதில் உண்மையில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை; சமூகரீதியாக மட்டுமே வித்தியாசம் இருக்கிறது.

உலகில் தற்போது உள்ள பொருளாதார நிலை எத்தகையதெனில், எல்லோரும் தங்கள் கால்களை ஆக்ஸிலரேட்டர் மேல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் - ஒருவரும் ஸ்டீயரிங் வீல் மேல் கைகளை வைத்திருக்கவில்லை.

எனவே சமூகத்தை நாம் எவ்வாறு நடத்த வேண்டும்? மனித விழிப்புணர்வு சமூகத்தை வடிவமைக்க வேண்டும். சமூகம் ஒரு தனிமனிதனின் விழிப்புணர்வை வடிவமைக்கக் கூடாது. தற்போது நீங்கள் வைத்திருக்கும் ஒரே மதிப்பான விஷயம் பொருளாதாரம்தான். அனைவரும் இந்த பொருளாதார இயந்திரத்தின் அடிமைகளாக மாறிவிட்டனர். ஆனால் அடிப்படையில், உலகெங்கிலும் பரவியுள்ள மகிமைப்படுத்தப்பட்டுள்ள பிழைப்புக்கான செயல்முறைதான் பொருளாதாரம். உலகில் தற்போது உள்ள பொருளாதார நிலை எத்தகையதெனில், எல்லோரும் தங்கள் கால்களை ஆக்ஸிலரேட்டர் மேல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் - ஒருவரும் ஸ்டீயரிங் வீல் மேல் கைகளை வைத்திருக்கவில்லை. இப்போது இந்த வைரஸ்தான் கொஞ்சம் விழிப்பை கொண்டு வந்துள்ளதுடன் பொருளாதாரத்திற்கும் சிறிது பிரேக் போட்டுள்ளது. நம்மை நாமே மறுசீரமைப்பு செய்துகொள்ள, பல அம்சங்களையும் பற்றி மறுஆலோசனை செய்ய இதுவே சரியான தருணம்.

பொதுவுடமை தத்துவம், இன்னொரு தடம் புரண்ட ரயில்

எனவே அடிப்படையில், இன்னும் அதிகமாக வேண்டும் என்பது முதலாளித்துவத்தின் அடிப்படையாக இருக்கிறது. பொதுவுடைமைத் தத்துவத்தின் அடிப்படையும் அதேதான். உங்களுடைய நல்வாழ்வு என நீங்கள் எதை கருதுகிறீர்களோ அதை மற்ற அனைவருக்கும் பரப்ப வேண்டும் என எண்ணுகிறீர்கள். பொருட்களை வைத்து இல்லை என்றாலும், சமூகமாக நல்வாழ்வு என்ற ரீதியில் - இதற்கு அடிப்படையில் அர்த்தம் என்னவென்றால் நாம் அனைவரும் பகிர்கின்றோம். அதுவும் தடம் புரண்டு விட்டது, ஏனெனில் தங்களிடம் ஏதும் இல்லாதவர்கள் பகிர்ந்துகொள்ள விரும்பினார்கள். தங்களிடம் ஏதோ ஒன்றை வைத்திருப்பவர்கள் பகிர்ந்தளிக்க முன்வரவில்லை. துரதிருஷ்டவசமாக உலகில் பொதுவுடமைத் தத்துவத்திற்கு இதுதான் நிகழ்ந்துவிட்டது.

ஒன்றை நோக்கிய தேடல்

முதலாளித்துவம் மற்றும் பொதுவுடமைத் தத்துவம் இரண்டும் அனைவரையும் இணைத்துக் கொள்வதைப் பற்றிதான் பேசுகிறது, ஆனால் எப்படி? இணைத்துக் கொள்வது என்பது பல வெவ்வேறான வழிகளில் நிகழும். விரிவடைவதற்கான இந்தத் தேடல் அடிப்படையான உடல்ரீதியான வெளிப்பாடாக இருக்கும்போது, அதை நாம் காமம் என்று அழைப்போம். அதுவே உணர்ச்சிரீதியாக வெளிப்படும்போது அதை அன்பு என்கிறோம். மனரீதியான வெளிப்பாடாக இருந்தால், அதை நாம் லட்சியம், கைப்பற்றுதல், வெற்றி என்போம் அல்லது இன்றைய உலகில் வெறுமே ஷாப்பிங் செய்வது. ஆனால் அடிப்படையில், உங்களுடைய தேடல் என்பது, நீங்கள் தற்போது இருப்பதைவிட இன்னும் விரிவடைவதைப் பற்றிதான். இது விழிப்புணர்வான வெளிப்பாடாக இருக்கும் போது, அதை நாம் யோகா என்கிறோம். யோகா என்னும் சொல் மேற்கத்திய கலாச்சாரங்களில் பல வகையாக திரிபட்டுவிட்டது - யோகா என்றால் நீங்கள் மிச்சம் வைத்த நூடுல்ஸ் போல இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

நீங்கள் ஒரு தனிநபர் என்பது வெறுமனே உங்களின் கருத்து மட்டும்தான்

யோகா என்ற சொல்லுக்கான அர்த்தம் ஐக்கியம். நீங்கள் ஒரு தனிநபர் என்பது வெறுமனே உங்களின் கருத்து மட்டும்தான். நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் இந்த உடல் இந்த பூமியின் ஒரு பகுதி. உங்களின் மனக்கட்டமைப்பு என்று நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அது நீங்கள் திரட்டியுள்ள பதிவுகளின் குவியல். 'நான்' என்று நீங்கள் உணரும் அனைத்தும் பல விஷயங்களின் ஒரு தொகுப்பு. ஆனால் இவையெல்லாம் இருந்தாலும் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் கண்களைத் திறந்து பார்த்தால், உலகம் உங்களுக்கு புலனாகிறது. ஆனால் நீங்கள் உலகத்தைப் பார்க்காமல் உங்கள் கண்களை மூடிக்கொண்டு விட்டீர்கள் என்றாலும் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். நீங்கள் பார்க்கும், கேட்கும், நுகரும், சுவைக்கும் காரணத்தால் மட்டும் நீங்கள் இங்கே உயிரோடு இருக்கவில்லை. நீங்கள் ஆழ்ந்து தூங்கும் போது விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறீர்கள், ஆனால் அப்போதும் நீங்கள் உயிரோடு இங்கே இருக்கிறீர்கள்.

உங்கள் இருப்பு ஏன் ஒரு குமிழியைப் போன்றது

உங்கள் தனித்தன்மைக்கு அப்பாற்பட்டு, உங்கள் உடல் மற்றும் மனரீதியான கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு, 'நீங்கள்' என்ற ஒன்று உள்ளது. அதை நாம் உயிர் என்று அழைக்கலாம். தற்போது உயிரைப் பற்றிய உங்கள் அனுபவம் இத்தகையதுதான். ரஸ், நீங்கள் சோப்பு குமிழிகளை ஊதி இருக்கிறீர்களா, உங்கள் இளவயதிலாவது?

ரஸ்ஸல் பிராண்ட்: நான் ஆதரிக்கும் கால்பந்தாட்ட அணியின் சின்னம் குமிழிகள்தான். “I’m Forever Blowing Bubbles” (வெஸ்ட் ஹாம் யுனைடெட் கால்பந்தாட்ட குழுவின் கீதம்) - "நான் எப்போதும் ஊதிக் கொண்டிருக்கிறேன்" - நிலையற்ற, அழகான குமிழிகளை.

சத்குரு: நாம் இருவரும் குமிழிகளை ஊதிக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். என் குமிழி இங்கே மிதந்து கொண்டிருக்கிறது, உங்களுடையது அங்கே மிதந்து கொண்டிருக்கிறது என்றால், "இது என் குமிழி - அது உங்களுடைய குமிழி" என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனால் அவை உடைந்துவிட்டால், "இது என் காற்று, அது உங்கள் காற்று" என்று நீங்கள் கூறமாட்டீர்கள். குமிழிகள் ஒரே காற்றைத்தான் சுமந்து செல்கிறது. உயிரைப் பொருத்தவரையில், இது உயிர்ப்போடு இருக்கும் பிரபஞ்சம். நம் இருப்பைப் பற்றி தனித்துவமான ஒன்று ஏதும் இல்லை என்றபோதிலும், நாம் தனித்துவமான அனுபவத்தைப் பெற உயிர் நம்மை அனுமதித்திருப்பது ஒரு மாபெரும் தனிச்சிறப்பு.

உங்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பெரிய குறிப்பிடத்தக்க ஒன்று இந்த உயிர்தான்.

மேலோட்டமாக பார்த்தால் உங்களுக்கு அவ்வாறு தோன்றலாம், ஆனால் இந்த உடல் குறித்து எந்த தனித்துவமும் இல்லை - இவை அனைத்தும் ஒரே மண்தான். நீங்கள் உங்கள் மனதில் கொண்டுள்ள பதிவுகள் பற்றியும் எந்த தனித்துவமும் இல்லை, இந்த உயிராகிய நம்மைப் பற்றியும் எந்த தனித்துவமும் இல்லை. தனித்துவமான ஒரு அனுபவத்தை நமக்கு கொடுத்திருப்பது இந்த உயிரின் பெருந்தன்மை. விரக்தியாய் இருக்க, பதட்டமாய் இருக்க அல்லது கவலை கொண்டிருப்பதற்கான காலம் இது அல்ல. உங்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பெரிய குறிப்பிடத்தக்க ஒன்று இந்த உயிர்தான். உங்களைப் பற்றி எந்த தனித்துவமும் இல்லையென்றாலும், தனித்துவமான ஒரு முழு அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது - நீங்கள் மெய்யான முழுமையான ஒன்று என்பது போன்ற அனுபவம். இங்கு நம்முடைய இருப்பு சோப்பு குமிழியைப் போன்றது. உங்களுடைய கால்பந்தாட்ட அணி, வெஸ்ட் ஹாம், இந்த சோப்பு குமிழியை சின்னமாக கொண்டிருப்பது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது - இன்று நீங்கள் சாம்பியனாக இருக்கலாம், ஆனால் நாளை அது உடைந்துவிடக் கூடும்.

தொழில்நுட்பம் என்பது அதிலிருந்து நாம் எதை உருவாக்குகிறோம் என்பதைப் பொறுத்தது

இப்போது இந்தப் பந்தை நீங்கள் எவ்வாறு உதைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் இந்த நோய்த்தொற்றைக் குறித்து, "இதுதான் இருப்பதிலேயே மிகப்பெரிய கஷ்டகாலம்" என புகார் கூறுகிறார்கள். முந்தைய தலைமுறையினர் எதிர்கொண்டதை எல்லாம் இவர்கள் மறந்துவிட்டார்கள். நீங்கள் இப்போது லண்டனில் இருப்பதினால், உயிரோடு இருக்கும் சில முதியவர்களிடம் 1942 அவர்களுக்கு எவ்வாறு இருந்தது எனக் கேளுங்கள் [அப்போது ஜெர்மானியர்கள் இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து லண்டன் மீது குறி வைத்து விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்]. ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த அன்றைய சூழலில், யாராவது தெருவில் நின்று ஒரு சிகரெட் பற்ற வைத்திருந்தால் கூட அவர்களின் சொந்தநாட்டு படைவீரர்களே அவர்களை சுட்டுக் கொன்று இருப்பார்கள். இன்று இவர்கள் உங்களை வீட்டிலேயே இருக்க மட்டும்தான் சொல்கிறார்கள் - ஏதோ சிறையில் அல்ல, உங்கள் வீட்டில் - வெளியே வரும்போது முகக்கவசம் அணியச் சொல்கிறார்கள். இப்போது மக்கள், "இல்லை எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்!" ‌என புகார் செய்கிறார்கள். நாம் மிக அற்பமாக மாறிவிட்டோம்.

நமது வசதி வாய்ப்புகளையும் சௌகர்யங்களையும் நம் படைக்கும் திறன் மற்றும் அறிவுக்கு ஒரு தளமாக பயன்படுத்துவதற்கு பதிலாக, நம்மையே முடக்கி வைப்பதற்கு அவற்றை நாம் உபயோகிக்கிறோம்.

நமது வசதி வாய்ப்புகளையும் சௌகர்யங்களையும் நம் படைக்கும் திறன் மற்றும் அறிவுக்கு ஒரு தளமாக பயன்படுத்துவதற்கு பதிலாக, நம்மையே முடக்கி வைப்பதற்கு அவற்றை நாம் உபயோகிக்கிறோம். சென்னையில் உள்ள சில வணிக நிறுவனங்களோடு சமீபத்தில் நான் ஒரு உரையாடலில் கலந்து கொண்டேன். நான் அவர்களை நோக்கி இவ்வாறு கேட்டேன், "நீங்கள் சென்னை வீதிகளில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு புலி வந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளலாம். உங்களில் எத்தனை பேர் ஓடிச்சென்று ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து அந்த வனவிலங்கை ரசிப்பீர்கள்? உங்களில் பெரும்பாலானவர்கள் எக்குதப்பாக கீழே விழுந்து அந்தப் புலி உங்களை தின்பதற்கு முன்னரே உங்கள் எலும்புகளை முறித்துக்கொள்வீர்கள். தெருக்களில் சாதாரண வேலை செய்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே ஓடிச்சென்று மரங்களில் ஏறிக்கொள்ள முடியும். உங்களில் பெரும்பாலானவர்கள் புலிக்கு காலை உணவாக மாறிவிட்டிருப்பீர்கள்."

வளர்ச்சி, நாகரிகம், தொழில்நுட்பம், வசதி வாய்ப்புகள் மற்றும் பொருளாதார நல்வாழ்வு அனைத்தும் நம்மை மேம்படுத்திக் கொள்வதற்காக இருக்க வேண்டும், ஆனால் தற்போதைய நிலை அதற்கு நேர் எதிர்மறையாகதான் நிகழ்கிறது.

சந்திரன்:

இதன் மாய, மறைஞான சக்தியை நீங்கள் ஏன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்?

யோகக் கலாச்சாரம் எதற்காக சந்திர நாட்காட்டியை உபயோகிக்கிறது? சந்திரன் நம்மில் எவ்வாறு தாக்கத்தை உருவாக்குகிறது? சந்திரனுக்கும் 'மதி'மயக்கத்திற்கும் என்ன தொடர்பு? புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாதாந்திர சத்சங்கத் தொடரின் முதல் நிகழ்வில் சந்திரன் தொடர்பான இந்த கேள்விகளுக்கெல்லாம் சத்குரு பதிலளித்தார். மேலும் சத்சங்கத்தை "முழு நிலவில் அருள் மடியில்" என்று ஏன் குறிப்பிடுகிறார் என்பதைப் பற்றியும் விளக்குகிறார்.

சத்குரு: முழு நிலவு அல்லது பௌர்ணமி தினம் என்பதை வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமான பொருளில் எடுத்துக் கொள்கிறார்கள். சிலருக்கு அது ஞானோதயம் என்று பொருள்படுகிறது. வரலாற்று ரீதியாக பார்த்தோமானால், இந்த கலாச்சாரத்தில் பலரும் பௌர்ணமி தினத்தில் ஞானோதயம் அடைந்துள்ளனர். சிலருக்கு அது அன்பு, காதல் என்று பொருள்படுகிறது. சிலருக்கு அது தியானம் என்று பொருள்படுகிறது. பலருக்கும் அது குதூகலமாக இருப்பது என்று பொருள்படுகிறது. இந்த சத்சங்க தொடரை நாம் "முழு நிலவில் அருள் மடியில்" என்று அழைக்கிறோம் - ஞானோதயம், அன்பு அல்லது தியானம் என்றல்ல. பலருக்கும் ஞானோதயம் என்பது மிகத் தொலைவில் இருக்கும் ஒன்று - குறைந்தபட்சம் அவர்கள் மனதளவில் அப்படி இருக்கிறது. அன்பு என்பது உங்களின் அதிகப்படியான அர்ப்பணிப்பு தேவைப்படுவது. மேலும் அடிக்கடி அதிக வலியையும் கொடுக்கக்கூடியது. எல்லாவற்றுக்கும் மேலாக யாரை அன்பு செய்வது? அதுவும் சிக்கலானது. இந்த உலகத்தில், தியானம் என்றாலே கணுக்கால் வலி, முதுகு வலி மற்றும் சலிப்பு ஆகியவையே பிம்பமாக இருக்கிறது. ஆனால் குதூகலமாக இருப்பதற்கு எந்தவிதமான அர்ப்பணிப்பும் தேவையில்லை. அதற்கு சிறிதளவு கவனம் மட்டுமே தேவை. மேலும் எந்த விளைவுகளைப் பற்றிய கவலையும் இல்லாமல் உங்களால் விளையாட முடியும்.

குதூகலம் காதலாக முன்னேறினால் என்ன செய்வது?

ஆனந்தத்தை வெளிப்படுத்தும் குதூகலம், உல்லாசம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினாலே அது எதிர்பாலினத்தாருடன் சம்பந்தப்பட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மனிதர்கள் உயிரோடு மட்டும்தான் ஈடுபாடாக இருக்கிறார்கள். அவர்களின் ஈடுபாடு பயத்தின் அடிப்படையில் உருவானது, அதனால் அவர்களால் எப்போதும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முடிவதில்லை. உயிரில் மூழ்கிப் போக அவர்கள் விரும்புவதில்லை; அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தங்கள் விரல் நுனிகளால் மட்டும்தான் உயிரைத் தொடுகிறார்கள். ஹார்மோன்களின் தூண்டுதலால் ஏற்படும் குதூகலம் மற்றும் உல்லாசம் பற்றி நாம் இப்போது பேசவில்லை, உயிரே துடிப்புடன் குதூகலமாக, உல்லாசமாக இருப்பது பற்றி நாம் பேசுகிறோம். பல நேரங்களில் மக்கள் குதூகலமாக இருக்க முயல்கிறார்கள், ஆனால் முடிவில் காதலில் விழுந்துவிடுகிறார்கள்; அல்லது அவர்கள் குதூகலமாக இருந்த நபரை தங்களின் மனைவியாக அல்லது கணவனாக அடைந்து விடுகிறார்கள்.

நான் குதூகலமாக இருக்கிறேன், நீங்களும் குதூகலமாக இருங்கள். இந்த செயல்பாட்டில் நீங்கள் அன்பில் விழலாம். அவ்வாறு நீங்கள் அன்பில் விழுந்தால் அது உங்கள் அடிப்படையையே மாற்றியமைப்பதாக மாறும். நீங்கள் அன்பில் இருந்தால் பின்னர் உங்களை நாம் தியானத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்; ஒருவேளை நாம் உங்களை ஞானோதயம் கூட அடையச் செய்யமுடியும். அன்பு என்பது வெளியேறும் கதவு இல்லாத ஒரு பொறி. அதனால்தான் மக்கள் வெறுமனே குதூகலத்தோடு மட்டும் நின்று விடுகிறார்கள். என்னளவில் அது பரவாயில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் குதூகலமாக இருக்க ஆரம்பித்தால், ஒருவேளை நீங்கள் அன்பில் விழக்கூடும், நிச்சயமாக அது மாற்றத்தைத் தருவதாக இருக்கும். ஆனால் நீங்கள் வெறுமனே குதூகலமாக மட்டுமே இருந்தால் - எந்த பாதகமும் இல்லை, சாதகமும் இல்லை.

சூரியனை விட சந்திரன் அதிக தாக்கத்தோடு இருக்கையில்

உலகப்பூர்வமான செயல்களுக்கு நாம் சூரிய நாட்காட்டியை பின்பற்றுகிறோம். ஆனால் நமக்குள் நிகழ்பவைகளுக்கு நாம் சந்திர நாட்காட்டியை பின்பற்றுகிறோம். இந்த நிலத்தின் ஞானம் இதுதான் - யோகமுறை இவ்வாறுதான் எப்போதும் இதை உபயோகப்படுத்தி வந்துள்ளது. நமது உடலுக்குள் நடக்கும் உள் செயல்முறைகள் சூரியனை விட சந்திரனால்தான் அதிக தாக்கத்திற்கு உள்ளாகின்றன என்பதுதான் இதற்கான காரணம். நமது இருப்பு உட்பட எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது சூரியன்தான், எனவே சூரியனின் தாக்கமானது ஒட்டுமொத்த அளவில் உள்ளது. ஆனால் தினசரி அடிப்படையில் பார்க்கும்போது, சந்திரன் இன்னும் அதிகப்படியான தாக்கத்தை கொண்டிருக்கிறது - குறிப்பாக சுரப்பிகளின் செயல்பாடுகளில்.

நீங்கள் இன்னும் சற்று விழிப்புணர்வோடு இருந்தால், உங்களுக்குள் இருக்கும் உயிரோடு இன்னும் சிறிது ஈடுபாட்டோடு இருந்தால் - உங்கள் கண்களை மூடி உங்கள் உடலை நீங்கள் கவனித்தாலே சந்திரனின் பிறை இப்போது எந்த நிலையில் அல்லது கட்டத்தில் உள்ளது என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும். இதற்கான காரணம், உங்களின் அமைப்பு செயல்படும் விதமானது சந்திரனின் கலையோடு (பிறை வளர்ச்சி மற்றும் தேய்வு) நேரடி தொடர்பில் இருப்பதுதான். இது மனிதர்களுக்கு மட்டும் பொருந்திப்போகும் ஒன்றல்ல. உலகில் உள்ள பல நிலம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் இது பொருந்தும். அதைப்போலவே சூரியனைவிட சந்திரகலை கடலில் எழும் அலைகளில் பெரிய தாக்கத்தை கொண்டிருக்கிறது.

'மதிகெட்டு' போவதற்கும் வானிலுள்ள 'மதி'க்கும் என்ன தொடர்பு?

அமெரிக்க நீதித்துறை 1979-ஆம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், பௌர்ணமி முழு நிலவுக்கும் உயிரியல் சார்ந்த எழுச்சிக்கும், மனித உணர்வுகளுக்கும், மனநிலை கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், நிலையற்ற வன்முறையான போக்கு எவ்வாறு சந்திரனின் பிறை எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதோடு நேரடி தொடர்பில் இருக்கிறது என்பது பற்றியும் விரிவாக கூறப்பட்டுள்ளது. சந்திரனின் பிறை நிலைகள் எவ்வாறு வெவ்வேறு வகையான அனுபவங்கள், மனநிலைகள் மற்றும் மனித அமைப்புகளின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கின்றன என்பதை காவல்துறை பதிவுகள், மனநல மருத்துவமனைகள் மற்றும் மனநல மருத்துவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

நாம் எவ்வாறு உணருகிறோம், எண்ணுகிறோம், மேலும் தற்போது நம்முடைய வாழ்க்கை அனுபவம் எத்தகையது என்பதெல்லாம் நம் சுரப்பிகளின் செயல்பாடுகளினால்தான் தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் செரிமான செயல்முறை, உங்கள் இனப்பெருக்க செயல்முறை, உங்கள் நரம்பியல் செயல்முறை, உங்கள் மனநிலை மற்றும் உணர்ச்சிகள் சரியாக உள்ளனவா இல்லையா - இவை அனைத்தும் பல்வேறு வகையான சுரப்பிகளின் செயல்பாடுகளினால்தான் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன் காரணத்தினால்தான் உள்பரிமாணம் என்று வரும்போது நாம் சந்திரனின் சுழற்சிகளை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியைப் பின்பற்றுகிறோம். வெளிச்சூழல் என்று வரும்போது நாம் சூரிய சுழற்சிகளைப் பின்பற்றுகிறோம்.

பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் நம் அமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்திய மொழிகளில் சந்திரனை சோமா என்று குறிப்பிடுகின்றோம். சோமா என்பதற்கு போதையான நிலை என்ற பொருளும் உள்ளது. ஏனெனில் சந்திரனுக்கு உங்களை போதை அடையச் செய்யும் தன்மை உள்ளது.

உயிர் குதூகலத்தில்

இது இணையவழி நிகழ்வாக இருப்பதால் இந்த முழுநிலவு நாட்களில் உங்களை எந்த அளவு "மயக்கத்தில்" ஆழ்த்துவது என்பது பற்றி எனக்கு சிறிது தயக்கம் உள்ளது. இங்கு ஆசிரமத்தில் உள்ளவர்கள் முழுநிலவு சத்சங்கத்திற்கு பிறகு தவழ்ந்து உருண்டு புரண்டபடி உணவருந்தும் கூடத்துக்கு வந்தால் அதை நாம் புரிந்துகொள்வோம். ஆனால் உங்கள் வீட்டில் அல்லது வெளியே வேறெங்கோ அப்படி ஏதும் நிகழ்ந்தால் உங்கள் குடும்பத்தினர் உடனே மருத்துவரை அழைக்கக்கூடும். அதன் காரணத்தினாலேயே இந்த சத்சங்கத்துக்கு முன்பதிவு தேவை என்று நாம் குறிப்பிட்டு இருக்கிறோம். அதே மக்கள் ஒவ்வொரு மாதமும் இந்த சத்சங்கத்தில் தொடர்ந்து பங்கேற்றால், பின்னர் எந்த மதுவும் இல்லாமல் மருந்தும் இல்லாமல் உங்களை எப்படி மயக்கத்தில் ஆழ்த்துவது (போதை ஊட்டுவது) என்று நாம் பார்ப்போம்.

அடிப்படையில், முழுநிலவு என்பது உயிரில் குதூகலமாக இருப்பது பற்றியது. உங்களின் அனுபவப்பூர்வமான பரிணாமத்தை உங்கள் உடலிலுள்ள திரவங்கள் மற்றும் சுரப்பிகளின் செயல்பாடுகள் தீர்மானிக்கிறது. அதிலும், முழுநிலவு தினத்தில் அவற்றின் செயல்பாடு உச்சத்தில் இருக்கும். பேரானந்தமோ, மனச்சோர்வோ, பயமோ, தியானமோ எத்தகைய ஒரு கலவையை நீங்கள் உங்களுக்குள் உருவாக்குகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது. அடுத்த பன்னிரண்டு மாதங்களில் ஒரு பேரானந்த கலவையை உங்களுக்குள் நீங்கள் உருவாக்கிக்கொள்ள நம்மால் கற்றுக்கொடுக்க முடியும் என்று நம்புகிறோம்.

கோழையாக இருக்காதீர்

உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும் பேரானந்தத்தில் இருந்தால், வாழ்வு எனும் சுமைகள் இருக்காது. வாழ்க்கை சுமையில்லாமல் இருக்கும்போது, இந்த உலகில் என்ன செய்ய தேவையிருக்கிறதோ, அது என்னவாக இருந்தாலும் அதை கையில் எடுக்கும் விருப்பத்தோடு நீங்கள் இருப்பீர்கள். இல்லாவிட்டால் என்ன நடக்குமோ என்ற பயத்தோடே நீங்கள் இருப்பீர்கள். உங்கள் வாழ்வில் கோழைத்தனம் புகுந்ததற்கான காரணம், நீங்கள் எப்போதும் விளைவுகளைப் பற்றிய கவலையோடு இருப்பதுதான். விளைவுகளில் மட்டுமே கவனம் செலுத்தும் எவரும் தங்கள் வாழ்வில் செய்ய வேண்டியவற்றை எப்போதும் செய்யமாட்டார்கள். பேரானந்தத்தில் திளைத்திருப்பவர்கள் மட்டுமே எது தேவையாக இருக்கிறதோ அதை வெறுமனே செய்து கொண்டிருப்பார்கள்.

ஆசிரியர் குறிப்பு:

பௌர்ணமி இரவுகளில் உங்கள் சக்தி மேலெழும்ப இயற்கையே பக்கபலமாக இருப்பதால் ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் தியானத்தில் ஈடுபட இந்நாள் மிகவும் உகந்ததாக இருக்கிறது. ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், பௌர்ணமி இரவின் ஆன்மீக வாய்ப்புகளை உள்வாங்கிக்கொள்ள ஏதுவாக, 'முழு நிலவில் அருள் மடியில்' மாதாந்திர சத்சங்கங்களை ஆன்லைன் மூலம் வழங்குகிறார் சத்குரு.

ஒவ்வொரு பௌர்ணமி இரவையும் உங்களின் உச்சபட்ச தன்மையை உணர்வதற்கான ஒரு படிக்கல்லாக மாற்றும் ஒரு அபூர்வ வாய்ப்பாக இந்த 'முழு நிலவில் அருளின் மடியில்' சத்சங்கங்கள் மலரக்கூடும்.

இப்போதே முன்பதிவு செய்யுங்கள்

யோகப் பயிற்சிகளில் ஈடுபடும் தீவிரத்தை எப்படி தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது?

நீங்கள் தினசரி செய்துவரும் ஹடயோகா அல்லது கிரியா பயிற்சியில் ஈடுபடவே ஏதோ ஒரு சுணக்கம் ஏற்படுவது போல தோன்றினால் வருந்த வேண்டாம், உங்களுக்கு மட்டும் இப்படி நடந்துவிடவில்லை. ஆன்மீக சாதகர்கள் பலரும் ஏதோ ஒரு நேரத்தில் ஏன் அதே பழைய பள்ளத்தில் போய் வீழ்கிறோம் என்பதையும், அதிலிருந்து நாம் எவ்வாறு வெளிவந்து மீண்டும் உத்வேகத்தோடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவது என்பது பற்றியும் விவரிக்கிறார் சத்குரு.

உங்களின் வழக்கமான வார்ப்புகளில் இருந்து வெளியே வருவதற்கான இரண்டு வழிகள்

கேள்வியாளர்: சத்குரு, எனது பயிற்சிகளை தினமும் செய்வதை நான் வழக்கமாக வைத்திருந்தேன். ஆனால் சமீப காலமாக நான் மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பிச் செல்வது போல தோன்றுகிறது. எவ்வாறோ என்னுடைய ஈடுபாடும் அர்ப்பணிப்பும் பலவீனம் அடைந்துள்ளது. நான் எவ்வாறு தொடர்ந்து உத்வேகத்தோடு இருப்பது?

சத்குரு: எந்த விதிவிலக்கும் இல்லாமல் நம் அனைவரிடத்திலும் குறிப்பிட்டவிதமான 'வார்ப்புகள்' உள்ளன. கர்ம பதிவுகளினால் உருவான அந்த வார்ப்புகள் நம்மை மீண்டும் மீண்டும் அதே தேய்ந்துபோன பழைய பாதையில் செல்லும் கட்டாயத்தை ஏற்படுத்துகின்றன. கேள்வி யாதெனில், அதிலிருந்து வெளியேறுவதற்கு தேவையான அளவு உங்களிடம் "பிடிவாதம்" இருக்கிறதா இல்லையா என்பதுதான். உங்களால் பறக்க முடிந்தால் உங்கள் பழைய பள்ளங்களில் இருந்து நீங்கள் பறந்து வெளியே வந்துவிடுவீர்கள். நீங்கள் பறக்கக்கூடிய வகையை சேராதவறாக இருந்தால், நீங்கள் கட்டாயம் பிடிவாதமாக இருக்க வேண்டும். "பறக்கக் கூடியவர்கள்" என்று நாம் குறிப்பிடும் மக்கள், அவர்களின் கண்களை மூடினாலே போதுமானது. அவர்கள் தங்களின் காலை ஹடயோகா பயிற்சியை செய்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றி நான் உண்மையில் கவலைப்படுவதே இல்லை. வானிலை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி மட்டும் அவர்கள் சிறிது கவலைப்பட்டால் போதுமானது. ஆனால் நடந்து செல்லும் மக்கள் அனைவரும், அவர்கள் கால் வைக்கக்கூடிய பகுதியில் இருக்கும் ஒவ்வொரு கல்லுக்கும், முள்ளுக்கும், வழுக்கி விழுந்துவிடக் கூடிய இடத்துக்கும் கவலைப்பட வேண்டியிருக்கிறது.

உங்கள் வார்ப்புகள் நீங்கள் எந்த விதமான பரப்பில் செல்வீர்கள் என்பதை தீர்மானிக்கும். முக்கியமாக, நீங்கள் மோசமான பரப்புக்கு சென்றால் அல்லது வேறுவிதமாக கூறினால், கட்டாயமாக செயல்படும் சூழ்நிலைகளுக்குள் சென்றால் - அது உடல்ரீதியானதாக இருக்கலாம், மனரீதியானதாக இருக்கலாம் அல்லது உணர்ச்சி ரீதியானதாகவும் இருக்கலாம் - அப்போதுதான் நீங்கள் உங்களின் பிடிவாதத்தை காட்ட வேண்டும்.

உங்கள் கர்மா உங்களை "ஆட்கொள்ளுமா"?

பாரம்பரிய மொழியில், ஒருவர் ஒரு குறிப்பிட்ட விதமாக வார்த்தெடுத்தது போல செயல்படுகிறார் என்றால், "இது உன்னுடைய கர்மா," என்று நாம் கூறுவோம். கர்மா என்றால் செயல் என்று பொருள் - கடந்த காலத்தின் செயல். ஒரு செயலை நீங்கள் உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்ச்சிரீதியாக மற்றும் சக்திரீதியாக செய்யமுடியும். நீங்கள் புரியும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிப்பிட்ட எச்சத்தை விட்டுப்போகும். இந்த எச்சம் தனக்கென ஒரு வார்ப்பை உருவாக்கும். அந்த வகையில் கர்மா என்பது கிட்டத்தட்ட நீங்கள் ஆட்கொள்ளப்பட்டது போலதான். நீங்கள் செய்ய விரும்பாத செயல்களை செய்ய அது உங்களைத் தூண்டும். மேலும் நீங்கள் விரும்பியவற்றை செய்யவும் அனுமதிக்காது. உங்களின் சொந்த கர்மாவே உங்களை ஆட்கொண்டிருக்கிறது. கடந்தகாலம் நிகழ்காலத்தை ஆட்கொண்டு, எதிர்கால வாய்ப்புகளை அழிக்கிறது. குறிப்பாக அத்தகைய சூழல்களில் நீங்கள் உறுதியாக பிடிவாதத்தோடு இருக்க வேண்டும். உங்களிடம் அத்தகைய பிடிவாதம் இல்லாவிட்டால் உங்கள் வார்ப்புகள் உங்களை வெள்ளம் போல சூழ்ந்து இழுத்துக்கொண்டு போய்விடும். நீங்கள் செய்ய விரும்பியவற்றில் கவனம் செலுத்த முடியாமலும், உறுதியோடும் இருக்க முடியவில்லை என்றால், முதலில் அது உங்களை அமைதியில்லாமல் ஆக்கும். சில காலம் கழித்து அதுவே உங்களை மனச்சோர்வு அடையச்செய்து, உயிரற்றவரை போல ஆக்கிவிடும்.

உங்களை உத்வேகம் கொள்ளச் செய்யும் மக்களோடு தொடர்பில் இருக்கிறீர்களா?

ஆன்மீகத்தில் பரிமளிக்க விரும்புகிறவர்களுக்கு, ஆன்மீக பயிற்சிகள் மற்றும் அதற்கு ஆதரவான கலாச்சாரம் இரண்டுமே மிக முக்கியமானது. இதன் காரணத்தினாலேயே ஆன்மீக இயக்கங்கள் ஆன்மீக பயணத்தில் இருப்போரின் கூட்டணிக்கு - சங்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தன. அவர்களுக்கும் அவரவர் சொந்த பிரச்சனைகளும் போராட்டங்களும் இருக்கும். சிலர் தங்கள் பிரச்சனைகளை முகத்தில் ஒரு புன்சிரிப்போடு சுமக்கிறார்கள், சிலர் தங்கள் பிரச்சனைகள் அனைவருக்கும் தெரியும்படி சுமக்கிறார்கள் - அது அவரவரின் தேர்வு. ஆனால் உங்களுக்கு தேவையானதெல்லாம், பிடிவாதம் மற்றும் சிறிதளவு தொடர்பு.

உங்களுக்கு எது ஆதரவு தருகிறதோ அதோடு நீங்கள் தொடர்பில் இருக்க வேண்டும். அந்தப் பாதையில் பயணிப்பவர்கள் உங்கள் ஈடுபாட்டை வலுவாக வைத்திருக்க உங்களுக்கு உதவுவார்கள். இந்த பாதைக்கு சம்பந்தமில்லாதவர்களை நீங்கள் சந்தித்தால், "என்னது? அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்திருக்கிறாயா?" என்று அலறுவார்கள். ஆனால், நீங்கள் சந்திக்க வேண்டியவர்கள் எப்படி இருக்கவேண்டும் தெரியுமா? "என்னது? காலையில் ஐந்து மணிக்குதான் எழுந்திருக்கிறாயா? நான் அதிகாலை 3:45-க்கு எழுந்திருக்கிறேன்," என்று கூறுபவர்களாக இருக்கவேண்டும். உங்களை விட அதிக அர்ப்பணிப்போடும், தீர்மானத்தோடும் இருப்பவர்களைத்தான் நீங்கள் சந்திக்க வேண்டும். அத்தகைய மக்களை நீங்கள் தொடர்ந்து சந்தித்துக்கொண்டே இருந்தால், நீங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று இப்போது நிர்ணயித்து இருக்கிறீர்களே, அந்த லட்சியமும் பரிணமித்து வளரும்.

1 of 16
Share
Project
Current Page
Share
Tweet
Pin
Linkedin
Isha Foundation
ஈஷா காட்டுப்பூ - மே 2021
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16