ஏப்ரல் 2021

பிற மொழிகளில் வாசிக்க:

Hindi | English

Subscribe Now

என் இதயம் என் கரங்கள்

என் இதயத்தை நான்
என்னோடே வைத்திருந்தால்
உன்னை அன்பு செய்யமுடியும்
என் கரங்களை நான்
என்னோடே வைத்திருந்தால்
உன்னை கட்டிக்கொள்ள முடியும்
ஆனால், நான்
இதயத்தை குழைத்து
உலகெங்கும் பரவ விட்டேன்
உலகை கரங்களுக்குள்
இறுகத் தழுவினேன்
என் இதயத்திலிருந்தோ கரங்களிலிருந்தோ
நீ நழுவ வேண்டுமெனில்
வேறெங்கோ இருக்கவேண்டும்.
இப்பிரபஞ்சத்தை தாண்டி எங்கோ...
என் மனக் கண்ணை தாண்டி எங்கோ...

அனைத்துக்கும் அப்பால் இருக்கும் ஒருவருக்கு அன்புதான் எதற்கு?

- சத்குரு

உங்கள் இமெயிலில் டிஜிட்டல் காட்டுப்பூ மாத இதழை பெற இப்போதே சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!

பகிருங்கள்

Twitter

Facebook

Copy Link

© 2021 Isha Foundation. All rights reserved. • isha.sadhguru.org

இந்த இதழில்

சிறப்புக் கட்டுரை

நீங்கள் உண்ணும் உணவிற்கும் உங்கள் மனநலத்துக்கும் இடையே உள்ள ஆச்சரியமான தொடர்பு

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பிரபலமான மனநல நிபுணர்கள் குழுவினர் சத்குருவுடன் நடத்திய உரையாடலில், அவர் மனநோய்க்கான அடிப்படையான ஒரு காரணத்தை வெளிப்படுத்துகிறார். மேலும், யோகக் கண்ணோட்டத்திலிருந்து எதனை, எவ்வாறு உண்பது என்பதைக் குறித்தும் சத்குரு வழிகாட்டுதல் வழங்குகிறார்.

வாசிக்க

வாழ்வின் சூட்சுமங்கள்

விழிப்புணர்வாக வாழ்தல்

இராமனிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 4 மிக சக்திவாய்ந்த வாழ்க்கைப்பாடங்கள்

கர்மா: முன்னதாகவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடா அல்லது உங்கள் வாழ்வை நீங்களே வடிவமைக்க வழங்கப்பட்டுள்ள அதிகாரமா?

வாசிக்க

வாசிக்க

யோகா & ஞானக் கருத்துகள்

விழிப்புணர்வான உலகம்

பஞ்சபூதங்களைக் கையாள்வதனால், ஏன் உங்கள் உச்சபட்ச சாத்தியத்தின் ஆற்றலை அறிந்துகொள்ள முடிகிறது?

மனிதகுலம் அழிவை நோக்கிச் செல்கிறதா அல்லது உலகளாவிய சூழலியல் ஆபத்தை இன்னமும் நம்மால் தடுத்து நிறுத்த இயலுமா?

வாசிக்க

வாசிக்க

கலாச்சாரம்

லீலா

ஏன் புத்தாண்டை ஏப்ரலில் கொண்டாடுகிறோம்?

தவிர்க்க இயலாத காரணத்தால் இந்த மாதம் ' லீலா ' தொடர் இடம் பெறவில்லை. அடுத்த மாதம் வழக்கம் போல் தொடர் வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர்

வாசிக்க

நடப்புகள்

பகிர்வுகள்

யக்ஷா 2021 - உள்ளத்தை கொள்ளை கொண்ட ஓர் இசைத்திருவிழா

ஈஷா சம்ஸ்கிருதி நடன நிகழ்ச்சி: காலத்தால் அழியாத அழகுடன் இணைந்த சமநிலையின் ஒரு வெளிப்பாடு

‍

வாசிக்க

வாசிக்க

பகிர்வுகள்

பகிர்வுகள்

நடப்புகள்

பகிர்வுகள்

‘In the Grace of Yoga’ முதல் நிகழ்ச்சி: சத்குருவுடன் பஞ்சபூதங்களை ஆராய்ந்து அறிதல்

சத்குருவுடன் மஹாசிவராத்திரி 2021 - கிராமி விருதுகளை விட மிகப் பிரபலமான ஒன்று!

சிவபாத யாத்திரை - உள்ளுக்குள் ஒரு ஆசிரமத்தை அமைப்பது, ஒவ்வொரு படியாக

மௌனி ராய்: தியானலிங்கத்தின் முன்னிலையில் இருப்பது அன்பில் திளைப்பது போன்றது’

வாசிக்க

வாசிக்க

வாசிக்க

வாசிக்க

பகிர்வுகள்

ஈஷா சமையல்

நடப்புகள்

சத்குருவை தொடருங்கள்

புத்துணர்ச்சி தரும் வெண்பூசணி மற்றும் தர்பூசணி சாலட்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், விழிப்புணர்வான உலகுக்கான சத்குரு மையம் - காலத்தின் தேவை

வாசிக்க

வாசிக்க

வாசிக்க

சிறப்புக் கட்டுரை

நீங்கள் உண்ணும் உணவிற்கும் உங்கள் மனநலத்துக்கும் இடையே உள்ள ஆச்சரியமான தொடர்பு

இந்த பெருந்தொற்று காலகட்டத்தில் உலகெங்கிலும் உள்ள மனநல மருத்துவர்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் தங்களின் சேவையின் தேவைக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராடுகிறார்கள். மனநோய்க்கான அடிப்படையான ஒரு காரணத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபலமான மனநல நிபுணர்கள் அடங்கிய குழுவினருடன் சமீடத்தில் நடந்த உரையாடலின் போது வெளிப்படுத்தினார் சத்குரு. மேலும், யோகக் கண்ணோட்டத்திலிருந்து, எதனை, எவ்வாறு உண்பது என்பதைக் குறித்தும் சத்குரு அப்போது வழிகாட்டுதல் வழங்கினார். அதன் தொகுப்பு இங்கே நமக்காக.

பேராசிரியர் ஸ்வரன்: சத்குரு, மனப்பிறழ்வு ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன?

நீங்கள் எதனை, எவ்வாறு பெறுகிறீர்கள் என்பது முக்கியம்

சத்குரு: நாம் சாப்பிடும் முறையானது, மனநோய் ஏற்படுத்துவதில் ஒரு மிகப் பெரும் பங்காற்றுகிறது. விழிப்புணர்வு இல்லாமல் பல்வேறு நிலைகளில் நாம் உட்கொள்ளும் இரசாயனங்கள் மற்றும் ஹார்மோன்கள் இன்று மனநோய்களின் அபாயகரமான ஒரு பகுதியாக இருக்கிறது. நாம் உணவை எவ்வாறு உட்கொள்கிறோம் என்பதும் மிக முக்கியமானது. சக்தி ஊட்டம் பெறுவது உட்பட, உயிரானது எத்தனையோ நிலைகளில் பெற்றுக்கொள்கிறது. இந்தியாவில் நாம் ஏதோ ஒன்றைப் பெற்றுக்கொள்ளும்போது நாம் கால்களை சம்மணமிட்டு அமர்ந்து கொள்கிறோம். ஏனெனில் நமது உடலின் கீழ்ப்பகுதியில் இருந்து பெறுவதற்கு நமக்கு விருப்பமில்லை. எதனையும் நேர்மறையாக நமது உடலின் மேற்பகுதியில் இருந்து பெறுவதற்கு நாம் விரும்புகிறோம். நாம் உணவு உண்டால், முதலில் கால்களை சம்மணமிட்டுக் கொள்கிறோம். சக்தி நிரம்பியதாக நாம் கருதும் ஒரு இடத்துக்கு சென்றால், நாம் கால்களை சம்மணமிட்டு, நமது கைகளைத் திறந்த நிலையில் வைத்துக்கொள்கிறோம்.

மனித சக்திநிலை அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு

யோக உடலியலில், 114 சக்கரங்கள் உள்ளன. அவற்றுள் 112 சக்கரங்கள் மனித அமைப்புக்குள்ளே இருக்கின்றன. இந்த 112 சக்கரங்களில் ஏழு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவும் 16 சக்கரங்களுடன் உள்ளன. இந்த ஏழு பிரிவுகள்தான் இன்றைக்கு உலகில், ஏழு சக்கரங்கள் என்று பொதுவாக அறியப்படுகின்றன. அவற்றுள் முதல் மூன்று சக்கரங்கள் பிழைப்புக்கான செயல்முறைகளாக இருக்கின்றன. முதல் மூன்று சக்கரங்களுக்கும் கடைசி மூன்று சக்கரங்களுக்கும் நடுவில் அனாகதம் உள்ளது. இது பிழைப்பு செயல்முறைகளுக்கும் ஞானோதய செயல்முறைகளுக்குமான ஒரு சந்திப்பைக் குறிக்கிறது. அனாகதாவில் இருந்து மேற்கொண்டு இருப்பவை உயிர் ஞானோதயம் அடைவதற்கான செயல்முறைகள். உயிரின் அந்தப் பரிமாணம் பெரும்பாலான மக்களுக்கு திறக்காமல் போகலாம். இருப்பினும், சிலர் எந்தக் குறிப்பிட்ட பயிற்சியோ அல்லது விருப்பமோ இல்லாமல் - வெறும் கல்வி, கவனக்குவிப்பு மற்றும் மனோபாவத்தின் காரணத்தினாலேயே – பரிணாமம் அடைந்துவிடக்கூடும்.
ஒவ்வொரு மனிதரும் அவரவருக்கே உரிய வேகத்தில், பரிணாமம் அடைந்துகொண்டுதான் இருக்கின்றனர். இதில் கேள்வி என்னவென்றால், அவர்கள் விழிப்புணர்வுடன் விரைவாகப் பரிணாமம் அடைகின்றனரா அல்லது அவர்கள் மெதுவாகச் செல்கின்றார்களா? ஆனால் அவர்களின் பத்து வயதுப் பருவத்திலிருந்து அவர்கள் ஒரே விதமாக இருந்துவருகிறார்கள் என்று ஒருவராலும் கூறமுடியாது. நாம் ஒவ்வொருவரும் நமது புரிதல், அனுபவம், உணர்தல் மற்றும் அறிவில் பரிணாமம் அடைந்து வருகிறோம். இயல்பாகவே நாம் அழியக்கூடியவர்கள் மற்றும் நமக்கான காலம் மிகவும் குறுகியது என்பதை நாம் புரிந்துகொள்ளும் காரணத்தால், நம்மால் இயன்ற அளவு வேகமாக நாம் பரிணாமம் அடைய விரும்புகிறோம் - இதுவே ஆன்மீகம்.

Sadhguru: The way we eat is a very big part of mental illness. The way we are unconsciously ingesting chemicals and hormones at various levels is a serious part of mental illnesses today. How we ingest food is also important. Life receives on so many levels, including the energetic level. In India, when we receive something, we sit with crossed legs because we do not want to receive from the lower part of our body. We want to receive anything positive from the upper part of our body. If we eat, we first cross our legs. If we go to a place that we think is energetically strong, we cross our legs and keep our hands open.

யோக அறிவியலின்படி எந்த வகையான உணவை உண்பது

பெற்றுக்கொள்ளுதலில், உணவு மிக அடிப்படையானதொரு தளமாகக் கருதப்படுகிறது. உணவை நாம் எவ்வாறு பெறுகிறோம் மற்றும் என்ன பெறுகிறோம் என்பது மிக முக்கியம். சமூகங்கள் மேலும்மேலும் வசதி படைத்ததாக மாறும் நிலையில், அவர்கள் மிகமோசமான உணவை உட்கொள்ளத் தொடங்குகிறார்கள். நகர்ப்புற மக்கள் உண்ணும் வகையான உணவை, இந்திய கிராமத்தை சேர்ந்த ஒருவர் தொடக்கூட மாட்டார். உலகின் செல்வவளம் படைத்த மக்கள்தொகையை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான வட அமெரிக்கா, இரைப்பை அமிலம் நீக்கும் ஆன்டாசிட் மாத்திரைகளுக்கான மிகப்பெரும் சந்தையாக இருக்கிறது. ஊட்டமளிக்கும் உணவு உண்பதற்கான முழுமையான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது. ஆனால் அவர்கள் மிக மோசமான உணவை உண்கிறார்கள். ஏனெனில் அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை வணிக சக்திகள் தீர்மானிக்கின்றன. பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வோடு உண்பதில்லை. இன்று மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்கள் உண்ணும் அதிக அளவிலான உணவுகள், குறைந்தது முப்பது முதல் அறுபது நாட்கள் பழைய உணவுகளாகவே இருக்கின்றன. யோகத்தில் உணவு என்பது, சத்வம், ராஜஸம் மற்றும் தாமஸம் என்று வகைப்படுத்தப்படுகிறது. தாமஸம் என்பது மந்தத்தன்மையை குறிக்கிறது. தாமஸ தன்மையுடைய எதனை நீங்கள் உட்கொண்டாலும் உங்கள் உடலமைப்பில் மந்தத்தன்மை வந்துவிடும். மந்தத்தன்மை என்றால் சோம்பேறியாக இருப்பது என்பது மட்டும் அர்த்தமல்ல.
மந்தத்தன்மை என்றால், உடலமைப்பின் மீட்டுருவாக்கத்தைத் தாமதப்படுத்துவது. உங்களது வாழ்க்கை முழுவதும் உங்கள் மூளையை நல்ல செயல்பாட்டோடு வைப்பதற்கு நரம்பியல் மீளுருவாக்கம் என்பது மிக முக்கியமான அம்சங்களுள் ஒன்றாக இருக்கிறது. நபருக்கு நபர், அறிவாற்றல் ஒரேமாதிரி இருப்பதில்லை. ஏன் அவ்வாறு இருக்கிறது என்பதற்குப் பல்வேறு அம்சங்கள் உள்ளன. தாமஸத்தன்மை கொண்ட, உங்கள் உடலமைப்பின் பொதுவான செயல்பாட்டிலும், உங்களது சக்திநிலையின் செயல்முறைகளிலும் மந்தத்தன்மை ஏற்படுத்தும் உணவை நீங்கள் உட்கொண்டால், காலப்போக்கில் உங்களின் அறிவாற்றல் குறைந்துகொண்டே செல்லும். இதன் காரணமாகத்தான் மக்கள் அவர்களின் உணவுடன் கோப்பை கோப்பையாக கோலா, காபி அல்லது ஏதோ ஒன்றைச் சேர்த்து அருந்துகிறார்கள் - ஏனெனில் மந்தத்தன்மையை சமன் செய்வதற்கு அவர்களுக்கு எதாவது தேவைப்படுகிறது. இது உங்கள் உடலமைப்பை சமன் செய்வதற்கான மிக அடிமட்டமான வழி.

நீங்கள் இளமையோடு இருப்பதற்கு உணவு எவ்வாறு உதவுகிறது

யோக கலாச்சாரத்தில், உணவை சமைத்த பின்னர் அதிகபட்சமாக ஒன்றரை மணி நேரத்திற்குள் நீங்கள் அதை சாப்பிட முடியும். அதற்குப் பிறகு நாம் அந்த உணவை தொடுவதில்லை. ஏனெனில் அந்த உணவு தாமஸத்தன்மை பெற துவங்கிவிடுகிறது - மந்தநிலை உருவாகத் தொடங்குகிறது. நீங்கள் பரிசோதிக்க விரும்பினால், ஒரு வாரத்திற்கு புத்தம் புதிய உணவுகளை மட்டுமே உண்ணுங்கள். பின்னர், தயாரிக்கப்பட்டு, ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் சேமித்து வைக்கப்பட்ட உணவை உண்ணுங்கள். உங்கள் உடலமைப்பின் அணுக்களின் நிலையில், சுறுசுறுப்பின் அளவை நீங்கள் கவனிப்பீர்கள். இதை நாம் ஓஜஸ் என்று குறிப்பிடுகிறோம். இதற்கான ஆங்கில வார்த்தை இல்லை. சக்தியின் பொருள் கடந்த ஒரு பரிமாணமாக இருக்கும் ஓஜஸை நீங்கள் போதிய அளவுக்கு உருவாக்கி, உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும் ஓஜஸினால் சூழப்பட்டால், அணுக்களின் நிலையில் உங்களின் வயது நீண்ட நெடுங்காலத்துக்கு ஏறக்குறைய நிலைத்திருக்கும்.

இணக்கமானதா இல்லையா? ஏன் இணை உணவுகள் முக்கியமாக இருக்கின்றன?

உணவைப் பொறுத்து மேலும் கூறுவதென்றால், 'விருத்த ஆகாரம்' என்று ஒன்று உள்ளது. அதற்கு அர்த்தம், ஒன்றுக்கொன்று எதிரிடையாக செயல்படும் இரண்டு உணவுப் பொருட்களை நீங்கள் உட்கொண்டால், அது உங்கள் உடலில் ஒரு போர் நடப்பதற்கு ஒப்பானது. பெரும்பாலும், அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையால் செரிமான செயல்பாடு நிகழ்கிறது. உதாரணத்திற்கு, இயல்பாகவே கொழுப்பு சத்து கொண்ட இறைச்சியை நீங்கள் உட்கொண்டால், அது அந்த அளவுக்குப் பெரும்பாதிப்பை உருவாக்காமல் இருக்கக்கூடும். ஆனால் அதை அரிசி மற்றும் நெய்யுடன் சேர்த்து பிரியாணி போன்று உட்கொண்டால், இப்போது பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஏனெனில் இந்தப் பொருட்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து போவதில்லை. இதன் காரணத்தினாலேயே இறைச்சி மற்றும் பால் பொருட்கள் ஒருபோதும் கலக்கப்பட்டதில்லை. ஏனெனில் நீங்கள் அவ்வாறு செய்தால், அவை ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்பட்டு, உங்களுக்குள் ஒரு போரை உருவாக்கும்.

ஆரோக்கியமான மனம் வேண்டுமா? - உங்கள் பெருங்குடலை கவனியுங்கள்

யோகக் கலாச்சாரத்தில், இரண்டரை மணி நேரங்களுக்கு மேல் உங்கள் வயிற்றில் உணவு தங்கியிருக்கக் கூடாது. இரண்டரை மணி நேரங்களுக்குள் உங்கள் வயிறு காலியாகிவிட வேண்டும். நம் வயிறு காலியாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், ஏனெனில் காலியான வயிற்றில், அனைத்தும் நல்லமுறையில் செயல்படுகிறது. பெருங்குடல் ஆரோக்கியம் இன்றைக்கு முழுமையாக அலட்சியப்படுத்தப்படுகின்ற மற்றொரு அம்சமாக இருக்கிறது. உங்கள் மலக்குடலை நீங்கள் சுத்தமாக வைத்திருக்காவிட்டால், உங்கள் மனதை ஒரு சமநிலையில் வைத்திருப்பது மிகவும் கடினம். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில், உங்களுக்கு தூக்கமின்மை அல்லது இலேசான உளவியல் பிரச்சனைகள் இருந்தால், வயிற்றை சுத்தம் செய்வதுதான் அவர்கள் செய்யும் முதன்மையான விஷயமாக இருக்கிறது. உங்கள் உடலின் கழிவுகளை வெளியேற்றி, பெருங்குடலை சுத்தமாக்கினால், நீங்கள் அதிக சமநிலையில் இருப்பதை உணருவீர்கள். அது ஒரு முழுமையான தீர்வு அல்ல. ஆனால் மருந்து அல்லது குறிப்பிட்ட பயிற்சிகள் மூலமாக, உடலை சீர்செய்வதற்குத் தேவையான சூழலை அது உருவாக்கும்.


விழிப்புணர்வாக வாழ்தல்

இராமனிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 4 மிக சக்திவாய்ந்த வாழ்க்கைப்பாடங்கள்

இராமன் தன் வாழ்க்கை முழுவதும், குறிப்பாக இதயத்தை நொறுக்கும் இழப்பு மற்றும் சோகமான தருணங்களிலும், அவர் வெளிப்படுத்திய காலத்தால் அழியாத ஞானத்தைப் பற்றி சத்குரு விவரிக்கிறார். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு அற்புதமான உதாரணமாக இருந்த இராமன் இன்றளவும் - குறிப்பாக முன்பு எப்போதும் இல்லாத இதைப்போன்ற காலக்கட்டத்தில் - ஏன் மிகப்பொருத்தமாக இருக்கிறார் என்ற காரணத்தை இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

சத்குரு: இராமன் எப்போதும் "புருஷோத்தமன்" என்று அறியப்படுகிறார். அதற்கு, "உயர்ந்த நிலையில் உள்ள ஒரு மனிதன்" என்பது பொருள். அவர் பல சோதனைகளை, பெருந்துயரங்களை, தொடர்ச்சியான பல அழிவுகளைச் சந்தித்தார். தன் நாட்டை இழந்தார், பின்னர் தன் மனைவியை இழந்தார், ஒரு யுத்தம் செய்யவேண்டியிருந்தது. பின்னர் நாடு திரும்பி, மீண்டும் தன் மனைவியை இழந்ததுடன், தன் சொந்தக் குழந்தைகளையே ஏறக்குறைய கொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் அவை அனைத்தையும் அவர் அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும் எதிர்கொண்டார். தனிப்பட்ட அளவில் அவர் அதிக வலியை அனுபவித்து, அதை அவர் வெளிப்படுத்தியிருந்தாலும், அந்த வலி அவர் செய்த எந்தச் செயலையும் தீர்மானிக்க அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஒரு மனிதர் இவ்வாறு செயல்படும்போது, அவரை நாம் "புருஷோத்தமன்" என்று அழைக்கிறோம் - ஏனெனில் அவர் மனிதர்களுக்கிடையே உயர்ந்த நிலையில் இருக்கிறார்..

சமஸ்க்ரிதி - சமநிலை மற்றும் உற்சாகம் ஒருசேர இருப்பது

நாம் இராமனை வணங்குவது அவர் மிகவும் வெற்றிகரமாக இருந்தார் என்பதற்காக அல்ல. நாம் அவருடைய குணநலன்களுக்காக அவரை வணங்குகிறோம். வாழ்க்கை அவர் மீது எதனை எறிந்தாலும், அவர் சமநிலை குலையாமல் இருந்தார். வாழ்க்கை உங்களுக்கு என்ன செய்கிறது என்பது எப்போதும் உங்கள் தேர்வு அல்ல, ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்கள் தேர்வு. இது தான் கர்மா என்பதன் பொருள். அவர் தன் கர்மாவுக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டார். உலகம் அவருக்கு எல்லா விதமான விஷயங்களையும் செய்தது, ஆனால் அவர் – எந்தக் கசப்பும், வெறுப்பும், கோபமும் அடையாமல் - தான் செய்யத் தேவையானவைகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தார்.

அவருக்கு மிக மோசமான விஷயங்கள் இழைக்கப்பட்டன - ஆனால் அவர் சமஸ்க்ரிதியில் இருந்தார். "சம்" என்றால் சமநிலையுடன், உற்சாகமாகவும் இருப்பது. "க்ரிதி" என்றால் செயல். சமஸ்க்ரிதி என்றால் வாழ்வை சமநிலையோடு உற்சாகத்தோடு வாழ்வது. சம நிலைதான், ஆனால் மரணத்தில் இருப்பதைப் போன்ற சமநிலை அல்ல. உற்சாகம்தான், ஆனால் போதையில் இருப்பதைப் போன்றதல்ல. இராமன் அதற்கான ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார். அவர் தன் வாழ்வை முழு ஈடுபாட்டோடும் சமநிலையோடும் நடத்தினார். ஒரு மனிதர், வாழ்வில் என்ன நிகழ்ந்தாலும் - ஏழ்மை, செல்வம், வெற்றி, தோல்வி - எதுவாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் தன் மனிதத்தன்மையை இழக்காமல் வாழ்ந்தால், உண்மையிலேயே அவர்தான் ஒரு வெற்றிகரமான மனிதர் என்று இந்தக் கலாச்சாரம் கருதுகிறது.

கண்மூடித்தனமான மதிப்பீடுகள் ஏன் எப்போதும் தவறானவை

இராமாயணத்தில் ஒரு அழகான சம்பவம் நிகழ்ந்தது. சதி செய்யப்பட்ட பிறகு, இராமன் நாட்டைத் துறந்து, கானகத்தில் கடினமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தபோது, அவர் மனைவியை இராவணன் கடத்திச் சென்றான். தன் மனைவி மீது கொண்டிருந்த மிகுதியான அன்பால், மனைவியின் நிலையை எண்ணி மனம் தளர்ந்து, கவலையுற்று இருந்த இராமர் நடந்தே தெற்கை அடைந்து, தமிழ் மக்களோடு சேர்ந்து ஒரு படை திரட்டி, கடல் கடந்து இலங்கை சென்று, போர் தொடுத்தார். போரின் முடிவில் பத்துத் தலை இராவணனைக் கொன்றார்.

போரை வென்ற பின்னர், இராமன் கூறினார், "நான் இராஜ்ஜியத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. இமாலயத்துக்கு சென்று அங்குள்ள அகத்தியர் குகையில் சில காலம் கழிக்க விரும்புகிறேன். ஏனெனில் நான் செய்த மிகப்பெரிய பாவத்துக்கான பிராயச்சித்தம் தேட விரும்புகிறேன். பக்தியுடையவராக, சிவனின் மகத்தான பக்தராக, பிரமிக்கத்தக்க அறிஞராக, மாபெரும் அரசனாக, கொடையுள்ளம் கொண்ட மனிதராகவும் இருந்த ஒருவரை நான் கொன்றுவிட்டேன்." மற்றவர்கள் திகைத்து போயினர். லட்சுமணன் அவரைப்பார்த்து "நீங்கள் எதைப்பற்றிக் கூறுகிறீர்கள்? இராவணன் உங்கள் மனைவியைக் கடத்திச் சென்றான்”, என்று கூறினான். அதற்கு இராமன், " எல்லா வகையான எதிர்மறை குணங்களும் பேராசை, பொறாமை, காமம் போன்றவை அவனது மற்ற ஒன்பது தலைகளில் குடிகொண்டிருந்தன. ஆனால் ஞானம், அறிவு, பணிவு, பக்தி ஆகியவற்றைக் கொண்டிருந்த ஒரு தலை இருந்தது. நான் அந்தத் தலையைக் கொன்றுவிட்டதற்காக வருந்துகிறேன்”, என்று பதில் கூறினார்.

இந்தக் கதை உங்களுக்கு உணர்த்த முயற்சிப்பது என்னவென்றால், உங்கள் அனைவரிடமும் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட தலைகள் உள்ளன. ஒரு நாள் உங்கள் தலை பேராசையில் இருக்கிறது, மற்றொரு நாள் பொறாமையில், மற்றொரு நாள் வெறுப்பில், இன்னுமொரு நாள் அன்பில், அடுத்த நாள் அழகாக இருக்கிறது, அதற்கடுத்த ஏதோ ஒரு நாள் அசிங்கத்தில் மூழ்கி இருக்கிறது. நீங்கள் பொறாமையில் இருக்கும் ஒரு தருணத்தில் மக்கள் உங்களைப் பார்த்தால், "இவர் பொறாமையானவர்," என்று கூறுகிறார்கள். நீங்கள் பேராசையில் இருக்கும் தருணத்தில் அவர்கள் பார்த்தால், "இவர் பேராசையானவர்”, என்று கூறுகிறார்கள். நீங்கள் வெறுப்பில் இருக்கும் தருணத்தில் அவர்கள் பார்த்தால், "இவர் வெறுப்புடையவர்”, என்று கூறுகிறார்கள். நீங்கள் காமஉணர்வில் இருக்கும் தருணத்தில் பார்த்தால், "இவர் காமாந்தகர்”, என்று கூறுகிறார்கள். வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு தலைகள் செயல்படுகின்றன. ஆனால் ஒவ்வொருவருக்கும் அன்பு, அழகு, கொடைத்தன்மை, கருணை குடிகொண்டிருக்கக்கூடிய குறைந்தபட்சம் ஒரு தலையாவது இருக்கிறது. மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால் குணத்தைக் கண்டிப்பதை விடுத்து அந்த மனிதரைக் கண்டனம் செய்கின்றனர். இதை தான் இராமன் உணர்த்த முயற்சிக்கிறார்: "மற்ற ஒன்பது தலைகளைக் கொண்டு அவன் மிக மோசமான செயல்களைச் செய்தான். ஆனால் பிரம்மாண்டமான சாத்தியத்தோடு கூடிய அந்த ஒரு தலையை நான் கண்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அதை நான் வீழ்த்த வேண்டியிருந்தது."

ஒரு தலைவனுக்கு, குடும்பத்தை விட நாடு முதன்மையானதாக இருக்க வேண்டும்

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்த பிறகும் இராமன் நாடு திரும்புவதற்கு கூடுதலாக ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறார். ஏனென்றால் பக்தனாகவும் ஆனால் அவரின் மனைவியை கவர்ந்து சென்றவனாகவும் இருந்த இராவணனைக் கொன்ற காரணத்தால், இராமன் மேலும் ஒரு வருடம் தவத்தில் ஈடுபட்டார். அது போதாது என்பதைப்போல், சில அரசியல் சூழல்கள் உருவானதால், அவர் மனைவி கருவுற்று இருந்தபோது, அவளை மீண்டும் அவர் காட்டுக்கு அனுப்பினார்.

ஒரு அரசனுக்கு, அவரது அரசி கருவுற்று, இராஜ்ஜியத்துக்கு ஒரு வாரிசு வழங்குவது என்பது மிக முக்கியமான ஒன்று. இராமன் தன் மனைவியை மிகவும் நேசித்தார். அவரின் உலகமாக அவள் இருந்தாள். அப்படி இருந்தாலும் தன் குடிமக்களை முன்னிறுத்தி, அவளைக் காட்டிற்கு அனுப்பினார். அங்கு அவள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இதை அறியாமல், அவர் தன் குழந்தைகளை ஏறக்குறைய கொல்லும் அளவுக்குச் சென்றது மிகக் கொடுமையான ஒன்று. மேலும், அவர் தனது அன்புமனைவியை மறுபடி பார்க்கவே இல்லை. அவள் காட்டிலேயே இறந்துவிட்டாள். மக்கள் என்னிடம், "அவர் தன் மனைவியிடம் நியாயமாக நடந்து கொண்டாரா? இதுதான் குடும்பத்தை நடத்தும் விதமா?", என்று கேட்பதுண்டு. நீங்கள் ஒரு சாதாரண மனிதராக இருந்தால், இது ஒரு நல்ல கேள்வி. .ஆனால் நீங்கள் ஒரு அரசனாக, அல்லது ஒரு நாட்டின் தலைவனாக இருக்கும்பட்சத்தில், தன் குடும்பத்தை விட நாட்டை உயர்ந்த இடத்தில் வைக்கும் ஒருவர்தான் நமக்கு வேண்டும். இந்தக் காரணத்தினால் தான் நாம் அந்த மனிதருக்குத் தலைவணங்குகிறோம்.

அனைத்தை குறித்தும் முழுமையான விருப்பம், ஒன்றை தவிர...

இராமனை ஒரு மனிதராகப் பார்ப்பது மிகவும் முக்கியமானது. அவரை ஒரு கடவுளாக நீங்கள் உயர்த்தினால், இராமனை அப்படியே சுவற்றில் ஆணியடித்து மாட்டித் தொங்கவிட்டு, பிறகு மறந்து விடுவீர்கள். இங்கே ஒருவரும் கடவுளைப் போல இருப்பதற்கு முயற்சி செய்வதில்லை, அது மனிதர்களால் இயலாத‌ ஒன்று என்ற முன்முடிவோடு இருக்கிறார்கள். ஆனால், ஒரு மனிதர் உண்மையிலேயே மிக அற்புதமானவராக இருந்தால், இயல்பாகவே அனைவரும் அவரைப் போல இருப்பதற்கு ஆசைப்படுகிறார்கள். அடிப்படையில், இராமனின் வாழ்வு சுட்டிக்காட்டுவது என்னவென்றால், அனைத்து உயிர்கள் மீதும் முழுமையான விருப்பம் மற்றும் தனிப்பட்ட தன் வாழ்வின் மீது முழுமையான பாரபட்சமின்மை என்கிற நிலைப்பாடு. தன்னுடைய நாட்டுமக்களின் நல்வாழ்வு குறித்த இராமனின் பேராவல் எல்லையில்லாதது; அந்த உணர்வுக்காக தன்னையே தியாகம் செய்யும் அளவுக்கானது. மனிதர்கள், அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும், அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரு குணநலன் இது என்றே நான் நினைக்கிறேன்.

கர்மா:

முன்னதாகவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடா அல்லது உங்கள் வாழ்வை நீங்களே வடிவமைக்க வழங்கப்பட்டுள்ள அதிகாரமா?

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வாழ்வியல் பயிற்சியாளர் லாரா மலினா சைலர் சத்குருவிடம் கர்மாவைப் பற்றி பொதுவாக நிலவி வரும் தவறான கருத்துகளைக் குறித்து தெளிவுபடுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த சத்குரு கர்மாவின் உண்மையான அர்த்தம், அது செயல்படும் விதம், அதனைக் கொண்டு ஒருவர் தன் விதியை தானே எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்பது போன்ற விஷயங்களை விளக்கினார்.

லாரா: நீங்கள் தற்போது கர்மாவைப் பற்றி அருமையான ஒரு நூலை எழுதியுள்ளீர்கள். இது குறித்து நான் மிக உற்சாகம் கொள்கிறேன். ஏனெனில், மேற்கத்திய நாடுகளில் கர்மாவைப் பற்றி மிகத்தவறான புரிதல் உள்ளது என்றே நான் உணர்கிறேன். மக்கள் அது ஏதோ தண்டனை போலவோ அல்லது அதனை உங்களால் மாற்ற முடியாது என்றும் நினைக்கின்றனர். கர்மாவைப் பற்றிய உங்கள் கருத்துகளை கேட்க நான் ஆர்வமாக உள்ளேன்.

நான்கு நிலைகளில் நிகழும் மனித செயல்கள்: இது எப்படி கர்மா ஆகிறது

சத்குரு: கர்மா என்பதற்கு பொருள் - செயல். உயிர் வாழும் மனிதர்களாகிய நாம் என்ன செய்தாலும் சரி, உறக்கம் விழிப்பு என எந்த நிலையில் இருந்தாலும் சரி, அடிப்படையில் நாம் நான்கு நிலைகளில் செயல்புரிகிறோம். உடல் சார்ந்த செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது - நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். நீங்கள் அதை கூட்டவோ குறைக்கவோ முடியும், ஆனால் அதை முற்றிலுமாக உங்களால் நிறுத்த முடியாது. அடுத்ததாக, மனம் சார்ந்த செயல்முறைகள், உணர்வு சார்ந்த செயல்முறைகள் மற்றும் சக்தி சார்ந்த செயல்முறைகள் - அதாவது, உங்கள் உயிர்சக்தியின் செயல் - ஆகியவை உள்ளன. இந்த நான்கு பரிமாணங்களிலும் எப்போதும் செயல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன - உங்களது விழிப்பு மற்றும் உறக்கம் இரண்டு நிலையிலும். ஆனால் இன்று காலை கண் விழித்ததில் இருந்து இதுவரையிலும் நீங்கள் செய்துள்ள உடல் சார்ந்த, மனம் சார்ந்த, உணர்வு சார்ந்த, சக்தி சார்ந்த செயல்களை உண்மையாக உற்று நோக்கினால், அவற்றில் பெரும்பாலானவை விழிப்புணர்வு இல்லாமல் நிகழ்ந்திருக்கின்றன என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள். மீதம் உள்ள பெரும்பாலான செயல்கள் அனைத்துமே, நீங்கள் கிரகித்துள்ள பல்வேறு உள்ளீடுகளின் காரணமாக தவிர்க்க இயலாச் செயல்களாக கட்டாயமாக நிகழ்கின்றன.

உங்கள் வாழ்க்கை தடம் புரண்ட வண்டியைப் போல உள்ளதாக எண்ணுகிறீர்களா? அதற்கான காரணம் இதோ.

இப்போது நீங்கள் ஒரு காரை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் ஒரு சதவிகித நேரம் மட்டுமே விழிப்போடு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நீங்களே அனுமானித்துவிட முடியும். அதேதான் மக்களின் வாழ்விலும் நிகழ்கிறது. ஏனெனில் அவர்கள் தங்கள் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தி சார்ந்த செயல்களை விழிப்புணர்வோடு நிகழ்த்துவது இல்லை. எனவே, ஏதோ ஒரு சக்தி வேறெங்கோ இருந்து எல்லா நேரங்களிலும் தாக்கிக் கொண்டிருப்பது போல தோன்றுகிறது. ஏதாவது கெட்டதாக நிகழ்ந்தால், "கேடு வந்தது" என்று கூறுவார்கள். ஏதாவது நன்மையாக நிகழ்ந்தால், "நான் அதிர்ஷ்டசாலி" என்று கூறுவார்கள். வாழ்க்கை எப்போதுமே தற்செயலாக நிகழ்வதைப் போலவே தோன்றும். ஆனால் வாழ்க்கை தற்செயலாக நடப்பது அல்ல. நம் இருப்பின் உடல் சார்ந்த பரிமாணமானது, எப்போதுமே ஒரு காரணகாரியத்தோடு தான் நிகழ்கிறது. பெரும்பாலான மனிதர்களுக்கு தங்கள் வாழ்வில் விளைந்துள்ளவைகள் - துன்பமாக இருந்தாலும் இன்பமாக இருந்தாலும் - அவற்றுக்கான காரணம் பற்றி அறிய முடியவில்லை, அவ்வளவே! ஆனால் காரணம் இல்லாமல் எந்த ஒரு காரியமும் நிகழாது. அதுவே உடல் சார்ந்த நம் இருப்பின் தன்மை.

உங்கள் ஒவ்வொரு செயலின் எச்சமாக வெளிப்படும் தாக்கம்தான் கர்மா. அவை எல்லாமும் நம் கவனத்தில் இல்லை என்றாலும், அதன் பங்கு நமது வாழ்வில் நடந்தேறுகிறது.

அடிப்படையாக, கர்மா என்பது செயலை குறிக்கிறது - ஏற்கனவே நிகழ்ந்துவிட்ட செயல் - அது கவனத்தோடும் நிகழ்ந்திருக்கலாம் அல்லது கவனம் இல்லாமலும் நிகழ்ந்திருக்கலாம். இந்த கர்மா பல்வேறு நிலைகளில் உள்ளது. ஆனால் அடிப்படையில் அவை நமக்குள் நினைவு பதிவுகளாக உள்ளன.

மொத்தமுள்ள உங்கள் நினைவு பதிவுகளில் ஒரு சிறு துளியளவு மட்டுமே உங்கள் விழிப்புணர்வில் உள்ளது. உங்களுக்கு அற்புதமான நினைவாற்றல் இருந்தாலும்கூட, உங்கள் உடலில் நீங்கள் சுமக்கும் நினைவுகளோடு ஒப்பிட்டால், உங்கள் மூளையில் நீங்கள் கொண்டுள்ள நினைவுகள் மிகக் குறைந்த அளவுதான். உங்களின் மூன்று தலைமுறைக்கு மூத்த பூட்டி எப்படி இருந்தார் என்பதை இப்போது உங்களால் நினைவுபடுத்திக்கொள்ள முடியாது என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் அவரின் மூக்கு இப்போது உங்கள் முகத்தில் அமர்ந்துள்ளது. ஆயிரம் காலத்துக்கு முந்தைய உங்கள் மூதாதையரின் தோல் அமைப்பு இப்போதும் உங்களது உடலில் வெளிப்படுகிறது. மரபணு, பரிணாம வளர்ச்சி மற்றும் பல வெவ்வேறு நிலைகளில் இருக்கும் நினைவுகளைத்தான் நாம் கர்மா என்று குறிப்பிடுகிறோம். உங்களது ஒவ்வொரு செயலின் எச்சமாக வெளிப்படும் தாக்கம்தான் கர்மா. அவை எல்லாமும் நம் கவனத்தில் இல்லை என்றாலும், அதன் பங்கு நமது வாழ்வில் நடந்தேறுகிறது.

கர்மா என்றால் அனைத்தும் முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல

கர்மா என்று சொன்னாலே எல்லாமே முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல - இருப்பதிலேயே மிகவும் துடிப்போடு உங்கள் வாழ்வை அணுகுவதற்கான வழி இதுதான். "என் வாழ்வு என் கர்மாவால் நடக்கிறது" என்பதன் பொருள் "என் வாழ்வு நான் நிகழ்த்துவது, வேறெவரும் என் வாழ்வை நிகழ்த்தவில்லை" என்பதுதான். இந்த உலகம் உங்களை நோக்கி எதை எறிகிறது என்பது எப்போதும் உங்கள் கைகளில் இல்லை. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் உங்கள் மேல் ஒரு கல்லை வீசியிருக்கக்கூடும். ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஈட்டியை வீசியிருக்கக்கூடும். இன்று அவர்கள் உங்கள் மேல் வாட்ஸ்ஆப் தகவல்களை வீசக்கூடும்.

உலகம் உங்கள் மேல் என்ன வீசுகிறது என்பது நாம் வாழும் காலத்தின் விளைவாக நிகழ்வது. ஆனால் நம் வாழ்வை நாம் எவ்வாறு உணர்கிறோம், எந்த அளவுக்கு உணர்கிறோம் என்பது முற்றிலுமாக நாம் உருவாக்குவது. உலகம் நம்மை நோக்கி என்ன வீசுகிறது என்பதை நம்மால் எப்போதும் தீர்மானிக்க முடியாது, ஆனால் அதைக் கொண்டு நாம் என்ன உருவாக்குகிறோம் என்பது நூறு சதவிகிதம் நம் கையில் இருக்கிறது. இதுதான் கர்மா என்பதன் பொருள் - உங்கள் வாழ்வை உங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கிறீர்கள். இன்னும் விழிப்புணர்வான ஒரு செயல்முறையாக உங்கள் கர்மாவை நீங்கள் நிகழ்த்தும்போது, உங்கள் விதியை நிர்ணயிப்பவரே நீங்கள்தான் என்றாகிறீர்கள்.

ஆசிரியர் குறிப்பு: இந்தத் தலைப்பில் மேலும் ஆழமாக ஆராய விரும்புகிறீர்களா? தன்னுடைய சமீபத்திய ஆங்கில நூலான "Karma - A Yogi’s Guide to Crafting Your Destiny" மூலம் சத்குரு கர்மா என்றால் என்ன, அதன் கருத்தாக்கங்கள் கொண்டு நம் வாழ்வை எவ்வாறு மேம்படுத்துவது ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறார். மேலும், சூத்திரங்கள் குறித்தும் கூறுகிறார் - சவாலான இந்த உலகில் நம் வழியை கண்டறிந்து நம் விதியை நாமே தீர்மானிக்கும் படிப்படியான வழிகாட்டுதல்கள் இவை.

பஞ்சபூதங்களைக் கையாள்வதனால், ஏன் உங்கள் உச்சபட்ச சாத்தியத்தின் ஆற்றலை அறிந்துகொள்ள முடிகிறது?

சமீபத்தில் நடந்த "இன் த க்ரேஸ் ஆஃப் யோகா" நிகழ்வின்போது சத்குரு, இன்றைக்கு மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் அடிப்படையான தடைகளையும், ஏற்பாடுகளையும் வெளிப்படுத்துகிறார். அவை அவர்களது முழுமையான சாத்தியத்தை அடையவிடாமலும், அவர்களின் வாழ்க்கையை இயன்ற அளவுக்குச் சிறப்பாக உணர்வதையும் தவிர்க்கின்றன என்கிறார். மேலும் இதுபற்றிக் கூறுகையில் சத்குரு, காலம் மற்றும் உடல்தன்மையான இருப்பின் செயல்பாடுகளை விளக்கியதோடு, பஞ்சபூதங்களின் மீது சிறிதளவு ஆளுமை கொண்டு வந்தாலும், அது எவ்வாறு உங்களை விடுவிக்கிறது என்றும் கூறுகிறார்.

உடல்தன்மையான படைப்பின் விளையாட்டு மேடை

இந்த உடல், காலம் என்னும் பரிமாணத்தில் இருக்கிறது. காலம் என்னும் மேடையின் மீதுதான் அது விளையாடுகிறது. ஆனால், விளையாட்டின் அளவும், தன்மையும் பஞ்சபூதங்களின் மீது நமக்கு இருக்கும் நெகிழ்வுத்தன்மை, ஆளுமை மற்றும் புரிதலைச் சார்ந்து இருக்கிறது. நமது புரிதலில், காலம் என்றால் சுழற்சி இயக்கங்கள் என்பது பொருள். அது நிலவாக இருந்தாலும், பூமியாக, சூரியனாக அல்லது ஒரு கடிகாரமாக இருந்தாலும், காலம் என்றால் சுழற்சி இயக்கம் என்பதே நமது கருத்தாக இருக்கிறது. வெவ்வேறு சுழற்சிகளை, காலத்தின் வெவ்வேறு அலகுகளாக நமது மனங்கள் குறித்துக்கொள்கின்றன.

நீங்கள் இங்கு உடல்தன்மையான ஒரு உயிரினமாக இருக்கும் வரை அது உண்மையாக இருக்கிறது. ஆனால், மனிதராய் இருப்பதன் முக்கியத்துவம் மற்றும் தனிச்சிறப்பு என்னவெனில், இந்த உலகில் செயல்படுவதற்கு உடல் சார்ந்த தன்மையை நாம் ஒரு வாகனமாக உபயோகிக்கிறோமா, அல்லது மற்ற எந்த உயிரினங்களையும் போலத்தான் நாமும் இருக்கிறோமா? இப்போதெல்லாம், பூச்சிகள், பறவைகள், மீன் மற்றும் பல்வேறு உயிரினங்களின் அற்புதமான புகைப்படங்கள் இருக்கின்றன. அதனால் மனிதர்களை விட, மற்ற உயிரினங்கள் மிகுந்த அழகுடன் இருக்கின்றன என்று எண்ணத் தொடங்கிவிட்டார்கள்.ஆனால் பிறகு, பல லட்சக்கணக்கான வருடங்கள் எடுத்துக்கொண்டு, உங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்திருப்பதில் பரிணாம வளர்ச்சிக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மற்றும் உணர்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல!

மற்ற உயிரினங்கள் முழுமையான அழகுடன் உள்ளன - அதைப் பற்றிக் கேள்வியே இல்லை. நிச்சயமாக அவை உங்களை விட அதிக வண்ணமயமாக உள்ளன. நீங்கள் வண்ணமயமாகத் தோன்றுவதற்கு, சாயம் பூசிக்கொள்ளவேண்டும். அவைகள் வண்ணங்களுடனேயே வருகின்றன. மேலும் வழக்கமாகவே, அதிகபட்சமான வண்ணங்களைக் கொண்டுள்ளவை ஆண் பறவைகளாக இருக்கின்றன. உடல் என்று வந்துவிட்டால், உயிரை இரண்டு வழிகளில் பார்ப்பதை உங்களால் தவிர்க்க முடியாது - ஆண் - பெண், ஆண்தன்மை - பெண்தன்மை. வாழ்வை அதற்கு அப்பால் நீங்கள் பார்த்தால், அப்போது நீங்கள் ஒரு ஆணா பெண்ணா, அதிக ஆண்தன்மையா அல்லது அதிக பெண்தன்மையா என்பது ஒரு பொருட்டாக இருப்பதில்லை. யோகா என்பது ஒரு உளவியல் சார்ந்த செயல்முறை அல்ல. இது ஏற்கக்கூடிய ஒன்றாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மற்றும் உணர்கிறீர்கள் என்பதை நாம் பொருட்படுத்துவதில்லை. நாம் வாழ்வின் நிதர்சனங்களில் மட்டுமே ஆர்வம் கொண்டுள்ளோம். வாழ்வின் நிதர்சனங்களை நீங்கள் கையாளக் கற்றுக்கொண்டால் மட்டுமே உங்களால் வாழ்வை அறிந்து கொள்ளமுடியும். இல்லையெனில் நீங்கள் உங்களின் மனதில் நடக்கும் நாடகங்களை, உண்மை என்று தவறாகப் புரிந்து கொள்வீர்கள்.

மனிதர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, மற்றும் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் மிக மோசமான துன்பம் என்னவென்றால், வாழ்வை அதன் முழு வீச்சில், அதன் அடிப்படையான அம்சங்களின் அழகை, எல்லாவற்றுக்கும் மேலாக அதன் நுட்பங்களை உணராமல் இறந்து போகின்றனர். ஒரு மயில்தோகையின் வண்ணங்களை நீங்கள் பாராட்டுகிறீர்கள் என்றால் அது உருவாக்கப்படுவதில் இருக்கும் சிக்கலைக் குறித்தும் நீங்கள் ஆராய்ந்தறிய வேண்டும். அங்கே உடற்கூராய்வுக்கும் மேலான, அதற்கே உரித்தான பல விஷயங்கள் உள்ளன. அது அதி நுட்பமானது, மற்றும் அதி அற்புதமானது.

உங்கள் வாழ்க்கை உங்கள் அண்டை வீட்டாரைப் பற்றியதா அல்லது உங்களைப் பற்றியதாக இருக்கிறதா?

வாழ்வின் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ளக்கூடிய பயிற்சிகளை உங்களுக்கு வழங்குவதற்கு நாம் விரும்புகிறோம். இன்றைக்கு, கார்கள் பற்றிய விளம்பரங்களை நீங்கள் பார்த்தால், அவற்றில் பெரும்பாலானவை காரின் இன்ஞின், இயங்குதிறன், கியர் செயல்பாடு அல்லது அதைப் போன்ற எதையும் குறிப்பிடுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த விளம்பரங்கள் அனைத்தும் காரின் வண்ணம், இருக்கை அமைப்பு, ஒலியமைப்பு (ஸ்டீரியோ) மற்றும் மர வேலைப்பாடு குறித்துதான் இருக்கின்றன. பெரும்பாலான மக்களுக்கும் ஒரு சோபாவை வாங்க வேண்டும் என்ற விருப்பம்தான் இருப்பதாகத் தோன்றுகிறது, ஆனால், அவர்கள் பயணிக்க வேண்டியிருப்பதால், ஒரு காரை வாங்குகிறார்கள். அவர்களுக்கு இன்ஞினில் எந்த ஆர்வமும் இல்லை. அவர்களிடம் இன்ஞினைப் பற்றி நீங்கள் கேட்டால், "ஓ! எனக்கு தெரியாது. வண்ணப்பூச்சு நன்றாக உள்ளது," என்பார்கள்.

அவர்கள் வண்ணப்பூச்சை வாங்க விரும்புகிறார்கள். ஏனெனில் அதெல்லாம் அண்டை வீட்டாரின் பொறாமையைப் பற்றியது மட்டும்தானே தவிர, ஒரு நல்ல இயந்திரத்தை ஓட்ட வேண்டும் என்பதல்ல. உங்களுக்கு ஒப்பனையில்தான் ஆர்வம் உள்ளது, மனிதர்கள் மேல் அல்ல என்றால், உங்களுக்கு வாழ்த்துக்கள்! குறைந்தபட்சம் உங்களின் உடலமைப்பிலாவது, அது உங்கள் அண்டை வீட்டாரின் பொறாமை குறித்ததாக இருக்கக்கூடாது. அது உங்கள் உடலமைப்பு முழுமையான திறனோடு செயல்படுவதைப் பற்றி இருக்கவேண்டும். அதனால், அது முழுவீச்சில் செயல்பட்டு, மேன்மேலும் பெரிய சவால்களைக் கையிலெடுக்க விரும்புவதைப்போல் உணர்கிறது. உடலமைப்பு முழுவதுமாக உராய்வுடன் இருந்தால், நீங்கள் செய்யவிரும்புவதெல்லாம், அதற்கு ஓய்வு கொடுப்பது மட்டுமேயாகும்.

நீங்கள் அதை அறியும் முன்னரே, உங்கள் வாழ்வை நீங்கள் அடமானம் வைத்துவிட்டீர்கள்

பெரும்பாலான மனிதர்களுக்கு, அவர்களின் உடலே ஒரு தடையாக உள்ளது. அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் என்பது அர்த்தமில்லை, எனினும் அதுவும் நிகழக்கூடும். ஆனால் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வும் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்வதைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது - உணவு, தூக்கம் மற்றும் பாலியல். பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தினசரி உணவு மற்றும் வசதிகள் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே தங்களின் முழு வாழ்க்கையையும் அடகு வைக்கிறார்கள். இது எல்லா இடங்களிலும் நிகழ்கிறது, ஆனால் அமெரிக்கா அதற்கு ஒரு மிகச்சரியான உதாரணம். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையான வங்கிக்கடன் வைத்திருக்கிறார்கள் - மாணவர் கல்விக் கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன் அல்லது இரண்டாவது ஏரிக்கரை வீட்டுக்கடன். அனைத்தும் சேர்ந்து, அவர்களுக்கு 50 வருடங்களுக்கான அடமானக் கடன் இருக்கிறது. அவர்களது வாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பரிமாணம் வெளிப்பட்டாலும் அவர்கள் அதை நாடிச் செல்லப்போவதில்லை. அவர்கள் செய்வதெல்லாம் வங்கியில் வரிசையில் நிற்பதுதான்.

உங்களுக்கு தெரியுமா, இயேசு இரண்டாவது முறை வருகையில் எங்கு வருவார் என்ற ஒரு சிறு விவாதம் அமெரிக்காவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த முறை, ஜெருசலத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன்னர், "வாருங்கள் என்னைப் பின் தொடருங்கள்," என்று அவர் சொன்ன போது பன்னிரண்டு பேர் மட்டும் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அவர் இப்போது அமெரிக்காவிற்கு வந்து, "வாருங்கள் என்னைப் பின் தொடருங்கள்," என்று கூறினால், ஒருவர் கூட வரமாட்டார்கள். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் திருப்பிச் செலுத்த வேண்டிய அடமானக் கடன் உள்ளது. அவர்களின் வாழ்க்கை அடமானத்தில் உள்ளது.

பொருளாதார ஏற்பாடுகள் நம் வசதிக்காக உருவாக்கப்படுகின்றன, அதனால் நாளை காலை நாம் உணவுக்காக கவலைப்படவேண்டியதில்லை. ஆனால் இப்போது அந்த ஏற்பாடுகள் உங்கள் முழு நேரத்தையும் ஆக்கிரமிக்கின்றன. அதைப்போலவே உங்கள் பாலியல், உங்கள் சௌகரியம் போன்ற விஷயங்களும் உங்கள் முழு வாழ்க்கையையும் ஆக்கிரமிக்கின்றன.

உங்கள் உச்சபட்ச நல்வாழ்விற்கு பஞ்சபூதங்கள் ஏன் மிகவும் முக்கியமாக இருக்கின்றன?

நீங்கள் முழுமையாக வாழ விரும்பினால் நீங்கள் பஞ்சபூதங்களையும் கவனிக்க வேண்டும். பூதசுத்தி என்பது உங்கள் பாதையில் தடை ஏற்படுத்தாத அளவுக்கு, உடலமைப்பை ஆரோக்கியமாக உருவாக்குவதைப் பற்றியது. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினாலும் உங்கள் உடல் அதற்குத் தடையாக இருக்கக்கூடாது - அது ஒரு படிக்கல்லாக இருக்க வேண்டும், தடைக்கல்லாக அல்ல.

பஞ்சபூதங்களின் மீது உங்களுக்கு ஏதோ ஒரு விதமான ஆளுமை அல்லது கட்டுப்பாடு இருந்தால், அப்போது, காலத்தின் மீது ஆளுமை கொண்டு வருவது எப்படி என்று நாம் பார்க்கலாம். காலத்தின் மீது உங்களுக்கு ஆளுமை இருந்தால், பிறப்பு மற்றும் இறப்பு இரண்டுமே உங்களுக்கு ஒன்றாகத்தான் இருக்கும்.

1 of 18
Share
Project
Current Page
Share
Tweet
Pin
Linkedin
Isha Foundation
ஈஷா காட்டுப்பூ - ஏப்ரல் 2021
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18