கண்மூடித்தனமான மதிப்பீடுகள் ஏன் எப்போதும் தவறானவை
இராமாயணத்தில் ஒரு அழகான சம்பவம் நிகழ்ந்தது. சதி செய்யப்பட்ட பிறகு, இராமன் நாட்டைத் துறந்து, கானகத்தில் கடினமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தபோது, அவர் மனைவியை இராவணன் கடத்திச் சென்றான். தன் மனைவி மீது கொண்டிருந்த மிகுதியான அன்பால், மனைவியின் நிலையை எண்ணி மனம் தளர்ந்து, கவலையுற்று இருந்த இராமர் நடந்தே தெற்கை அடைந்து, தமிழ் மக்களோடு சேர்ந்து ஒரு படை திரட்டி, கடல் கடந்து இலங்கை சென்று, போர் தொடுத்தார். போரின் முடிவில் பத்துத் தலை இராவணனைக் கொன்றார்.
போரை வென்ற பின்னர், இராமன் கூறினார், "நான் இராஜ்ஜியத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. இமாலயத்துக்கு சென்று அங்குள்ள அகத்தியர் குகையில் சில காலம் கழிக்க விரும்புகிறேன். ஏனெனில் நான் செய்த மிகப்பெரிய பாவத்துக்கான பிராயச்சித்தம் தேட விரும்புகிறேன். பக்தியுடையவராக, சிவனின் மகத்தான பக்தராக, பிரமிக்கத்தக்க அறிஞராக, மாபெரும் அரசனாக, கொடையுள்ளம் கொண்ட மனிதராகவும் இருந்த ஒருவரை நான் கொன்றுவிட்டேன்." மற்றவர்கள் திகைத்து போயினர். லட்சுமணன் அவரைப்பார்த்து "நீங்கள் எதைப்பற்றிக் கூறுகிறீர்கள்? இராவணன் உங்கள் மனைவியைக் கடத்திச் சென்றான்”, என்று கூறினான். அதற்கு இராமன், " எல்லா வகையான எதிர்மறை குணங்களும் பேராசை, பொறாமை, காமம் போன்றவை அவனது மற்ற ஒன்பது தலைகளில் குடிகொண்டிருந்தன. ஆனால் ஞானம், அறிவு, பணிவு, பக்தி ஆகியவற்றைக் கொண்டிருந்த ஒரு தலை இருந்தது. நான் அந்தத் தலையைக் கொன்றுவிட்டதற்காக வருந்துகிறேன்”, என்று பதில் கூறினார்.
இந்தக் கதை உங்களுக்கு உணர்த்த முயற்சிப்பது என்னவென்றால், உங்கள் அனைவரிடமும் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட தலைகள் உள்ளன. ஒரு நாள் உங்கள் தலை பேராசையில் இருக்கிறது, மற்றொரு நாள் பொறாமையில், மற்றொரு நாள் வெறுப்பில், இன்னுமொரு நாள் அன்பில், அடுத்த நாள் அழகாக இருக்கிறது, அதற்கடுத்த ஏதோ ஒரு நாள் அசிங்கத்தில் மூழ்கி இருக்கிறது. நீங்கள் பொறாமையில் இருக்கும் ஒரு தருணத்தில் மக்கள் உங்களைப் பார்த்தால், "இவர் பொறாமையானவர்," என்று கூறுகிறார்கள். நீங்கள் பேராசையில் இருக்கும் தருணத்தில் அவர்கள் பார்த்தால், "இவர் பேராசையானவர்”, என்று கூறுகிறார்கள். நீங்கள் வெறுப்பில் இருக்கும் தருணத்தில் அவர்கள் பார்த்தால், "இவர் வெறுப்புடையவர்”, என்று கூறுகிறார்கள். நீங்கள் காமஉணர்வில் இருக்கும் தருணத்தில் பார்த்தால், "இவர் காமாந்தகர்”, என்று கூறுகிறார்கள். வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு தலைகள் செயல்படுகின்றன. ஆனால் ஒவ்வொருவருக்கும் அன்பு, அழகு, கொடைத்தன்மை, கருணை குடிகொண்டிருக்கக்கூடிய குறைந்தபட்சம் ஒரு தலையாவது இருக்கிறது. மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால் குணத்தைக் கண்டிப்பதை விடுத்து அந்த மனிதரைக் கண்டனம் செய்கின்றனர். இதை தான் இராமன் உணர்த்த முயற்சிக்கிறார்: "மற்ற ஒன்பது தலைகளைக் கொண்டு அவன் மிக மோசமான செயல்களைச் செய்தான். ஆனால் பிரம்மாண்டமான சாத்தியத்தோடு கூடிய அந்த ஒரு தலையை நான் கண்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அதை நான் வீழ்த்த வேண்டியிருந்தது."