மார்ச் 2021

பிற மொழிகளில் வாசிக்க:

Hindi | English

Subscribe Now

முடிவான இலக்கு

தேசங்களே இல்லாத
உலகம் ஒன்றிருக்குமா?!
எல்லைகள் இல்லாத
உலகம் ஒன்றிருக்குமா?!
பிரிவினைகள் இல்லாத
தேசம் ஒன்றிருக்குமா?!
சச்சரவுகள் இல்லாத
மனிதர்கள் இருப்பார்களா?!
நிலத்தை உடமையாக்க நாம்
ஒருவரையொருவர் கொல்லாதிருக்கும்
ஒரு நாளும் இருக்குமா?
எவ்வகையிலேனும் அதுவே
நம் முடிவான இலக்கு

சத்குரு

உங்கள் இமெயிலில் டிஜிட்டல் காட்டுப்பூ மாத இதழை பெற இப்போதே சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!

பகிருங்கள்

ட்விட்டர்

ஃபேஸ்புக்

Copy Link

© 2021 Isha Foundation. All rights reserved. • isha.sadhguru.org

இந்த இதழில்

சிறப்புக் கட்டுரை

உண்மையில் கடவுள் என்பது யார் அல்லது எது?

‍

ஆன்மீகத் தேடலில் இருக்கும் ஒருவர் சத்குருவிடம் காலங்காலமாக கேட்கப்படும் அதே கேள்வியைக் கேட்டார், ஆனால் ஒரு சிறு திருத்தத்தோடு: "கடவுள் என்றால் என்ன?" பாரம்பரிய நம்பிக்கைகளில் இருந்து விலகி இதற்கு சத்குரு வழங்கிய பதில் உங்களுக்கு ஆச்சரியம் தரக்கூடும். அனைத்திலும் அடிப்படையான இந்த வாழ்வியலின் உள்ளார்ந்த உண்மை குறித்து இன்னும் ஆழமான புதிய பார்வை பெற இந்தப் பகுதியை தொடர்ந்து வாசியுங்கள்.

வாசிக்க

பெண்கள்

கலாச்சாரம்

தமிழகத்தின் கோவில்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் - இனியும் தாமதிக்க நேரமில்லை

இன்றைய பெண்கள்: நாம் எங்கு தவறினோம், அதை எவ்வாறு சரிசெய்வது?

வாசிக்க

வாசிக்க

யோகா & ஞானக் கருத்துகள்

கலாச்சாரம்

யோகி ஆக வேண்டுமா? உடல் வளைந்து கொடுத்தால் மட்டும் போதாது - ஏன்?

ஹோலி - இந்த வண்ணங்களும் உற்சாகமும் உண்மையில் எதைக் குறிக்கிறது?

வாசிக்க

வாசிக்க

லீலா

ஆரோக்கியம்

மருத்துவமனையை சார்ந்திராமல் ஆரோக்கிய வாழ்வை நோக்கி...

விளையாட்டுத்தனம், தீவிரம்... கிருஷ்ணன் சென்ற பாதை!

வாசிக்க

வாசிக்க

தேசம்

தெய்வீகத்தின் பாதையில்

சுவாமி விபோதா

இந்தியா போன்ற ஒரு தேசத்திற்கு வலுவான, போதுமான எண்ணிக்கையில் படைபலம் ஏன் தேவை

‍

வாசிக்க

வாசிக்க

நடப்புகள்

பகிர்வுகள்

பகிர்வுகள்

கவிதைகள்

பகிர்வுகள்

நடப்புகள்

சத்குருவிடம் இருந்து புதிய முறையில் தீட்சை பெறுவதற்கு பெருந்தொற்று எவ்வாறு காரணமாக இருந்தது

'நீருக்கு வெளியே தாவும் மீன் - ஏன்?' மற்றும் பல குதூகலமான கவிதைகள் குழந்தைகளிடம் இருந்து

தேவியின் மர்மமான வழிகள் - முரட்டு 'புல்டோசர்'களையும் அவள் எப்படி மென்மையாக்குகிறாள்

ஹடயோகா ஆசிரியர் பயிற்சி மட்டுமா இது? - முழு வாழ்க்கைக்குமான ஒரு பயிற்சி!

வாசிக்க

வாசிக்க

வாசிக்க

வாசிக்க

பகிர்வுகள்

ஈஷா சமையல்

நடப்புகள்

எல்லா நிலைகளிலும் குணம் பெற்ற ஒரு அற்புதம்

சத்குருவை தொடருங்கள்


பீட்ரூட் வாழைப்பழ ஸ்மூதி மற்றும் பாதாம் லட்டு

வாசிக்க

வாசிக்க

வாசிக்க

உண்மையில் கடவுள் என்பது யார் அல்லது எது?

ஆன்மீகத் தேடலில் இருக்கும் ஒருவர் சத்குருவிடம் காலங்காலமாக கேட்கப்படும் அதே கேள்வியைக் கேட்டார், ஆனால் ஒரு சிறு திருத்தத்தோடு: "கடவுள் என்றால் என்ன?" பாரம்பரிய நம்பிக்கைகளில் இருந்து விலகி இதற்கு சத்குரு வழங்கிய பதில் உங்களுக்கு ஆச்சரியம் தரக்கூடும். அனைத்திலும் அடிப்படையான இந்த வாழ்வியலின் உள்ளார்ந்த உண்மை குறித்து இன்னும் ஆழமான புதிய பார்வை பெற இந்தப் பகுதியை தொடர்ந்து வாசியுங்கள்.

கேள்வியாளர்: கடவுள் என்றால் என்ன? அதை நாம் எவ்வாறு காண்பது? அதை நாம் எவ்வாறு அடைய முடியும்?

பாலினம் இல்லையெனில் ஒரு பிரச்சனை குறைந்தது

சத்குரு: நீங்கள் கேள்வி கேட்கும்போதே கடவுளை 'அது' என்று முடிவு செய்துவிட்டீர்கள். அப்படியானால் 'அது' ஆணுமல்ல பெண்ணுமல்ல என்று நீங்கள் நினைக்கிறீர்கள். தங்கள் மதங்களின் கோட்பாடுகளை பிடிவாதமாக நம்பும் எவரும் நீங்கள் கடவுளை 'அது' என்று குறிப்பிடுவதால் புண்படக்கூடும். இதனால் உங்களுக்கு உண்மையில் சிக்கல்கள் ஏற்படக்கூடும், ஆனால் பாலினத்தை மட்டும் விலக்கியதால், நான் விடுவிக்க வேண்டிய பல சிக்கல்களை நீங்களே விடுவித்து விட்டீர்கள்.

இந்த 'கடவுள் பேச்சு' மனிதரின் மனதில் முதலில் எவ்வாறு எழுந்தது? இந்தப் புவியில் செய்வதற்கு பல விஷயங்கள் உள்ளன. ஆனால் மனிதர்கள் தொடர்ந்து கடவுள் மற்றும் சொர்க்கம் குறித்து பேசியபடியே இருக்கிறார்கள். அடிப்படையில் கடவுள் பற்றிய இந்த கேள்வி வருவதற்கான காரணம், உங்களைச் சுற்றி நடந்திருக்கும் படைத்தல் செயலைப் பார்த்தால், எல்லாமே மிகச் சிக்கலானதாகவும், அதேசமயம் மிக அற்புதமான ஒன்றாகவும் இருக்கிறது. எனவே இயல்பாகவே, இதையெல்லாம் படைத்தது யாராக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. இது வெளியே கேட்கப்படாத அல்லது வார்த்தைகளால் விவரிக்கப்படாத கேள்வியாக இருக்கலாம், ஆனால் நீங்கள் பிறந்து சுற்றியுள்ள அனைத்தையும் பார்த்த அந்த தருணத்தில் இருந்தே இந்தக் கேள்வி உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து படைப்போடு தொடர்பில் இருந்துகொண்டே இருக்கின்றீர்கள் - நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, அதை மதிக்கின்றீர்களோ இல்லையோ, அதன் அழகை நீங்கள் ரசிக்கின்றீர்களோ இல்லையோ, ஆனால் அதன் மகத்துவத்தை உங்களால் புறக்கணிக்க முடியாது. "இவை எல்லாவற்றையும் படைத்தது யார்?" - வெளியே கேட்கப்படாத இந்த கேள்வி ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயல்பாகவே இருக்கிறது.

அறிவியல் ஏன் இந்தக் கேள்வியை ஆழமாக்குகிறது

இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு இவையெல்லாம் சாத்தியமாகும் என்று ஒருபோதும் நாமே நம்பாத பல விஷயங்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மூலமாக நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களுக்கு பெரும் தெளிவை அளித்திருக்க வேண்டும், ஆனால் அதற்கு எதிர்மறையாகத்தான் நிகழ்கிறது. உண்மையில், வாழ்க்கையைப் பற்றி உத்திரவாதமாக மக்கள் நம்பிய எல்லா விஷயங்களும் விலகி போய்க்கொண்டு இருக்கின்றன. அறிவியல் முன்னேற முன்னேற, உண்மையில் உங்களுக்கு ஏதும் தெரியவில்லை என்று அது மெய்ப்பித்துக்கொண்டே இருக்கிறது.

"நான் உட்பட, இங்குள்ள அனைத்தையும் எது படைத்திருக்கும்?" இந்த ஒரு கேள்வி எப்போதும் இருக்கிறது, உங்கள் மனதில் மட்டுமல்ல உங்கள் உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் இருக்கிறது. அதை நீங்கள் விழிப்புணர்வோடு வெளிப்படுத்துகிறீர்களோ இல்லையோ, அது உங்களை ஒரு தருணம் கூட ஓய்வெடுக்க விடாது. தற்போதைய உங்கள் புரிதலில், பார்வையில் இருக்கும் எல்லைகளை கடந்த ஏதோ ஒன்றை தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்க அது உங்களை தள்ளிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் நாடுகளை கைப்பற்ற முயற்சிக்கிறீர்களோ அல்லது இன்னும் கொஞ்சம் செல்வம் சேர்க்க நினைக்கிறீர்களோ அல்லது உங்களுக்கென்று ஒரு வீட்டை கட்ட முயல்கிறீர்களோ - எப்படியாவது உங்கள் வாழ்க்கையின் எல்லையை விரிவுபடுத்திவிட வேண்டும் என்ற ஏக்கம் உங்களுக்கு இருக்கிறது.

"இவை எல்லாவற்றையும் படைத்தது யார்?" - வெளியே கேட்கப்படாத இந்த கேள்வி ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயல்பாகவே இருக்கிறது.

கடவுள் பற்றிய தேடல் உண்மையில் எங்கிருந்து வருகிறது

இதற்குப் பின்னால் இன்னும் ஆழமான ஒரு கேள்வி உள்ளது. உங்களுக்குள் இருக்கும் உயிர் தொடர்ந்து இதற்கான தீர்வை அறிய முயன்று கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றால், "என்னுடைய இருப்பின் இயல்பு என்ன?"; அல்லது வழக்கமான ஆன்மீக பேச்சுவழக்கில் கூறுவதென்றால், "நான் யார்?" மக்கள் இதே கேள்வியை எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் யார் என்பதை அறிய வேறு எவரோ ஒருவரிடம் சென்று கேட்பது உங்கள் அறிவாற்றலுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா? ஆனால் ஆன்மீகம் என்ற பெயரில் அனைவரும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உங்களின் மூலத்தை வெளியே தேடினால் எவராலும் உங்களுக்கு உதவ முடியாது. உங்களுக்கு நல்ல கதைகளை வேண்டுமென்றால் நம்மால் கூறமுடியும், ஆனால் அந்த கதைகள் ஒருபோதும் உங்களை உண்மைக்கு ஒரு துளிகூட நெருக்கமாக கொண்டு செல்லாது. நீங்கள் உங்களையே பொழுதுபோக்கில் ஈடுபடுத்திக் கொள்ளலாம். நீங்கள் வாசித்த கதைகளைப் பற்றி பெரும் அதிகாரத்தோடு நீங்கள் பேசிக்கொள்ளலாம். இந்த உலகில் வாழ்க்கை நடத்துவதற்கான பெரும் தொழில்களில் அதுவும் ஒன்று. மக்கள் புத்தகத்தில் எழுதியுள்ள ஏதோ ஒன்றை திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அது எந்தவிதத்திலும் நம்மை உண்மைக்கு நெருக்கமாக கொண்டு செல்லவில்லை என்பதை புரிந்துகொள்ளும் அறிவை நாம் ஏன் வளர்த்துக்கொள்ளக் கூடாது? இதை பார்ப்பதற்கு எந்த ஞானோதயமும் அடையத் தேவையில்லை, அதற்கு சிறிதளவு நம் அறிவை பயன்படுத்தினாலே போதும். ஆனால் அதுதான் பிரச்சனையே. இந்த உலகம் முழுமையும் நல்ல மக்களால் நிறைந்து இருக்கிறது, எல்லாவற்றையும் தீர்க்கமாக கவனித்து, சிந்தித்து செயல்படும் மக்களால் அல்ல.

அறிந்துகொள்வதற்கான முதல் படி

உண்மையாகவே பதிலை அறிய நீங்கள் விரும்பினால், நீங்கள் எடுக்க வேண்டிய முதலும் முக்கியமானதுமான படி "எனக்கு தெரியாது" என்பதை தெளிவாக உணர்ந்துகொள்வதுதான். அறியாமையின் வலி உங்களை கிழித்தெறிந்தால், அறிதல் தூரமில்லை. நான் உங்களுக்கு ஒரு நீண்ட கதையை சொல்லமுடியும் - அதாவது கடவுள் ஒரு தேங்காய், அவர் எவ்வாறு அங்கே மேலே முழுதும் இனிமையானவராக இருக்கிறார், உள்ளே மிருதுவாக, வெளியே கடினமாக என்று பல்வேறு விஷயங்களை என்னால் கூறமுடியும். அது அபத்தமாக தோன்றக்கூடும், ஆனால் நீங்கள் விரும்பினால் என்னால் அதிலிருந்து நல்ல கதைகளை உருவாக்க முடியும். நீங்கள் என்னை நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, அது உங்களை உண்மைக்கு நெருக்கமாக எந்த விதத்திலும் இட்டுச் செல்லாது. கடவுள் எது என்பதைப் பற்றி நான் உங்களுக்கு ஒரு அற்புதமான கதையை கூறினால், அந்தக் கதை எவ்வளவு அழகாக இருந்தாலும் அது உங்களை உண்மைக்கு நெருக்கமாக ஒரு அங்குலம் கூட இட்டுச் செல்லாது. எனவே நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? பொழுதுபோக்கை எதிர்பார்க்கிறீர்களா அல்லது உண்மையில் நீங்கள் தேடலில் உள்ளீர்களா?

உங்களை நீங்கள் அறிந்துகொள்வதற்கு நீங்கள் எடுக்க வேண்டிய மிக அடிப்படையான படி என்னவெனில், உங்களை நீங்களே 100% "எனக்கு தெரியாது" என மாற்றிக் கொள்வதுதான். மக்கள் "எனக்கு தெரியாது" என்பதன் மகத்துவத்தை உணரவில்லை. அதனால்தான் அவர்கள், "எனக்கு தெரியாது" என்பதை எல்லா விதமான முட்டாள்தனமான நம்பிக்கை முறைகளைக் கொண்டு சிதைக்கிறார்கள். உங்களில் "எனக்கு தெரியாது" என்பதை நீங்கள் ஆழமாக்கினால், அறிதல் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில் நீங்கள் எதை அறியவேண்டும் என்று தேடுகிறீர்களோ அது எங்கோ ஒரு தென்னை மரத்தின் மேலே உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. கடவுள் பற்றிய கருத்து உங்கள் மனதில் நுழைந்ததற்கான ஒரே காரணம், படைப்பின் மூலம் எது என்பதைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல்தான். படைப்பு என்று நாம் கூறும்போது நிச்சயமாக பொருள் சார்ந்த விஷயங்களைப் பற்றித்தான் பேசுகிறோம் - உதாரணத்திற்கு, மரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள், கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் என எல்லாமும்தான். எனவே இவற்றில் உங்களுக்கு மிக நெருக்கமாக நிகழ்ந்துள்ள படைப்பு எது? மற்ற அனைத்தையும் விட, நீங்கள்தானே உங்களுக்கு மிக நெருக்கமானவர்!

கடவுளை எங்கே கண்டடைவது?

நீங்கள் பிறந்தபோது, மிகச் சிறிய உருவமாக இருந்தீர்கள். தற்போது நீங்கள் இவ்வளவு உயரமாகவும் பெரிதாகவும் வளர்ந்துவிட்டீர்கள். உங்களை நீங்களே விரிவுபடுத்திக்கொள்ள, சற்றே வளர்வதற்கும் பெரிதாவதற்கும் வாரவாரம் எங்காவது சென்று கொண்டு இருந்தீர்களா? அது எவ்வாறு நிகழ்ந்தது? நீங்கள் வேண்டுமானால் வெளியிலிருந்து மூலப்பொருட்களை கொடுத்திருக்க முடியும், ஆனால் படைத்தலுக்கு எது மூலமாக இருக்கிறதோ அது உங்களுக்குள் இருந்துதான் செயல்படுகிறது. படைத்தவர் அல்லது கடவுள் என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்களோ அது உங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடவுள் ஒரு தென்னை மரத்தில் உட்கார்ந்து இருந்தாலோ அல்லது சொர்க்கத்தில் இருந்தாலோ நான் பொருட்படுத்தியிருக்க மாட்டேன். ஆனால் படைப்பிற்கு மூலமாக இருப்பது உங்களுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறது, அதை நீங்கள் அறியாமல் போனால், அதுதானே மிகப் பெரிய சோகம்.

எம்முடைய முழு முயற்சியும், எவ்வாறேனும் மக்கள் இந்த சோகத்தை தங்களுக்கு ஏற்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக்கொள்வது தான்; அதாவது படைப்பின் மூலம் அவர்களுக்குள் துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, அதை கவனிக்காமல் போய்விடும் சோகம் அவர்களுக்கு நிகழாமல் பார்த்துக் கொள்வதுதான். என்னால் அப்படி ஒரு சோகத்தோடு வாழமுடியாது. நீங்கள் அறியவேண்டும் என்று விரும்பினால், துண்டுதுண்டாக கூறிட்டு பிரித்து பார்ப்பதன் மூலம் அதை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது. அதற்கான ஒரே வழி, உங்களுக்குள் உள்நோக்கி திரும்புவதுதான். ஏனெனில் உங்கள் அனுபவத்திற்கு எது மூலமாக இருக்கிறதோ, அது உங்களுக்குள் இருக்கிறது. உங்கள் அனுபவத்தின் மூலமானது உங்களுக்குள் இருக்கும்போது நீங்கள் வெளியே எதை செய்ய முயற்சித்தாலும் அது நீங்கள் உங்கள் காது வழியாக உணவு உண்பதைப் போன்றது. அது எவ்வளவு கடினமானது என்று உங்களுக்கே தெரியும். ஆனால் அதை சரியான வழியில் செய்தால், மிக சுலபமாக அதை நீங்கள் செய்யமுடியும். ஆன்மீகமும் அவ்வளவு கடினமானதுதான். நீங்கள் அதை வெளியே எங்கேயோ செய்து பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் அது மிகக் கடினமாக தெரிகிறது. நீங்கள் உள்நோக்கி திரும்பினால் அது மிக எளிமையான, இயல்பான ஒன்று. உயிர் அவ்விதத்தில்தான் உள்ளது.


அறியாமையின் வலி உங்களை கிழித்தெறிந்தால், அறிதல் தூரமில்லை.

யோகா & ஞானக் கருத்துகள்

யோகி ஆக வேண்டுமா? உடல் வளைந்து கொடுத்தால் மட்டும் போதாது - ஏன்?

மிக நன்றாக வளைந்து கொடுக்கக்கூடியது என்று ஏதேனும் உள்ளதா? ஈஷா ஹடயோகா ஆசிரியராக பயிற்சி பெற சமீபத்தில் இணைந்தவர்களுடன் உரையாடிய சத்குரு, யோகாவில் நெகிழ்வுத் தன்மையின் பங்கு பற்றி பேசினார். மேலும் இது ஆதியோகியோடு எப்படி ஆச்சரியமான வகையில் தொடர்புடையதாக இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தினார்.

சத்குரு: உலகில் பெரும்பாலான மக்களுக்கு "யோகா" என்ற வார்த்தைக்கு அர்த்தம் உடலை வளைப்பது, முறுக்குவது என்பதாகத்தான் இருக்கிறது. யோகா என்பது உடலை வளைப்பதோ, முறுக்குவதோ அல்லது தலைகீழாக நிற்பதோ அல்ல. மனித எலும்புக்கூடு அமைப்பு எவ்வாறு உள்ளதெனில் ஒவ்வொரு தனிப்பட்ட எலும்பும் தசைநாண்கள், தசைநார்கள் மற்றும் தசைக்கட்டு ஆகியவற்றால் ஒன்றாக பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த தசைநார்களை நாம் எதற்காக இழுத்து நீட்டி விரிவடையச் செய்கிறோம்? ஏன் வெறுமனே தசைகளை வளர்த்துக்கொள்ளக் கூடாது? உங்கள் தசைகள் அளவுக்கதிகமாக பெருத்திருந்தால், நீங்கள் முடங்கிப் போகக்கூடும். இந்த முடக்கம் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் நிகழும். அதே சமயம், ஜிம்னாஸ்டிக்ஸ், ஏரோபிக்ஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதாலும் நீங்கள் யோகியாக மாறமுடியாது. நீங்கள் செய்வதெல்லாம் உங்கள் விருப்பப்படி உங்கள் கைகளும் கால்களும் செயல்புரியும் வகையில் உங்கள் உடலின் குறிப்பிட்ட தசைநார்களை நீட்டி விரிவடையச் செய்வது மட்டுமே.

யோகா என்பது உங்கள் கைகால்களை நீங்கள் விரும்பும் இடத்துக்கு கொண்டு செல்ல முடிவதைப் பற்றியல்ல; நீங்கள் விரும்பும் இடத்துக்கு உங்களை எடுத்துச் செல்வதைப் பற்றியது அது. இரண்டுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. யோகா அதைப் பற்றியது இல்லையெனில், எதற்காக நாம் உடலை வளைக்கவும் முறுக்கவும் வேண்டியிருக்கிறது? ஏனெனில் என் அனுபவத்தில் ஒரே ஒரு யோகிதான் இருக்கிறார் - ஆதியோகி. அந்த யோகி உள்ளே இறங்கி வருவற்கான அழைப்பிதழாக உங்கள் உடலை நீங்கள் மாற்ற வேண்டும். உங்கள் உடலை வளைப்பதாலோ முறுக்குவதாலோ நீங்கள் யோகியாக முடியாது. ஆனால் அவர் நிராகரிக்க முடியாத ஒரு அழைப்பிதழாக உங்கள் உடலை நீங்கள் தயார் செய்ய முடியும். இது நிகழ்வதற்கு எல்லாவற்றையும் உள்ளடக்கிய விரிவான ஒரு செயல்முறை தேவைப்படுகிறது. நீங்கள் யார் என்பது பற்றிய அனைத்து அம்சங்களையும் இதில் உள்ளடக்க வேண்டும்.

யோகா என்பது உங்கள் கை கால்களை நீங்கள் விரும்பும் இடத்துக்கு கொண்டு செல்ல முடிவதைப் பற்றியல்ல; நீங்கள் விரும்பும் இடத்துக்கு உங்களை எடுத்துச் செல்வதைப் பற்றியது அது.

உங்கள் தசைகளையும் தசைநார்களையும் நீளச்செய்வது அல்லது உங்கள் எலும்புகளை முறுக்குவது மட்டுமே இதற்கு உதவாது. ஒரு அறுவைசிகிச்சை மூலமாகவோ வேறு ஏதோ வகையிலோ உடலளவில் மாறுதல்களை ஏற்படுத்தி அதை செய்துவிட முடியும், ஆனால் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனெனில் நீங்கள் வெறும் உடல் சார்ந்த வெளிப்பாடு மட்டுமே அல்ல. உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தி ஆகிய செயல்முறைகளின் கலவை நீங்கள். இவை அனைத்தும் நாம் விழிப்புணர்வு என்று அழைக்கும் ஒன்றினால் ஆளப்படுகின்றன. நீங்கள் ஒரு அழைப்பிதழாக மாற வேண்டுமெனில் எல்லா நிலைகளிலும் உகந்தவராக உங்களையே நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். உயிராகிய நீங்கள் இசைவோடு இருக்க வேண்டும். வெறுமனே உடலை வளைப்பதால், முறுக்குவதால், திருப்புவதால், ஜிம்னாஸ்டிக்ஸ் செய்வதால், உங்கள் உடலை விரிவுபடுத்துவதால் பிரதிபலனாக சில நன்மைகளை அது வழங்கக்கூடும்; அல்லது சில வேளைகளில் அது வலியச் சென்று சேதத்தை ஏற்படுத்திக் கொண்டது போலவும் ஆகக்கூடும்.

அவ்வாறு தங்கள் உடலை பிழிந்தெடுக்கும் பல விளையாட்டு வீரர்கள் இளமையாக இருக்கும்போது மிக அருமையாக, நல்ல உடல் திறனோடு இருப்பார்கள். ஆனால் அவர்கள் நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயதை எட்டும் போது சீர்குலைந்து போயிருப்பார்கள். முடிவில்லாமல் பல அறுவை சிகிச்சைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பல விளையாட்டு வீரர்கள் விரைவாக மரணம் எய்திவிடுகிறார்கள். மனித அமைப்புக்கு உகந்ததல்லாத வகையில் தங்கள் உடலின் திறனை இழுத்துச் செல்வதே இதற்கான காரணமாக இருக்கிறது. அவர்கள் தங்கப்பதக்கத்தை வெல்லக்கூடும். ஆனால் உண்மையில் அதனால் எந்தப் பயனும் இல்லை. நான் பல சாம்பியன்களை சந்தித்திருக்கிறேன். அவர்களிடம் காணப்படும் பாதுகாப்பற்ற நிலையும், அவர்கள் தினசரி சந்திக்கும் போராட்டங்களையும் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் - ஏனெனில் குறைந்தபட்சம் அவர்கள் விளையாடிக் கொண்டாவது இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் பார்த்தால் வெகு சிலரே அவர்களின் வெற்றியை அனுபவித்து மகிழ்வோடு நல்லமுறையில் வாழ்வதை காணமுடியும்; மற்றவர்கள் அனைவரும் அழுத்தத்தின் எல்லையில் இருக்கிறார்கள்.

இதற்கான காரணம், உடலை வளர்ப்பதால் மட்டுமே அல்லது ஒரு திறனை வளர்ப்பதால் மட்டுமே வாழ்க்கை உகந்ததாக மாறிவிடாது. எல்லா அம்சங்களையும் நல்லமுறையில் கையாள்வது மிகவும் அவசியம். நீங்கள் ஒரு யோகியாக மாற விரும்பினால் வெறுமனே உங்கள் மூட்டுகளை வளைப்பது மட்டும் போதாது. சுண்ணாம்பு சத்தால் பலப்பட்டிருக்கும் உங்கள் எலும்புக்கூடமைப்பை உடைக்க நாம் விரும்பவில்லை. ஆனால் உங்கள் எலும்புகளை விட கடுமையான திண்மையோடு உங்களுக்குள் இருக்கும் அம்சங்களையே நாம் வளைக்க வேண்டும். உங்களைப் பற்றிய அத்தகைய அம்சங்கள் நெகிழ்வாக மாறினால், பின்னர் நீங்கள் ஒரு அழைப்பிதழாக மாறிவிடுவீர்கள். அதற்காக நீங்கள் கோவிலுக்கு சென்று அமர வேண்டியதில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் இந்த தன்மை எப்போதும் இருக்கும். இதுவே யோகியாக மாறுவதாகும்.

இன்றைய பெண்கள்:

நாம் எங்கு தவறினோம், அதை எவ்வாறு சரிசெய்வது?

முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று பெண்களுக்கு அதிக சுதந்திரம் உள்ளது போல் தெரிகிறது, ஆனால் உண்மையில் அவர்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள்? திரைப்படத்துறை, சமூக வலைத்தளங்கள் மற்றும் தினசரி வாழ்வில் பெண்கள் தங்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதை உண்மையில் எது தீர்மானிக்கிறது? ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் மேம்பட்டதாக மாறச்செய்யும் சக்திகொண்ட, நமக்குள் வளர்த்தெடுக்க வேண்டிய அந்த ஒரு பெண்மை பண்பு எது?

சத்குரு இவற்றைப் பற்றியும் இதனோடு தொடர்புள்ள மற்ற விஷயங்களைப் பற்றியும் ஜோர்டானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி நூர் பின்த் அசீம் அவர்களோடு உரையாடினார். அக்டோபர் 28, 2020 அன்று நடந்த சர்வதேச தொழில் முனையும் மகளிருக்கான அறக்கட்டளையின் (International Women’s Entrepreneurial Challenge Foundation) விருது வழங்கும் விழாவின் ஒரு பகுதியாக ஆன்லைனில் இந்த உரையாடல் நிகழ்ந்தது.

இளவரசி நூர் பின்த் அசீம்: என் பதின்மூன்று வயது மகள் உங்களிடம் என்னை ஒரு கேள்வி கேட்க சொல்லியிருக்கிறார், சத்குரு. ஆண்-பெண் சம உரிமை பற்றி பேசப்படுபவை மற்றும் சமூக வலைத்தளங்கள் அவருக்கு கொடுத்த தாக்கங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்ட அவரது கேள்வி இது, "இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு அறிவுரை கூறவேண்டும் என்றால் அது என்னவாக இருக்கும் என்று அறிய நான் ஆவலாக உள்ளேன்"

அவள் என்ன உடுத்துகிறாள் என்பது உண்மையில் அவளது தேர்வா?

சத்குரு: நான் இவ்வாறு மிக அடிநிலையான வார்த்தைகளை உபயோகிப்பதற்கு என்னை மன்னிக்கவும்: ஒருவரின் கால்சட்டைக்குள் என்ன இருக்கிறது என்பது குளியலறை மற்றும் படுக்கையறை போன்ற வெகு சில இடங்களுக்கு மட்டுமே சம்மந்தப்பட்டது. மற்ற இடங்களிலெல்லாம் உங்கள் பாலினம் ஒரு பொருட்டாகவே இருக்கக்கூடாது. நாம் உலகை இந்த ஒரு நிலைக்கு கொண்டுவர வேண்டும் - நீங்கள் என்னவிதமான உடலை கொண்டிருக்கிறீர்கள் என்பதை வேறு எவரும் பொருட்படுத்தும் அவசியமே இருக்கக்கூடாது. உடல்ரீதியான உறவுகளில் மட்டுமே அது பொருட்படுத்தப்பட வேண்டும். மற்ற நேரங்களில், அதைப் பற்றி வேறு எவரும் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. பெண்களும் இவ்வாறுதான் சிந்திக்க வேண்டும். ஆனால் தற்போது, ஒரு ஆணின் கனவுப்படியே நடப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் நான் ஒரு இசைக்கலைஞரோடு உரையாட வேண்டியிருந்தது. அதனால் அவர்களின் காணொளிகள் சிலவற்றைப் பார்த்தேன் - அவர்கள் என்ன வகையான இசையை உருவாக்குகிறார்கள் என்று அறிந்துகொள்வதற்காக. அதில் பெண்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதத்தைக் கண்டு எனக்கு மிக வேதனையாக இருந்தது. ஒரு இசைக்கலைஞர் மேடையில் உள்ளாடையோடு இருந்தார். "இசைக்கலைஞர்கள் எதற்காக உள்ளாடைகளோடு இருக்கிறார்கள்?" என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "சத்குரு, இதுதான் இப்போது விற்கிறது" என பதிலுரைத்தார்கள். இது பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பயங்கரமான அநீதி, ஆனால் அதற்கு பெண்களும் துணை போகிறார்கள்.

பெண்களின் தோற்றம் மற்றும் உடலமைப்பை எது தீர்மானிக்கிறது?

அவள் என்ன விரும்புகிறாளோ அதை அணிந்துகொள்ளலாம்; அது பற்றி நான் பேச ஏதுமில்லை. ஆனால், அவள் இதை அணிவதற்கான காரணம், இது மட்டுமே விற்பனையாகிறது என்பதற்காக என்றால், சமூகத்தில் ஏதோ தவறாக உள்ளது. அவள் என்ன உடை உடுத்த வேண்டும் என்று விரும்புகிறாளோ அது அவள் விருப்பம். ஆனால் வேறு எவரோ அவள் விருப்பத்தை தீர்மானிக்கிறார்கள் என்றால், அப்படிப்பட்டது ஒரு தெரிவே அல்ல. இளம் சிறுவர்களும் சிறுமியரும் இதை புரிந்துகொள்வது மிக அவசியம் - அவர்களின் உடல் அவர்களைப் பொருத்தது மட்டுமே. உங்களின் புத்திசாலித்தனம், திறமை மற்றும் அறிவினால் மக்கள் உங்களோடு ஈடுபட வேண்டும். தெருவில் இருக்கும் ஒவ்வொருவரும் உங்கள் உடலினால் உங்களோடு ஈடுபாடுகொள்ளத் தேவையில்லை.

ஒருவர் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது பற்றி முடிவு கூற நான் முயற்சிக்கவில்லை. ஒரு பெண்ணின் ஆடை எப்படியிருக்க வேண்டும் என்பதை ஒரு ஆண் தீர்மானிக்கக்கூடாது. தற்போதைய நிலையைப் பார்த்தால், ஆணின் வக்கிரம் ஒரு பெண்ணின் ஆடை நெறியை தீர்மானிப்பது போல் தெரிகிறது. பெண்கள் சுதந்திரம் அடைய வேண்டுமென்றால் இத்தகைய ஒரு நிலை மாறவேண்டும். ஆணின் தசை வலிமையில் இருந்து மூளையின் செயல்படும் திறனை நோக்கி இப்போது கவனம் திரும்பிவிட்டது. அதைப்போலவே, பெண்ணின் உடலில் இருந்து அவள் மூளையின் செயல்பாட்டுக்கு கவனத்தை திருப்ப வேண்டும். தற்போது பெண்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் விதம் உண்மையில் பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டவில்லை - அது பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒரு ஆண் எதிர்பார்க்கிறானோ அவ்வாறு உள்ளது. பெண்களும் இதுதான் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது போல என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

உலகில் பெண்மையின் அழகை முற்றிலுமாக அழிக்க இது உறுதியான ஒரு வழி. தற்போது மக்கள் ஆண் தன்மையே வெற்றியின் அடையாளம் என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், நீங்கள் ஒரு ஆணை போல இருக்க வேண்டும்; நீங்கள் உங்கள் தசைகளை முறுக்கி, பலத்தை காட்ட வேண்டும். இந்த நிலை மாற வேண்டும். ஒருவகையில், இந்த உலகில் உள்ள அனைத்தையும் பொருளாதார இயந்திரம் இயக்குவதால் வந்த விளைவு இது. பொருளாதாரம் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும் போது, அனைத்தும் சந்தை போல ஆகிவிடும். ஒரு சந்தையில், நீங்கள் குறைவாக கொடுத்து நிறைய எடுத்தால் உங்களை புத்திசாலி என்பார்கள். நீங்கள் நிறைய கொடுத்து குறைவாக எடுத்தால் உங்களை முட்டாள் என்று தீர்மானிப்பார்கள்.

ஒட்டுமொத்த சமூகத்திலும், அனைவரும் தங்களின் மிகச்சிறந்த பங்களிப்பை மற்ற அனைவருக்காகவும் செய்திட முயற்சிக்க வேண்டும்.

சமூகத்தை மாற்றவல்ல பெண்மையின் பண்பு

பலதரப்பட்ட வழிகளில் பெண்கள் செயல்புரிவதை நான் பார்த்திருக்கிறேன் - என்னுடைய தாயார், சகோதரிகள், அத்தைகள் மற்றும் பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும்போது, தங்களை முழுமையாக அர்ப்பணிப்பார்கள். ஏனெனில் தாங்கள் மிகவும் நேசிக்கும் ஒன்றை அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் யாரை முக்கியம் என்று கருதுகிறார்களோ, அவர்களுக்காக செயல் செய்கிறார்கள். எனவே பதிலுக்கு அவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்பது அவர்களுக்கு அவ்வளவு முக்கியமானதாக இல்லை. இதுதான் அவர்கள் வாழ்க்கையை மிக அழகாக மாற்றுகிறது. இது வீட்டில் மட்டும் நிகழக்கூடாது. இந்த சமுதாயம் முழுவதிலும், ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவருக்காகவும் தங்களால் இயன்ற சிறந்த விஷயங்களை செய்ய முயற்சிக்க வேண்டும். இதுவே பெண்மையின் இயல்பு.

தற்போது, நீங்கள் எங்கே சென்றாலும், குறைவாகக் கொடுத்து அதிகமாக எடுப்பது என்ற கருத்து நிலவுகிறது. அது சந்தையாக இருந்தாலும் சரி, கல்யாணமாக இருந்தாலும் சரி இதேதான் நடக்கிறது, பிறகு பார்த்தால் ஒருவர் கூட மகிழ்ச்சியாக இல்லை. எவரும் தங்கள் தற்காப்பு அரணை தளர்த்தி விட முடியாது. ஒவ்வொருவரும், எல்லா நேரங்களிலும், ஒருவருக்கு எதிராக ஒருவர் ஒரு அரணை உருவாக்கிக் கொள்கிறார்கள் - காரணம், எல்லா இடமும் சந்தைகூடம்தான். நீங்கள் எங்கே சென்றாலும், அங்கே எப்படி லாபம் அடைய முடியும் என்றுதான் நீங்கள் பார்க்கிறீர்கள். மனிதர்கள் நலமோடு வாழ இது வழி அல்ல.

மிக அழகான விஷயம் - சத்குருவைப் பொருத்தவரையில்

நான் தன்னார்வலர்களுக்கு மத்தியில் வாழ்கிறேன் - எந்த சூழலிலும், எல்லா நேரங்களிலும் தங்களிடமிருந்து சிறந்ததை கொடுக்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். மக்கள் என்னிடம், "சத்குரு, உங்கள் வாழ்வில் இருக்கும் எல்லா விஷயங்களையும் கருத்தில் கொண்டால், உங்களுக்கு மிகவும் முக்கியமானது எது?" என்று கேட்பார்கள். அதற்கு எனது பதில் இதுதான், "என்னை சுற்றி நான் சேர்த்துள்ள மக்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை கொடுக்க சித்தமாக இருப்பவர்கள் அவர்கள். இதுவே என் வாழ்வின் மிக அழகான விஷயம்," ஏனெனில் இதுதான் இந்த உலகில் மிக முக்கியமான ஒன்று.

எல்லா இடங்களும் ஒரு சந்தையாகவே இருந்தால், யாரோ ஒருவரிடமிருந்து அனுகூலம் பெறவே நாம் எப்போதும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் அதற்கு அர்த்தம். உங்கள் மனம் ஒரு சந்தை ஆகிவிட்டால், அங்கு விழிப்புணர்வு இருக்காது, வாழ்வில் எந்தவிதமான மிருதுவான அம்சங்களும் இருக்காது, அதோடு உலகில் பெண் தன்மைக்கு இடமே இருக்காது. ஆண் தன்மை ஆட்சி செய்யும். அனைத்துமே, வெற்றி அடைவது மற்றும் கையகப்படுத்துவது பற்றியதாகவே இருக்கும். அன்பு, அரவணைப்பு அல்லது வாழ்வோடு ஈடுபாடு ஆகியவற்றை பற்றியதாக இருக்காது. வாழ்க்கையோடு தடையற்ற ஒரு ஈடுபாடு இல்லாத நிலையில், அங்கு வாழ்வே இல்லை. முழுமையாக ஈடுபடுவதின் மூலம்தான் நீங்கள் வாழ்வை அறிந்துகொள்ள முடியும். இதைத் தவிர வேறு வழியே இல்லை.

கலாச்சாரம்

தமிழகத்தின் கோவில்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் - இனியும் தாமதிக்க நேரமில்லை

தமிழகத்தின் கோவில்கள் பல்வேறு நிலைகளில் கவனிக்கப்படாமலும் பாழடைந்தும் இருப்பதைக் கண்டு தம் ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தும் சத்குரு, கோவில்களைப் பராமரிக்க பொருத்தமானவர்களான பக்தர்களின் கைகளில் இல்லாமல், அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுவதே இதற்கான காரணமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஆங்கிலேயரின் காலனி ஆதிக்க மரபை முடிவுக்கு கொண்டு வந்து தமிழக கோவில்களை விடுவிக்க ஏன் இதுவே சரியான தருணம் என்பது பற்றி இங்கே விளக்குகிறார் சத்குரு.

சத்குரு: இந்த பாரத மண்ணில் 1700களில் நுழைந்த கிழக்கு இந்திய கம்பெனி, தங்களின் பொருளாசை மற்றும் பேராசையினால் இந்த தேசத்தின் கோவில்களை கையகப்படுத்த முடிவு செய்தனர். அந்தத் தலங்களின் புனிதத்தன்மை, சக்தி மற்றும் பலன்களைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை; அவர்களுக்கு கோவில்களில் குவிந்து கிடந்த தங்கம், வைரங்கள், செல்வவளம் மற்றும் கோவிலுக்கு சொந்தமானதாக இருந்த நிலங்கள் அகியவற்றின் மேல்தான் விருப்பம் இருந்தது. இந்த தேசத்தின் கோவில்களை கையகப்படுத்தும் அத்தகைய ஆபாசமான செயல் துரதிருஷ்டவசமாக இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது - சுதந்திரம் அடைந்து எழுபத்து நான்கு ஆண்டுகள் ஆன பிறகும். இது மிகவும் வலி தரக்கூடிய ஒன்று. ஏனெனில் கோவில் பிரார்த்தனை செய்வதற்கான இடமல்ல - அது இந்த சமூகத்தின் ஆன்மா. தமிழ்நாட்டில் பெரும்பாலான நகரங்கள் கோவிலை மையமாக கொண்டு, அதனை சுற்றிதான் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் முதலில் ஊர்களை உருவாக்கினீர்கள், அதன் பின்னர் கோவிலின் தேவை எழுந்தது என்பது போலில்லை இது. அவர்கள் முதலில் கோவிலை எழுப்பினார்கள், அதைச் சுற்றி ஊர் அமைந்தது. அதனால்தான் அவை கோவில் நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


கோவில்கள் பக்தர்களின் கைகளில் இருந்தால், என்ன செய்ய வேண்டுமோ அதை அவர்கள் செய்திருப்பார்கள், அதற்கான விலை அவர்களின் உயிராக இருந்தாலும்

பக்தி மற்றும் ஆன்மீக செயல்முறையில் ஆழமாக ஊறித் திளைத்துள்ள ஒரு கலாச்சாரத்தில், துரதிருஷ்டவசமாக, இன்றும் கூட இந்த கோவில்கள் அடிமைப்பட்டு, பல்வேறு நிலைகளில் அழிந்தும், பாழடைந்தும் கிடக்கின்றன. அவர்கள் கோவில்களை இடித்திருந்தால், மக்கள் அவற்றை மறுபடியும் கட்டியிருப்பார்கள். ஆனால் அவர்கள் கோவில்களை மூச்சுத்திணறச் செய்து, மெதுவாக அவை ஒன்றுமில்லாமல் போகும் நிலையை ஏற்படுத்துவதை தேர்வு செய்திருக்கிறார்கள். நான் எதையும் மிகைப்படுத்தவில்லை - நீங்களே சென்று உங்கள் கண்ணால் பாருங்கள். ஜூலை 17, 2020 அன்று, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையினர் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். அதில், 11,999 கோவில்களில் வருமானம் இல்லாத காரணத்தினால் ஒருவேளை பூஜை அல்லது சடங்கு கூட செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

கோவில்கள் பக்தர்களின் கைகளில் இருந்தால், என்ன செய்ய வேண்டுமோ அதை அவர்கள் செய்திருப்பார்கள், அதற்கான விலை அவர்களின் உயிராக இருந்தாலும். துரதிருஷ்டவசமாக, 37,000-க்கும் அதிகமான கோவில்களில் ஆண்டு வருமானம் ரூ.10,000க்கும் குறைவாக உள்ளது. இந்த 37,000 கோவில்களிலும், கோவில் பராமரிப்புக்கு என்று ஒருவருக்கு மேல் அவர்களால் நியமிக்க முடியவில்லை. அப்படியானால், பூஜை செய்யும் அந்த ஒருவரேதான் கோவிலை சுத்தம் செய்ய வேண்டும், கணக்கு வழக்குகளை பார்க்க வேண்டும், மற்ற எல்லாவற்றையும் செய்ய வேண்டும். கோவில்களின் நிலை என்ன என்பதை இதுவே தெள்ளத்தெளிவாக காட்டிவிடுகிறது. இத்தகைய நிர்வாகத்தை வைத்துக்கொண்டு, கோவில்கள் உயிர்ப்போடு அடுத்த 100 வருடங்களுக்கு எவ்வாறு சக்தியோடும் பொருத்தமாகவும் விளங்கும்? நாம் இப்போது இது பற்றி நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த 50-100 வருடங்களில் பல கோவில்கள் இல்லாமல் போய்விடும். தயவுசெய்து கோவில்களை பக்தர்கள் கையில் கொடுத்துவிடுங்கள். நாங்கள் அவற்றை கவனித்துக் கொள்கிறோம். எங்கள் உயிரைக் கொடுத்தாவது அவற்றை நாங்கள் பராமரித்துக் கொள்வோம்.

தமிழகக் கோவில்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவியுங்கள். சமூகத்தில் உள்ள மக்கள் அவற்றை கவனித்துக் கொள்ளட்டும். அவற்றை நிர்வகிப்பது எப்படி என்பது போன்ற சிக்கல்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். முதலில் அரசாங்கம் கோவில்களை மக்களின் கைகளில் ஒப்படைக்க சம்மதத்தை தெரிவிக்க வேண்டும். மக்கள் தங்களின் சமயம் மற்றும் ஆன்மீக விஷயங்களை தாங்களே நிர்வகிக்கும் அடிப்படை உரிமை இந்த நாட்டில் உள்ளது. ஒவ்வொரு சமூகத்துக்கும் இந்த உரிமை உள்ளது. நாம் நம்மை மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொள்கிறோம். என்னுடைய புரிதலில், ஒரு மதச்சார்பற்ற நாடு என்றால், மதம் அரசாங்க விஷயங்களில் தலையிடக்கூடாது, அரசாங்கமும் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடக்கூடாது. இதுதானே உண்மையான மதச்சார்பின்மை.

1 of 19
Share
Project
Current Page
Share
Tweet
Pin
Linkedin
Isha Foundation
ஈஷா காட்டுப்பூ - மார்ச் 2021
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19