இதற்குப் பின்னால் இன்னும் ஆழமான ஒரு கேள்வி உள்ளது. உங்களுக்குள் இருக்கும் உயிர் தொடர்ந்து இதற்கான தீர்வை அறிய முயன்று கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றால், "என்னுடைய இருப்பின் இயல்பு என்ன?"; அல்லது வழக்கமான ஆன்மீக பேச்சுவழக்கில் கூறுவதென்றால், "நான் யார்?" மக்கள் இதே கேள்வியை எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் யார் என்பதை அறிய வேறு எவரோ ஒருவரிடம் சென்று கேட்பது உங்கள் அறிவாற்றலுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா? ஆனால் ஆன்மீகம் என்ற பெயரில் அனைவரும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உங்களின் மூலத்தை வெளியே தேடினால் எவராலும் உங்களுக்கு உதவ முடியாது. உங்களுக்கு நல்ல கதைகளை வேண்டுமென்றால் நம்மால் கூறமுடியும், ஆனால் அந்த கதைகள் ஒருபோதும் உங்களை உண்மைக்கு ஒரு துளிகூட நெருக்கமாக கொண்டு செல்லாது. நீங்கள் உங்களையே பொழுதுபோக்கில் ஈடுபடுத்திக் கொள்ளலாம். நீங்கள் வாசித்த கதைகளைப் பற்றி பெரும் அதிகாரத்தோடு நீங்கள் பேசிக்கொள்ளலாம். இந்த உலகில் வாழ்க்கை நடத்துவதற்கான பெரும் தொழில்களில் அதுவும் ஒன்று. மக்கள் புத்தகத்தில் எழுதியுள்ள ஏதோ ஒன்றை திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அது எந்தவிதத்திலும் நம்மை உண்மைக்கு நெருக்கமாக கொண்டு செல்லவில்லை என்பதை புரிந்துகொள்ளும் அறிவை நாம் ஏன் வளர்த்துக்கொள்ளக் கூடாது? இதை பார்ப்பதற்கு எந்த ஞானோதயமும் அடையத் தேவையில்லை, அதற்கு சிறிதளவு நம் அறிவை பயன்படுத்தினாலே போதும். ஆனால் அதுதான் பிரச்சனையே. இந்த உலகம் முழுமையும் நல்ல மக்களால் நிறைந்து இருக்கிறது, எல்லாவற்றையும் தீர்க்கமாக கவனித்து, சிந்தித்து செயல்படும் மக்களால் அல்ல.
அறிந்துகொள்வதற்கான முதல் படி
உண்மையாகவே பதிலை அறிய நீங்கள் விரும்பினால், நீங்கள் எடுக்க வேண்டிய முதலும் முக்கியமானதுமான படி "எனக்கு தெரியாது" என்பதை தெளிவாக உணர்ந்துகொள்வதுதான். அறியாமையின் வலி உங்களை கிழித்தெறிந்தால், அறிதல் தூரமில்லை. நான் உங்களுக்கு ஒரு நீண்ட கதையை சொல்லமுடியும் - அதாவது கடவுள் ஒரு தேங்காய், அவர் எவ்வாறு அங்கே மேலே முழுதும் இனிமையானவராக இருக்கிறார், உள்ளே மிருதுவாக, வெளியே கடினமாக என்று பல்வேறு விஷயங்களை என்னால் கூறமுடியும். அது அபத்தமாக தோன்றக்கூடும், ஆனால் நீங்கள் விரும்பினால் என்னால் அதிலிருந்து நல்ல கதைகளை உருவாக்க முடியும். நீங்கள் என்னை நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, அது உங்களை உண்மைக்கு நெருக்கமாக எந்த விதத்திலும் இட்டுச் செல்லாது. கடவுள் எது என்பதைப் பற்றி நான் உங்களுக்கு ஒரு அற்புதமான கதையை கூறினால், அந்தக் கதை எவ்வளவு அழகாக இருந்தாலும் அது உங்களை உண்மைக்கு நெருக்கமாக ஒரு அங்குலம் கூட இட்டுச் செல்லாது. எனவே நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? பொழுதுபோக்கை எதிர்பார்க்கிறீர்களா அல்லது உண்மையில் நீங்கள் தேடலில் உள்ளீர்களா?
உங்களை நீங்கள் அறிந்துகொள்வதற்கு நீங்கள் எடுக்க வேண்டிய மிக அடிப்படையான படி என்னவெனில், உங்களை நீங்களே 100% "எனக்கு தெரியாது" என மாற்றிக் கொள்வதுதான். மக்கள் "எனக்கு தெரியாது" என்பதன் மகத்துவத்தை உணரவில்லை. அதனால்தான் அவர்கள், "எனக்கு தெரியாது" என்பதை எல்லா விதமான முட்டாள்தனமான நம்பிக்கை முறைகளைக் கொண்டு சிதைக்கிறார்கள். உங்களில் "எனக்கு தெரியாது" என்பதை நீங்கள் ஆழமாக்கினால், அறிதல் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில் நீங்கள் எதை அறியவேண்டும் என்று தேடுகிறீர்களோ அது எங்கோ ஒரு தென்னை மரத்தின் மேலே உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. கடவுள் பற்றிய கருத்து உங்கள் மனதில் நுழைந்ததற்கான ஒரே காரணம், படைப்பின் மூலம் எது என்பதைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல்தான். படைப்பு என்று நாம் கூறும்போது நிச்சயமாக பொருள் சார்ந்த விஷயங்களைப் பற்றித்தான் பேசுகிறோம் - உதாரணத்திற்கு, மரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள், கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் என எல்லாமும்தான். எனவே இவற்றில் உங்களுக்கு மிக நெருக்கமாக நிகழ்ந்துள்ள படைப்பு எது? மற்ற அனைத்தையும் விட, நீங்கள்தானே உங்களுக்கு மிக நெருக்கமானவர்!
கடவுளை எங்கே கண்டடைவது?
நீங்கள் பிறந்தபோது, மிகச் சிறிய உருவமாக இருந்தீர்கள். தற்போது நீங்கள் இவ்வளவு உயரமாகவும் பெரிதாகவும் வளர்ந்துவிட்டீர்கள். உங்களை நீங்களே விரிவுபடுத்திக்கொள்ள, சற்றே வளர்வதற்கும் பெரிதாவதற்கும் வாரவாரம் எங்காவது சென்று கொண்டு இருந்தீர்களா? அது எவ்வாறு நிகழ்ந்தது? நீங்கள் வேண்டுமானால் வெளியிலிருந்து மூலப்பொருட்களை கொடுத்திருக்க முடியும், ஆனால் படைத்தலுக்கு எது மூலமாக இருக்கிறதோ அது உங்களுக்குள் இருந்துதான் செயல்படுகிறது. படைத்தவர் அல்லது கடவுள் என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்களோ அது உங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடவுள் ஒரு தென்னை மரத்தில் உட்கார்ந்து இருந்தாலோ அல்லது சொர்க்கத்தில் இருந்தாலோ நான் பொருட்படுத்தியிருக்க மாட்டேன். ஆனால் படைப்பிற்கு மூலமாக இருப்பது உங்களுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறது, அதை நீங்கள் அறியாமல் போனால், அதுதானே மிகப் பெரிய சோகம்.
எம்முடைய முழு முயற்சியும், எவ்வாறேனும் மக்கள் இந்த சோகத்தை தங்களுக்கு ஏற்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக்கொள்வது தான்; அதாவது படைப்பின் மூலம் அவர்களுக்குள் துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, அதை கவனிக்காமல் போய்விடும் சோகம் அவர்களுக்கு நிகழாமல் பார்த்துக் கொள்வதுதான். என்னால் அப்படி ஒரு சோகத்தோடு வாழமுடியாது. நீங்கள் அறியவேண்டும் என்று விரும்பினால், துண்டுதுண்டாக கூறிட்டு பிரித்து பார்ப்பதன் மூலம் அதை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது. அதற்கான ஒரே வழி, உங்களுக்குள் உள்நோக்கி திரும்புவதுதான். ஏனெனில் உங்கள் அனுபவத்திற்கு எது மூலமாக இருக்கிறதோ, அது உங்களுக்குள் இருக்கிறது. உங்கள் அனுபவத்தின் மூலமானது உங்களுக்குள் இருக்கும்போது நீங்கள் வெளியே எதை செய்ய முயற்சித்தாலும் அது நீங்கள் உங்கள் காது வழியாக உணவு உண்பதைப் போன்றது. அது எவ்வளவு கடினமானது என்று உங்களுக்கே தெரியும். ஆனால் அதை சரியான வழியில் செய்தால், மிக சுலபமாக அதை நீங்கள் செய்யமுடியும். ஆன்மீகமும் அவ்வளவு கடினமானதுதான். நீங்கள் அதை வெளியே எங்கேயோ செய்து பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் அது மிகக் கடினமாக தெரிகிறது. நீங்கள் உள்நோக்கி திரும்பினால் அது மிக எளிமையான, இயல்பான ஒன்று. உயிர் அவ்விதத்தில்தான் உள்ளது.