பிப்ரவரி 2021

ஆங்கிலம் | ஹிந்தி

Subscribe Now

உயிர் நோக்கம்

உன்மீது ஒரு வேட்கை
உன்மீதும் மற்றும் உன்மீதும்
அனைவருக்காகவும் அனைத்துக்காகவும்
கட்டற்ற பேரார்வம்
அடைப்பின்றி பெருக்கெடுக்கும் உயிரும் அன்பும்

தேவைகளும் ஆசைகளும் கடந்த
காதல் உறவாகட்டும் வாழ்க்கை
அது வாழ்வை மென் தென்றலாக்கும் அல்லது
ஆரவாரக் கூச்சலாக்கும் உம் விருப்பப்படி

உயிரென்னும் பேரதிசயத்தில்
ஏறி வலம் வருவாயா அல்லது
முடிவற்ற ஏக்கத்தில்
தேய்ந்து போவாயா?

- சத்குரு

உங்கள் இமெயிலில் டிஜிட்டல் காட்டுப்பூ மாத இதழை பெற இப்போதே சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!

பகிருங்கள்

ட்விட்டர்

ஃபேஸ்புக்

Copy Link

© 2021 Isha Foundation. All rights reserved. • isha.sadhguru.org

இந்த இதழில்

சிறப்பு கட்டுரை

சிவன் என்னும் முரண்:

ஆதியோகியின் ஆழங்காண முடியா அம்சங்கள்

நாம் உணரக்கூடிய சிவனின் அற்புத இருப்புநிலை பற்றியும், ஆதியோகியின் வரலாற்றை வண்ணமயமான கதைகளுடனும் சத்குரு விவரிக்கிறார்.

வாசிக்க

யோகா & ஞானக் கருத்துகள்

வாழ்வின் சூட்சுமங்கள்

இயற்கையின் உச்சபட்ச தாளலயம் என்ன?

மஹாசிவராத்திரி - நீங்கள் எவ்வாறு பயனடையலாம்

வாசிக்க

வாசிக்க

யோகா & ஞானக் கருத்துகள்

வாழ்வின் சூட்சுமங்கள்

மஹாமந்திரம் - வாழ்வையும் மரணத்தையும் ஆள்வதற்கான விசை?

ருத்ராட்ச தீட்சை - ஆதியோகியின் அருளைப் பெற ஒரு வழி

வாசிக்க

வாசிக்க

லீலா 151

ஆரோக்கியம்

கிருஷ்ணனைப் போல நீங்களும் லீலை செய்யலாம்!

ஓஜஸ் - நல்ல ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்குமான இரகசியம்?

வாசிக்க

வாசிக்க

பகிர்வுகள்

பகிர்வுகள்

ஒரு விமான வீரரின் ஏற்றம் வளர்ச்சி - வெளி உலகிலும் உள் உலகிலும்

சத்ய பால்

ஆனந்தம், அன்பு மற்றும் முழுமையாய் வாழ்ந்த ஒரு வாழ்வின் நினைவலைகள்

வாசிக்க

வாசிக்க

நடப்புகள்

கல்வி

என் வாழ்க்கையின் ஆதாரம்

என் கனவு நனவாக ஈஷா வித்யா எனக்கு எப்படி உதவியது

பார் போற்றும் பாரதமாக இந்த நாட்டை மீண்டும் எப்படி நாம் உருவாக்கலாம்

சத்குருவை தொடருங்கள்

ஈஷா காட்டுப்பூவின் 25 வருடங்கள்

துவக்க நாட்களின் நினைவுகள்...

வாசிக்க

வாசிக்க

வாசிக்க

வாசிக்க

புகைப்படங்களில்

ஈஷா சமையல்

ஆதியோகி முன்னிலையில் சப்தரிஷி ஆரத்தி

ஈஷா யோக மையத்தில்

பொங்கல் 2021 கொண்டாட்டங்கள்

தை பூசம் 2021

- தெய்வீக பெண்தன்மையைக் கொண்டாடும் ஒரு திருநாள்

முந்திரி பூசணிக் கறி

பார்க்க

பார்க்க

பார்க்க

வாசிக்க

சிவன் என்னும் முரண்:

ஆதியோகியின் ஆழங்காண முடியா அம்சங்கள்

மஹாசிவராத்திரி, சிவனின் பிரம்மாண்ட இரவு, இதோ நெருங்கி வந்துவிட்டது. யார் இந்த சிவன்? சிவா என அழைக்கப்படும் படைப்பின் பரிணாமம் பற்றியும், மரபுகளில் குறிப்பிடப்படும் சிவன் என்ற யோகியைப் பற்றியும் நமக்கு விளக்குகிறார் சத்குரு. சிவனைப் பற்றிய நேர்முரணான அம்சங்கள் உங்களை குழப்பமடையச் செய்யலாம், 'இவை அனைத்தும் ஒருவரைப் பற்றியா?' என்று உங்களை வியக்க வைக்கலாம். ஆம், அதிலும் இது தற்செயலாக நிகழவில்லை. சத்குரு கூறும் சிவனின் கதைகள் சிலவற்றை இங்கே வாசிப்போம்.

சத்குரு: "சிவா" என்ற வார்த்தைக்கு "இல்லாத ஒன்று" என்று பொருள். படைத்தல் என்பது இருப்பது. எது இருக்கிறதோ அது எப்போதும் எல்லைகளின் வரம்புகளுக்கு உட்பட்டது. எது இல்லையோ அது மட்டும்தான் எல்லையில்லாத ஒன்று. விரவியிருக்கும் விண்மீன் மண்டலங்களாக நீங்கள் பார்ப்பதெல்லாம், பரந்த வானவெளியின் வெறுமையில் ஆங்காங்கே மிதக்கும் படைத்தல் செயலின் வெறும் சிறு துகள்கள் மட்டுமே. எல்லையற்ற வெறுமை வெளியின் மடியில்தான் படைத்தல் செயல் நிகழ்ந்துள்ளது. படைத்தல் என்றால், அதற்கு ஒரு ஆரம்பமும் ஒரு முடிவும் இருக்கும். ஆனால் சிவா என்று நாம் அறியும் இந்த எல்லையற்ற வெறுமை வெளிதான் அனைத்துக்கும் மூலமானது. இதிலிருந்துதான் அனைத்தும் உருவாகியுள்ளன, இதனுள்தான் அனைத்தும் மீண்டும் கரைந்து போகின்றன. இந்த வடிவமில்லாத, எல்லையில்லாத படைப்பின் மூலத்தைதான் நாம் சிவா என்று அழைக்கிறோம். ஆனால் மனிதரின் புரிதல் வடிவம் சார்ந்து இருப்பதால், பல அற்புதமான வடிவங்களை நாம் சிவனுக்கு உருவாக்கியுள்ளோம். புதிரான, புரிதலுக்கு அப்பாற்பட்ட ஈஸ்வரன்; மங்களகரமான ஷம்போ; மிக அப்பாவியான போலா; வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் தந்திரங்களில் பேராற்றல் நிறைந்தவரும் போதிக்கும் ஆசானுமான தட்சிணாமூர்த்தி; எளிதில் மன்னிக்கும் அசுதோஷ்; படைத்தவனின் ரத்தத்தால் கறைபடிந்திருக்கும் பைரவர்; முற்றிலும் அசைவற்று இருக்கும் அச்சலேஸ்வரர்; மிகத் துடிப்பான நடனமாடும் ஆடலரசர் நடராஜர். அவரே மிக அழகானவர் - அவரே மிகப் பயங்கரமானவர். அவரே மிக அற்புதமானவர் - அவரே சகிக்க முடியாதவர். முற்றிலும் நேர்முரணான வாழ்க்கை அம்சங்கள் சிவன் என்ற இந்த ஆளுமைக்குள் பொருத்தப்பட்டுள்ளன.

நிகரற்ற ஞானம், இருப்பினும் எளிதில் ஏமாறுவார்

சிவன் வாழ்வைப் பற்றிய மிக உயர்ந்த ஞானத்தைப் பெற்றவராக அறியப்படுகிறார்; அவரே மனித குலத்துடன் யோக விஞ்ஞானத்தை பகிர்ந்துகொண்ட முதல் யோகி, ஆதியோகி. அதேசமயம், அவர் எளிதில் ஏமாறக் கூடியவராகவும் இருந்தார், கடினமான சூழல்களில் மற்றவர்கள் வந்துதான் மீட்க முடியும் என்ற நிலையில் இருந்தவர்.

ஆதியோகி

ஆதியோகியான சிவன் சப்தரிஷிகளுக்கு யோகாவை முற்றிலும் விஞ்ஞான முறையில் பயிற்றுவித்தார். ஒரு மனிதன் தன் உச்சபட்ச இயல்பை அடைவதற்கான 112 வெவ்வேறு வழிகளை அவர் அனுபவபூர்வமாக நடத்தினார். நெடுங்காலம் மிகப்பெரிய அளவில் கற்றல், புரிதல் மற்றும் அனுபவம் ஆகியவற்றை உள்ளடக்கி, மனித வடிவியல் மற்றும் அண்டத்தின் வடிவியலில் உள்ள சூட்சுமங்களைப் பற்றியும் விளக்கினார். அவரது கற்பித்தல் தொடர்ந்து கொண்டிருக்கும் போது தேவி பார்வதி தன் ஞானோதயத்தால் பரவசத்தில் இருந்தார். இருப்பினும் சிவன் சப்தரிஷிகளுக்கு போதித்ததைக் கேட்கையில் பார்வதியின் ஆவல் தூண்டப்பட்டது. பார்வதி தேவி ஞானோதயத்தின் இனிமையை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தார், ஆனால் அது எப்படி நிகழ்கிறது என்கிற புரிதல் இல்லாமல் இருந்தார். எனவே அந்த ஏழு ரிஷிகளுக்கும் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவார்ந்த தூண்டுதல்களோடு விளையாட எண்ணினார். உச்சபட்சமான நிலையை அடைய உங்களை நீங்களே திறக்கக்கூடிய வகையில் 112 வாசல்கள் உள்ளன என்று சிவன் அவர்களுக்கு போதித்துக் கொண்டிருந்த போது பார்வதி இடைமறித்து, "ஏன் 112? அதற்கும் மேலும் இருக்கும்" என்று கூறினார்.

தன் செயலில் முழு கவனத்தையும் வைத்திருந்த சிவன் அவளைப் புறம் தள்ளி, "112 வழிகள் மட்டுமே உள்ளன" என்றார். ஏழு ரிஷிகளின் முன்னால் தன்னை இப்படி நடத்துவதை பார்வதி அவமானமாக எண்ணினாள். "அதற்கும் மேலே இருக்கும்; உங்களுக்குத் தெரியவில்லையோ என்னவோ," என்று சீண்டினாள். அதற்கு சிவன், "உனக்கு வேண்டுமென்றால், நீயே சென்று அதைக் கண்டுகொள்," என்று பதிலுரைத்தார். பின்னர் பார்வதி அவ்விடத்தினின்று அகன்று கடுமையான தவங்களில் ஈடுபட்டார்.

12 வருட கடுந்தவத்திற்கு பிறகு, பார்வதி திரும்பி வந்தார். சிவன் அப்போதும் அந்த ஏழு ரிஷிகளுடன் தன் செயல்முறையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அவரின் மனைவியாக, நேராக வந்து அவர் அருகில் அமர்ந்து கொள்ளும் உரிமையிருந்தாலும், பார்வதி அவ்வாறு செய்யாமல் தன் தோல்வியை குறிப்பால் உணர்த்தும் வண்ணம் சிவனுக்கு ஒரு படி கீழே அமர்ந்தார். ஆனால், ஏழு ரிஷிகளும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டாம் என்றும் அவர் எண்ணினார். அவர்கள் இருவருக்கும் இடையே மட்டுமானது இது. ஆதியோகி பார்வதியைப் பார்த்தார். இந்த 112 வழிகளும் தன்னைச் சுற்றி பொருள் தன்மையாக வெளிப்படும் விதமாக சக்தி நிலைக்கு வெடித்தெழுந்தார். பார்வதி கண்ணுற்றதிலேயே மிக அற்புத பிரம்மாண்டமான தருணம் அதுதான்.

வரம் வழங்கியவரையே...

எல்லா வகையான மக்களும் சிறப்பானவற்றையே சிவனிடம் இருந்து பெற்றுள்ளார்கள். அவற்றைப் பெற அவர்கள் தகுதியானவர்கள் இல்லை என இந்த உலகம் நினைக்கலாம், ஆனால் சிவன் அத்தகைய ஒரு மதிப்பீட்டை எப்போதும் செய்ததில்லை. அவர்கள் கேட்டால் அதை அவர் வழங்கிவிடுவார். பஸ்மாசுரன் இந்த உலகை ஆளவேண்டும் என்று விரும்பினான். அதற்கான வலிமை வேண்டும் என்பதற்காக, அவன் யாரைத் தொடுகிறானோ அவர்கள் சாம்பலாய் போகவேண்டும் என்ற வரத்தை சிவனிடம் கேட்டான். சிவனும், "சரி வைத்துக்கொள்," என்று அந்த வரத்தைக் கொடுத்துவிட்டார். வரத்தைப் பெற்ற பஸ்மாசுரன், அந்த வரம் வேலை செய்கிறதா என்று பரீட்சித்துப் பார்க்க விரும்பி சிவனின் தலை மீது கை வைக்க வந்தான், அதனால் அங்கிருந்து சிவன் எழுந்து ஓட வேண்டியதானது. உலகியலின் எல்லா பிரச்சனைகளுக்கும் எப்போதும் அவர் கலந்தாலோசிப்பது போலவே, விஷ்ணுவிடம் இப்போது என்ன செய்வதென்று உபாயம் கேட்டார். பொறுத்து இருக்குமாறு கூறிய விஷ்ணு, தன்னை மிக அழகான மோகினி என்ற பெண் வடிவமாக மாற்றிக்கொண்டார். பின்னர் மோகினி பஸ்மாசுரன் முன் வந்து நடனமாடினாள். பஸ்மாசுரன் சிவனை மறந்துவிட்டு அந்த பெண்ணின் பின்னால் ஓடினான். அவள், "நான் ஆடுவது போலவே நீயும் ஆடினால் பின்னர் நான் உன்னுடையவள் ஆகிவிடுவேன்" என்றாள். அவனும் அதற்கு சரி என்றபடி, அவள் ஆடுவதற்கு ஈடுகொடுத்து அவள் ஆடும்படியெல்லாம் ஆடினான். முடிவாக அவள், தன் கரத்தை எடுத்து தன் தலை மேல் வைத்தாள். அதையே பஸ்மாசுரனும் செய்தான், சாம்பலாகிப் போனான்.

அகோரனும் நானே சுந்தரனும் நானே

பார்வதியுடனான தன் திருமணத்தின் போது, சிவன் இரண்டு வடிவங்களை வெளிக்காட்டினார் - ஒன்று அகோரன் மற்றொன்று மிக அழகான சுந்தர ரூபம்.

இமாலயத்தின் அரசன் தன் மகள் பார்வதியின் திருமணத்தை அறிவித்த போது அந்தப் பகுதியில் இருந்த அனைவரும் அப்பெரும் திருமணத்தில் கலந்துகொள்ள வந்திருந்தனர். இந்தியக் கலாச்சாரத்தில், மணமகனானவர், அலங்காரமாக உடை உடுத்தி, தன் செல்வச் செழிப்பை பறைசாற்றும் ஆபரணங்களை அணிந்து, உற்றார் உறவினர் புடை சூழ குதிரை மீதமர்ந்து கம்பீரமாக திருமணம் செய்ய வருவார். ஆனால் இங்கோ சிவன் வந்த போது, அவரது கண்கள் மேலே சொருகி, முழு போதையில், அப்போதுதான் கொல்லப்பட்ட மதயானையின் தோலை ரத்தம் சொட்ட சொட்ட மேலாடையாக அணிந்து கொண்டு, உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சாம்பலை பூசிக்கொண்டு, சடாமுடியோடு ஒரு அகோரனாக வந்தார். மேலும் அவருடன் பரிவாரமாக உடன் வந்த நண்பர்கள், கானர்கள். அவர்களில் ஒருவர் கூட மனித வடிவில் இல்லை, அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டதோ யாருக்கும் புரியாத இரைச்சலான ஒலியாக இருந்தது. இப்படி ஒரு குழுவோடு நாட்டின் இளவரசியை மணமுடிக்கும் மணமகனாக நகர்வலம் வந்தார் சிவன்.

இதைப் பார்த்த அனைவரும், "இதுதான் இளவரசியின் மாப்பிள்ளையா?" என்று திகைத்துப் போயினர். பார்வதியின் தாய் மீனா, "இந்த மனிதர்தானா?" என கேட்டார். "ஆம், இவர்தான் என் இறைவன்," என்று கூறினாள் பார்வதி. மீனா மயங்கி விழுந்துவிட்டார். அவர் மயக்கத்திலிருந்து கண் விழித்ததும் பார்வதியிடம், "இந்த ஒன்றை மட்டும் எனக்காக செய் - இந்த மனிதரை நீ மணந்துகொள்ளாதே. நீ அவ்வாறு செய்தால் நான் என் உயிரை மாய்த்துக்கொள்வேன்," என்று கூறினார்.

பின்னர் பார்வதி சிவனிடம் சென்று, "நீங்கள் எத்தகைய வடிவங்களையெல்லாம் எடுக்க வல்லவர் என்று என்னிடம் இதற்கு முன் காட்டியுள்ளீர்கள். நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பது பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. திருமணம் முடிந்த பின்னர் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களுடன் நான் வாழ்வேன். ஆனால் இந்த திருமணத்திற்காக, என் தாயாரின் நலனுக்காக, தயவு செய்து அழகான உருவத்தோடு வாருங்கள்" என கெஞ்சி கேட்டுக்கொண்டாள். சிவன் போதை நிலையில் இருந்து தன்னை உலுக்கி வெளியே வந்து, சுந்தரமூர்த்தி அல்லது சுந்தரேசர் என்று தற்போது நாம் அழைக்கும் வடிவத்தை எடுத்தார். ஆண்மையின் பிரகாசம் மிளிரும் கம்பீரமான ஒரு வெளிப்பாடாக, நறுமணம் வீசும் மலர்களை சூடிக்கொண்டு, நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத மிக அழகான வடிவத்தில் சுந்தர ரூபனாக சிவன் வந்தார். பார்வதியின் தாயார் முற்றிலும் ஈர்க்கப்பட்டார், பின்னர் பார்வதியும் சிவனும் திருமணம் புரிய அமர்ந்தனர்.



பொங்கியெழும் கோபம், நேர்மாறாக வணங்கத்தக்க நேசம்

பின்வரும் கதைகள் சிவனின் இரக்கமற்ற வன்முறை, அதே சமயம் அவரின் மிக மென்மையான அன்பு ஆகியவற்றை எடுத்துரைக்கும்.

வீரபத்திரனின் பிறப்பு

ஒருமுறை, யாரோ ஒருவர் சிவனை எல்லையை மீறி அளவுக்கதிகமாக சினம் கொள்ளச் செய்தார். அத்தகைய ஒரு தூண்டுதலுக்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை என்றால், அது நீங்கள் எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்கள் என்பது பற்றிய கேள்வியல்ல. அது உங்களின் கண்ணியம் மற்றும் நேர்மையை கேள்விக்குறியாக்குகிறது. எனவே சிவன் மிகுந்த வன்முறையான முறையில் அதற்கு பதில் அளித்தார். அது எப்போதென்றால், அவரின் முதல் மனைவி சதி அவளின் தந்தையால் அவமானத்துக்கு உள்ளான போது நடந்தது. ஒரு பெரிய யாகம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதில் பலரும் கலந்து கொண்டனர். அங்கே தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைப் பொறுக்க முடியாமல் அந்த யாகத்தீயில் விழுந்து தன்னையே எரித்துக்கொண்டாள் சதி. அதை கேள்வியுற்ற சிவன் மிகுந்த சினம் கொண்டு, தன் சடாமுடியில் இருந்து ஒன்றை உருவி, அதை ஒரு பாறையின் மேல் அறைந்து வீரபத்திரன் என்னும் மிகப் பயங்கரமான ஒருவனை உருவாக்கினார்.

சிவன் வீரபத்திரனிடம், "செல், இதற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்கள் எவரும் உயிரோடு இருக்கக்கூடாது" என்று கட்டளையிட்டார். வீரபத்திரன் சென்று சதியின் தந்தை தட்சனை தண்டித்தான். அந்த முழு யாகத்தையும் அழித்தான். சில மணிநேரங்களில் அவன் ஆயிரக்கணக்கான பேரைக் கொன்று குவித்தான் என்று கூறுவார்கள்.

வீரா என்றால் வீரம் பொருந்தியவன். வீரா என்ற வார்த்தை அடிப்படையாக வீரியம் என்ற வார்த்தையில் இருந்து வருகிறது. வீரியம் என்றால் விந்து அல்லது மனிதர்கள் பிறந்து வரும் விதை என்று பொருள். சிவனின் வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் அவர் தன் விந்தை ஒருபோதும் சிந்தியதில்லை. அடிப்படையான உயிர்சக்தியை இனப்பெருக்கத்திற்கு உபயோகிப்பதற்கு பதிலாக, அதே சக்தியைக் கொண்டு அவர் விழிப்புணர்வின் உச்சத்தை எட்டினார். வீரபத்திரனின் கதை உங்களுக்கு கூறுவது யாதெனில், சிவன் தன் வீரியத்தை தன் தலை உச்சியில் இருந்து சிந்திய காரணத்தால் அவரது ஒரு சடைமுடி ஒரு முழுப்படையையே அழிக்கவல்ல ஆற்றல் பெற்றிருந்தது.

கருணையின் முழு வடிவம்

பார்வதி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, நிறைவைப் பெறவேண்டும் என்று மிகத் தீவிரமாக விரும்பினாள். சிவன் அதைக் கேட்டபோது, அவரின் உணர்ச்சி அவளுக்காக எப்போதும் தூண்டப்படாத போதும், அவரின் கருணை அங்கு செயல்பட்டது. அவர் பார்வதியிடம், "இங்கு பார், உனக்கு ஒரு குழந்தை பிறந்தாலும் சரி அல்லது ஆயிரம் குழந்தைகள் பிறந்தாலும் சரி, அப்போதும் உனக்கு நிறைவு கிடைக்கப் போவதில்லை. உன் பாலினத்தின் சுபாவத்தின் படி நீ செல்லாதே. அது மிகக் குறுகிய ஒரு சாத்தியம். உன் வாழ்வை இப்படி நீ வீணடிக்கக்கூடாது. அதற்கு வேறு வழி உள்ளது. எப்படி நிறைவடைவது என்பது பற்றி நான் உனக்கு போதிக்கிறேன்." இப்படித்தான் சிவ சூத்திரங்கள் என்னும் யோகாவைப் பயிற்றுவிக்கும் அமைப்பை வெளிப்படுத்தினார் சிவன்.

யோக விஞ்ஞானத்தை இரண்டு வழியில் வழங்கலாம். எதிரே அமர்ந்திருக்கும் நபருக்கு ஒருவிதமான எதிர்ப்புணர்வு இருந்தால் நீங்கள் அதை ஒருவகையில் - அவர்களின் எதிர்ப்புச் சுவர்களின் தடைகளைத் தகர்த்தெறிந்து வழங்க வேண்டும். பெறப் போகும் நபர் உங்களோடு நெருக்கமானவராக இருந்தால், நீங்கள் அதை வேறொரு வகையில் வழங்கலாம். நெருக்கம் என்பதை காமம் என்று புரிந்துகொள்ளத் தேவையில்லை; அடிப்படையில் இதற்கு அர்த்தம் ஒருவர் தன் உள்ளத்தை உங்களுக்கு முழுமையாக திறந்து வைத்திருக்கிறார் என்பதுதான்.

சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே ஒருவகை நெருக்கம் இருந்தது. எனவே அவர் அவளிடம், "தேவி, நீ வந்து என் மடியில் அமர்ந்துகொள்; நான் அந்த வழியை உனக்கு போதிக்கிறேன்" என்றார். பின்னர் அவளை எவ்வளவு மென்மையாக அழைக்க முடியுமோ அவ்வளவு மென்மையாக அழைத்தார். "பிரகாசமானவளே", "இனிமையானவளே", "மென்மையானவளே", "அழகானவளே" என்று அழைத்தார். இவை மயக்கும் வார்த்தைகள் அல்ல. ஆனால் அவள் தன் எதிர்ப்பை முற்றிலுமாக விடுவதற்கு, ஒரு நெருக்கத்தை உருவாக்குவதற்கான ஒரு வழி. அதனால் அவரால் அவருக்குள் இருப்பதை அவளுக்குள் கடத்த முடியும். தேவி விட்டுக் கொடுக்க விட்டுக் கொடுக்க அவர் அவளை மேலும் மேலும் தனக்கு நெருக்கமாக்கிக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் அவள் அவரின் சரிபாதியானாள். ஒருவரை உங்களின் அங்கமாக மாற்றுவதென்றால், முதலில் நீங்கள் ஏற்கனவே உங்களிடம் இருக்கும் ஒரு பாகத்தைப் பிரித்தெறிய விருப்பம் கொண்டிருக்க வேண்டும். அவர் விருப்பத்துடன் அவளை தன்னில் ஒரு பாகமாக ஏற்றுக்கொண்டார் - ஒரு பாதி ஆண், சரி பாதி பெண் - அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.

சிவன் ஆண்மையின் உச்சமான குறியீடாக கருதப்படுபவர், ஆனால் அவர் பாதி பெண். ஏனெனில் தன்னுள்ளே இருக்கும் பெண்மையை உணராமல் எந்த ஆணும் முழுமையடைவதில்லை. பின்னர் பார்வதி தன் சுயத்தைத் தானே உணரும் வழியை பல அழகான நெருக்கமான வழிகளில் விளக்கினார் சிவன். அவர்களுக்கு இடையே மட்டும் நடந்தவை அவை. தேவி முழுமையாக ஞானோதயம் பெற்றார். அதன் பின்னர் முழுப்பரவச நிலையில் இருவரும் இணைந்து நடனமாடத் துவங்கினர்.



பொதுவாக உலகின் பல பகுதிகளிலும், மக்கள் எதை இறைமை என்று குறிப்பிடுகிறார்களோ அது எப்போதும் நல்லதாக மட்டும் இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது அல்லது நம்பப்படுகிறது. ஆனால் நீங்கள் சிவனை நல்லவராகவோ அல்லது கெட்டவராகவோ அடையாளம் காண முடியாது. அவர் அனைத்துமானவர் - மிகச் சிறந்தவர், அதேசமயம் மிக மோசமானவர். ஜீரணித்துக் கொள்ள முடியாத சிவனைப் பற்றிய எல்லா கதைகளும் நாகரீகம்என்ற பெயரில் மிக வசதியாக வெளியேற்றப்பட்டு விட்டது. ஆனால் அதில் தான் சிவனின் சாராம்சம் உள்ளது. படைப்பின் அத்தனை அம்சங்களும் அந்த ஒருவரில் பொருத்தப்பட்டுள்ளன. ஏனெனில் அந்த ஒருவரை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நீங்கள் வாழ்க்கையை கடந்து விட்டதாக அர்த்தம். ஒருவரின் வாழ்வில் உள்ள முழு போராட்டமுமே, எப்போதும் நாம் அழகானவை - அழகற்றவை, நல்லது - கெட்டது என்று பொறுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான். வாழ்வு எவ்வாறெல்லாம் இருக்க முடியுமோ, அவை அனைத்தின் சிக்கலான கலவையாக இருக்கும் இந்த ஒரு மனிதனை மட்டும் உங்களால் ஏற்றுக் கொள்ள முடிந்தால், அதன் பிறகு உங்களுக்கு எவரோடும் எந்த பிரச்சனையும் இருக்காது.



இயற்கையின் உச்சபட்ச தாளலயம் என்ன?


தாளலயம் அனைத்தையும் இயக்குகிறது... நீங்கள் அதை விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி. இதற்கு உதாரணமாக தன் இளமைக் காலத்தில் நடந்த குறும்பு ததும்பும் நிகழ்வை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சத்குரு. கிட்டத்தட்ட அனைத்திலுமே ஏன் தாளலயம் இருக்கிறது என்பது பற்றியும், நம்மையும் சேர்த்து படைப்பின் அத்தனை அம்சங்களிலும் எவ்வாறு வெவ்வேறு விதமான தாளலயங்கள் இயங்குகின்றன என்பது பற்றியும் இங்கே சத்குரு நமக்கு விளக்குகிறார். மேலும், தாளலயம் பற்றிய சத்குருவின் ஆய்வு அதன் பலதரப்பட்ட மேல் அடுக்குகளோடு மட்டும் நிற்கவில்லை, அதன் மூலாதாரம் வரை ஆராய்வதாக இருக்கிறது.

கேள்வியாளர்: சத்குரு, இயற்கையின் தாளலயத்தோடு ஒத்திசைவில் இருப்பது பற்றி சற்று விளக்க முடியுமா?

மேலோட்டமான தாளத்திலிருந்து உட்பொருளுக்கு

சத்குரு: நீங்கள் சற்று கவனித்தால், இந்தப் படைப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு தாளலயம் உள்ளது. செவிப்புலன் உணர்வில் கூட - உதாரணத்திற்கு, நீங்கள் ஓடும் நீரின் ஓசையை கேட்டீர்கள் என்றால் ஆரம்பத்தில் அது ஒரு சத்தமாக மட்டும்தான் தோன்றும். ஆனால், நீங்கள் அதை கவனமாக கூர்ந்து கேட்டால் அதில் ஒரு தாளலயம் இருப்பதை உணர முடியும். பூச்சிகள் ரீங்காரமிடுவதில் ஒரு தாளலயம் உள்ளது. நெடுஞ்சாலைகளின் வாகன இரைச்சலில் கூட ஒரு தாளலயம் உள்ளது. ஏதோ ஒன்று வெளிப்படுத்தும் ஒலி எதுவாக இருந்தாலும், அதிலும் ஒரு குறிப்பிட்ட தாளலயம் உள்ளது. நீங்கள் கேட்கும் ஒவ்வொரு ஒலியிலும் ஒரு தாளலயம் இருக்கும் பட்சத்தில், அந்த ஒலி உருவாக காரணமான அதிர்விலும் ஒரு தாளலயம் கட்டாயம் இருக்க வேண்டும். அந்த அதிர்வுக்கு ஒரு தாளலயம் இருக்கும் பட்சத்தில், அந்த அதிர்வை உண்டாக்கும் பொருளுக்கும் கட்டாயமாக ஒரு தாளலயம் இருக்க வேண்டும். அந்த அதிர்வை உண்டாக்கும் பொருளுக்கு ஒரு தாளலயம் இருக்கும் பட்சத்தில், அந்தப் பொருளுக்கு எது மூலாதாரமாக இருக்கிறதோ, அதிலும் கட்டாயமாக ஒரு தாளலயம் இருக்க வேண்டும்.


சத்குருவின் அம்மா சுசீலா வாசுதேவ்

பாடல் மிதக்கும் உதடுகள்

நீங்கள் எந்த தாளலயத்தோடு ஒத்திசைவில் இருக்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. இசை என்பது பலதரப்பட்ட வழிகளில் நடத்தப்படுகிறது. எங்கள் இல்லத்தில் இவ்வாறு பொதுவாக நிகழும். என் தாயார் ஒரு அற்புதமான பாடகர், வீணையும் வாசிப்பார். வீட்டில் அவர் பாடுவதை எப்போதும் கேட்கலாம். எதையும் வெளிப்படையாகச் செய்யும் நபரல்ல அவர். தன் வழியில் மிக மென்மையாகவும் நுட்பத்தோடும் இருக்கும் இயல்பு அவருடையது. அவர் இருப்பதை நீங்கள் அவ்வளவாக உணர்ந்துகொள்ள முடியாது. ஏனெனில், அவர் தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள மாட்டார். தான் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்து கொண்டிருப்பார். அன்றைய காலங்களில் டேப் ரெக்கார்டரோ, சிடி பிளேயரோ, ஐ-பாடோ இருக்கவில்லை. ரேடியோ பெட்டிக்கூட நீங்கள் தூக்கிச் செல்ல முடியாத வகையில் மிகப் பெரியதாக இருக்கும்.

யாரோ ஒருவரால் பாட முடியும் என்றால், அது எப்போதுமே மதிப்புமிக்கதாக இருந்தது. பணி சார்ந்த விருந்து அல்லது ஒரு குடும்ப விழா அல்லது வெறும் சந்திப்பு என எதுவாக இருந்தாலும், உங்களால் பாட முடியும் என்று தெரிந்தால், உங்களை அவர்கள் பாடச் சொல்லி கேட்பார்கள். நாங்கள் எங்கு சென்றாலும், யாரேனும் என் தாயாரைப் பாடச் சொல்லி கோரிக்கை வைத்தால், எந்த தயக்கமும் இன்றி அவர் பாடுவார். எப்போதும் மிக அமைதியாக பின்புலத்தில் இருப்பவர் அவர். ஆனால் இசை என்று வந்துவிட்டால் அவருக்கு எந்த விதமான ஊக்குவிப்பும் தேவைப்படவில்லை. யாரேனும் ஒரு பாடலை கேட்க வேண்டும் என்று விரும்பினால், அவர் பாடுவார். யாரும் அருகில் இல்லாத நேரங்களிலும் அவர் எப்போதும் பாடிக் கொண்டிருப்பார்.


அனைவரையும் ஆட்டுவிக்கும் அந்த இசை

கர்நாடக இசை எங்கள் வாழ்வில் ஒரு பகுதியாகவே இருந்தது. என் தந்தையும் கர்நாடக இசையை பெரிய அளவில் ரசித்தார். ஆனால் நாங்கள் "ரோலிங் ஸ்டோன்ஸ்"-களை கேட்டு வளர்ந்தோம். அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் இல்லாத சமயங்களில் எங்களுக்கு பிடித்த இசையை நாங்கள் ரேடியோவில் கேட்போம். இந்தியாவில் அந்தக் காலத்தில் மிக நம்பகமாக இருந்த வானொலி நிலையம் ஆஸ்திரேலிய வானொலி நிலையம். மேலும் அதில் ஆங்கில பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. எங்கள் உடலை ஆட்டுவிக்கும் மேற்கத்திய இசையைக் கேட்க நாங்கள் விரும்புவோம். நாங்கள் கர்நாடக இசையை கேட்க வேண்டும் என்று வீட்டில் விரும்பினார்கள். ஆனால் அப்போது அது எங்களுக்கு விருப்பமானதாக இல்லை.

என் தந்தை செய்தித்தாளோ அல்லது ஏதாவது ஒரு புத்தகமோ வாசித்தபடி அமர்ந்திருப்பார். நாங்கள் சத்தமின்றி சென்று ரேடியோவில் மேற்கத்திய இசையை மெலிதாக ஒலிக்கச் செய்வோம். அவர், தான் படிக்கும் விஷயத்திலோ, செய்தியிலோ மும்முரமாக மூழ்கியிருக்கும் போது நாங்கள் மெதுவாக ஒலியைக் கூட்டுவோம். அவருக்கு அந்த இசை பிடிக்காது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் அவரின் கால்கள் மெதுவாக தாளமிடத் துவங்கும். நாங்கள் உடனே அவரைப் பிடித்து, "உங்கள் கால்களைப் பாருங்கள் - உங்களுக்கு இது பிடிக்கிறது!" என்று கூறுவோம். "என்ன கண்றாவி இசையோ - அதை அணையுங்கள்!" என்பார் அவர். "இல்லை, உங்களுக்கு இது பிடித்திருக்கிறது. நீங்கள் எங்களிடம் பொய் சொல்கிறீர்கள்." அவ்வளவு சுலபமாக விட்டுவிடுவோமா என்ன; அவரே அறியாமல் அவர் கால்கள் தாளம் போடுகிறதே! இந்த வகையான தாளலயத்தின் தன்மை யாதெனில், உங்கள் உடல் அதோடு இசைந்து அசையும். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட வேறு வகையான இசையைக் கேட்டால், உங்கள் உடல் அசைவற்று ஆகிவிடும்.

துருபாத் இசையில் தலைசிறந்த வல்லுனர்களான குண்டேச்சா சகோதரர்கள், ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி 2009ன் போது, இசைநிகழ்ச்சியை வழங்கினர்

இசை அசைவற்ற தன்மையைக் கொண்டுவரும் போது

நீங்கள் துருபத் வகை இந்திய பாரம்பரிய இசையைக் கட்டாயம் கேட்க வேண்டும். துருபத் இசையில் பெரும்பாலும் அவர்கள் வார்த்தைகளை உபயோகிக்க மாட்டார்கள். வெறும் 'ஆ'-வை வைத்தே முடிவில்லாமல் சென்று கொண்டே இருப்பார்கள். வெறும் ஒரு ஒலியைக் கொண்டே மணிக்கணக்காக அவர்களால் பாட முடியும். நீங்கள் துருபத் இசையைக் கேட்டால், உங்கள் உடல் அசைவற்று ஆகிவிடும், உங்கள் முதுகுத்தண்டு நிமிர்ந்து இருக்கும். மேலும், நீங்கள் வெறுமனே அமர்ந்து இருப்பீர்கள். ஏனெனில் இந்த இசை உங்களை அசைவற்று வைத்திருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

தாளலயம் என்பது பல்வேறு நிலைகளில் இருக்க முடியும். அது உடலின் தாளலயமாக இருந்தால், அது ஒரு வகையாக நிகழும். நீங்கள் மனதின் தாளலயத்தைத் தொட்டால் அது வேறு வகையில் இருக்கும். உங்கள் உள்நிலை சக்தியின் தாளலயத்தைத் தொட்டால் அது மற்றொரு வகையாக இருக்கும். தாளலயம் மிக ஆழமான உள்நிலையைத் தொட்டால், நீங்கள் இயல்பாகவே தியான நிலைக்கு சென்றுவிடுவீர்கள். ஒரு வகையில், அனைத்து வகையான கிரியா மற்றும் தியானப் பயிற்சிகள் மூலம் இதைத்தான் நீங்கள் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நம்மால் செய்யக்கூடியது எல்லாம் அசைவற்ற தன்மையின் தாளலயத்தோடு ஒத்திசைவில் இருக்க முயல்வது மட்டும்தான் - அதுவே உச்சபட்ச லயம்.

அசைவற்று இருந்தால் அதில் தாளலயம் எங்கே இருக்கிறது? ஒவ்வொரு ஓசைக்கும் ஒரு ஆரம்பமும், ஒரு முடிவும் இருக்கிறது. அசைவற்ற தன்மையில் இருந்து எழும் ஒலிக்கு ஆரம்பமோ, முடிவோ இல்லை. நாம் இயற்கையின் தாளலயத்தைப் பற்றி கூறுவதற்கு மொழியைப் பயன்படுத்தும் போது, "இயற்கை" என்ற வார்த்தை, பூமி, மரங்கள், விலங்குகள், மனிதர்கள் என்று பலவற்றையும் குறிப்பதாக இருக்கிறது. இயற்கை என்பது பலதரப்பட்ட வெவ்வேறு நிலைகளில் உள்ளது. உடலின் தன்மை, மனதின் தன்மை, உணர்வின் தன்மை, சக்திகளின் தன்மை என்று இருப்பதுடன், படைத்தவரின் தன்மை என்றும் இயற்கை பல நிலைகளில் உள்ளது.

நம்மால் செய்யக்கூடியது எல்லாம் அசைவற்ற தன்மையின் தாளலயத்தோடு ஒத்திசைவில் இருக்க முயல்வது மட்டும்தான் - அதுவே உச்சபட்ச லயம்.

சிவன் - ஆதியும் அந்தமும் இல்லாதவன் - உருவமானவன் - மீண்டும் அருவமானவன்

இயற்கையின் எந்த அழைப்புக்கு நீங்கள் பதில் சொல்லப் போகிறீர்கள்? அது உடலைப் பற்றியதாக இருந்தால் நீங்கள் ஒரு திசையில் செல்வீர்கள்; அது மனதைப் பற்றியதாக இருந்தால் நீங்கள் மற்றொரு திசையில் செல்வீர்கள்; அது சக்தியைப் பற்றியதாக இருந்தால் நீங்கள் வேறு ஒரு திசையில் செல்வீர்கள்; அது பூமியைப் பற்றியதாக இருந்தால் நீங்கள் ஒரு திசையில் செல்வீர்கள்; அது மிக ஆழமான உள்நிலையைப் பற்றியதாக இருந்தால் நீங்கள் மற்றொரு வித்தியாசமான திசையில் செல்வீர்கள். இவை அனைத்தும் வெவ்வேறான அதிர்வுகளின் தாளலயங்கள்தான். ஆனால் மிக உச்சபட்சமான அதிர்வு அசைவற்ற தன்மையைச் சார்ந்தது - அதையே பாரம்பரியமாக சிவா என்று குறிப்பிடுகிறோம். அசைவற்ற தன்மையின் அதிர்வு ஆரம்பம் இல்லாதது. இதனால்தான் சிவன் சுயம்பு என்று அழைக்கப்படுகிறார். அவர் உருவம் இல்லாத நிலையிலும் இருந்திருக்கிறார். தான் விரும்பும் போது அவர் இருப்பின் தன்மைக்கு உருவெடுக்கிறார். மீண்டும் அவர் விரும்பும் போது அருவமாகிறார்.

சிவன் தானாகவே வெளிப்பட்டு தானாகவே கரைந்தும் போகிறார். நீங்கள் தானாகவே வெளிப்படவில்லை, ஆனால் தானாகக் கரைந்து போக உங்களால் முடியும். தானாகக் கரைந்து போகும் வழியை நீங்கள் அறிந்துவிட்டால், பின்னர் நீங்களாகவே வெளிப்படும் வழியையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். மனித அமைப்பை முறையாக கட்டவிழ்க்க தெரிந்த ஒருவர், அதை எவ்வாறு மீண்டும் கட்டமைப்பது என்றும் அறிந்துகொள்வார். ஒருவர் ஒரு குறிப்பிட்ட தீவிரத்தில் அல்லது விழிப்புணர்வில் வெளியேறும்போது - அவர் இந்த பிறப்பு-இறப்பின் சுழற்சியில் இருந்து விடைபெறுகிறார். தங்களுடைய அமைப்பை விழிப்புணர்வோடு கட்டவிழ்த்து வெளியேறும் வழியைப் பற்றிய அறிதல், மற்றும் அந்த அமைப்பின் பல சிக்கலான அடுக்குகளின் தாளலயத்தைப் பற்றிய புரிதல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஒருவர், தான் விருப்பம் கொண்டால் தன்னைத்தானே மீண்டும் கட்டமைத்துக்கொள்ள முடியும்.

தாளலயங்கள் அனைத்திலும் புகுந்து புறப்படும் சுதந்திரம்

யோகிகள் இந்த நிலையை அடையும்போது, அவர்கள் 'நிர்மாணகாயா' என்று அறியப்படுகிறார்கள் - அதாவது, தன் உடலைத் தானே மறு உருவாக்கம் செய்துகொள்ளும் திறன் படைத்தவர் என்று பொருள். எனவே அவர் ஒரு தாயின் கருவில் இருந்து ஒரு குழந்தையாக பிறப்பெடுத்து வரவேண்டிய அவசியம் இல்லை - அவர்கள் தாங்கள் எப்படி இருக்கிறார்களோ அவ்வாறே வரமுடியும், அல்லது தாங்கள் தேர்ந்தெடுக்கும் வடிவில் வரமுடியும். சிவன் தன்னைத்தானே கட்டவிழ்த்து வெவ்வேறு வடிவங்களில் தன்னை உருமாற்றியிருக்கிறார். சில வேளைகளில் தன் மனைவியை சந்திக்க விரும்பும்போது மிக அழகாக தன்னை உருமாற்றிக்கொண்டார். சில வேளைகளில், மற்ற வகையான மனிதர்களை சந்திக்க வேண்டியபோது, தன்னை உக்கிரமாக மாற்றிக்கொண்டார். அவர் தன்னைப் பற்றிய அனைத்தையும் மாற்றிக்கொண்டுள்ளார். அருவத்திலிருந்து இருப்பிற்கு - உருவமாக வடிவெடுப்பதற்கு, தன்னைக் கட்டவிழ்த்து மீண்டும் தன்னையே உருவாக்கியிருக்கிறார்.

இயற்கையின் தாளலயம் என்பது பூமியின் தாளலயத்தைப் பற்றியது மட்டுமல்ல. இங்கு வாழ, நம் வாழ்வின் குறிப்பிட்ட சில அம்சங்களை கையாள, பூமியின் தாளலயத்தோடு ஒத்திசைவில் இருக்க வேண்டியது மிக அவசியம். ஆனால் அதேசமயம், படைப்பின் மற்ற பரிமாணங்களை அறிந்து அதை கடந்து போகும் வாய்ப்பும் உள்ளது. விழிப்புணர்வாக அசைவற்ற தன்மையின் தாளலயத்திற்குள் செல்லவும், விரும்பும்போது அதை விட்டு வெளியே வரவும் முடியும் எனும் சுதந்திரத்தை நீங்கள் பெற்றிருந்தால், பின்னர் உங்களால் ஒட்டுமொத்த தாளலயங்களில் இருந்து எது வேண்டுமோ அதை தேர்வுசெய்ய முடியும்.

மஹாசிவராத்திரி

- நீங்கள் எவ்வாறு பயனடையலாம்

மஹாசிவராத்திரி - வெறும் பழைய காலத்தின் பாரம்பரிய பண்டிகையா அல்லது அதற்கு மேலும் ஏதும் முக்கியத்துவம் உள்ளதா? உங்கள் வயது மற்றும் பின்னணிக்கு அப்பாற்பட்டு வாழ்வை மாற்றும் தாக்கம் மஹாசிவராத்திரி அன்று எதனால் நிகழ்கிறது என்பதையும், இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சத்குரு விளக்குகிறார்.

1/16

கேள்வியாளர்: சத்குரு, நீங்கள் மிகவும் தர்க்கரீதியாக பேசுகிறீர்கள், அது எனக்கு அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஆனால் அதேசமயம், ஈஷா யோக மையத்தில் நீங்கள் மஹாசிவராத்திரி கொண்டாடுகிறீர்கள். என்னைப் போன்ற ஒரு இளைஞருக்கு, இத்தகைய மத விழாக்கள் காலாவதியான சடங்குகளாகவே தோன்றுகின்றன. மஹாசிவராத்திரி இளைஞர்களுக்கு பொருத்தமானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சத்குரு: எந்த மாதிரியான விழாக்கள் உங்களுக்குப் பிடிக்கும்? வாலெண்டைன்ஸ் டே? (காதலர் தினம்) அதுவும் மத ரீதியானதுதான், ஏனெனில் அது செயின்ட் வாலெண்டைனைப் பற்றியது. இந்திய கலாச்சாரத்தில் ஒரு வருடத்தில் 365 விழாக்கள் உள்ளது. இன்றைய சூழலில், பொருளாதார காரணங்களுக்காகவும், நம் பணிச்சூழலை கட்டமைத்துள்ள விதத்தினாலும், அவற்றுள் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. கிட்டத்தட்ட 50 - 60 விழாக்கள் இன்றும் பலதரப்பை சேர்ந்த மக்களாலும் கொண்டாடப்படுகின்றன - ஆனால் அந்த எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. பெரிய அளவில் ஐந்து அல்லது ஆறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றுள் சில சமூகம் சார்ந்தவை, ஆனால் எதுவும் மத ரீதியானது அல்ல. கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியப் பண்டிகையும் சந்திர சூரிய நாட்காட்டியோடு தொடர்புடையதாகவே இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாளில் சூரிய மண்டலத்தில் நிகழ்வதைப் பொறுத்து நாம் அதற்கு உகந்த ஏதோ ஒன்றை செய்ய விரும்புகிறோம். இது முக்கியமானது. ஏனெனில், நீங்கள் உடல் என்று அழைக்கும் ஒன்று இந்த பூமியில் இருந்து வந்ததுதான். பல பேருக்கு அவர்களை மண்ணில் புதைக்கும் வரை அது புரிவதில்லை. அவர்கள் வேறெங்கோ இருந்து வந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அசைவே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது

இந்த உடலை உருவாக்க சூரிய மண்டலம் ஒரு குயவனின் சக்கரத்தைப் போல செயல்படுகிறது. சூரிய மண்டலத்துக்கு நிகழும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கும் நிகழ்கின்றது. இந்தக் கலாச்சாரத்தில், ஒரு குறிப்பிட்ட நாளில் சூரிய மண்டலத்தில் என்ன நிகழ்கிறது என்பதை மிகக் கூர்மையாக கவனித்து, அதற்கேற்ப ஒரு குறிப்பிட்ட வகையான கொண்டாட்டத்தை - அதில் குறிப்பிட்ட செயல்களை செய்யும் வகையில் நாம் வடிவமைத்துள்ளோம். மஹாசிவராத்திரி இரவில் இயற்கையாக சக்தி மேல்நோக்கி எழும் தன்மை உள்ளது. அதற்கான காரணம் பூமி ஒரு குறிப்பிட்ட துல்லியத்தில் சுழன்று வருவதுதான். பூமி தன் அச்சில் வெறுமனே சுழல்வது இல்லை - அதில் எப்போதும் ஒரு அசைவு உள்ளது. அந்த அசைவு பூமியில் ஒரு குறிப்பிட்ட சூழலை உருவாக்குகிறது. எனவே, மஹாசிவராத்திரி அன்று, பூமியின் வட அரைக்கோளத்தில் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி எழும் தன்மை உள்ளது. இதை நீங்கள் நம்பாவிட்டால், பௌர்ணமி அன்றோ அமாவாசை அன்றோ கடற்கரைக்கு சென்று வெறுமனே அமர்ந்திருங்கள் - முழுக்கடலுமே மேலெழும்ப முயற்சிப்பதை நீங்கள் காண்பீர்கள்.

உங்கள் உடலில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் நீர்தான் உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் உடலில் உள்ள அனைத்து திரவங்களும் மேலெழும்புகின்றன. மனநோய் மருத்துவமனைகளில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்வதை நீங்கள் பார்க்க முடியும். அதற்கு காரணம், மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அந்த நாட்களில் இன்னும் அதிகமாக குழப்பத்திற்கு உள்ளாவார்கள். சந்திரன் பித்து பிடிக்கச் செய்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். சந்திரன் பித்தம் கொள்ளச் செய்வதில்லை. அது வெறுமே அனைத்தையும் மேலெழும்பச் செய்கிறது. நீங்கள் சிறிது பித்து பிடித்து இருந்தால், அது உங்களை மேலும் பித்தம் கொள்ளச் செய்யும். நீங்கள் சிறிது அன்பாக இருந்தால், அது மேலும் உங்களை அன்பு கொள்ளச் செய்யும். நீங்கள் சிறிது தியான நிலையில் இருந்தால் அது மேலும் தியான நிலைக்கு உங்களை இட்டுச் செல்லும். உங்கள் தன்மை எதுவாக இருந்தாலும் அது மேம்படும். ஏனெனில், நம் உடல் அமைப்பில் அன்று ஒரு வகையான எழுச்சி உள்ளது.

சூரிய மண்டலத்துக்கு நிகழும் அனைத்தும் ஒரு வகையில் உங்களுக்கும் நிகழ்கின்றது.

அதற்கு நீங்கள் தயாரா?

டிசம்பர் 21-ஆம் தேதியையொட்டி நிகழும் குளிர்கால சம பகலிரவு நாளுக்கு பிறகு வரும் மஹாசிவராத்திரி இரவில் இயற்கையாகவே ஒரு பெரும் எழுச்சி நிகழும் வகையில் இந்த பூமியின் சுழற்சி துல்லியமாக உள்ளது. மஹாசிவராத்திரி அன்று சக்தி மேலெழும்ப முயற்சிக்கும் போது நீங்கள் படுத்திருந்தால் அதனை நீங்கள் தடை செய்துவிடுவீர்கள். இதனால் நீங்கள் நன்மையை இழப்பது மட்டுமல்லாமல், மிக நுண்ணிய வகையில் உங்களை நீங்களே பாதித்துக் கொள்ளவும் கூடும். மிக முழுமையான மனிதராக வளர்ச்சியுற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் மட்டுமே இவை அனைத்தும் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். முழுமையான மனிதர் என்பதற்கு அர்த்தம், திறந்துகொள்ளக்கூடிய வகையில் உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொரு திறனும் திறந்து கொள்வதுதான். குடித்துவிட்டு உறங்குபவராக நீங்கள் இருந்தால் அது உங்களைப் பொருத்தது. ஆனால் நீங்கள் ஒரு முழுமையான மனிதராக மாற விருப்பம் கொண்டால், முழுவீச்சில் அனைத்தும் உங்களுக்கு நிகழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் உங்கள் அமைப்பில் நிகழும் எல்லா சிறு மாற்றங்களையும் கவனித்து அதை சரியாக கையாள்வீர்கள். எனவே அந்த இரவில் நீங்கள் நேராக அமர்ந்து உங்கள் முதுகுத்தண்டை நிமிர்த்தி வைத்திருக்க விரும்புவீர்கள். சக்தி மேலெழும்பும் போது அது மேலும் எழுச்சி பெறுவதற்கு உதவ நீங்கள் விரும்புவீர்கள். இதற்காகவே நாம் விழித்திருக்கச் சொன்னோம் - அதாவது கவனத்தோடு இருங்கள், முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி வைத்திருங்கள் என்றோம்.

ஆனால் உங்களால் வெறுமனே பல மணி நேரம் சும்மா அமர்ந்திருக்க முடியாது. எனவே உங்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டியுள்ளது. மஹாசிவராத்திரி இரவில், மாலை ஆறு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை நமக்கு கொண்டாட்டம் உள்ளது - அனைவரையும் விழித்திருக்கச் செய்ய 12 மணிநேரம் இடைவிடாத இசை, நடனம், தியானம் மற்றும் வேறு பல நிகழ்வுகள். ஈஷா யோக மையத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 70 பேர்களைக் கொண்டு முதல் மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தை நாம் துவக்கினோம். கடந்த வருடம், 100-க்கும் மேலான சேனல்கள் இந்த நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பு செய்தன. உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் நேரலையில் நம்மோடு இணைந்திருந்தார்கள். நம் மஹாசிவராத்திரி கொண்டாட்டம் இவ்வாறு வளர்ந்திருப்பதற்கான காரணம், மக்கள் இதன் பலனை உணர்ந்ததுதான்.

Shivratri ad here

மஹாமந்திரம்

- வாழ்வையும் மரணத்தையும் ஆள்வதற்கான ஒரு கருவி?

1995-ஆம் ஆண்டு முதல், மஹாசிவராத்திரி மிகுந்த ஆனந்தத்தோடும் ஆழ்ந்த அனுபவத்தோடும் ஈஷா யோக மையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. காலம் செல்லச்செல்ல இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான மக்களை சென்றடையும் விதமாக மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இருப்பினும் மஹாசிவராத்திரியின் சில அம்சங்கள் அன்று முதல் இன்று வரை அப்படியே மாறாமல் இருக்கிறது. அதில் ஒரு முக்கியமான அம்சம், சத்குரு வழிநடத்தும் நள்ளிரவில் நடைபெறும் தியானம் - அந்த தியானத்தில் "ஆஉம் நம ஷிவாய" மஹாமந்திர உச்சாடனம் செய்யப்படுகிறது. இந்த மந்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நமக்கு விளக்குகிறார் சத்குரு.

மந்திரம் என்றால் என்ன?

சத்குரு: மந்திரம் என்று நாம் குறிப்பிடுவது தூய்மையான ஒலியைதான். இன்று நவீன விஞ்ஞானம், இந்த முழு படைப்புமே வெவ்வேறு வழிகளில் வெளிப்படும் ஆற்றலின் அதிர்வு என்று உங்களுக்கு நிரூபிக்கின்றது. எங்கு அதிர்வு இருக்கிறதோ அங்கு நிச்சயம் ஒலியும் இருக்கும். இந்த முழு படைப்பும் ஒலிதான். அதில் வெவ்வேறு பரிமாணங்களை திறக்கும் திறன் கொண்ட சில ஒலிகளை நாம் கண்டறிந்துள்ளோம்.

குறிப்பிட்ட ஒலிகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக உபயோகிக்கப்படுகின்றன - இத்தகைய முதன்மையான ஒலிகளே பொதுவாக மந்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மந்திரங்களில் வெவ்வேறு வகைகள் உள்ளன. வெற்றி பெறவும், பொருள்களை அடைவதற்கும் மந்திரங்கள் உள்ளன. ஆனந்தம் மற்றும் அன்பைக் கொண்டுவரும் மந்திரங்கள் உள்ளன. உணர்தலின் மற்ற பரிமாணங்களைத் திறக்கவும் மந்திரங்கள் உள்ளன.

சரியான விழிப்புணர்வோடு ஒரு மந்திரத்தை திரும்பத் திரும்ப உச்சரிப்பது என்பது உலகின் பெரும்பாலான ஆன்மீக முறைகளில் அடிப்படையான சாதனாவாக விளங்குகிறது. மந்திரங்களை உபயோகிக்காமல் தியானத்தின் மூலம் தங்கள் சக்தியைத் தூண்ட தெரிந்தவர்கள் வெகு சிலர்தான் உள்ளனர். தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களுக்கு தங்களைத் தாங்களே இயக்கிக்கொள்ள மந்திரம் தேவைப்படுகிறது.

யோகக் கலாச்சாரத்தில் மஹாமந்திரமாக அறியப்படும் அடிப்படையான மந்திரம் "ஆஉம் நம ஷிவாய."

"ஆஉம்" உச்சரிப்பதற்கான சரியான முறை

"ஆஉம்" என்ற ஒலியை "ஓம்" என்று உச்சரிக்கக் கூடாது. வாயைத் திறந்து "ஆஆஆ" என்று உச்சரித்தபடியே மெதுவாக உங்கள் வாயை மூடும்போது அது "உஉஉ" மற்றும் "மமம" என்று மாறும். இது இயற்கையாக நிகழ்வது. நீங்கள் உருவாக்கக்கூடிய ஒன்றல்ல. உங்கள் வாயைத் திறந்து நீங்கள் வெளிமூச்சுவிட்டால் அது "ஆஆஆ" என்று மாறும். வாயை நீங்கள் மூடத் துவங்கும் போது மெதுவாக அது "உஉஉ" என்று மாறி, முடிவில் வாயை மூடும் போது "ம்ம்ம்" என்று ஆகும். "ஆ", "உ" மற்றும் "ம" - இவை படைப்பின் அடிப்படையான ஒலிகள். இந்த மூன்று ஒலிகளையும் நீங்கள் சேர்ந்து உச்சரித்தால், "ஆஉம்" என்ற ஒலியைப் பெறுவீர்கள். "ஆஉம்" என்பதுதான் மிக அடிப்படையான மந்திரம். எனவே, மஹாமந்திரமானது "ஓம் நம சிவாய" என்று உச்சரிக்கப்படக் கூடாது - அதை "ஆஉம் நம ஷிவாய" என்றே உச்சரிக்க வேண்டும்.

இது அழித்தல் செயல்புரியும் சிவனின் மந்திரம். அவர் உங்களை அழிப்பதில்லை, ஆனால் உங்களுக்கும் வாழ்வின் மேலான சாத்தியங்களுக்கும் இடையே உள்ள தடைகளைத்தான் அவர் அழிக்கிறார். கர்மாவின் வலைப்பின்னல்களை துடைத்தெறியும் விதமாக இந்த மந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் உங்களின் ஞானம் மேம்படுவதுடன், படைத்தலின் மேலான பரிமாணம் உங்களைத் தொடுவதற்கு நீங்கள் தயாராகிறீர்கள்.

மகத்தான ஆற்றல் பொருந்திய ஐந்து எழுத்துகள்

"ந-ம-ஷி-வா-ய" என்பவை பஞ்சாட்சரம் அல்லது திருவைந்தெழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. மகத்தான காரியங்களை நிகழ்த்தும் ஐந்து எழுத்துகளின் அற்புதமான சீரமைப்பாக இந்த மந்திரம் விளங்குகிறது. காலம் வரைந்துள்ள வரலாற்றில், அநேகமாக அதிகப்படியான மக்கள் தங்களின் அறுதியான ஆற்றலை இந்த ஐந்து எழுத்துகள் மூலம் உணர்ந்திருக்கிறார்கள்.

திருவைந்தெழுத்துகள் மனித அமைப்பின் ஐந்து முக்கிய மையங்களோடு தொடர்புடையதாகவும், அந்த மையங்களைத் தூண்டும் ஒரு வழிமுறையாகவும் இருக்கின்றன. இந்த மந்திரத்தை நாம் சுத்திகரிக்கும் செயல்முறையாக உபயோகிக்க முடியும். அதே சமயம் நம்மால் அடையக்கூடிய அனைத்து தியான நிலைகளின் அடித்தளமாகவும் இதைக் கொள்ளலாம். இல்லையெனில், பெரும்பாலான மக்களால், அவர்களின் உள்ளே மந்திரத்தின் கணிசமான அதிர்வை உருவாக்காமல், தியான நிலையை தக்க வைத்துக்கொள்ள முடியாது. உங்களின் மனப்பாங்குகள் மற்றும் உங்களின் உடல் சக்தி ஆகியவை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கீழே மூழ்கிவிடாமல் தடுக்கத் தேவைப்படும் அடிப்படையான அதிர்வை உங்கள் வாழ்வில் கொண்டு வருவதற்கான மிக முக்கியமான ஒரு படியாக மந்திரம் விளங்குகிறது.

இயற்கையின் ஐந்து கூறுகளையும் இந்த திருவைந்தெழுத்துகள் குறிப்பிடுகின்றன. 'ந' என்பது நிலம், 'ம' என்பது நீர், 'ஷி' என்பது நெருப்பு, 'வா' என்பது காற்று 'ய' என்பது ஆகாயம். நீங்கள் இந்த பஞ்சாட்சரங்களின் மீது ஆளுமை கொண்டால், உங்கள் விழிப்புணர்வில் உள்ள ஐந்து கூறுகளினால் உருவான எல்லாவற்றையும் அவை கரைத்துவிடும்.

பஞ்சபூதங்களின் மீது ஆளுமை, வாழ்வின் மீது ஆளுமை

சிவனின் முக்கியமான அம்சம் யாதெனில் அவர் பூதேஸ்வரர் - பஞ்சபூதங்களின் மீது ஆளுமை கொண்டவர். முழு படைப்புமே வெறுமே இந்த ஐந்து கூறுகளின் விளையாட்டுதான். வெறும் ஐந்து மூலப்பொருட்களைக் கொண்டு இவ்வளவு மகத்தான படைத்தல் நடந்துள்ளது! இந்த ஐந்து கூறுகளின் மீது உங்களுக்கு சிறிதளவு ஆளுமை வந்தால் கூட வாழ்வு, இறப்பு மற்றும் உங்களை சுற்றியுள்ள அனைத்தின் மீதும் உங்களுக்கு ஆளுமை வந்துவிடும். ஏனெனில் அனைத்தும் இந்த ஐந்து கூறுகளினால்தான் உருவாக்கப்பட்டுள்ளன. யோகத்தின் மிக அடிப்படையான பயிற்சி பூதசுத்தி - உங்கள் அமைப்பின் ஐந்து கூறுகளை சுத்திகரித்து அவற்றை உங்கள் ஆளுமையில் எடுத்து வரும் பயிற்சி.

இந்த ஐந்து கூறுகள் மீது உங்கள் ஆளுமை இருந்தால் உங்களின் உடல் ரீதியான அம்சத்தின் மீது உங்கள் ஆளுமை முழுமைபெறும். ஏனெனில் உங்கள் உடல் முழுமையுமே வெறுமே இந்த ஐந்து கூறுகளின் விளையாட்டு மட்டுமே. இந்த ஐந்து கூறுகளும் எவ்வாறு செயல்படவேண்டும் என்ற அறிவுறுத்தலை உங்களிடமிருந்து பெற்றால், பின்னர் ஆரோக்கியம், நல்வாழ்வு, வெற்றி மற்றும் வாழ்வின் மீதான ஆளுமையும் இயல்பான ஒரு விளைவாக அமையும்.

சத்குரு உச்சரிப்பில் "ஆஉம் நம ஷிவாய"

(1-மணிநேர பதிவேற்றம்):

1 of 20
Share
Project
Current Page
Share
Tweet
Pin
Linkedin
Isha Foundation
ஈஷா காட்டுப்பூ - பிப்ரவரி 2021
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20