அகோரனும் நானே சுந்தரனும் நானே
பார்வதியுடனான தன் திருமணத்தின் போது, சிவன் இரண்டு வடிவங்களை வெளிக்காட்டினார் - ஒன்று அகோரன் மற்றொன்று மிக அழகான சுந்தர ரூபம்.
இமாலயத்தின் அரசன் தன் மகள் பார்வதியின் திருமணத்தை அறிவித்த போது அந்தப் பகுதியில் இருந்த அனைவரும் அப்பெரும் திருமணத்தில் கலந்துகொள்ள வந்திருந்தனர். இந்தியக் கலாச்சாரத்தில், மணமகனானவர், அலங்காரமாக உடை உடுத்தி, தன் செல்வச் செழிப்பை பறைசாற்றும் ஆபரணங்களை அணிந்து, உற்றார் உறவினர் புடை சூழ குதிரை மீதமர்ந்து கம்பீரமாக திருமணம் செய்ய வருவார். ஆனால் இங்கோ சிவன் வந்த போது, அவரது கண்கள் மேலே சொருகி, முழு போதையில், அப்போதுதான் கொல்லப்பட்ட மதயானையின் தோலை ரத்தம் சொட்ட சொட்ட மேலாடையாக அணிந்து கொண்டு, உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சாம்பலை பூசிக்கொண்டு, சடாமுடியோடு ஒரு அகோரனாக வந்தார். மேலும் அவருடன் பரிவாரமாக உடன் வந்த நண்பர்கள், கானர்கள். அவர்களில் ஒருவர் கூட மனித வடிவில் இல்லை, அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டதோ யாருக்கும் புரியாத இரைச்சலான ஒலியாக இருந்தது. இப்படி ஒரு குழுவோடு நாட்டின் இளவரசியை மணமுடிக்கும் மணமகனாக நகர்வலம் வந்தார் சிவன்.
இதைப் பார்த்த அனைவரும், "இதுதான் இளவரசியின் மாப்பிள்ளையா?" என்று திகைத்துப் போயினர். பார்வதியின் தாய் மீனா, "இந்த மனிதர்தானா?" என கேட்டார். "ஆம், இவர்தான் என் இறைவன்," என்று கூறினாள் பார்வதி. மீனா மயங்கி விழுந்துவிட்டார். அவர் மயக்கத்திலிருந்து கண் விழித்ததும் பார்வதியிடம், "இந்த ஒன்றை மட்டும் எனக்காக செய் - இந்த மனிதரை நீ மணந்துகொள்ளாதே. நீ அவ்வாறு செய்தால் நான் என் உயிரை மாய்த்துக்கொள்வேன்," என்று கூறினார்.
பின்னர் பார்வதி சிவனிடம் சென்று, "நீங்கள் எத்தகைய வடிவங்களையெல்லாம் எடுக்க வல்லவர் என்று என்னிடம் இதற்கு முன் காட்டியுள்ளீர்கள். நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பது பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. திருமணம் முடிந்த பின்னர் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களுடன் நான் வாழ்வேன். ஆனால் இந்த திருமணத்திற்காக, என் தாயாரின் நலனுக்காக, தயவு செய்து அழகான உருவத்தோடு வாருங்கள்" என கெஞ்சி கேட்டுக்கொண்டாள். சிவன் போதை நிலையில் இருந்து தன்னை உலுக்கி வெளியே வந்து, சுந்தரமூர்த்தி அல்லது சுந்தரேசர் என்று தற்போது நாம் அழைக்கும் வடிவத்தை எடுத்தார். ஆண்மையின் பிரகாசம் மிளிரும் கம்பீரமான ஒரு வெளிப்பாடாக, நறுமணம் வீசும் மலர்களை சூடிக்கொண்டு, நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத மிக அழகான வடிவத்தில் சுந்தர ரூபனாக சிவன் வந்தார். பார்வதியின் தாயார் முற்றிலும் ஈர்க்கப்பட்டார், பின்னர் பார்வதியும் சிவனும் திருமணம் புரிய அமர்ந்தனர்.