logo
logo
Drawing of Shiv during tandav.

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் (Shiva Tandava Stotram Lyrics, Meaning in Tamil)

சிவனின் பக்தனும், அசுர அரசனுமான ராவணன் சிவதாண்டவ ஸ்தோத்திரத்தை இயற்றினான். இந்தப் பாடல் எப்படி உருவானது என்ற சுவாரஸ்யமான கதை, பாடல் வரிகள் மற்றும் அதன் அர்த்தம் இந்தப் பதிவில்...

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை (Shiva Tandava Stotram in Tamil)

சத்குரு: ராவணன் சிவனின் மிகத் தீவிர பக்தன். இவர்கள் இருவரைப் பற்றி பல கதைகள் உள்ளன. பக்தன் என்பவன் சிறந்தவனாகவோ உயர்ந்தவனாகவோ ஆகிறான் என்றல்ல, ஆனால் ராவணன் மிகச் சிறந்த பக்தனாக இருந்தான். தென் முனையில் இருந்து கைலாய மலைக்கு நடந்தே வந்தான். இதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கவேண்டும். இத்தனை தூரம் நடந்தே கடந்து, கைலாயம் வந்தடைந்து, சிவனின் அருமை பெருமைகளை அவன் பாட ஆரம்பித்தான். ராவணனின் கையில் ஒரு மத்தளம் இருந்தது. அதை வைத்து தாளம் எழுப்பி, முன்னேற்பாடு ஏதுமின்றி அங்கேயே அப்படியே 1008 பாடல்களை அவன் இயற்றினான். இதுவே சிவ தாண்டவ ஸ்தோத்திரமாக ஆனது.

இந்த இசை கேட்டு சிவன் மனமகிழ்ந்தான். அதில் மெய் மறந்து போனான். பாடல்களை இயற்றியபடி ராவணன் மெதுவாக கைலாயத்தின் தென்முகம் மீது ஏற ஆரம்பித்தான். அப்படியே ஏறி கிட்டத்தட்ட மலையின் உச்சியை அடைந்தான். அப்போதுதான் பார்வதி தேவி ராவணனைக் கண்டாள். சிவனோ ராவணன் மலையேறி வருகிறான் என்பதையே கவனிக்காமல் இசையில் மெய் மறந்திருந்தான்.

மலை உச்சியில் இருவருக்கு மட்டுமே இடம் இருந்தது! மெய்மறந்த நிலையில் இருந்து சிவனை எழுப்பி வரவிருக்கும் பிரச்சினையை சிவனிற்கு உணர்த்த பார்வதி தேவி முயன்றாள். "ராவணன் மலை உச்சிக்கே வந்து விடுவான் போலிருக்கிறது! எழுந்திருங்கள்" என்று. ஆனால் சிவனோ ராவணனின் இசையிலும், பாடல் நயத்திலும் முழுவதுமாய் மூழ்கியிருந்தான். ஒருவழியாக ராவணன் கைலாய மலையின் உச்சியை அடையவிருந்த அந்த நேரத்தில் பார்வதி தேவி சிவனை எழுப்பிவிட்டார். கண்விழித்த சிவன் காலால் எட்டி உதைக்க, ராவணன் மலையினின்று சருக்கியவாறு கீழே சென்றான். அவன் சருக்கியபோது அவனது மத்தளமும் மலையை உரசி வர, கைலாயத்தின் தென்முகத்தில் வடு ஏற்பட்டது என்பார்கள். கைலாயத்தின் தென்முகத்தில் மேலிருந்து கீழாக நடுவில் கோடு விழுந்தது போல் ஒரு வடு இருப்பதை நீங்கள் காணமுடியும்.

கைலாயத்தின் முகங்களை ஒன்றை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது முறையல்ல, சரியுமல்ல எனினும், நமக்கு கைலாயத்தின் தென்முகம் மிக நெருக்கமானது. ஏனெனில் அகஸ்திய முனிவர் தென்முகத்தில்தான் ஐக்கியமானார். தென்னிந்தியர்களைப் பொறுத்தவரை தென்முகம்தான் சிறந்தது, உகந்தது, எங்கள் மனதிற்கு மிகப் பிடித்தது. இது எங்களிடம் இருக்கும் பாரபட்சம்தான் எனினும், எனக்கும்கூட தென்முகம்தான் இருப்பதிலேயே அழகிய முகம் என்று தோன்றும்! எப்படி இருப்பினும் அதுதான் மிக வெண்மையான முகம் ஏனெனில் அப்பக்கத்தில்தான் பனி அதிகமாக விழும்.

பல வகைகளிலும் தென்முகம்தான் மிகத் தீவிரமான முகம் எனினும், அந்தப் பக்கத்திற்கு வெகுசிலரே செல்கின்றனர். மற்ற முகங்களைவிட இம்முகத்தை அடைவதற்கான பாதை மிக சிரமம் என்பதால், வெகு சிலர், அதிலும் குறிப்பிட்ட விதமான ஒருசிலர் மட்டுமே அங்கு செல்வர்.

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடல் வரிகள் (Shiva Tandava Stotram Lyrics in Tamil) மற்றும் அதன் அர்த்தம்



ஜடாடவி கலஜ்ஜல பிரவாஹபாவிதஸ்தலே
கலேவலம்பிய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம்
டமட் டமட் டமட்தமன்னி நாதவட்டமர்வயம்
சகார சந்த்ததாண்டவம் தனோத்து ந சிவ சிவம்

ஜடாமுடியில் இருந்து ஊற்றும் நீர் அவர் கழுத்தை பிரதிஷ்டை செய்ய,
அக்கழுத்தில் பாம்பு மாலையாய் வீற்றிருக்க,
டமரு மத்தளம் "டமத் டமத் டமத்" என்று சப்தம் எழுப்ப
சிவபெருமான் புனிதத் தாண்டவம் ஆடுகிறார்.
நம் அனைவருக்கும் அவர் வளம் அள்ளி வழங்கட்டும்.

ஜடா கடாஹ சம்பிரம பிரமணிலிம்பனிர்ஜரி
விலோலவிச்சிவல்லரி விராஜமானமுர்தனி
தகதகதக ஜ்வலல்லாட பட்டபாவகே
கிஷோரா சந்திரசேகரே ரதிஹ் பிரதிஷணம் மமா

ஜடாமுடியின் ஆழமான கிணற்றில் இருந்து தழும்பும்
புனிதமான கங்கை நதியின் அலைகள் வரி வரியாய் அலங்கரிக்கும் தலையும், நடுநெற்றியில் தகிக்கும் நெருப்பும்,
பிறைநிலவை ஆபரணமாக தலையில் அணிந்தவனுமான
சிவனில் நான் ஆழமான ஈடுபாடு கொண்டிருக்கிறேன்

தராதரேந்திர நந்தினிவிலாசபந்துபந்துரா
ஸ்பூரதிகந்தசந்ததி பிரமோதமானமானசே
கிருபாகடாக்ஷதோரணி நிருத்துர்தராபதி
க்வசித்தி கம்பரே மனோவினோதமேது வஸ்துனி

பர்வதராஜனின் மகளான பார்வதியின் துணைவனும்
பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தின் உயிர்கள் அனைத்தும் வசிக்கும் மனம் கொண்டவனும்
அனைத்தையும் ஊடுறுவும் தன் கருணைப் பார்வையால் மிகக் கடுமையான எதிர்ப்புகளையும் அடக்கி ஆழ்பவனும்
சொர்க்கத்தையே ஆடையாய் அணிந்தவனுமான
சிவனில் என் மனம் லயிக்கட்டும்.

ஜடா பூஜங்க பிங்களஸ் புரத்ஃபனமணிபிரபா
கடம்பகுங்கும திரவப்பிரலிப்த திக்வதுமுகே
மதாந்த சிந்து ரஸ்புரத் வகுட்டரியமேதுரே
மனோ வினோதமத்புதம் பிபர்த்து பூதபர்த்தரி

அனைத்து ஜீவராசிகளின் உற்ற துணையாய் இருப்பவனும்
நெளிந்து ஊறும் பாம்பின் செந்நிற தலையும் அதில் மின்னும் மரகதமும்
எட்டுத்திக்கிலும் விதவிதமாக வர்ணங்களை ஜொலிக்கச் செய்ய,
போதைமயக்கத்தில் ஆழ்ந்த மாபெரும் யானையின் தோலை ஆடையாய் உடுத்தியுள்ள எம்பெருமான் சிவனில் லயித்து
நான் அளவற்ற இன்பம் பெறவேண்டும்

சஹஸ்ர லோசன பிரபிர்த்யா ஷேஷலேகஷேகரா
பிரசுண துலிதோரணி விதுசராங்ரிபிதபுஹு
புஜங்கராஜா மாலயா நிபத்தஜடாஜுடகா
ஷ்ரியை சிராய ஜாயாதாம் சகோர பந்தூஷேகரஹ

நிலவை மகுடமாக அணிந்தவனும்
சிவப்பு-நிற பாம்பைக் கொண்டு ஜடாமுடியை கட்டியவனும்
இந்திரன், விஷ்ணு மற்றும் பிற கடவுள்களின் தலைகளில் இருந்து வீழும்
மலர்களால் அவன் பாதம் வைக்கும் இடம் கறைபடிந்து போயிருக்க
எம்பெருமான் சிவன் நம் அனைவருக்கும் வளம் அளிக்கட்டும்

லலாதசத்வர ஜ்வலதனஞ்ஜய ஸ்ஃபுலிங்கபா
நிபீடபஞ்சசாயகம் நமன்ன்லிம்பநாயகம்
சுதா மயூக லேகயா விராஜமாணஷேகரம்
மகா கபாலி சம்பதே ஷிரோஜடாலமாஸ்துனஹ

தன் நெற்றியில் தகிக்கும் நெருப்பால் காமதேவனை எரித்தவனும்
கடவுள்கள் அனைவரும் போற்றி வணங்குபவனும்
பிறைநிலவை ஆபரணமாய் அணிந்தவனுமான
எம்பெருமான் சிவனின் ஜடாமுடி கொண்டுள்ள சித்திகளை
நாமும் பெறவேண்டும்

கரால பால பட்டிகாதகத் தகத்தக ஜ்வலா
தனஞ்சய ஹுதிக்ருத பிரச்சண்டபஞ்சசாயகே
தாரதரேந்திர நந்தினி குசாகிரசித்ரபத்ரக
பிரகல்பனைகஷில்பினி த்ரிலோசனே ரதீர்மமா

முக்கண் உடையவனும்
சக்திவாய்ந்த காமதேவனை அக்னிக்கு இறையாக்கியவனும்
"தகத் தகத்" எனும் சப்தத்திற்கேற்ப அதீத சக்திகொண்ட அவன் நெற்றியில் அக்னி தகிக்க
பர்வதராஜனின் மகளான பார்வதி தேவியின் மீது அழகழகாக அலங்காரக் கோடுகள்
வரையக்கூடிய ஒரே ஓவியனுமான
எம்பெருமான் சிவனில் மட்டுமே நான் ஈடுபாடு கொண்டுள்ளேன்

நவீன மேக மண்டலி நிருத்ததுர்தரஸ்புரத்
குஹு நிஷிதினிதமா பிரபந்தபத்தகந்தரஹ
நிலிம்பனிர்ஜரி தரஸ்தனோது க்ரிதி சிந்துரஹ
கலானிதானபந்துராஹ் ஷ்ரியம் ஜகதுரந்தரஹ

இந்தப் பிரபஞ்சத்தின் எடையைத் தாங்குபவனும்,
நிலவை அணிந்து அனைவரின் மனதை கவர்பவனும்
புனித கங்கையைக் கொண்டவனும்
அமாவாசை நள்ளிரவு வானில் மிதக்கும் மேகம் போல்
கருநிற கழுத்துடையவனுமான
எம்பெருமான் சிவன் அனைவருக்கும் வளம் அளிக்கட்டும்.

பிரஃபுல்ல நீல பங்கஜ பிரபஞ்சகாலிம்ச்சதா
வ்தம்பி கந்தகண்டலி ரரூச்சி பிரபத்தகந்தரம்
ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம்
கஜச்சிதாந்தகச்சிதம் தமம்தகச்சிதம் பஜே

கோவில்களின் பிரகாசம் மிளிரும் கழுத்தும்,
பிரபஞ்சத்தின் கருமையை வெளிப்படுத்தும் முழுதாய் மலர்ந்த
நீலநிற தாமரைகள் அலங்கரித்த கழுத்தும் கொண்ட
மன்மதனை அழித்த, திரிபுராவை அழித்த,
லௌகீக வாழ்வின் பற்றுகளை அழித்த, யாகத்தை அழித்த,
இராட்சசன் அந்தகனை அழித்த, யானைகளை அழித்த,
இறப்பின் கடவுள் யமனை உணர்ச்சிவசப்படச் செய்தவனுமாகிய
எம்பெருமான் சிவனை நான் வேண்டுகிறேன்.

அகர்வகர்வ சர்வமங்களா கலாகதம்பமஞ்சரி
ரசப்பிரவாஹ மாதுரி விஜ்ரும்பனா மதுவ்ரதம்
ஸ்மராந்தகம் புறாந்தகம் பவாந்தகம் மகாந்தகம்
கஜாந்தகாந்த காண்டகம் தமந்தகாண்டகம் பஜே

சுற்றியிருக்கும் புனிதமான கடம்ப மலர்களில் இருந்து வெளிவரும்
தேனின் இனிய வாசத்தை முகர்ந்து அலைபாயும் தேனீக்கள் சூழ்ந்திருக்கும்,
மன்மதனை அழித்த, திரிபுராவை அழித்த,
லௌகீக வாழ்வின் பற்றுகளை அழித்த, யாகத்தை அழித்த,
இராட்சசன் அந்தகனை அழித்த, யானைகளை அழித்த,
இறப்பின் கடவுள் யமனை உணர்ச்சிவசப்படச் செய்தவனுமாகிய
எம்பெருமான் சிவனை நான் வேண்டுகிறேன்.

ஜயத்வதபிரவிப்பிரம பிரமத்புஜங்கமாசஃபூர்
திக்திக்தி நிர்கமத்கரால பால் ஹவ்யவாத்
திமித்திமித்திமித்வ நன்ம்ருதங்கதுங்கமங்கள
த்வனிக்ரமப்பிரவர்த்திதா பிரச்சண்ட தாண்டவ சிவா

உயரிய நெற்றியில் எரியும் நெருப்பு…
கழுத்தில் இருந்தவாறு வானில் நெளிந்து ஆடும் பாம்பின்
மூச்சால் எல்லாத் திசைகளிலும் பரவ
"திமத் திமத்" என்று ஒலிக்கும் மத்தளத்தின் ஓசையோடு ஒன்றி
தாண்டவமாடுகிறார் எம்பெருமான் சிவன்.

த்ருஷத்விசித்ர தல்பயோர் புஜங்க மௌக்தி கஸ்ரஜோர்
கரிஷ்தரத்ன லோஷ்டயோ சுஹ்ருத்வி பக்ஷபக்ஷயோஹ்
த்ருஷ்ணரவிந்த சக்ஷுஷோ பிரஜாமஹி மஹேந்திரயோஹ்
சம பிரவர்தயன்மனா கடா சதாஷிவம் பஜே

சாதாரண மனிதனையும் அரசனையும் ஒன்றாய் பாவிக்கும்
புல்லையும் தாமரையையும் ஒன்றாய் பாவிக்கும்
நண்பர்களையும் எதிரிகளையும் ஒன்றாய் பாவிக்கும்
விலையுயர்ந்த மாணிக்கத்தையும் கைப்பிடி மண்ணையும் ஒன்றாய் பாவிக்கும்
பாம்பையும் மலர் மாலையையும் ஒன்றாய் பாவிக்கும்
அவ்வளவு ஏன் உலகின் வெவ்வேறு படைப்புகளையுமே ஒன்றென பாவிக்கும்
என்றென்றும் அனுகூலமான கடவுள் சதாசிவனை,
நான் பூஜிக்கும் நாள் எப்போது வருமோ?

கடா நிலிம்பனிர்ஜரி நிகுஞ்சஜகோட்டரே வசன்ஹ்
விமுக்ததுர்மதி சதா ஷிரா ஸ்தமஜ்ஜலிம் வஹான்ஹ்
விமுக்தலோலச்சனோ லலாமபாலலக்னகா
ஷிவேதி மந்திரமுச்சரன் சதா சுகி பவாம்யஹம்

புனிதமான கங்கை நதியின் அருகில் குகையில் வாழ்ந்து
என் கைகள் எப்போதும் என் தலைமீது கூப்பியிருக்க
புனிதமற்ற என் எண்ணங்கள் நீங்கி
பிரகாசமான நெற்றிகொண்ட, மிகத் தீவிரமான கண்கள் கொண்ட
என் கடவுளின் மீதான பக்தியில் ஒவ்வொரு கணமும்
சிவன் எனும் திருமந்திரத்தை உச்சரித்துக் கொண்டே
நான் மகிழும் நாள் எப்போது வரும்?

இமாம் ஹி நித்யமேவா முக்தமுட்டமோட்டமம் ஸ்தவம்
பதன்ஸ்மரன் புருவண்ணரோ விஷுத்திமேதி சந்ததம்
ஹரே குரவ் சுபக்திமாஷு யதி நன்யத கதிம்
விமோஹனம் ஹி தேஹினம் சுஷங்கரஸ்ய சிந்தனம்

இந்த ஸ்தோத்திரத்தை இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் விதத்திலேயே
படித்து, அதை நினைவில் கொண்டு உச்சரிப்பவர் யாரோ,
அவர் தூய்மையாகி உயரிய குருவான சிவனின் மீது பக்தியும் பெறுவர்.
இந்த பக்திக்கு வேறு வழியோ மார்க்கமோ கிடையாது.
சிவன் என்ற எண்ணம், சிவனின் நினைவு வந்தாலே
இருக்கும் மயக்கம் அனைத்தும் தெளிந்துவிடும்.

    Share

Related Tags

சிவ ஸ்தோத்திரங்கள்

Get latest blogs on Shiva

Related Content

சத்குரு 10 நிமிடங்களில் இயற்றிய 7 கவிதைகள்