உயர்கல்விப் பணியில் கால்பதிக்கும் ஈஷா
இந்த வார சத்குரு ஸ்பாட்டில், ஈஷா-மஹேந்திரா கைகோர்த்துள்ள உயர்கல்விப் பணி பற்றியும், நாகர்கோவில் மற்றும் பாண்டிச்சேரியில் தான் நடத்திய யோக வகுப்புகள் குறித்தும் எழுதுகிறார் சத்குரு. அத்துடன் நமக்கு அன்பாய் அவர் வழங்கும் குரு பௌர்ணமி வாழ்த்துக்களும் உண்டு. படித்து மகிழுங்கள்
நான் இந்தியாவுக்கு வந்திறங்கிய மூன்று வாரங்களுக்குள் மூன்று 3 நாள் இன்னர் இன்ஜினியரிங் வகுப்புகள் நடைபெற்றன. ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி சமூகத்தின் குறிப்பிட்ட நிலையிலுள்ள மக்களுக்காகவும், மற்ற இரு நிகழ்ச்சிகள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மெகா நிகழ்ச்சிகளாகவும் நடந்து முடிந்தன. பாண்டிச்சேரியில் 10,068 பங்கேற்பாளர்களும், நாகர்கோவிலில் 10,500க்கும் மேற்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.
இத்தனை ஆயிரம் மக்கள் ஆன்மீக விழிப்புணர்வு அடைய வேண்டும் என்கிற தாகத்துடன் இருப்பதைக் காணும்போது மனம் நெகிழ்கிறது. உண்மையில் இரண்டு இடங்களிலுமே பத்தாயிரம் பங்கேற்பாளர்களுக்காக மட்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், நிகழ்ச்சிகளுக்கான முன்பதிவுகளை நாம் முன்னரே நிறுத்தி வைக்க வேண்டியதாகிவிட்டது. வகுப்புகளில் பங்கேற்பாளர்கள் காட்டிய ஒழுங்கும், அர்ப்பணிப்பு உணர்வும் வார்த்தைகளில் அடங்காதவை.
இது போன்ற மாபெரும் நிகழ்ச்சிகள், இந்த சிறு நகரங்களில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இந்நகரங்களின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3-5% பேர் இந்த மூன்று நாள் வகுப்புகளில் கலந்து கொண்டனர். ஒரு சிறு நகரத்திலிருந்து இத்தனை தியான அன்பர்களும், தன்னார்வத் தொண்டர்களும் கலந்து கொள்வது என்பது உண்மையிலேயே தன்னை உணர்தலுக்கான அமைதிப் புரட்சிதான்.
Subscribe
இதற்காகத்தான் நாம் கடந்த 30 வருடங்களாக பணியாற்றி வருகிறோம். குறிப்பாக, இந்த வருடம் ஈஷாவுக்கு 30வது வருடம் மற்றும் நேற்று குரு பௌர்ணமி நாள்.
ஜூலை 2ம் தேதி, உயர் கல்வித் துறையில் ஈஷா தனது அழுத்தமான முத்திரையைப் பதித்து, தன் பணியைத் துவக்கியுள்ளது. நாம் மஹேந்திரா கல்வி நிறுவனங்களுடன் நீண்ட கால கூட்டு சேர்ந்து, தொழில்நுட்பக் கல்வியை சர்வதேசத் தரத்தில் அளிக்க இருக்கிறோம். மஹேந்திரா கல்வி நிறுவனங்கள் கடந்த 30 வருடங்களாக கல்வித் துறையில் சிறப்பாக செயலாற்றி வருகின்றன. அவர்களது கல்லூரிகளில் அருமையான உள்கட்டமைப்பு வசதிகளையும், ஆரோக்கியமான கலாச்சாரத்தையும் மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இதன் துவக்க விழாவில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தொழில் நிறுவனங்களுடன் நீண்ட கால நட்புறவு கொள்வதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், சிறந்த பொறியாளர்களையும், நிபுணர்களையும் உருவாக்க வேண்டும் என்பதும், தொழில் நிறுவனங்களின் நிபுணத்துவம் மற்றும் அனுபவங்கள் கல்விப் பணியிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் ஈஷாவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக இருக்கிறது.
இதே போன்ற ஒரு நாளில்தான் ஆதியோகியின் அருள்மழை பொழியத் துவங்கி, மனிதர்களின் வாழ்க்கையை மகத்தான சாத்தியங்கள் உடையதாக்கியது. சாதனாவின் வலிமையும், அருளின் அரவணைப்பில் இருக்கும் பேரானந்தமும் உங்களுக்குக் கிடைக்கட்டும்.