இந்த வார சத்குரு ஸ்பாட்டில், பொய், பகட்டு, நேர்மையுணர்வு பற்றி பேசும் சத்குரு, இந்த குணங்களால் உறவுகளுக்குள் ஏற்படும் பாதிப்புகளை அவருக்கே உரிய நடையில் விளக்குகிறார். பொய்களை களையெடுக்க தேவையான செயல்கள் துவங்கட்டும்!

கடந்த சில வருடங்களில், ஈஷா யோக மையத்திற்கு வரவேண்டும் என்ற ஆர்வத்தால், அவர்கள் எங்கு செல்கிறோம் என்பதை மறைத்து பொய் சொல்கிறார்கள். இது துரதிர்ஷ்டம்தான். தன் குடும்பத்திடம், வாழ்க்கைத் துணையிடம், அலுவலக அதிகாரியிடம், தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் என தினசரி ரீதியில் பொய் சொல்வதன் நீட்டிப்புத்தான் இது. பொய் சொல்வதை உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்ளும்போது, உறவுகளில் இசைவான சூழ்நிலையை காப்பது சிரமமாகிவிடும். எந்தவொரு உறவாய் இருந்தாலும் அதிலிருந்து பொய்களை களையெடுப்பது மிக மிக முக்கியம். அப்போதுதான் அழகான உறவுகள் அமையும். நீங்கள் ஒருமுறை பொய் சொன்னாலும் நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் சந்தேகிக்கும் மனப்பான்மை அவர்களுக்குள் உருவாகும். ஒரு உண்மை சொல்வதால் ஏற்படும் சின்ன சுகமின்மையைக் கூட தாங்கிக் கொள்ளும் துணிவு மக்களிடம் இல்லாததால்தான் பொய் சொல்கிறார்கள். தயவுக்கூர்ந்து சுகமின்மையை சந்தியுங்கள், எதிர்கொள்ளுங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சில யோசனைகளுக்கு பிறகு நீங்கள் ஏதோவொன்றைச் செய்ய முடிவு செய்யும்போது, யாரோ ஒருவர் அதற்கு எதிராய் இருந்தால், "நான் செய்வேன்," என்று அழுத்தமாய் சொல்லுங்கள். நீங்கள் உண்மையைச் சொன்னால், அங்கு சில அரசல்-புரசல்கள் இருக்கலாம், ஆனால் அங்கு உறவு நிலைக்கும், மதிப்பும் மரியாதையும் இருக்கும். சுகமில்லாத சூழ்நிலையை தவிர்ப்பதற்காக நீங்கள் பொய் சொன்னால் அது உறவை சீரழிக்கும். நீங்கள் எது சொன்னாலும் அது உண்மையா பொய்யா என்று அவர்களுக்கு தெரியாமல் போகும் சூழ்நிலை ஏற்படும். இரண்டாவது நபருக்குள் முடிவில்லா போராட்டம் நிகழும், அது உறவிலும் வெளிப்படும். அதனால், உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கு எது முக்கியமோ அதற்காக எழுந்து நிற்பது அவசியம். குறிப்பாக, யோகா என்று வரும்போது, நீங்கள் அதனை உங்கள் நல்வாழ்விற்காக செய்கிறீர்கள். அதனால், உங்களுக்காக எழுந்து நிற்பது உங்களுக்கும், உங்கள் உறவுமுறைக்கும், யோகத்திற்கும் நல்லது. துவக்கத்தில், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் வருத்தமடையலாம், ஆனால், நேரம் செல்லச் செல்ல அது தணிந்து போகும். குறைந்தது, உங்களை நம்பலாம் என்ற எண்ணம் வரும்.

நம்பிக்கை என்பது எளிதில் முறிகிற ஒரு விஷயம். யாரோ ஒருவர் உங்களை நூறு சதவிகிதம் நம்பினால், ஒருவிதத்தில், அவர் உங்களுக்கு ஏதுவான நிலையில் தன்னை மாற்றிக் கொள்கிறார். நீங்கள் அவருக்கு நெருக்கமாய் இருக்க அவர் அனுமதிக்கிறார். அந்த நம்பிக்கையை நீங்கள் முறித்தால், அது அவர்களுக்கு வலி உண்டாக்குகிறது. இதில் மற்றொரு அம்சம் - நீங்கள் உலகில் திறம்பட இயங்குவது நீங்கள் சம்பாதித்திருக்கும் நம்பிக்கையைப் பொறுத்திருக்கிறது. அதிகமான அறிவுத்திறன், திறமை, புத்தி என அனைத்தும் இருந்தாலும், சுற்றியுள்ள மக்களின் நம்பிக்கையை நீங்கள் சம்பாதிக்காவிட்டால், உலகில் உங்களால் எதையும் உருவாக்க இயலாது. நம்பிக்கையை சம்பாதிக்க மிக எளிமையான வழி தயக்கமில்லாமல் நேரடியாய் செயல்படுவதுதான். நீங்கள் செய்வது சரியோ தவறோ, அறிவார்ந்ததோ முட்டாள்தனமானதோ, நேரடியாய் செயல்படுங்கள். துவக்கத்தில், இது அசௌகர்யமாய் இருக்கலாம். காலம் செல்ல செல்ல, நீங்கள் செய்வதை மக்கள் பார்த்த பின்னர், நீங்கள் செய்வது தவறு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளும் நிலையில் இருக்கும்போது, நம்பிக்கை வளரும்.

பத்து பேருடைய நம்பிக்கையை நீங்கள் சம்பாதித்தால், பத்து பேருடைய சக்தி உங்களுடன் இருக்கும். நீங்கள் 10 லட்சம் மக்களுடைய நம்பிக்கையை சம்பாதித்தால், ஏதோ ஒருவிதத்தில், பத்து லட்சம் பேருடைய சக்தி உங்களுக்கு இருக்கும். நாம் அனைவரும் போதுமான கவனம் செலுத்தி, நம்பிக்கையை பேணி வளர்த்து, காக்க வேண்டும். நம்பிக்கையை முறிப்பது சுலபம், அதனை நிலைநாட்டுவது அத்தனை சுலபமல்ல. நம்பிக்கை முறிக்கப்படும்போது, செய்த தவறை குறுக்குவழிகள் கண்டுபிடித்து மறைக்க முயலாமல், தவறை ஒப்புக்கொள்வது முதல் செயலாக இருக்க வேண்டும்.

உங்கள் செயலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு, உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும், நான் வருங்காலத்தில் இப்படி இருப்பேன் என்பதை திடமாய் நிலைநாட்டினால், இழந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்பிருக்கிறது. நீங்கள் தொடர்ந்து மக்களது நம்பிக்கையை நொறுக்கிக் கொண்டே இருந்தால், யாரும் உங்களுடன் இருக்க மாட்டார்கள். மற்றவர்களுடன் நல்ல உறவுமுறையை வைத்துக் கொள்வது பற்றிய விஷயமல்ல இது. மக்கள் உங்களை நம்பினால் மட்டுமே இவ்வுலகில் உங்களால் ஏதோ ஒன்றை உருவாக்க முடியும். உண்மையானவராக, நம்பிக்கை உடையவராக இருப்பது நீதிநெறி சார்ந்த அம்சமல்ல. சமயோஜிதமாய், மிகுந்த செயல்திறனுடன் வாழக்கூடிய வழி இது.

Love & Grace