சத்குரு:

கார்த்திகை தீபம் எதற்காக?

தீபம் ஏற்றுவதற்கு காரணம் என்ன? அதற்கான அறிவியல் பின்னணி என்ன? இந்தக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை, எதை செய்தாலும் அதை மனித நல்வாழ்விற்கு வழிவகுக்கும் வகையில், விஞ்ஞான ரீதியாகவே செய்தார்கள். மனிதனின் நல்வாழ்வு, அவனின் உள்நிலை வளர்ச்சிக்கு உதவுவதோடு, அவன் முக்தியை நாடி செல்வதற்கும் வழி செய்கிறது. இவ்வகையில், விளக்கு ஏற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், நாம் பார்த்து உணர்வதற்கு, ஒளி மிக அத்தியாவசியம். நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தை நாம் புரிந்துகொள்வதில் நம் பார்வை பெரும் பங்கை வகிக்கிறது. வெளிச்சம் இல்லாவிட்டால், நம்மை சுற்றி இருக்கும் எதையும் நம்மால் உணர முடியாது. இதன் அடிப்படையில் நமக்கு ஒளி முக்கியம். ஆனால் இந்நாளின் முக்கியத்துவம் வெறும் வெளிச்சம், அல்லது விளக்கு ஏற்றுவதைப் பற்றி மட்டும் அல்ல.

இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் நீங்கள் குறைந்தது இதையாவது செய்யவேண்டும். உங்களுக்கென்று ஒன்று, உங்களுக்கு நெருக்கமானவருக்கு ஒன்று, உங்களுக்கு சிறிதும் பிடிக்காதவருக்கு ஒன்று, என்று குறைந்தது மூன்று விளக்கேனும் நீங்கள் தினமும் ஏற்ற வேண்டும்!

உத்தராயணம், தக்ஷிணாயனம்

ஒரு வருடத்தின் இந்த பாகத்தை, தக்ஷிணாயனம் (அ) சாதனா பாதை என்று அழைப்பர். இதில் இந்த கார்த்திகை மாதத்தில் தான் நாம் 'கைவல்ய பாதைக்குள்' மெதுமெதுவாக அடி எடுத்து வைக்கும் நேரம். யோக சாதனா செய்யும் வகையில், தக்ஷிணாயனம் என்பது தீவிரமாக யோக சாதனாவில் ஈடுபட்டு, நம்மை சுத்திகரித்துக் கொள்வதற்கான நேரம். உத்தராயணமோ ஞானோதயம் பெறுவதற்கான நேரம். சாதனா பாதையில் உழுவை செய்து, விதை விதைத்து, பயிர் செய்தாயிற்று. இப்போது நீங்கள் செய்த 'சாதனா'விற்கான பலன்களை அறுவடை செய்யும் நேரம். இந்த நேரத்தில் தான் உங்கள் சாதனாவின் பலன்களை உங்களுக்கு பயன்படும் விதத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். இதை பல கதைகளில் கேட்டிருப்பீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அறுவடை செய்யும் நேரம்

கார்த்திகை தீபம், karthigai deepam in tamil, விளக்கு, vilakku

பிதாமகர் பீஷ்மர், சாதனா பாதையில் இறக்க விரும்பாமல், அம்புப் படுக்கையில் காத்திருந்து, 'உத்தராயண'த்தில் உயிர் நீத்தது நாம் அனைவரும் அறிந்த கதைதான். அவர் உத்தராயணத்தில் (அ) கைவல்ய பாதையில் இறக்க விரும்பியதற்கான காரணம், அந்த நேரத்தில் தான் வாழ்க்கையின் பலன்களை அறுவடை செய்யமுடியும். நம் உள்நிலையில் அறுவடை செய்ய வேண்டியவற்றை கைவல்ய பாதையில் மிக எளிதாக அறுவடை செய்துவிடலாம். இந்த கார்த்திகை மாதம், சாதனா பாதையில் இருந்து கைவல்ய பாதைக்கு மெதுவாக மாறும் நேரம். இந்நேரத்தில் விளக்குகள், அதில் இருந்து வெளிவரும் ஒளி, ஞானோதயம், விழிப்புணர்வு, முக்திக்கான அடையாளக் குறியீடுகள். இதைக் குறிப்பதற்குத் தான் வீட்டிலே பல விளக்குகள் ஏற்றி வைக்கிறோம்.

இது ஏதோ ஒரே ஒரு விளக்கை ஏற்றுவதைப் பற்றி அல்ல. நம் கலாச்சாரத்தில் பொதுவாக கார்த்திகை மாதத்தில், எப்போதும் ஏற்றுவதை விட இரண்டு மடங்கு அதிகமாக தீபம் ஏற்றுவார்கள். ஒன்று, வருடத்தின் இந்த நேரத்தில் பகல் நேரம் குறைவாக இருப்பதால், நம் தினசரி வேலைகளை செய்ய நமக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் தேவைப்படும் என்பதால். மற்றொன்று நம் வாழ்வில் ஒளியை பெருக்கிக் கொள்ளும் நேரம் இது என்பதால்.

கார்த்திகை மாதம் செய்ய வேண்டியது:

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் என்றால், நமக்கு 700 கோடி விளக்குகள் ஏற்ற வேண்டும். ஆனால் எல்லோருக்கும் நாம் ஒருவரே ஏற்ற முடியாது என்பதால், இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் நீங்கள் குறைந்தது இதையாவது செய்யவேண்டும். உங்களுக்கென்று ஒன்று, உங்களுக்கு நெருக்கமானவருக்கு ஒன்று, உங்களுக்கு சிறிதும் பிடிக்காதவருக்கு ஒன்று, என்று குறைந்தது மூன்று விளக்கேனும் நீங்கள் தினமும் ஏற்ற வேண்டும்!

வீட்டில் விளக்கு ஏற்றுவது எதற்காக?

கேள்வி: நம் கலாச்சாரத்தில் விளக்கு ஏற்றினால், கடவுளை வணங்குவதுபோல, கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பழக்கம் உள்ளது. கார்த்திகைதீபத்தின்போது வீட்டில் நூற்றுக்கணக்கில் தீபங்கள்ஏற்றிக் கொண்டாடுகிறோம். பூஜைஅறையில் பகல் வேளையிலும் விளக்கு ஏற்றிவைக்கிறோம். அங்கங்கே பெண்கள்ஒன்று சேர்ந்து விளக்கு பூஜையும் செய்கிறார்கள். எதற்காக விளக்குக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது?

சத்குரு:

விளக்கு (Vilakku) ஏற்றும்போது கவனிக்க வேண்டியது:

நமது கலாச்சாரத்தில் 'விளக்கு' என்பது மிக முக்கியமானதாக வணங்கப்பட்டு வந்திருக்கிறது. இது ஏதோ விளக்கை ஏற்றி, சற்று நேரம் எவ்வாறோ ஒளிரட்டும் என்பது போலல்ல. விளக்கை எப்படி ஏற்ற வேண்டும், அதன் தீபம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் கூட சொல்லப் பட்டிருக்கிறது. இந்த விளக்கை ஏற்றும் போது, அதற்கு விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இப்பொருட்களை உபயோகிக்கும் போது மட்டும் தான், விளக்கின் தீபத்தில் ஓரு ஒளிவட்டம் வெளிப்படுகிறது. இந்த ஒளிவட்டத்தினால் நாம் வசிக்கும் இடம் சுத்தமாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அது மட்டுமல்லாமல், தீபத்தின் இந்தஒளிவட்டம், அது இருக்கும் விதத்திலேயே, வணக்கத்திற்கு உரியதாக இருக்கிறது.

விளக்கை ஏற்றும் போது விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.

நம் கண்ணுக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த ஒளிவட்டம் உதவுகிறது. நம்மைப் பாதுகாக்கும் தன்மை எதுவாக இருந்தாலும் அதை வணங்குவது நம் பண்பாடு. எனவேதான், பூஜையறையில், கடவுளை வணங்கும்போது தீபத்தையும் ஏற்றிவணங்குகிறோம்.

விளக்கு ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்:

இதனால்தான் மனிதர்கள் சேர்ந்து புழங்கும் இடத்தில், அது வீடாக இருந்தாலும் சரி, தொழில் நடக்கும் இடமாக இருந்தாலும் சரி, அவ்விடத்தில் நாளெல்லாம் விளக்கு ஏற்றி, அதை ஒளிரவிடும் பழக்கம் இருக்கிறது. இவ்விடங்கள் தான் என்றில்லாமல், நீங்கள் படுக்கும் இடம், குழந்தைகள் படிக்கும் இடம், மற்றும் பொதுவாக நீங்கள் அதிக நேரம் இருக்கும் இடங்களில் விளக்கு ஏற்றி வைப்பது நிச்சயம் நல்லது. இது நம் மனநிலைக்கு, நம் ஆரோக்கியத்திற்கு மற்றும் நம் சூட்சும உடலிற்கும் நன்மை பயக்கும்!