சத்குரு: சாமர்த்தியமாக இருப்பதும், புத்திசாலியாக இருப்பதும் வெவ்வேறு விஷயங்கள். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, நீங்கள் யாரோ ஒருவரை புத்திசாலி என குறிப்பிடுவீர்கள். ஆனால், இப்போதெல்லாம் குறியீட்டுச் சொற்கள் வித்தியாசமானவை. நீங்கள் புத்திசாலியாக இருந்தால் ஒருவரும் கவனிப்பதில்லை. நீங்கள் கெட்டிக்காரராக இருக்கிறீர்களா என்பதை மட்டும்தான் அவர்கள் கவனிக்கின்றனர். நீங்கள் சாமர்த்தியசாலியாக இருந்தால், உலகத்தில் உங்களுக்கான இடத்தை உங்களால் கண்டுகொள்ள முடியும் – உங்களுடைய பொருளாதாரத்தை நீங்கள் உயர்த்திக்கொள்வீர்கள்.

நீங்கள் புத்திசாலியாக இருந்தால் ஒருவரும் கவனிப்பதில்லை. நீங்கள் கெட்டிக்காரராக இருக்கிறீர்களா என்பதை மட்டும்தான் அவர்கள் கவனிக்கின்றனர்.

ஆனால், புத்திசாலித்தனம் என்பது வித்தியாசமான ஒரு இயல்பு. ஒரு பந்தயத்தில் வெற்றி பெறுவதற்கு புத்திசாலித்தனம் எப்போதும் உங்களுக்குக் கைகொடுப்பதில்லை. உண்மையில், நீங்கள் மற்றவர்களை விடவும் மிகவும் பின்தங்கியிருக்கக்கூடும். ஏனென்றால், மற்றவர்களின் அறிவுக்குப் புலப்படாத மிக அதிகமான விஷயங்களை நீங்கள் பார்க்கிறீர்கள். சாமர்த்தியமாக இருந்துகொண்டு, அவர்களது வாழ்வின் ஒரு சிறிய இலக்கை சாதிப்பதில் மட்டும் கவனம் கொள்பவர்கள் மிக வேகமாக முன்னிலைக்கு வந்துவிடக்கூடும் – அதற்கு அனைவரும் கைதட்டிப் பாராட்டவும் செய்யலாம். ஆனால் உங்களுடைய புத்திசாலித்தனமானது, நீங்கள் ஒரு அடி எடுத்து வைப்பதற்கும்கூட ஏராளமான விஷயங்களை உள்வாங்கக்கூடும்

நீங்கள் கெட்டிக்காரராக இருந்தால், உங்களுக்குப் பலனளிக்கும்படியாக, ஏதோ ஒரு வழியில் சூழ்நிலையை ஒருங்கிணைத்துவிட்டீர்கள். நீங்கள் எந்தவிதமான சமூகத்தில் இருக்கிறீர்கள், எந்தக் காலகட்டத்தில், சூழலில் மற்றும் எந்தவிதமான மக்களிடையே இருக்கிறீர்கள் என்பதையெல்லாம் பொறுத்து, வெவ்வேறு விதமான மக்கள் கெட்டிக்காரராக கருதப்படுகின்றனர். இன்றைக்கு, பண்பு காரணமாக ஏதோ தயக்கம் கொள்ளும் மக்கள் பொதுவாக, வாய் திறவாத மௌனிகளாகக் கருதப்படுகின்றனர். எதையும் செய்வதற்குத் தயங்காதவர்கள் சாமர்த்தியசாலிகளாகிவிடுவது ஏனென்றால், சில சூழ்நிலைகளை எப்படிச் சாதகமாக்கிக்கொள்வது என்பதை அவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சாமர்த்தியசாலி நாய்

உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். ஒரு கெட்டிக்கார நாய் இருந்தது. அது மிகவும் கெட்டிக்காரத்தனமாக இருந்ததால், அக்கம்பக்கத்து கிராமங்களில் உள்ள மற்ற எல்லா நாய்களைக்காட்டிலும் சிறந்த நாய் போல ஆனது. ஒரு நாள், அது சிறிது சாகசம் செய்ய முனைந்தது. உள்ளூர் நாய்கள் ஒருபோதும் காட்டுக்குள் செல்லாததை நீங்கள் கவனித்திருக்கலாம். சில தருணங்களில் அவைகள் முயலை வேட்டையாடும் முயற்சியில், காட்டின் ஒரு ஓரம் வரை மட்டும் செல்லக்கூடும். ஆனால் அவைகள் ஒருபோதும் காட்டுக்குள் செல்வதில்லை. ஏனென்றால், பெரிய விலங்குகள் அங்கிருப்பதை அவைகள் உள்ளுணர்வில் அறிந்திருக்கின்றன. அவைகளுக்கு நாய்கள் உணவாகிவிடும்.

நீங்கள் எவ்வளவு சாமர்த்தியசாலி என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமான முட்டாளாகவே நீங்கள் ஆகிவிடுவீர்கள்.

ஆனால், இது ஒரு அதி சாமர்த்தியமான நாய் என்பதால், காட்டின் அடர்ந்த பகுதிக்குள் சென்றது. அங்கே ஒரு புலி இதைப் பார்த்துவிட்டது. இந்த புலி இந்த மாதிரி ஒரு பிராணியை அதற்கு முன் பார்த்ததேயில்லை. “இன்றைக்கு மதிய சிற்றுண்டிக்கு இது நல்ல உணவாகத் தோன்றுகிறதே,” என்று நினைத்தது. அது உறுமியவாறு நாயை நோக்கி வரத் தொடங்கியது. ஆனால், இதுதான் மிகவும் கெட்டிக்கார நாய் ஆயிற்றே! அது ஓட்டமெடுக்கத்தான் விரும்பியது. ஆனால், அப்படி ஓடினால் புலி பிடித்துவிடுவதற்கு அதிக நேரமாகாது, பிறகு தான் மொறுமொறு சிறுதீனியாகிவிடுவோம் என்பதை நாய் அறிந்திருந்தது. அதற்கு மிக அருகில் எலும்புகளின் குவியல் ஒன்றை அது கண்டது. உடனே அந்த எலும்புக் குவியலைச் சுற்றி கர்வத்துடன் நடக்கத் தொடங்கிய நாய் உரத்த குரலில், “ஆகா! இந்தப் புலிகள் எவ்வளவு சுவையான உணவாக இருக்கின்றன, ஹா அருமை அருமை,” என்று கூறியது. இதைக் கேட்ட புலி சற்றுத் தயக்கத்துடன் பின்னோக்கிச் சென்றது. “ஓ, இது ஏதோ புலிகளை உணவாகக் கொள்ளும் விலங்காக இருக்கிறது. அருகில் இவ்வளவு எலும்புகள் குவிந்து கிடக்கின்றனவே” என்று புலியானது திரும்பி நடந்து விலகிச் சென்றது. இதைக் கண்டதும், அந்த கெட்டிக்கார நாய் மெல்ல அந்த இடத்திலிருந்து நழுவத் தொடங்கியது.

இந்தக் காட்சி முழுவதையும் அருகிலிருந்த ஒரு மரத்தின் மீதிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு குரங்கால் அந்தச் சூழ்நிலையில் தன் குரங்குத்தனத்தைக் காட்டாமல் இருக்க முடியவில்லை. அது புலியிடம் சென்று, “அது உன்னை முட்டாளாக்கிவிட்டுச் சென்றுவிட்டது. அது வெறுமனே ஒரு நாய்தான். நான் கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேன். அதனால் உன்னை ஒன்றும் செய்யமுடியாது. உன்னுடைய ஒரு பாதத்தின் அளவுகூட அதற்கு வலிமை இல்லை,” என்று கூறியது. புலி, தான் முட்டாளாக்கப்பட்டதை உணர்ந்தது. “என்ன, அந்த முட்டாள் என்னை ஏமாற்றிவிட்டதா? வா, நாம் அதைப் பிடிப்போம்” என்றதும், குரங்கு புலியின் முதுகின்மீது அமர்ந்துகொள்ள, அவைகள் நாயை நோக்கி ஓடத் தொடங்கின.

ஏதோ ஒரு குரங்கு புலியின் மீது சவாரி செய்தவாறு தன்னை நோக்கி வருவதை நாய் கண்டது. என்ன நிகழ்ந்திருக்கும் என்று அதற்குத் தெரிந்துவிட்டது, ஆனால், இதுதான் கெட்டிக்கார நாய் ஆயிற்றே. அது அகலமாக வாய் திறந்து கொட்டாவி விட்டவாறு கூறியது,” அந்தப் பாழாய்ப்போன குரங்கு எங்குதான் சென்றதோ? மற்றொரு புலியைக் கொண்டு வருமாறு நான் கூறி ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அது எங்கு இருக்கிறது?”

இந்த மாதிரி நீங்கள் வெளி உலகத்தைக் கையாளலாம். ஆனால் உங்களுடைய உள்நிலை இயல்பு என்று வரும்போது, இந்த சாமர்த்தியம் உங்களை எங்கும் கொண்டு சேர்க்காது. ஏனென்றால், படைப்பின் வெளிப்பாடுகளுடன் பரிமாற்றங்கள் நடத்திக்கொள்வது என்பது வேறு, படைப்பின் மூலத்துடன் பரிமாற்றம் செய்துகொள்வது என்பது முற்றிலும் வேறானது. இங்கே, உங்களுடைய கெட்டிக்காரத்தனம் ஒருக்காலும் செயல்படாது. நீங்கள் மற்றும் இன்னொன்று என்ற இரண்டு தனித்தன்மைகள் இருக்கும்போது மட்டும்தான் சாமர்த்தியம் செல்லுபடியாகும். நீங்கள் மற்றும் நீங்கள் என்ற ஒருமை மட்டுமே இருக்கும்போது, நீங்கள் எவ்வளவு சாமர்த்தியசாலி என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமான முட்டாளாகவே நீங்கள் ஆகிவிடுவீர்கள்.

நீங்கள் எவ்வளவு முட்டாளாக இருக்கிறீர்கள் என்பதை உணர்வது

ஞானமடைவது என்பது ஏதோ ஒருவிதமான சாதனை அல்ல. ஞானமடைதல் என்றால், உங்கள் அறியாமையை நீங்கள் தகர்த்துவிட்டீர்கள் என்பது பொருள். அது ஒரு உணர்தல் – அதாவது நீங்கள் எவ்வளவு முட்டாளாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்துவிட்டீர்கள். எப்போதுமே இருந்துகொண்டிருந்ததை, இன்றைக்குத்தான் நீங்கள் கண்டுகொண்டீர்கள். நீங்கள் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்வதற்கு மிகுந்த புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. பெரும்பாலான மக்களால் அதை உணர முடிவதில்லை. யாரோ ஒருவரைவிட சாமர்த்தியமாகவும், சிறப்பாகவும், மேலாகவும் இருக்கவேண்டும் என்கிற தூண்டுதல் உங்களுக்குள் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டால்தான், உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்போதுதான் உங்களுடைய அறியாமையைத் தகர்க்கும் புத்திசாலித்தனம் உங்களுக்குள் எழும். ஆன்மீக செயல்பாடுகளுடன் நீங்கள் சாமர்த்தியத்தை வளர்த்துக்கொண்டால், உங்களுடைய அறியாமை வெவ்வேறு வடிவங்களைத்தான் எடுத்துக்கொண்டிருக்கும். அது அறியாமையின் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்குச் செல்லும் முடிவில்லாத பயணமாகவே இருக்கும்.

நீங்கள் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்வதற்கு மிகுந்த புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது

சாமர்த்தியசாலியாக இருப்பது தவறு என்று நான் கூறவில்லை. அடுத்தவரைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுவதற்கு உங்களை நீங்கள் பயிற்றுவிக்கலாம். ஆனால், அதற்கான பயன்பாடும், வரம்பும் ஒரு எல்லைக்கு உட்பட்டதுதான். அதை நீங்கள் உள்முகமாக எடுத்துச் சென்று, கெட்டிக்காரராக இருப்பதற்கு முயற்சி செய்யமுடியாது. ஏனென்றால், அப்போது நீங்கள் உங்களையே முட்டாளாக்கிக்கொள்கிறீர்கள். நீங்களும், நானும் இருந்தால், உங்களைக் காட்டிலும் நான் சாமர்த்தியமாக இருப்பது உதவுகிறது. நானும், நானும் என்ற நிலையில் இருந்தால், என்னைக் காட்டிலும் நான் சாமர்த்தியமாக இருப்பது முட்டாள்தனமானது.