பிறர் என்னை சுரண்டாமல் இருக்க என்ன வழி?
ஆனந்தமாக இருக்கும் ஒரு நபரை அருகிலிருக்கும் மற்றவர்கள் சுரண்டி தங்கள் காரியங்களை சாதித்துக்கொள்வதாக ஒரு கருத்து நிலவுகிறது! இதுகுறித்து சத்குருவின் பார்வை என்ன? தொடர்ந்து படித்தறியுங்கள்!
சத்குரு:
Subscribe
நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் - ஆனந்தமானவரோ அல்லது துயரமானவரோ - பிறரால் நீங்கள் சுரண்டப்படலாம். நீங்கள் ஆனந்தமாக இருப்பதால்தான் அல்லது துயரமாக இருப்பதால்தான் யாரோ உங்களைச் சுரண்டுகிறார்கள் என்று சொல்ல முடியாது.
சுரண்டல் பல வழிகளில் நிகழமுடியும், ஆனால் துயரம் தன்னளவிலேயே ஒரு சுரண்டலாக இருக்கும். யாரோ ஒருவர் உங்களைச் சுரண்டுவது ஒரு விஷயம். ஆனால் நீங்கள் உங்களுக்கே துன்பத்தை ஏற்படுத்திக் கொண்டு, உங்கள் சொந்த வாழ்க்கையையே சுரண்டுகிறீர்கள். நீங்கள் ஒரு ஆனந்தம் நிரம்பிய நபராக இருந்தால், எவராலும் உங்களை உண்மையில் சுரண்ட முடியாது. ஏனென்றால், சுரண்டல் என்றால், உங்களது நலனுக்கு எதிர்ப்பாகச் செயல்படுவது. நீங்கள் ஒரு ஆனந்தமான நபராக இருக்கும்போது, உங்களது நன்மைக்கு எதிரான ஏதோ ஒன்றை யார் செய்ய முடியும்? உங்களை அவர்கள் மரணத்திற்கு உட்படுத்தினாலும், நீங்கள் ஆனந்தமாக இறந்து போவீர்கள். உண்மையான ஆனந்தத்தில் இருக்கும் ஒரு நபரை எவரும் சுரண்ட முடியாது. அப்படிப்பட்டவருக்கு என்ன நடந்தாலும் அது ஒரு பொருட்டில்லை. அவரிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. அவர் கொல்லப்பட்டால், ஒரு ஆனந்தமான உயிர் போய்விடுகிறது. ஆனால் அவர் எதையும் இழக்கவில்லை, ஒரு உடலைத்தான் இழந்தார். அது அவருக்கு ஒரு பொருட்டல்ல - குறைந்தபட்சம், உடலின் வலிகளும், போராட்டங்களும் முடிவடைந்துவிடுகின்றன.
துயரப்படுகின்ற ஒரு நபர்தான், யாரோ தன்னைச் சுரண்டுவதாக எப்போதும் எண்ணிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு சிறிய செயல் நிகழும்போதும், அதன் பின்னணியில் வேறு ஏதோ நிகழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணுகிறார். இப்படி நிகழ்வதை நீங்கள் பார்த்திருக்க முடியும். மக்கள் அதிகமான துன்பத்திற்கு ஆட்படும்போது, யாரோ அவர்களைச் சுரண்டிவிடுவார்கள் என்று எப்போதும் அஞ்சுகின்றனர். தங்களை யாராவது தவறாகப் பயன்படுத்திக் கொள்வார்களோ என்ற சந்தேகத்திலேயே எப்போதும் இருக்கின்றனர். ஆனால் அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதற்கு பெரும்பாலான மக்களிடம் என்ன இருக்கிறது? எந்த நிலையிலும் பிரச்சனையாக இருக்கும் வகையில், அவர்கள் தங்களையே பிரச்சனைக்குரியவராக்கி உள்ளனர். அது தன்னையே சுரண்டிக் கொள்வதுதான், இல்லையா?
நீங்கள் துன்பப்படுபவராக இருந்தால், யாரும் உங்களைச் சுரண்டத் தேவையில்லை. உங்களுக்கு நிகழும் எல்லாமே சுரண்டல்தான். நீங்கள் ஆனந்தமானவர் என்றால், மற்றவர்கள் என்ன செய்தாலும் அது ஒரு பொருட்டில்லை. எந்தச் சுரண்டலும் உங்களைத் தொட முடியாது. அவர்கள் முட்டாள்தனமாக உங்களுக்கு ஏதேனும் செய்தால், அவர்கள் தங்களது வாழ்க்கையைத்தான் தாழ்த்திக் கொள்கின்றனர். உங்களுடைய வாழ்க்கையை அல்ல. துன்பகரமான ஒரு நபரின் வாழ்க்கையைத்தான் அர்த்தமற்றதாக்க முடியும். ஆனந்தமான ஒரு நபருடைய வாழ்க்கையை எப்படி அர்த்தமற்றதாக்க முடியும்? அப்படிப்பட்டவரது வாழ்க்கை தன்னளவிலேயே அழகானது. அவர் எந்த அர்த்தத்தையும் தேடிக்கொண்டிருக்கவில்லை. பெரும்பாலான மக்கள் துன்பகரமானவர்களாக இருக்கும் காரணத்தினால்தான், பூமியில் சுரண்டல் சாத்தியப்படுகிறது. இல்லையென்றால், இங்கே சுரண்டல் இருக்காது.