ஈஷாவில் 4வது உலக யோகா தினம்… ஒரு பார்வை!
ஈஷா சார்பில் உலகம்முழுக்க கொண்டாடப்பட்ட 4வது உலக யோகா தின நிகழ்வுகள் குறித்து ஒரு கண்ணோட்டம் இங்கே!
2018 ஜூன் 21, நான்காவது உலக யோகா தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டதை அறிவோம். இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரும் நல்வாழ்வை பெறும்வகையில், யோகாவின் பலன்கள் அனைவருக்கும் சென்றுசேர வேண்டுமென்ற நோக்கில், யோகா தினத்தை ஒரு வாய்ப்பாக ஈஷா ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
ஜூன் 21 அன்று சியாச்சின் எனும் பனிபடர்ந்த மலைச்சிகரத்தில், அங்கு தன்னலம் பாராமல் கடுமையான சீதோஷண நிலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, சத்குரு நேரடியாக சென்று யோகப் பயிற்சிகளை வழங்கினார். நாட்டிற்காக கடமையாற்றும் நமது வீரமிகு ராணுவ வீரர்களுக்கு யோகப் பயிற்சி வழங்குவதில் தான் பெருமைப்படுவதாக சத்குரு தெரிவித்திருந்தார். அங்கே வழங்கப்பட்ட அங்கமர்தனா எனும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சி நமது ராணுவ வீரர்கள், குறிப்பாக இதுபோன்ற உயர்ந்த சிகரங்களில் மோசமான தட்பவெட்ப நிலைகளில் பணியாற்றும்போது இந்த பயிற்சி சிறப்பாக துணை நிற்கும் என்பதையும் அவர் தெரிவித்தார்.
ஜூன் 18, 19 ஆகிய நாட்களில் இமயமலைப் பகுதியான லே எனுமிடத்தில் ராணுவ வீரர்களுக்கு ஈஷா சார்பாக யோகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
ஈஷா யோகா மையத்தில்…
உலக யோகா தினத்தன்று ஆதியோகி முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஆசிரமவாசிகள் ஆகியோருடன் இணைந்து BSF & RAF படைவீரர்கள், ஈஷா வித்யா மற்றும் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், கொங்கு மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் மற்றும் ஈஷாவைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
Subscribe
திரு.கமலேஷ் குமார், கூடுதல் கமாண்டண்ட், எல்லை பாதுகாப்பு படை, காமொடோர் ராஜீவ் சவுத்ரி, Dr.C.A.வாசுகி, உறுப்பினர் இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பு & இயக்குனர் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். யோக நமஸ்காரம் மற்றும் ஷாம்பவி முத்ரா போன்ற எளிமையான, அதேசமயம் முழுமையான யோகப் பயிற்சிகள் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவில் அதிகாரி திரு.ராஜீவ் சவுத்ரி அவர்கள் கூறும்போது, “குடும்பத்தைப் பிரிந்து கடலுக்குள் தனிமையில் நீண்ட நாட்கள் கடற்பயணம் மேற்கொள்ளும் கடற்படை வீரர்களுக்கு, மன அழுத்தம் பெரிய பிரச்சனையாக உள்ளது. மன அழுத்தத்தை கட்டுப்படுத்த இங்கே கற்றுக்கொண்ட ஈஷா யோகா பயிற்சிகள் பெரும் உதவியாக இருக்கும்” என்றார். எனவே கடற்படை வீரர்களுக்கு பாடத்திட்டத்தில் இந்த பயிற்சிகளை சேர்த்துள்ளதாகவும் கூறினார்.
சிறைக் கைதிகளுக்கு யோகப் பயிற்சிகள்
கோவை, திருச்சி உட்பட தமிழ்நாடு முழுக்க 16 சிறைச்சாலைகளில், ஈஷா சார்பாக இலவச உப-யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன. சிறைக் கைதிகளின் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், சிறைகளில் நிகழும் தற்கொலை போன்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையை குறைக்கவும் இப்பயிற்சி உறுதுணையாக இருக்கும்.
துப்புரவு பணியாளர்களுக்கு உப-யோகா
திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பாரிஜாதம் அவர்களின் முன்னிலையில், துப்புரவு பணியாளர்களுக்கு ஈஷா சார்பாக உப-யோகப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சுமார் 350 பேர் கலந்து கொண்டனர். இதுபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஈஷா சார்பாக அரசு அதிகாரிகள் உதவியுடன் உப-யோக வகுப்புகள் வழங்கப்பட்டன.
பள்ளி கல்லூரிகளில் உப-யோகப் பயிற்சிகள்
தமிழகம் முழுக்க உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஈஷா சார்பாக இலவச உப-யோகப் பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. நாகர்கோவிலில் நடைபெற்ற ST ஹிந்து கல்லூரி நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
10 லட்சம் யோக வீரர்கள்... உருவாக்கப்படுகிறார்கள்!
சத்குருவின் வழிகாட்டுதலில் இவ்வாண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு, உலகம் முழுக்க 10 லட்சம் யோக வீரர்கள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். இந்த யோக வீரர்கள், ஈஷா வழங்கும் இலவச உப-யோகா பயிற்சிகளை மற்றவர்களுக்கு கற்பிக்கும்வகையில் பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர். இந்த ஆண்டில் குறைந்தபட்சம் யாரேனும் ஒருவருக்கு புதிதாக யோகாவை அறிமுகம் செய்து, அவர்களுக்குள் யோகப் பரிமாணத்தை ருசிக்கச் செய்வதே இவர்களின் நோக்கமாகும். இதன்மூலம் உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் யோகாவின் பலன்கள் சென்று சேரும் என்பதில் ஐயமில்லை!
ஆண்டுமுழுக்க தொடரும் கொண்டாட்டம்…
சத்குருவின் வழிகாட்டுதலில், ஈஷாவிற்கு வருகைதரும் பார்வையாளர்களுக்கு ஆண்டுமுழுவதும் இலவச உப-யோகா வழங்குவதன் மூலம் உலக யோகா தின கொண்டாட்டம் ஈஷாவில் தொடர்கிறது.
தியானலிங்கம் மற்றும் ஆதியோகியை தரிசிக்க ஈஷாவிற்கு வருகைதரும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவச உப-யோகா வகுப்புகள் நாள்முழுவதும் காலையிலிருந்து மாலைவரை 6 நிகழ்ச்சிகளாக வழங்கப்படுகின்றன. காலை 9 மணிக்கு துவங்கும் உப-யோகா நிகழ்ச்சிகள், மதியம் 12 முதல் 2 மணி வரை ஓங்கார தீட்சை நேரம் தவிர்த்து, மற்றநேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என வழங்கப்படுகின்றன.
(உப-யோகா நிகழ்ச்சி நேரங்கள்: காலை 9 மணி, 10 மணி, 11 மணி & மாலை 2 மணி, 3 மணி, 4 மணி. கால அளவு : 30 நிமிடங்கள்)
தியானலிங்க வளாகத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள சாதனா ஹால் 1ல் இந்த இலவச யோகா வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன.
ஆண்டுமுழுவதும் நிகழக்கூடிய இந்த செயல்பாட்டில், தன்னார்வத் தொண்டர்களும் ஈஷா பணியாளர்களும் குழுவாக இணைந்து தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ளனர்.
இதில் தன்னார்வத் தொண்டு புரிய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள: 83000 83111
குறிப்பு:
இணையத்தில் இலவசமாக உப-யோகா கற்றுக்கொள்ள: tamil.sadhguru.org/yogaday