yatheesh-aron-hongkong-profilepicஉறக்கம் வராத இரவில் ஒரு நாள், "தியானம் செய்வது எப்படி என்று வீடியோக்களை You-tube ல் தேடிக்கொண்டிருக்கையில், எதேச்சையாக சத்குருவின் "ஈஷா க்ரியா" என் கண்ணில் பட்டது.

பொதுவாக, ஆன்மீக குருமார்கள் மீது எனக்கு ஒரு பயம் இருந்தது. இருந்தும் விளையாட்டாக ஈஷா க்ரியாவை சில நாட்கள் பயிற்சி செய்தேன். சில வாரங்களில் என்னை அறியாமல் அந்தப் பயிற்சியை ஒரு நாளைக்கு இருவேளை என தவறாமல் செய்துவந்தேன்.

தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை சாமர்த்தியமாக எதிர்கொள்ள ஈஷா க்ரியா ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது என்பதை உணர்ந்துகொள்ள எனக்கு சில மாதங்கள் தேவைப்பட்டன.

முன்பெல்லாம் 8 மணி நேரம் தூங்கி எழுந்தபின் இருக்கும் ஓய்வுநிலை இப்போதெல்லாம் 6 மணிநேரம் தூங்கி எழுந்தாலே கிடைப்பது ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய ஞாபகத்திறன் சற்று கூடியிருப்பதையும், என்னுடைய மன அழுத்தம் சற்று குறைந்து இருப்பதையும் என்னால் உணர முடிந்தது.

இதுவரையில் என்னைப்போட்டு அமுக்கிக்கொண்டிருந்த ஏதோ ஒரு பாரத்தை யாரோ இறக்கிவைத்ததைப் போல இருந்தது. ஒரு எளிய 12 நிமிட இணையதள தியானப்பயிற்சி என் வாழ்வில் இத்தைகைய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குருவின் சில வீடியோக்கள் மற்றும் அவருடைய "ஞானத்தின் பிரம்மாண்டம்" புத்தகம் என்னுடைய காரண அறிவை தகர்த்தெறிந்தது. பிறப்பு இறப்பைப் பற்றிய சூட்சும முடிச்சுகளை அந்தப் புத்தகம் வெகுசுலபமாக அவிழ்த்துக் காட்டியது. இது வெறும் ஆரம்பம் இனி வரப்போவதுதான் உச்சகட்டம் என எனக்குத் தோன்றியது.

கொஞ்சம் கொஞ்சமாக நான் சந்தேகங்களிலிருந்து வெளியே வந்து ஈஷா யோக மையத்தில் சத்குருவால் வழங்கப்பட்ட "Inner Engineering Retreat" வகுப்பில் பங்கேற்றேன். அந்த நான்கு நாட்கள் நிகழ்ச்சி என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பயணமாக அமைந்தது. அங்கு கற்றுத் தரப்பட்ட தியானம் மற்றும் எளிய யோகப் பயிற்சிகளை நான் தவறாமல் செய்யத் தொடங்கினேன்.

அமைதியான ஒரு உணர்வு என்னுள் ஆழமாக குடிகொண்டதை என்னால் உணர முடிந்தது. ஒரு 6 மாதகால தொடர் பயிற்சிக்குப் பின் சற்று பின்னோக்கிப் பார்க்கையில் என் வாழ்க்கையில் இந்த வருடம்தான் மிகச்சிறந்த வருடமாக எனக்குத் தோன்றியது.

எனக்குள் ஏதோ ஒன்று அடிப்படையில் மாறிவிட்டது என்பதை மட்டும் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

அதன்பின் உயர்நிலை வகுப்புகளில் பங்கேற்றேன். மெதுவாக சத்குருவுடனும் ஈஷாவுடனுமான நட்பு வலுவடைந்தது.

என்னுடைய ஓய்வு நேரங்களை ஹாங்காங்கில் ஈஷா வேரூன்றுவதற்காக செலவிட்டேன். மூன்று வருடத்திற்கு முன் சத்குருவால் எனக்கு கொடுக்கப்பட்ட கருவியை முதலில் நன்றாக கற்று, பின் அதனை பயிற்சி செய்ததால் என் வாழ்க்கையில் ஆனந்தம் என்பது இயல்பாகிப் போனது. என்னை சந்தோஷப்படுத்த வெளியுலகில் இருந்து எனக்கு எந்த உந்துகோலும் தேவையில்லை! அது என்னுள்ளேயே இருக்கிறது எனப் புரிந்தது.

இந்த இன்பமான வாழ்க்கை என் வாழ்நாள் முழுவதும் தொடரும் என நம்புகிறேன் அது வீணாகப் போக வாய்ப்பில்லை ஏனென்றால் ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கைப் பாதைக்கு விளக்கேற்றி வைப்பவர் சத்குரு!

-யத்தீஷ் ஆரோன், குழு தலைவர், வங்கி சேவை, ஹாங்காங்.

ஆசிரியர் குறிப்பு : எளிய, சக்திவாய்ந்த ஈஷா கிரியா பயிற்சியை வழிகாட்டுதலுடன் இலவசமாக கற்றுக்கொள்ள சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

sg-tam-app