உடலுறவும் உணவுப்பழக்கமும் முறைப்படுத்தப்பட்டது ஏன்?
இன்றைக்குக் காணப்படுகின்ற இந்த அளவுக்குப் பதற்றமும், இவ்வளவு அதிகமான பாதுகாப்பின்மையும், இந்த அளவுக்கான மன அழுத்தமும் பல நிலைகளிலும் இருப்பதற்கு உடல்கள் குழப்பமடைந்திருப்பது முக்கியமான காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது.
சத்குரு:
நீங்கள் அடிக்கடி புதிய நபர்களுடன் இப்படி காதலில் விழுந்துகொண்டே இருந்தால் சிறிது காலம் கழித்து, உங்களுக்கு உலகத்தில் யாரையுமே பிடிக்காமல் போய்விடும். சார்லஸ் லேம்ப், பிரபலமான ஆங்கிலக் கட்டுரையாளராக இருந்தார். ஒருநாள் அவரது நண்பர், சார்லஸ் லாம்ப்பிடம், யாரோ ஒருவரை தான் அறிமுகம் செய்துவைக்க விரும்புவதாகக் கூறினார். அதற்கு சார்லஸ் லேம்ப், “இல்லை, அவரைச் சந்திக்க எனக்கு விருப்பமில்லை. அந்த மனிதனை நான் விரும்பவில்லை” என்றார். நண்பர், “அந்த மனிதனைப் பிடிக்கவில்லையா! நீங்கள் இதுவரை அவரைச் சந்தித்ததே இல்லை. பிறகு எப்படி அவரைப் பிடிக்கவில்லை என்று நீங்கள் கூறமுடியும்?” என்று கேட்டார். “அதனால்தான் நான் அவரை விரும்பவில்லை. நான் அவரைச் சந்தித்தது கிடையாது” என்றார் சார்லஸ் லேம்ப்.
Subscribe
பலருடனும் இணையும் விளையாட்டை நீங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தால், சிறிது காலத்திற்குப் பிறகு, நீங்கள் உணர்ச்சியற்று மரத்துப் போய்விடுகிறீர்கள். நீங்கள் யாரையும் விரும்புவதில்லை. இதற்கு ருனானுபந்தம் என்பது காரணமாக இருக்கிறது.
ருனானுபந்தம் என்பது கர்மவினையின் ஒரு குறிப்பிட்ட அம்சம். அது கர்மவினையின் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பாக உள்ளது. மனிதர்களிடையே எந்த வகையில் தொடர்பு ஏற்பட்டாலும் அங்கெல்லாம் சிறிதளவு ருனானுபந்தம் உருவாகிறது. குறிப்பாக, இரண்டு உடல்கள் இணையும்பொழுது, ருனானுபந்தம் அதிக ஆழமாக ஏற்படுகிறது. அது உடலில் உண்டாகும் ஒருவிதமான பதிவு. உடல், தனக்கு நிகழ்ந்துள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு பதிவு வைத்திருக்கிறது. ஒரு உடல், இன்னொரு உடலுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டால், பிறகு அந்த குறிப்பிட்ட சக்தியை தனக்குள் பதிவு செய்துகொள்கிறது.
உடல் அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும் காரணத்தால், பல பேருடன் உடலளவில் கூடும்போது, மெல்ல காலப்போக்கில் உடல் குழப்பத்திற்கு உள்ளாகிறது. அந்தக் குழப்பம் எண்ணற்ற வெவ்வேறு வழிகளில் உங்கள் வாழ்க்கையில் விளைவுகள் ஏற்படுத்தும். உங்கள் மனமும் குழம்பிவிடுகிறது. ஆனால் எப்படியோ ஒருவாறு அதனுடன் நீங்கள் வாழ்கிறீர்கள். உடல் குழப்பம் அடைகிறதென்றால், அப்போது நீங்கள் ஆழமான தொந்தரவுக்கு உள்ளாகிறீர்கள்.
இன்றைக்குக் காணப்படுகின்ற இந்த அளவுக்குப் பதற்றமும், இவ்வளவு அதிகமான பாதுகாப்பின்மையும், இந்த அளவுக்கான மன அழுத்தமும் பல நிலைகளிலும் இருப்பதற்கு உடல்கள் குழப்பமடைந்திருப்பது முக்கியமான காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது. சிறிது காலம் கழிந்தபிறகு நீங்கள் பைத்தியமாவதற்கு வேறு எந்தக் காரணமும் உங்களுக்குத் தேவையில்லை. உடலே குழப்பத்தில் இருக்கும் காரணத்தினால் வேறு எந்தக் காரணமும் இல்லாமல், மக்கள் பைத்தியநிலைக்குப் போகிறார்கள்.
உடலளவில் பலருடன் உறவு கொள்ளும்போது, இந்த உடல் குழப்பமடைவது ஒரு விஷயம். மற்றொன்று, நீங்கள் உண்ணும் உணவு. சிறிது பணம் வந்துவிட்டாலே, மக்கள் தங்களது ஒருவேளை உணவிலேயே எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆசாரமான மக்கள், ஒருவேளை உணவில் இரண்டு அல்லது மூன்றுவிதமான உணவுக்கு மேல் ஒருபோதும் சாப்பிடவில்லை. மேலும் அந்த மூன்றுவித உணவுகளும் எப்போதும் ஒன்றுக்கொன்று இணையாகவே இருந்தன. ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற உணவாக அவை இருந்ததில்லை. நம் வீடுகளில் இருந்த மூத்தவர்கள் உடலை நன்கு புரிந்தவர்களாக இருந்தனர். ஒரு குறிப்பிட்ட காய் சமைக்கப்படும்போது, அதை எப்படி, எந்த சுவையில், எந்தப் பொருட்களுடன், சமைக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இந்தக் காயைச் சமைக்கும்போது, அதற்கு மாறுபட்ட வேறொரு உணவை அன்று சமைக்கமாட்டார்கள். ஏனெனில் பாரம்பரியமாகவே, இதையும் அதையும் இணைத்தால், உடல் குழப்பமடையும் என்பதை நாம் புரிந்திருந்தோம். உங்களது உடல் குழப்பமடைந்துவிட்டது என்றால், பல வழிகளிலும் நீங்கள் கட்டுப்பாட்டை மீறிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். இந்தப் புரிதல் எப்போதும் இங்கே இருந்தது.
உடல்தன்மையில் ஒருவிதமான குழப்பத்தை உருவாக்கி, காலப்போக்கில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இருபெரும் விஷயங்கள் - மக்களின் முறையற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் பாகுபாடற்ற உடல் உறவுகள். “நான் பாவம் இழைத்துவிட்டேனா? இது எனக்கு ஒரு தண்டனையா?” அந்த நிலையில் நிகழ்வதல்ல இது. ஆனால் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு இருக்கிறது. இது ஏதோ ஒழுக்கம் தொடர்பானதல்ல, இது ஒருவிதமான பிரபஞ்ச வழிமுறை. உங்கள் மனம் மூலம் நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களைச் செய்தால், குறிப்பிட்ட பின்விளைவுகள் நேரும். உங்களது உடலினால் சில விஷயங்களைச் செய்தால், வேறு குறிப்பிட்ட சில பின்விளைவுகள் நிகழும்.
இத்தகைய விஷயங்கள் ஆழமாக புரிந்துகொள்ளப்பட்டது, அதனால் அதைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்க்கை கட்டமைக்கப்பட்டது. இப்போது சுதந்திரத்தின் பெயரால், எல்லாவற்றையும் அழித்துவிட்டுப் பிறகு துன்பப்படுகிறோம். இது வாழ்வதற்கான முறையல்ல என்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஒருவேளை நாம் உணருவோம்.