சமீபத்தில் ஆசிரமத்தில் நடந்த சத்சங்கத்தில் ஜூலை மாதம் தமிழ் ஆசிரியர் பயிற்சி நடக்கவிருப்பதை சத்குரு அறிவித்தார். இந்த பயிற்சி வகுப்பு, விருப்பமுள்ள தன்னார்வத் தொண்டர்களை தமிழ் ஈஷா யோகா வகுப்பு எடுக்கக்கூடிய ஆசிரியர்களாக தயார்செய்யும்.

சத்குரு:

மனித வளர்ச்சியிலும், அடுத்த பத்து ஆண்டுகளில் உலகில் நடக்கவிருப்பதிலும், ஒரு குறிப்பிட்ட போக்கு தெரிகிறது. தொழில்நுட்பத்தில் நடந்திருக்கும் சில தவிர்க்கமுடியாத முன்னேற்றங்களால், முன்னெப்போதும் சாத்தியம் என்று கற்பனை கூட செய்திராத அளவு தனி மனிதர்கள் பல விதங்களில் சக்தி மிகுந்தவர்களாக இருக்கப் போகிறார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பலன்களை மனிதர்கள் அனுபவிக்க வேண்டுமென்றால், அவர்கள் உள்நிலையில் அதற்குத் தகுதியானவர்களாக இருப்பது மிக மிக முக்கியமாகிவிடும். மக்கள் உள்நிலையில் தயாராக இல்லையென்றால், இப்படி வெளிநிலையில் சக்திபடைத்தவராகுவது பேரழிவைத்தான் ஏற்படுத்தும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
மக்கள் அவர்களுடன் ஏழு நாட்களுக்கு இருக்கிறார்கள். அவர்கள் முதல் நாள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கும், வகுப்பு முடிந்து கிளம்பும்போது எப்படி இருக்கிறார்கள் என்பதற்குமிடையே மலை போல் வித்தியாசமிருக்கும்.

நம் பங்கிற்கு நாம் செய்யவேண்டியதைச் செய்யவேண்டும் என்று நான் நினைத்தேன். ஏனென்றால், தீர்வுகள் வழங்குவதில், பலவிதங்களில் நாம் பெரும்பாலானவர்களை விட அதிக திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறோம். இதன் ஒரு பகுதியாக, பல விஷயங்களை நாம் கட்டவிழ்க்க விரும்புகிறோம். ஒவ்வொரு நாடும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பொறியியல் வல்லுனர்கள், டாக்டர்கள், இராணுவ வீரர்கள், தொழிலதிபர்கள், அல்லது விளையாட்டு வீரர்களை உருவாக்கத் திட்டமிடுகிறது. அதுபோலவே, உள்நிலை நல்வாழ்விற்காக ஏதோ ஒன்றை முறையாக, அறிவியல்ரீதியாகப் பரிமாறக்கூடிய மனிதர்களை உருவாக்க வேண்டிய கட்டாயம், எல்லா நாடுகளுக்கும் வந்துவிட்டது.

உள்நலனுக்காக ஏதாவது செய்யக்கூடிய ஆசிரியர்களை உருவாக்குவதில் பெரும்பொறுப்பு இந்தியாவிற்குத்தான் இருக்கிறது. யோக ஆசிரியர்களை உருவாக்குவதோடு நில்லாமல், ஒரு கட்டத்தில் யோகிகளையும் நாம் உருவாக்குவது அவசியம். திடமான உள் அனுபவம் கொண்ட மனிதர்கள் நமக்குத் தேவை. இது ஒரு அளப்பரிய பொறுப்பு. ஈஷா யோகா மையம், அதன் பங்கிற்கு அதிக எண்ணிக்கையில் யோக ஆசிரியர்களையும், யோகிகளையும் இந்த உலகிற்கு நிச்சயம் வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, ஏனென்றால், அதற்கான அடித்தளத்திற்கு நாங்கள் போதுமான செயல்களைச் செய்துள்ளோம்.

ஈஷா யோகா வகுப்புகளின் ஒரு முக்கிய அம்சமாக, அதில் என்ன வழங்கப்பட்டாலும், ஒருவிதமான உயிரோட்டம் அதில் எப்போதுமே இருந்துவந்துள்ளது. இவ்வகுப்பு, ஒரு ஆசிரியர் தகவல்களின் ஒரு தொகுப்பை வழங்குவது பற்றியதல்ல. மாறாக வகுப்பு செயல்முறைக்கு ஓர் உயிரோட்டமான தன்மையை ஆசிரியர் வழங்குகிறார். உங்களைவிட மிகப்பெரிய ஒன்று, உங்கள் மூலமாக நிகழ்வதை அனுபவத்தில் உணர்வது என்பது, மிகப்பெரிய வாய்ப்பு. ஒரு பெண், ஒரு குழந்தையை ஈன்றெடுப்பது அவள் அனுபவத்தில் மிகப்பெரியது, ஏனென்றால் அவளால் ஓர் உயிரை உருவாக்க முடியாது, ஆனால் அது அவள் மூலமாக நிகழ்கிறது. ஒரு ஆசிரியராக, இன்னொரு உயிரை உடலளவில் ஈன்றெடுப்பதைவிட மிக ஆழமான ஒன்று, அது என்னவென்று உங்களுக்குத் துளியும் தெரியாத போதிலும் கூட, அது உங்கள் வழியாக நடந்தேறமுடியும்.

உலகில் பெரும்பாலான மனிதர்களால் தங்கள் தகுதிக்குத் தகுந்த எதையும் செய்ய முடிவதேயில்லை. அதிலும், மிகக் குறைவானவர்களுக்கே தங்களை விட மிகப்பெரிய ஏதோ ஒன்றைச் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆசிரியராக இருப்பது, உங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றை செய்வதற்கான ஒரு வாய்ப்பு. ஈஷா யோகா ஆசிரியர்களுக்கு இந்த பாக்கியம் இருக்கிறது. மக்கள் அவர்களுடன் ஏழு நாட்களுக்கு இருக்கிறார்கள். அவர்கள் முதல் நாள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கும், வகுப்பு முடிந்து கிளம்பும்போது எப்படி இருக்கிறார்கள் என்பதற்குமிடையே மலை போல் வித்தியாசமிருக்கும். அதில் குறைந்தது 80 சதவிகிதம் மக்களுக்கு அன்பு மற்றும் ஆனந்தத்தின் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல வருடங்களாக ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்திடாத பலபேர், வகுப்பின் சில நாட்களிலேயே அன்பு மற்றும் ஆனந்தத்தின் கண்ணீர் மல்க உங்களைக் காண்கின்றனர். பூமியில் எந்தவொரு செயலும் உங்களுக்கு இந்த அளவு நிறைவைத் தரமுடியாது.

நம்மை நாமே திருப்திப்படுத்திட நாம் செய்வதற்கு பல விஷயங்கள் உள்ளன. நாம் வேலை செய்யமுடியும், தொழில் நடத்தமுடியும், அல்லது கலைகளில் கற்றுத்தேர்ந்தவராக இருக்கமுடியும். உங்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய ஒரே விஷயம், அல்லது மிகச்சிறந்த விஷயம் யோகா என்று நான் சொல்லவில்லை. ஆனால் உங்கள் வாழ்வில், உங்களுக்கு நிறைவுதருவதைப் பொறுத்தவரை, உங்களை நீங்கள் முழுமையாகக் கொடுத்தால், உங்கள் செயலின்மூலம் நீங்கள் நிறைவை நாடவேண்டிய அவசியம் இருக்காது. வாழ்க்கை அப்படித்தான்.

இந்த நோக்கத்தில், வரும் ஜூலை மாதம், குருபௌர்ணமிக்குப் பிறகு, தீவிரமான ஈஷா யோகா ஆசிரியர் பயிற்சியை நாங்கள் வழங்கவிருக்கிறோம். இதில் பயிற்சிபெறுவோர் தமிழில், தமிழ்நாட்டில் ஈஷா யோகா நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தயார்செய்யப்படுவர். அதனால் ஒரு யோகாசிரியர், அல்லது ஒரு யோகி ஆகிட தயாராகுங்கள். இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தாலும், இரண்டில் ஒன்றாக ஆவதற்கு உங்களை நீங்கள் தயார் செய்திட வேண்டும். ஏனென்றால், இப்போது இது விருப்பத்தால் தேர்ந்தெடுக்கும் வசதியன்று, இந்த பூமிக்கு இது மிக அத்தியாவசியமான தேவையாகிவிட்டது.

குறிப்பு:

தமிழ் ஆசிரியர் பயிற்சி வகுப்பு குரு பௌர்ணமி முடிந்ததும் (ஜூலை 9) துவங்குகிறது. சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த பயிற்சி நடைபெறும். பயிற்சியின் முக்கிய அம்சங்கள் வழங்கப்படும் போது சத்குருவும் இதில் கலந்துகொள்வார். மேலும் தகவல்களுக்கு உங்கள் உள்ளூர் ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது fulltimeteachertraining@ishafoundation.org என்ற இ-மெயில் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.