இந்தியாவின் தேசத்தின் உயிர் நாடிகளான நதிகள் ஒரு கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன. வறண்டு பேய்கொண்டிருக்கும் நதிகளை எவ்வாறு மீட்டெடுப்பது மற்றும் நாம் என்ன செய்தால் அவை மீண்டும் புத்துயிர் பெரும் என்பது குறித்து சத்குரு அவர்கள் நமக்கு வழிகாட்டுகிறார்.

சத்குரு: இன்று நாம் இவ்விதமாய் உருவாகியிருப்பதற்குக் காரணமே நதிகள்தான். மொகஞ்சதாரோ-ஹரப்பா போன்ற பண்டைய நாகரீகங்கள், நதிக்கரையில் பிறந்தன. நதிகள் திசைமாறியபோது அவையும் அழிந்தன.

இன்று பல நதிகள் வெகுவேகமாக அழிகின்றன. இன்னும் இருபதாண்டுகளில் அவை அருகிப் போக வாய்ப்பிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் பத்துப் பன்னிரண்டு நதிகள் முற்றாக அழிந்துப்போகக் கண்டுள்ளேன். இன்று, தென்னிந்தியாவின் மிக முக்கிய நதிகளாகிய காவேரி, கிருஷ்ணா, கோதாவரி ஆகியவை ஆண்டின் சில மாதங்களுக்குத்தான் கடலில் சென்று சேர்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மறுபுறம் – அளவுக்கு மீறிய மழை

பூமி உஷ்ணமயமாவதன் காரணமாக, இருபுறமும் கடல்கள் கொண்ட தென் பிரதேசங்களில் கூடுதலாக மழை பொழிகிறது. கடலோர மாநிலங்களான ஆந்திரா உள்ளிட்ட பகுதிகள் பருவமழைக் காலங்களில் வெள்ளப் பெருக்குக்கு ஆளாவதைப் பார்க்கிறோம். டிசம்பர் மாதத்தில் பெருகிய வெள்ளத்திற்குப் பிறகு சென்னைவாசிகள், மழை என்றாலே அஞ்சத் தொடங்கிவிட்டார்கள். இப்போது இரண்டு நாட்கள் மழை பெய்தாலும் மீட்புப் படகுகளை தயார் நிலையில் வைத்துக்கொள்கிறார்கள்.

மழையின்மையால் வரும் பாதிப்பை விடவும், கூடுதல் மழை தென் மாநிலங்களை விரைவில் பாலைவனம் ஆக்கிவிடும். ஏனெனில், அவை, காலப்போக்கில் பூமியை விவசாயத்திற்குத் தகுதி இல்லாததாகச் செய்துவிடும். இந்நிலை, தமிழகத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே உருவாகத் துவங்கிவிட்டது. ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படும்போது இருநூறு அடிகளிலேயே தண்ணீர் கிடைத்த நிலை மாறி, இப்போது ஆயிரம் அடிகள் தோண்டப்பட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை.

per-capita-water-availability-in-tamilSource: CC-BY – Factly.in

ரயில்களிலும் லாரிகளிலும் தண்ணீர் விநியோகித்து இந்த தேசத்தை எத்தனை காலங்களுக்கு வழி நடத்த இயலும்? நான் எச்சரிக்கை செய்பவனாக மாற விரும்பவில்லை. ஆனால், நதிகளைத் தவறாக நடத்துவதால் ஏற்படும் சிக்கல்களை அனைவரும் சிந்திக்க வேண்டும். இத்தனை கோடி மக்கள் தொகையை வைத்துக்கொண்டு, நதிகள் வற்றினால் ஒருவரையொருவர் கொன்று ரத்தத்தைக் குடிக்க முடியுமா என்ன?

பனிக் கட்டிகளால் உருவாகும் நதிகளை உடனடியாக மீட்க முடியாது. ஏனெனில், பனிப்பொழிவு என்பது உலகளாவிய விஷயம். ஆனால், வனங்களில் உருவாகும் நதிகளை நாம் உயிர்ப்பிக்க முடியும். மக்கள் உடனடித் தீர்வுகளை எதிர்நோக்கி நதிகளை இணைத்து, அதன்வழி கூடுதல் நீரை நிலங்களுக்கு விநியோகிக்க முடியுமென எண்ணுகின்றனர். இது இன்னும் ஆபத்தாகத்தான் முடியும். பெருந்தொகையைச் செலவழித்து சூழலியலுக்கு ஓர் ஆபத்தை இதன்மூலம் உருவாக்குவோம்.

வேளாண் காடுகள் திட்டம்!

நதிகளுக்கு என்ன நிகழ்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, செய்ய வேண்டியது என்ன என்பதையும் நாம் அறிவுறுத்த வேண்டும். ஆதாயம் தரும் தீர்வுகளைத் தந்தால்தான் மக்கள் நதிகளைக் காக்க முன்வருவார்கள். மரக்கன்றுகளை நாம் வளர்ப்பதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு 1 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு தந்து பெருமளவு நிலத்தில் பசுமைப் போர்வையை உருவாக்க வேண்டும். இதன் வழியாக பருவமழை தவறாத சூழலை ஏற்படுத்தி பூமி சிதைவுறுவதைத் தடுக்க முடியும். இது முழுமையான தீர்வாக அமைவதோடு, நதிகளை இணைப்பதற்கு ஆகும் செலவில் 10% மட்டுமே ஆகும்.

Drinking-Water-Availability-tamilSource: CC-BY – Factly.in

மரங்களின் அரண்

நதியின் இரு கரைகளுக்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு விவசாயம் செய்யக்கூடாது. கரைப்பகுதிகளை உழும்பொழுது உரங்களும், பூச்சி மருந்துகளும் தண்ணீரில் கலந்து உயிரினங்களை பாதிக்கின்றன. மாறாக செடிகள் நடவேண்டும். அரசு நிலமாக இருந்தால் காடு வளர்க்கவும், தனியார் நிலமாக இருந்தால் மரப்பயிர் செய்யவும் திட்டமிட வேண்டும். தேவையான பயிற்சியையும், மானியத்தையும் அரசு வழங்கி ரசாயனக் கலப்பின்றி இயற்கை விவசாய முறையில் மரப்பயிர் செய்ய முடியும். இதன்மூலம் விளைநிலங்கள் முன்பை விட நல்ல வருவாயையும் ஈட்டித் தரும்.

அரசாங்கங்கள் நதிகளின் நலனுக்கு உகந்த திட்டங்களை உருவாக்க வேண்டும். ஆந்திரா மற்றும் மத்தியப் பிரதேச அரசுகள் அந்தப் பாதையில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. வேளாண்மையைவிட இந்த வகையிலான அணுகுமுறை கூடுதல் ஆதாயம் தரும் என்பதை நிறுவும் விதமாக மத்திய அரசுக்கு நாம் ஒரு திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளோம்.

தாங்கள் என்ன செய்தாலும் எதுவும் மாறாது என்பது போன்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டதாலேயே பலரும் தோல்வியைத் தழுவுபவர்கள் ஆகிவிட்டார்கள். ஆனால், மாற்றத்தை உருவாக்க இதுவே நேரம். பத்தாண்டுகள் தாண்டினால் காலம் மிகவும் கடந்து போகும். பொருளாதார வேட்கையால் நதிகளையும் நிலங்களையும் பராமரிக்கத் தவறிவிட்டோம். நம் தலைமுறையிலேயே அவற்றை அழித்து விடக்கூடாது. இந்த ஆண்டு மரம் நட்டு, இரண்டு ஆண்டுகள் பராமரித்து அதன் பிறகு அடுத்த மரத்தை நட்டுப் பராமரிக்கத் துவங்கினால், இதுவே ஓர் இயக்கமாக மாறிவிடும். இதைச் செய்ய முடியுமா… முடியாதா என்பதல்ல கேள்வி; செய்ய விரும்புகிறோமா… இல்லையா என்பதே கேள்வி? இதனை நாம் நிகழச் செய்வோம்.