ஐக்கிய நாடுகள் சபையில் ஆகஸ்ட் 30, 2000-ல் நடைபெற்ற மத மற்றும் ஆன்மீகத் தலைவர்களுக்கான, நூற்றாண்டின் உலக அமைதி உச்சிமாநாட்டில் சத்குரு வழங்கிய உரை இது.

மன்னித்தலும் சமரசம் செய்தலும்:உலகளவில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நாம் எடுக்கவேண்டிய முனைப்புகள்.

சத்குரு: ஒருவர் மாற்றி ஒருவராக, ஒவ்வொருவரும் இங்கு 'மதங்களின் சமத்துவத்தை' வலியுறுத்துகின்றனர். இந்த உண்மையை நானும் அறிவேன்... ஆராதிக்கவும் செய்கிறேன். நான் வந்த கலாச்சாரத்தின் அடிப்படையே இதுதான். ஆனால், இந்த உச்சிமாநாட்டின் நோக்கம் என்ன? "எல்லோரிடமும் அன்பாக இருங்கள்" என்று வலியுறுத்தப்படும்... ஆனால் பின்பற்றப்படாத வியாக்கியானத்தை மீண்டும் வலியுறுத்துவதா, அல்லது மதவெறிச் செயல்கள், சகிப்புத் தன்மையின்மை, வெறுப்பு என்று நாம் எதிர் கொள்ளும் கசப்பான உண்மைகளுக்குத் தீர்வு தேடுவதா? இது எப்படிப்பட்ட மாநாடு? வெறும் கண்துடைப்பாய், மேலோட்டமாய் பேசிப்போகும் மாநாடா? அல்லது உண்மையிலேயே உலக அமைதியை நிலைநாட்டும் முனைப்போடு இது நிகழ்கிறதா?

எல்லா மதத்தலைவர்களையும் நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், ஒவ்வொரு மனிதரும் அவரவர் வழியில் தெய்வீகத்தை அடைந்திட அனுமதியுங்கள். மற்ற மதங்களின் புனித சம்பிரதாயங்களை, 'சாத்தானின் வேலை' என்று முத்திரையிடுவதை விட மோசமான வன்முறை வேறெதுவும் இல்லை.

“Reconciliation” - "சமரசம் செய்தல்" மிக அதிகமாகவே பேசப்படுகிறது. முன்காலத்தில் நடந்த எல்லாத் தவறுகளையும், கொடூரங்களையும், இங்கே இந்த மாநாட்டில் நான் வேண்டுமானால் மன்னிக்கலாம்... ஆனால் பாதிக்கப்பட்ட சமூகத்தில் உள்ள இளைஞர்கள் அதை மன்னிக்கமாட்டார்கள்.

எல்லா மதத்தலைவர்களையும் நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், ஒவ்வொரு மனிதரும் அவரவர் வழியில் தெய்வீகத்தை அடைந்திட அனுமதியுங்கள். மற்ற மதங்களின் புனித சம்பிரதாயங்களை, 'சாத்தானின் வேலை' என்று முத்திரையிடுவதை விட மோசமான வன்முறை வேறெதுவும் இல்லை. கட்டாயப்படுத்துதல், ஆசைவார்த்தைகளால் இணங்கச்செய்தல், தந்திரம் செய்து ஏற்கச்செய்தல் போன்றவற்றை மதங்களில் இருந்து ஒழித்தாலே அன்றி, 'மன்னிப்பு' நிகழாது. உங்களை என் சகோதரராய் எண்ணுவதால் இதை மிகுந்த மனவருத்தத்தோடு, வலியோடு பகிர்கிறேன் - இங்கு அமைதி நிகழாது.

உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் - இச்சமயத்தில் என்ன தேவையோ, அதை நாம் செயல்படுத்த வேண்டும்.