சத்குரு: ஒருவரோடு பேசுவதற்கு அமரும்போது, நான் அவரைப் பார்த்தால் போதும்... அதற்குமேல் என்ன பேசவேண்டும் என்று நான் சிந்திக்கத் தேவையில்லை. ஏனெனில் அவரைப் பார்க்கும்போது, அவரை என்னில் ஒரு அங்கமாகவே நான் உணர்வேன். எப்போது ஒவ்வொருவரையும் உங்களில் ஒரு அங்கமாகப் பார்க்கிறீர்களோ, அதன்பின் எவ்வித பிரச்சினையோ கஷ்டமோ இருப்பதில்லை. இது பெரிய மகத்துவம் என்றல்ல. இதற்கு உங்களுக்கு தன்னம்பிக்கையோ, முனைப்போ வேறெதுவுமோ கூடத் தேவையில்லை. இவையெல்லாம் வேறு ஒருவரிடம் பேசுவதற்குத்தான் உங்களுக்குத் தேவைப்படும். எல்லோரையும் 'நீங்களா'கவே பார்க்கும்போது எவ்வித பரபரப்போ, படபடப்போ இன்றி, என்ன தேவையோ அதைச் செய்வீர்கள்.

"யாரின் கேள்விக்கும் நான் பதில்சொல்வதில்லை"

யாரின் கேள்விக்கும் நான் பதில் சொல்வதில்லை. மாறாக, அவர்களின் கேள்வியை இன்னும் ஆழமாக்குவேன். ஏனெனில் அறியாமையின் மகத்துவத்தை நீங்கள் உணர்வது மிகமிக அவசியம். "எனக்குத் தெரியாது" என்பது மாபெரும் சாத்தியக்கூறு. உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் "எனக்குத் தெரியாது" என்று அலறும்போதுதான், 'உண்மை அறிந்திடும்' ஏக்கம் உங்களுள் மிகத்தீவிரமான ஒரு செயல்முறையாய் வெடிக்கும். அதனால் நான் யாரின் கேள்விக்கும் பதிலளிப்பதில்லை. பொதுவாக மக்கள் கேட்கும் கேள்விகள், அவர்களின் பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கல்ல. அது அவர்களைப் பற்றியதாகவே இருக்கும். அதனால் நான் கேள்விக்கு பதிலளிக்காமல், கேள்வியாளருக்கு எது பதிலாக இருக்குமோ, அதையே சொல்வேன். ஒரே கேள்விக்கு, இவர் கேட்கும்போது ஒன்றை சொல்வேன்... அதையே வேறோருவர் கேட்கும்போது, அதற்கு வேறொன்றை சொல்வேன். ஏனெனில் நான் எப்போதும் கேள்வியைப் பார்ப்பதில்லை... கேள்வி கேட்பவரையே பார்க்கிறேன்.