வேலூரில் நடிகர் விவேக் துவங்கி வைத்த ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம்!
வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மூலமாக 4 லட்சம் மரக்கன்றுக்கள் உற்பத்திசெய்து நடும் ஒரு மாபெரும் இயக்கம்... பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் சில முக்கிய பதிவுகள் இங்கே உங்களுக்காக!
ஈஷா பசுமை கரங்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வேலூர் பசுமை பள்ளி இயக்கத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழா வேலூரில் ஊரீஸ் கல்லூரியில் இன்று (ஜூன் 13) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் திரு.ராமன், மாவட்ட முதன்மை கல்வி அலுலர் திரு.மார்ஸ், நடிகர் திரு.விவேக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்பு விருந்தினர்கள் மகிழம் மரக் கன்றை நட்டு வேலூரில் நடப்பு கல்வியாண்டில் 4 லட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டத்தை துவக்கி வைத்தனர்.
ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி ரப்யா திட்ட விளக்க உரையை நிகழ்த்தினார்.
விழாவுக்கு தலைமை வகித்த வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.ராமன் அவர்கள் பேசியாதாவது:
100 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மாவட்டம் மரங்களால் நிறைந்து குளுமையாக இருந்தது. பல்வேறு காரணங்களால் மரங்கள் வெட்டப்பட்டு தற்போது வேலூரில் வெயில் கொளுத்தி எடுக்கிறது.
Subscribe
வேலூரில் வெப்பத்தை குறைத்து குளுமையை உருவாக்குவதற்கு அதிகமான மரங்களை நட வேண்டும். இதை ஒரு தனிநபரால் செய்ய முடியாது. மக்கள் இயக்கத்தால் மட்டுமே இதை சாத்தியப்படுத்த முடியம். அதற்காக, பள்ளி கல்வித் துறையும் ஈஷா பசுமை கரங்களும் இணைந்து பசுமை பள்ளி திட்டத்தை வேலூரில் செயல்படுத்தி வருகிறோம்.
மாணவர்களே நேரடியாக மண்ணில் விதை விதைத்து மரக் கன்றுகளை உருவாக்கி அதை நட்டு பராமரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது தான் இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.
அரசு சார்பில் வனத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை என பல துறைகள் மூலம் மரங்கள் நடப்படுகின்றன. அவற்றையெல்லாம் விட பள்ளிக் கல்வித் துறையானது ஈஷாவுடன் இணைந்து செயல்படுத்தும் இந்த பசுமை பள்ளி திட்டம் அதிக பலன்களை தருகிறது. அதற்கு மாணவர்களின் நேரடி பங்களிப்பு தான் முக்கிய காரணம். நாட்டின் எதிர்காலமாக கருதப்படும் மாணவர்கள் அதிகப்படியான மரங்களை வளர்க்க வேண்டும். வேலூர் என்றால் வெயில் என்ற நிலை மாற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மார்ஸ் அவர்கள் பேசுகையில், “வேலூரில் பள்ளி கல்வித் துறையும் ஈஷா பசுமை கரங்களும் இணைந்து செயல்படுத்தும் பசுமை பள்ளி திட்டம் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்தாண்டு இந்த திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 11 ஆயிரம் மரக் கன்றுகளை மாணவர்களே உருவாக்கி நட்டு சாதனை படைத்துள்ளனர். இந்தாண்டு 4 லட்சம் மரக் கன்றுகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அமைப்புகளை காட்டிலும், ஈஷா பசுமை இயக்கத்தின் மூலம் நடப்படும் மரக் கன்றுகள் மரங்களாக மாறும் வெற்றி சதவீதம் அதிகமாக உள்ளது” என்றார்.
நடிகர் திரு.விவேக் பேசியதாவது:
வேலூர் என்றதும் 2 விஷயங்கள் தான் பேமஸ். ஒன்று ஜெயில் மற்றொன்று வெயில். வேலூர்னா வெயில் என்பதை மாற்றி ஊரெல்லாம் மரங்களை நட்டு அதில் குயிலை கூவ வைக்கும் பணியை தான் ஈஷா செய்து வருகிறது. இயற்கையை பாதுகாப்பதற்கு மிக சிறந்த வழி மரம் நடுவது தான்.
ஈஷா அமைப்பு சமுதாயத்திற்காக ஏராளமான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற மக்களுக்காக கிராமப் புத்துணர்வு இயக்கம், கிராமப்புற மாணவர்களுக்காக ஈஷா வித்யா பள்ளிகள், விவசாயிகளுக்காக ஈஷா விவசாய இயக்கம் மற்றும் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம், பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக ஈஷா பசுமை கரங்கள் திட்டம், பள்ளி மாணவர்களுக்காக ஈஷா பசுமை பள்ளி திட்டம் என பல திட்டங்களை வெற்றிகரமாக செய்து வருகிறது.
அப்துல் கலாம் அய்யா அவர்கள் 2008-ம் ஆண்டு என்னை அழைத்து மரம் நடுவதன் அவசியம் குறித்து உலக வெப்பமயமாதல் குறித்தும் பேசினார். அப்போது முதல் நான் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன். 1 கோடி மரங்களை நடுவதை இலக்காக வைத்துள்ளேன். தற்போது 30 லட்சம் மரக் கன்றுகளை நட்டுள்ளோம். அந்த எண்ணிக்கையை மேலும் வேகமாக உயர்த்துவதற்காக ஈஷாவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளேன்.
மனிதர்களின் வாழ்க்கையில் மரங்கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளன. அவை தான் நாம் உயிருடன் இருப்பதற்கு தேவையான ஆக்சிஜனை அளிக்கின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை மரங்கள் நமக்கு பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கின்றன. மரங்கள் இருந்தால் தான் மழையும் கிடைக்கும். ஆகவே, இயற்கையை பாதுகாப்பதற்கு மிக சிறந்த வழி மரம் நடுவது தான். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் நடப்படும் மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதை மையமாக வைத்து செயல்படும் ஈஷா பசுமை பள்ளி இயக்கத்துக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் விவேக் பேசினார்.
ஈஷா யோகா மையத்தின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.வெங்கடசுப்பு அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.