கொல்லைப்புற இரகசியம் - பகுதி 34

இளைஞர்களின் எழுச்சியால் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிபெற்று, இந்த ஆண்டு வழக்கமாக நடத்தப்படும் ஊர்களில் மட்டுமல்லாது புதிதாக பல ஊர்களிலும் உற்சாகமாக காளைகள் சீறிப்பாய்ந்தன. தொலைக்காட்சிகளும் முழுநேரமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஒளிபரப்ப, சொகுசாக சோபாவில் உட்கார்ந்துகொண்டு விளையாட்டை வேடிக்கை பார்த்த லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். ஆனாலும் எனக்குள்ளே ஒரு உறுத்தல்
இருந்தது. நாம் ஒருமுறை கூட ஜல்லிக்கட்டில் பங்கேற்கவில்லையே என்பதுதான்!

இளைப்பு நோய் உள்ளவங்களுக்கு எள்ளு நல்ல குணம் தரும். தேவையில்லாத கொழுப்பு இருக்குறவங்க கொள்ளு சாப்பிட்டா கொழுப்ப கரைச்சு, உடலுக்கு வன்மையுண்டாக்கும்.

நான் எப்போதாவது குடும்பத்தினரிடம் இந்த ஆசையை வெளிப்படுத்தினால், ஓரிரு நிமிடங்கள் மேலும் கீழும் பார்த்தபடி சிரித்துவிட்டு கடந்து செல்வார்கள். நண்பர்களிடம் சொன்னாலோ, ‘நீ எப்பவுமே சீரியஸா பேசமாட்டியா?!’ என்று சொல்லி கலாய்ப்பார்கள். ஆனால் அந்த ஆசை மட்டும் அப்படியே!

இம்முறை யாரிடமும் சொல்லாமல் அடுத்த ஆண்டு நிகழப்போகும் ஜல்லிக்கட்டிற்கு என்னை தயார்ப்படுத்த முடிவுசெய்தேன். முதலில் இதற்கென உடலை வலுவாக்குவது, பின்பு மாடு பிடிக்கும் நுட்பத்தை முறையாக பயில்வது என திட்டமிட்டேன். உடலை வலுவாக்க வேண்டுமென்றால் டயட் என சொல்லப்படும் சரியான உணவுமுறை அவசியம். இதற்கெல்லாம் டாக்டரிடம் ஆலோசனை கேட்கப்போனால் அவர் போடும் பில் எனது பலநாள் டயட் செலவிற்கு ஈடாக இருக்கும். எனவே எனது ஒரே சாய்ஸ்... தி ஒன் அன் ஒன்லி உமையாள் பாட்டிதான்!

பாட்டி தனது வீட்டின் அடுக்களையில் சமையலில் மும்முரமாக இருக்க, நான் பீடிகை போட்டபடி பாட்டியிடம் சென்று மெதுவாக விஷயத்தை மென்று முழுங்கினேன்.

“அட என்னப்பா நீ... இதெல்லாம் எவ்வளவு பெரிய விசயம்?! நூத்துல ஒருத்தருக்குதான் வரும் இந்த மாதிரி தைரியம்!” என்று என்னை பாராட்டிய கையோடு, “ஆனா... இந்த கண்டிஷன்ல அப்படியே போய் மைதானத்துல நின்னேன்னா உன்னால பசுமாட்ட கூட அடக்கமுடியாது. அதுக்கெல்லாம் நல்ல உடல் திடமும், பயிற்சியும் வேணும்!” என்று என்னை உயரே தூக்கி கீழே அமுக்கினாள் பாட்டி.

“என்ன பாட்டி நீங்களே இப்படி சொல்றீங்க? அதுக்காகதானே உங்க கிட்ட வந்திருக்கேன். எனக்கு உடல் திடம் வர்றதுக்கான ஆகாரம் என்னன்னு சொல்லுங்க!”

“சரி... நீ கூடத்துல போயி உக்காந்திரு. நான் இந்த சமையல் வேலைய முடிச்சிட்டு வர்றேன்” என்று பாட்டி நம்பிக்கை கொடுக்க, நான் கூடத்தில் காத்திருந்தேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“சரி வந்தது வந்திட்ட, ஒரு வாய் சாப்பிட்டு போப்பா!” அடுக்களையிலிருந்து சமையல் முடித்து வந்த பாட்டி பாசமாய் உபசரித்தாள். நான் வழக்கமான சாம்பார், ரசம், மோர் என தலைவாழை இலை விருந்தாக இருக்குமோ என நினைத்துக்கொண்டிருக்கையில், ஒரு வெண்கல குவளையில் தான் செய்த கொள்ளு கஞ்சியை கொண்டு வந்து நீட்டினாள் பாட்டி!

“நீ இந்த கொள்ளு கஞ்சிய தினமும் குடிச்சு வந்தா நல்ல பசி உண்டாகி, உடல் நல்ல வன்மையாகும், குடிப்பா!” என்று சொன்னதும் அடுத்த கணமே கஞ்சியை ஆர்வத்துடன் ருசிக்கலானேன்.

“அப்படியென்ன பாட்டி இதுல இருக்கு?”

“இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளுன்னு கேள்விப்பட்டிருக்கியா?”

“ஆமாம் பாட்டி!”

சாதத்துல சேத்து சாப்பிடணும்னா அத பொடி செஞ்சு கூட பிசைஞ்சு சாப்பிடலாம். நம்ம ஈஷா ஆரோக்கியாவுல கொள்ளு சாதப் பொடி கிடைக்குது.

“அதுக்கென்ன அர்த்தம்னா... இளைப்பு நோய் உள்ளவங்களுக்கு எள்ளு நல்ல குணம் தரும். தேவையில்லாத கொழுப்பு இருக்குறவங்க கொள்ளு சாப்பிட்டா கொழுப்ப கரைச்சு, உடலுக்கு வன்மையுண்டாக்கும். இந்த கஞ்சி கொள்ளும் அரிசியும் சேத்து காய்ச்சின கஞ்சி! இத நீ தினமும் செஞ்சு குடி, அப்புறம் பாரு உன்னோட பலத்த?! அதோட சூடான கொள்ளு சூப் தினமும் குடிச்சு வந்தா உன்ன மாதிரி இளைச்ச உடல் பருத்து வலுவாகும். அப்புறம்... சாதத்துல சேத்து சாப்பிடணும்னா அத பொடி செஞ்சு கூட பிசைஞ்சு சாப்பிடலாம். நம்ம ஈஷா ஆரோக்கியாவுல கொள்ளு சாதப் பொடி கிடைக்குது”

“ஓ ரொம்ப நல்லதா போச்சு பாட்டி, நான் போற வழியில ஈஷா ஆரோக்கியால வாங்கிக்கிறேன்.”

“நில்லுப்பா இன்னும் கொள்ளுக்கு சில மருத்துவ குணங்களும் இருக்கு. அதையும் கேட்டுட்டு போ!”

“ம்... சொல்லுங்க சொல்லுங்க ஐம் வெய்ட்டிங்கு!”

“கொள்ளு 34 கிராம், முந்திரி பருப்பு 4 - 5 கிராம் சேத்து 600 கிராம் நீர் விட்டு காய்ச்சி குடிச்சா, இரத்தம் கலந்தமாறி போகுற பேதி குணமாகும். வீக்கம், கட்டிகளுக்கு கொள்ள அரைச்சு ஒத்தடம் இல்ல பற்று போட்டோம்னா சரியாகும்.”

“ஓ சூப்பர் பாட்டி... அப்புறம் ஒரு டவுட் பாட்டி!”

“சொல்லுப்பா தெரிஞ்சா சொல்றேன்!”

“நம்ம பாட்டியோட அம்மாவ ஏன் கொள்ளு பாட்டின்னு சொல்றோம். அவங்கல்லாம் அவ்வளவு வயசாகியும் ஸ்ட்ராங்கா இருக்குறதாலயா?

பாட்டி பதிலேதும் சொல்லாமல் தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு மீண்டும் அடுக்களைக்குள் சென்று தன் வேலையை தொடர்ந்தாள்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்