சமீபத்திய பேரழிவுகள்
உலகில் அழிந்துவரும் நதிகளில், கங்களை முதன்மையான நதிகளில் ஒன்றாய் WWF மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான இந்திய நதிகளை போல கங்கையும் வெள்ளம், வறட்சி என நிலைமாறிக் கொண்டே இருக்கிறது. 2016 மே மாதத்தில் உத்திரப்பிரதேசத்திலுள்ள ப்ரயாகில் கங்கை வறண்டது. மக்கள் ஆற்றுப்படுகையில் நடந்து கொண்டிருந்தனர். மூன்றே மாதங்களில் கங்கையின் பருவமழைக்கால வெள்ளம் இதுவரை கண்டிராத அளவை எட்டியது. பீகார் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் 40 லட்சம் பேர் இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டனர். அதில் 6,50,000 பேர்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வறட்சி காலத்தை தொடர்ந்து உடனே வந்த வெள்ளம் வேளாண்மையை பாதித்தது.
ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்
கங்கை என்ற வார்த்தைக்கு ஓடிக்கொண்டிருப்பது என்று பொருள். கங்கை இந்தியாவிற்கு ஒப்பானது என்று சொல்லலாம். இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பண்பிற்கு அடிப்படையான காரணங்களில் கங்கையும் ஒன்று.
இந்தியாவின் மிக முக்கிய ஆன்மீகத் தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், ப்ரயாக் மற்றும் காசி ஆகியவை கங்கை நதிக்கரையிலேயே அமைந்துள்ளன. இமயமலையில் கங்கை மற்றும் அதன் கிளை நதிக்கரைகளில் கேதார்நாத் பத்ரிநாத் மற்றும் கோமுக் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.
கும்பமேளா நடைபெறும் நான்கு இடங்களில் இரு இடங்கள் கங்கை கரையில் அமைந்துள்ளன. அவை ஹரித்வார் மற்றும் ப்ரயாக்.
கங்கையின் கிளை நதியான சோனேவின் கரையில் 11,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட முக்கோண வடிவிலான கல்லை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர். சக்தி அல்லது பெண்மையை வணங்கும் யந்திரங்களில் மிகப் பழமையான ஒன்றாக இது கருதப்படுகிறது.
பிரஞ்சு தத்துவமேதை பிரான்சிஸ். எம். வோல்டயர் கங்கையை கண்டு வியந்து இவ்வாறு கூறினார், “கங்கைக் கரையில் இருந்தே வானியல் சோதிடம், ஆன்மீகம் என அனைத்தும் நமக்கு கிடைத்தன என்று நான் உறுதியாக நம்புகிறேன். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பிதாகரஸ், சமோஸில் என்ற இடத்திலிருந்து கங்கை சென்று வடிவகணிதம் பயின்றார் என்பது மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.” (பிரெஞ்சில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது)
பழங்காலத்தில் கங்கை நீர் தேவர்களின் அமிர்தமாக அறியப்பட்டது. முகலாய பேரரசரான அக்பர் தன்னோடு எப்பொழுதும் கங்கை நீரை எடுத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கிழக்கிந்திய கம்பெனி இங்கிலாந்து பயணிக்கும் தன் மாலுமிகளுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான நீரை கங்கையில் இருந்தே எடுத்தது. ஏனெனில், கங்கை நீர் அந்த பயணக்காலம் முழுவதும் “தூய்மையாகவும் இனிப்பாகவும்” இருந்தது. காலரா நுண்ணுயிர்களை கங்கை நீர் அழிக்கிறது என்று 1896-ஆம் ஆண்டில் ஆங்கிலேய நுண்ணுயிரியல் வல்லுநர் கண்டறிந்தார்.