நதிகள் மீட்பு இயக்கம் என்றால் என்ன?
நதிகள் மீட்பு இயக்கம் என்பது, இந்தியாவின் உயிர்நாடிகளைக் காப்பதற்கான ஒரு இயக்கம். வேகமாக வற்றிவரும் இந்திய நதிகளுக்கு புத்துயிரூட்டும் நோக்கத்தில், செப்டம்பர் 3ம் தேதியன்று சத்குரு இவ்வியக்கத்தை துவக்கிவைத்து, மக்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 16 மாநிலங்கள் வழியாக 9300 கிமீ பயணம் செய்தார்.
180ற்கும் மேற்பட்ட பொது நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்து, பொதுமக்களின் ஆதரவைப் பெற்று, வரலாறு காணாத மாபெரும் மக்கள் விழிப்புணர்வு இயக்கமாக இது மாறியது. 16.2 கோடி மக்களின் ஆதரவுடன், இன்று உலகிலேயே மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கமாக விளங்குகிறது.
இந்திய நதிகளைக் காக்க ஒரு விரிவான தீர்வை நதிகள் மீட்பு இயக்கம் வழங்குகிறது. இது சுற்றுச்சூழல் திட்டமாக இருந்தாலும், குறிப்பிடத்தக்க பொருளாதார பலன்கள் தருவதால், அதன் அமைப்பில் தனித்துவமானது.
விழிப்புணர்வு உருவாக்கும் பயணத்தின் நிறைவாக, 2017 அக்டோபர் 2ம் தேதி, “இந்திய நதிகளின் புத்துணர்வு”க்கான கொள்கை வரைவுத் திட்ட பரிந்துரைகளை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோதி அவர்களிடம் சத்குரு ஒப்படைத்தார்.
விரிவான ஆய்வுகள், மற்றும் களத்தில் இறங்கி செயல்படுவது மூலம் வேகமான தீர்வுக்கான பரிந்துரைகளை செயல்படுத்துவதில், நதிகள் மீட்பு இயக்கம் தற்போது பல்வேறு மாநிலங்களில் கவனம் செலுத்தி வருகிறது.