கேதார்நாத் இத்தனை பாதிப்புக்கு உள்ளாகிய பிறகு சத்குரு இதைப் பற்றி என்ன சொல்கிறார் எனத் தெரியவில்லையே என்ற ஆதங்கத்தோடு காத்திருந்தவர்களுக்கு இந்த வார சத்குரு ஸ்பாட் விடையாய் வருகிறது. உத்தரகண்ட் சேதம் இயற்கை சேதமல்ல, மனித சேதம் என்று பேசும் அவர், சேதத்தை பற்றி மட்டும் பேசாமல் ஒரு சமூகத் தலைவருக்கே உள்ள தனித்துவத்தோடு முழு பிரச்சனையையும் சிறப்பாக அலசுகிறார்...

உத்தரகண்டில் நிகழ்ந்துள்ள அளவிட முடியாத இழப்பை மக்கள் இன்னும் உணரவில்லை. ஒரு காலகட்டத்தில், ஒவ்வொரு வருடமும் நான் இமாலயத்திற்கு செல்வேன். இந்தியாவின் மிக அற்புதமான பகுதியான இவ்விடத்திற்கு செல்வதை கடந்த நான்கிலிருந்து ஆறு வருடங்களில் நான் வெகுவாக குறைத்திருக்கிறேன்.

உலகிலேயே மிகவும் இளையது இந்த மலைப்பிரதேசம். ஏதோ இடிபாடுகளை குவித்து வைத்ததைப் போன்ற ஒரு அமைப்புடன் இமாலயம் இருப்பதை அங்கு பயணித்திருந்தால் நீங்கள் கவனித்திருக்க முடியும். அதனுள் நீங்கள் சாலைகளை இடும்போது, ஆறுகளின் பாதைகளும் துண்டிக்கப்படுகின்றன, நிலச்சரிவுகள் வெகு இயல்பாய் அங்கு நடக்கின்றன. நிலச்சரிவுகளில் மாட்டிக் கொள்ளாமல், கால் நடையாக பல மைல் கணக்கான தூரங்களை கடந்து செல்லாமல் நான் அங்கு சென்று வந்ததில்லை. கிட்டதட்ட 27 முறை அங்கு சென்று வந்திருப்பேன், இது இமாயலத்தில வெகு இயல்பான பயணமுறை என்று கூட சொல்லலாம்.

அந்த மலை மிகவும் இளமையாக, எளிதில் உடையக் கூடிய வகையில் உள்ளது. கவனமாக கையாளாத பட்சத்தில் வெகு சுலபமாக விழுந்துவிடும் போல் இருக்கிறது. எல்லையில் சாலை அமைக்கும் அமைப்புகள் கடந்த சில வருடங்களில் மிக அற்புதமான பணியை இங்கு செய்து வந்துள்ளன. இவை அனைத்தையும் அறிந்த பின், இந்த சோகக் கதைக்கு ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மீதோ அல்லது அரசாங்கத்தின் மீதோ நாம் பழி சுமத்துவது தகாது. ஒரு நாளில் 340மிமீ மழைக் கொட்டியுள்ளது. அது ஒரு மேகவெடிப்பு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உள்ளூர் மக்கள் தங்கள் வட்டார வழக்கில், "வானமே தங்கள் மேல் விழுந்துவிட்டது," என்று சொல்கிறார்கள். மேகவெடிப்பு, மண்சரிவு இவையெல்லாம் மலைப்பிரதேசங்களில் இயற்கையான நிகழ்வுகளே! அது நிகழும் தடத்தில் நாம் இருந்ததால், அது சோகக் கதையாய் போனது. நாம் இல்லையேல் அது சோகக் கதையல்ல, அது ஒரு இயற்கை நிகழ்வு. ஒரு மலை வளரும்போது இது சாதாரண ஒரு நிகழ்வு. எது ஸ்திரமில்லாமல் இருக்கிறதோ அது நொறுங்கி கீழே வந்து, தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வது ஆயிரம் ஆயிரம் காலமாக வழக்கில் இருக்கிறது. இது பல்லாயிரம் வருடங்களாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் இது இயற்கை பேரழிவல்ல, இது மனிதப் பேரழிவு. மனிதப் பேரழிவைத் தடுப்பது மனிதனுடைய வேலையல்லவா?

நம் தேசத்தை நாம் ஒரு வியாபார நிறுவனமாக (Enterprise) பார்க்க வேண்டும். நாம் வெற்றிகரமான வியாபார நிறுவனமாக இருக்க விரும்புகிறோம், தோல்வியுற்றவர்களாய் அல்ல. வெற்றிபெற்ற தேசம், வெற்றி பெற்ற வியாபார நிறுவனம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய பலம் என்ன? நமமுடைய பலவீனம் என்ன? நம்முடைய வளர்ச்சிக்கு தேவையான எதையாவது நாம் கவனிக்காமல் இருக்கிறோமா?

நமது தற்போதைய தேவை, இந்த தேசத்தை வணிக நிறுவனமாக அணுகக் கூடிய, அதனை வெற்றிகரமாக இயக்கக் கூடிய ஒரு தலைவர் தேவைப்படுகிறார். நம் தேசத்தை நாம் வியாபார நிறுவனமாக பார்க்கும் தருணம் வந்துவிட்டது.

நம்முடைய வரலாற்றிலும் நம்முடைய பாரம்பரியத்திலும் இன்னும் பல விஷயங்களிலும் நாம் தொலைந்து போய்விட்டோம். நாம் இவற்றை மதிக்கத்தான் வேண்டும். பாரம்பரியமாக நமக்கு இருக்கும் பலங்களையும் பலவீனங்களையும் நாம் பார்க்கத்தான் வேண்டும். வெற்றியே உங்கள் இலக்காக இருக்கும்போது தான் நீங்கள் இதை உணர்ந்து கொள்வீர்கள். ஆனால், தற்சமயம் வெற்றி என்பது நம் இலக்காக இருக்கவில்லை. எப்படியாவது 5 ஆண்டுகளைக் கடத்த வேண்டும் என்பதே இலக்காக இருக்கிறது. அதனால், இந்த அணுகுமுறையை மாற்றியமைத்து வெற்றியை நோக்கமாக நாம் உருவாக்க வேண்டும்.

என்ன சத்குரு, உணர்வுரீதியில் இவ்வளவு பாதிப்பாய் உள்ளது, இவ்வளவு பெரிய இயற்கை சீற்றம் நடந்துள்ளது இந்த சூழ்நிலையில் இப்படி பதில் சொல்கிறீர்களே, என்கிறீர்களா? இதை நான் சொல்வதற்குக் காரணம், இந்த சீற்றங்களை வைத்துக் கொண்டு, அபத்தமான சூழலியல் விதிகளை உருவாக்குவார்கள். இவ்விஷயத்தை இதுபோன்று அணுகுவது சரியல்ல. பேரழிவுகளை உணர்வுரீதியாய் அணுகுவதால் பதில் கிடைக்காது. "இவ்விடத்தை சூழலியல் ரீதியாக அபாயமான இடமாக அறிவிக்க வேண்டும், யாத்திரைகளை தடை செய்ய வேண்டும்," என்று செய்தி சேனல்களில் மக்கள் அதற்குள்ளாகவே பேசத் துவங்கிவிட்டனர்.

இத்தனை மக்கள் எதற்காக அங்கு செல்கிறார்கள்? அவர்கள் வீட்டருகில் இருக்கும் கோயிலுக்கு அவர்கள் போகாமல் இவ்விடத்திற்கு ஏன் வருகிறார்கள்? என்பதை நாம் பார்க்கத்தான் வேண்டும். இந்த சீற்றத்திற்கு எதிர்செயலாய் நீங்கள் அபத்தமான விதிகளுடன் வருவீர்கள், ஆனால் சில வருடங்களிலேயே அவற்றை யாரும் பின்பற்றப் போவதில்லை. சில நாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு இயல்புநிலைக்கு வந்துவிடுவீர்கள். நம்மை நாம் வெற்றிகரமான ஒரு வியாபார நிறுவனமாக அணுக வேண்டும், நாம் தோல்வியில் துவளக் கூடாது. நம் பூமியையும் நம் இயற்கை வளங்களையும் நம் மனித வளத்தையும் பராமரிப்பது இந்த நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பாக இருக்க வேண்டும். நம் அணுகுமுறையை மாற்றி அமைப்பதற்கான நேரமிது.

இந்த தேசத்தில், மரணப் படுக்கையில் இருக்கும் ஒரு மனிதன் கூட இரண்டு சொட்டு கங்கை நீரை கேட்கிறான்...

இமாலயமும், இமாலயம் நமக்கு என்ன வழங்க முடியும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இமாலயத்தின் பொருளாதார வாய்ப்புவளம் நமக்கு முக்கியமல்ல, அதனுடைய ஆன்மீக சாரம்தான் மக்களுக்கு ஒரு உந்துதலாய் இருந்து வந்திருக்கிறது. உங்கள் பொருளாதாரத்தை நீங்கள் வேறெங்காவது செய்து கொள்ளலாம், கங்கையில்போய் நீங்கள் எழுபது நீர் தேக்கங்களை அமைக்கத் தேவையில்லை. இந்த தேசத்தில், இறக்கும் தறுவாயில் இருக்கும் ஒரு மனிதன் கங்கையிலிருந்து இரண்டு சொட்டு தண்ணீரை வேண்டுகிறான், ஆனால் அந்த தண்ணீர் 150 டர்பைன்களில் சுழற்சிக்கு உள்ளாகி அவன் நாவில் படுகிறது என்பதை இன்று நாம் அவனுக்கு சொல்லியாக வேண்டும்.

மனித உணர்வுதான் இந்த தேசத்தை பிணைத்திருக்கிறது. வெவ்வேறு தேசங்களுக்கு வெவ்வேறு தனிப்பண்புகள் உள்ளன. இந்தியாவிற்கோ கங்கையும் இமாலயமும் நம்மை பிணைப்பதில் முக்கிய காரணிகளாய் விளங்குகின்றன. இவற்றை நீங்கள் அழித்தால் பன்முகக் கலாச்சாரம் கொண்ட இந்த தேசத்து மக்களை இணைத்து வைப்பதில் சிக்கல் ஏற்படும். ஏற்கனவே இது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மக்கள் வெவ்வேறு திசைகளில் இழுத்துக் கொள்ள துவங்கிவிட்டனர். "நாம் ஏன் ஒன்றாக இருக்கிறோம்?" என்று மக்கள் நினைக்கத் துவங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. நான் வெகு தொலைவில் இல்லை என்று சொல்லும்போது, ஒரு தேசத்தின் வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில் 50 வருடம் என்பது ஒன்றும் அதிகம் இல்லை.

அதனால் இந்த ஒரு பேரழிவைப் மட்டுமோ அல்லது ஒரே ஒரு பேரழிவை மட்டுமோ பார்த்துவிட்டு, காமிராக்கள் அணைக்கப்பட்டவுடன் அனைத்தையும் மறந்துவிட்டு, நம் தொழிலைப் பார்க்க போகக் கூடாது. நாம் இந்தியாவை ஒரு நிறுவனமாக (Enterprise) அணுகி, அதனை அனைத்து நிலைகளிலும் வெற்றிகரமான நிறுவனமாக உருவாக்க வேண்டும்.

Love & Grace