மதி'யினம்'
நிலவைப் பாடாத கவிஞன் இல்லை, நிலவின் குளுமையை உணராத மனிதன் இல்லை. நிலவின் குளுமை இவரைத் தீண்டியிருக்கிறது! இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பெண் - கவிதையாய், மொழியாய்! தொடரட்டும் கருவறை தரிசனம்...
சத்குரு அவர்களால் வரையப்பட்ட ஓவியம், ஜனவரி 2012
சில வருடங்களுக்கு முன், ஸ்பந்தா ஹாலில், பாவ ஸ்பந்தனா வகுப்பு நடத்திக் கொண்டிருந்தேன். உச்ச தருணங்கள் ஒன்றில், பெண்மையின் தனித்தன்மைக்கு சாட்சியாக இருக்க நேர்ந்தது.
காற்றில் அதிதீவிரமாக பெண்மையின் தன்மை நிறைந்திருந்ததால் என் சக்தி, என் உடல் கூட ஒரு பெண் போல இருந்தது. இதுபோல் இருப்பது எனக்கு புதிதல்ல, ஆனால் அன்றைய தினம் இது பன்மடங்குப் பெருகி, மிக கம்பீரமாக நின்றது. நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து தோன்றினாலும் பெண்மையின் அடிப்படையில்தான் எத்தனை வித்தியாசம்!
இந்த யதார்த்தம் அன்று பிரம்மாண்ட வடிவம் கொண்டது. அன்று பெண்மையின் சாரத்தை நான் முழுமையாகப் பருகினேன். நான் சாட்சியாக இருந்த இந்த நிகழ்வில் என் கவனத்தை நிறுத்தியபோது அது கவிதையாய் வடிவம் பெற்றது.
இதோ அந்தக் கவிதை...
பெண்
நிலவின் நிழலாய் பேரானந்த நிகழ்வாய்
பிறந்திட்ட உயிர்களே
பகலில் சுடராய் திகழும் என்னுள் இருக்கும் சூரியன் மட்டும்
படைப்பு தந்த வரமாய் இல்லை உன் முன்னே
Subscribe
இரவின் மடியில் மடிந்து போனது சூரியனோ?
இருளின் குளிரில் கரைந்து போனது கதிரவனோ? நிலவே! உந்தன்
அருளின் அணைப்பில் நனைந்து போனது இந்த அகிலமன்றோ?
உருளும் பூமி உறங்கிடவே உன் கர்பத்தில் சுமந்தனையோ?
உயிருக்கெல்லாம் ஆதாரமாய்
உதயமான சூரியனே உயர்ந்தவனோ? அவனே
உன் குளிர் மடியில் குழந்தையென பிறந்தவனே!
கருத்துமில்லை காரணமுமில்லை
பித்து நிலை விளங்கவில்லை - எனினும் உன்
அன்புநிலை நம்பும் நிலைக் கொண்டான் - அந்த
படைத்தவனே உமக்கு பரிசாய் கொடுத்தான்!
உயிர் சுமக்க கருவறையும்
பால் சுரக்க நெஞ்சறையும்
பெண்மை மலரட்டும், பிரகாசமாய் ஒளிரட்டும்!
அவள் கருவறையின் கதகதப்பில்
உயிர் நனையும் பெரும்சுகத்தை
உலகம் உணரட்டும்!
ஆனந்தம் பரவட்டும்!
இன்று பெண்மையை இரண்டாம் தரத்திற்கு தள்ளிவிட்டிருப்பது நாம் படைப்பின் அழகை மொத்தமாக கொச்சைப்படுத்தி இருப்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. கடுமையான கலாச்சார மற்றும் சமய அணுகுமுறைகளே இதில் முக்கிய குற்றவாளிகள்.
அனைத்தையும் ஆள வேண்டும், மற்றவர்களைவிட சிறப்பாக இருக்க வேண்டும் என்னும் அற்பத்தனம்தான் ஆண்மை மேலானதென்ற மனப்பாங்கிற்கு காரணம். உடல் சார்ந்த விஷயங்கள், பொருட்களே உயர்ந்ததென்ற எண்ணம்தான் பெண் தன்மையின் படுகொலைக்கு ஆணிவேராகிவிட்டது. நல்லவேளை, தேவை இருந்ததால் நாம் பெண்களைக் கொல்லவில்லை!
மதம், நவீன அறிவியல், கார்ப்பரேட் கலாச்சாரம் - இவற்றிற்கு ஒரு ஒற்றுமை உண்டு. பெண் தன்மையின் பேரழிவிற்கு மிக முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதுதான் அது!
பெண்கள் சற்றே உயர் மட்டங்களில் செயல்புரிய தொழில்நுட்பம் உதவினாலும், அது ஆண் தன்மையின் களமாகவே உள்ளது துரதிஷ்டமானதே. வாழ்வதற்கு பொருள் தன்மையையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. இதை அங்கீகரிக்கும்போது, பெண் தன்மை இந்த சமூகத்தில் தனக்கான இடத்தை அடையும்.
என்னால் இதைப் பற்றி முடிவில்லாமல் பேசிக் கொண்டே இருக்க முடியும். இந்த பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சி கூட ஆண்களுக்கு தனியாக, பெண்களுக்கு தனியாக நடத்தப்படுவதே சிறப்பாக இருக்கும். தற்சமயம் நடைமுறை சிக்கல்களினால், சில இடங்களில் மட்டும் இருபாலாரும் இணைந்து செய்யும் பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இவற்றை தனியாக நடத்துவதன் மூலமே உச்சபட்ச பலன்களைப் பெற முடியும்.
இதனை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், சம்யமா நிகழ்ச்சியில் பெண் தன்மைக்கோ ஆண் தன்மைக்கோ இடமே கிடையாது. ஆனால் பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சி, ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி ஒருவரை செம்மைப்படுத்த அற்புத வாய்ப்பு!
உலகத்திற்கும், எனக்கும் செய்திருக்கும் செயல்களுக்காக, அந்த முழு மதியின் படைப்புகளுக்கு நான் தலை வணங்குகிறேன்!