ஆதியோகி - உத்வேகம் தூண்டும் உருவம்
இந்த வார சத்குரு ஸ்பாட்டில்... வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 112 அடி ஆதியோகி சிலையை நிறுவுவது பற்றியும், மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஆதியோகி சிலைகளை நிறுவுவது பற்றியும் பேசுகிறார் சத்குரு.
இந்த வார சத்குரு ஸ்பாட்டில்... வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 112 அடி ஆதியோகி சிலையை நிறுவுவது பற்றியும், மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஆதியோகி சிலைகளை நிறுவுவது பற்றியும் பேசுகிறார் சத்குரு.
ஈஷா யோகா மையத்தின் முன் 112 அடி ஆதியோகி சிலை ஒன்று நிறுவ இருக்கிறோம். ஏன் 112 அடி? ஏனெனில் அவர் 112 வழிமுறைகளை வழங்கினார். பதஞ்சலியோ, யோகாவில், 196 சூத்திரங்களைக் கொண்ட 8 படிகள் அல்லது அங்கங்களை வழங்கினார். நாம் 112ஐ தேர்ந்தெடுத்திருப்பதால் 196 ஐ விட 112 சிறப்பானது என்று பொருளா? அப்படியில்லை. 112ன் முக்கியத்துவம் என்ன என்றால் நீங்கள் இந்த 112 வழிமுறைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேவை இல்லை. அதில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்தால் போதும். ஆனால் 196 சூத்திரங்களைக் கொண்ட 8 அங்கங்களைப் பொறுத்தவரை, யோகாவில் முன்னோக்கி செல்ல, உங்களுக்கு எட்டுமே வேண்டும். இரண்டு அங்கங்களே எவ்வளவு பிரச்சனைகள் தருகின்றன என்று உங்களுக்குத் தெரியும். அப்படியிருக்கும் போது நான்கு அங்கங்களை உபயோகித்து நடக்க சொன்னால் அது இன்னும் அதிக பிரச்சனைதான். இரண்டு கால்களை பயன்படுத்தி நடப்பதை விட இது இன்னும் அதிக பிரச்சனைகளைத் தரும். எனவே சமநிலை கிடைப்பதில் பிரச்சனை சிறிது இருக்கும். ஆனால் ஆதியோகி இது போல வழங்கவில்லை. அவர் 112 வகைகளை வழங்குகிறார், படிகளை அல்ல. நீங்கள் அந்த 112ல் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் போதும், 112 யோகா வேண்டியதில்லை. ஒன்று போதும்.
உலகில் உள்ள அனைத்து சிலைகளிலும் 112 அடி உயரம் கொண்ட ஆதியோகியின் முகம்தான் மிகப் பெரிய முகமாக இருக்கும். அமெரிக்காவில்? ஆம், ரஷ்மோர் மலை இருக்கிறது. ஆனால் அந்த மலையில் உள்ள முகம் ஆதியோகி போல முழு முகமாக இல்லை. மேலும் இது உத்வேகம் தரும் ஒரு உருவமாக இருக்க வேண்டும் என்பது நமது விருப்பம். இது ஒரு விக்கிரகம் அல்ல, ஒரு குறிப்பிட்ட வகையிலான கோவிலும் அல்ல. மக்களிடம் உத்வேகம் தூண்டும் ஒரு உருவச்சிலை. அதனோடு சேர்த்து, மக்கள் சாதாரணமாக பயன்படுத்தக் கூடிய வகையில் எளிமையான ஆன்மீகப் பயிற்சிகளும், கருவிகளும் இருக்கும். பிரார்த்தனைக்காக இல்லாமல், ஒரு வலிமையான இருப்பை உணர்த்தும் வகையில், தெய்வீகத்தை மேலே தேடத் தேவையில்லாத வகையில் ஒரு கோவில். உருவம் மிக உயரமாக இருப்பதால், முகத்தைப் பார்க்க நீங்கள் அண்ணாந்து பார்க்க வேண்டும். ஆனால் தெய்வீகம் நோக்கிய தேடலில் மேலே பார்க்கத் தேவையில்லை. கண் மூடி அமர்ந்து உணர முடியும். சொர்க்கத்தில் இருந்து உங்கள் இதயம் நோக்கிய நகர்வு இது. சொர்க்கத்தில் இருக்கும் தெய்வங்களோடு எவ்வகை பரிமாற்றமும் செய்வதில் எனக்கு விருப்பம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சொர்க்கத்தில் வாழும் கடவுள் குறித்து எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. அவர் இங்கே வந்து வாழ விருப்பம் கொண்டால் அப்போது எனக்கு அவர் குறித்து ஆர்வம் இருக்கும். என்னைப் பொறுத்த வரை அவர் இங்கேதான் இருக்கிறார். தெய்வீகம் என்பது வாழ்க்கைக்குப் பிறகான தேடலாக இல்லாமல், உடன் வாழும் ஒரு இருப்பாக உணரக்கூடிய புத்திக் கூர்மை அனைவருக்கும் ஏற்படுவதை உறுதி செய்ய விரும்புகிறேன். இங்கேயே, இப்பொழுதே, அங்கே மேலே அல்ல.
நாட்டின் நான்கு மூலைகளிலும் 112 அடி உயர சிலை நிறுவுவதுதான் நோக்கம். இப்போதே, மும்பை வாசிகள் இதில் மிகத் தீவிரமாக உள்ளனர். அடுத்த இரண்டு மாதங்களில் தகுந்த நிலப்பரப்பு கிடைத்து விட்டால், ஒரு சிலைக்கு பதிலாக இரண்டு செய்ய ஆரம்பித்து விடுவோம். இங்கே இருப்பவரைவிட மும்பையில் இருக்கும் ஆதியோகிக்கு சிறந்த வெளிப்பாடு நிச்சயம் இருக்கும். ஆனால் நம்மவருக்கு, அதாவது இங்கே இருப்பவருக்கு மலையின் பின்னணி இருக்கிறதே! இவருக்கு பின்னால் வெள்ளியங்கிரி மலை இருக்கிறது. எனவே இவருக்கு போட்டியாக யாரும் இருக்க முடியாது!
Subscribe