யோகா செய்யும்போது தூக்கம் வருகிறதே...
சத்குரு, சாதனா செய்யும் பொழுது நான் தூங்கி விடுகிறேன். நான் எதோ அசதி என்று நினைத்தேன் ஆனால் எப்போதெல்லாம் கண்மூடி தியானம் செய்கிறேனோ, நான் தூங்கி விடுகிறேன். எப்படி விழித்திருப்பது?
சத்குரு:
Subscribe
முதலில் நாம் தூக்கத்தைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.. பகலில் எந்த நேரமானாலும் உங்களுக்குத் தூக்கம் வருகிறது என்றால் முதலில் உங்களின் உடலில் எதாவது ஆரோக்கியக் குறைவு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உங்கள் உடல் நிலை சரியில்லை என்றால் தூக்கம் அதிகமாவது சாதாரணம். ஏனென்றால் உடலுக்கு ஓய்வு தேவை.
இரண்டாவது நாம் சாப்பிடும் உணவு. நம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறிதளவேனும் சைவ உணவு - அதிலும் வேக வைக்காத பச்சை காய்கறியோ பழங்களோ, மிக முக்கியம். சமைத்த உணவில் பெருமளவு பிராணசக்தி அழிந்து விடுகிறது. அதனாலேயே உங்கள் உடம்பில் சோம்பேறித்தனம் குடி ஏறுகிறது. சிறிதளவேனும் உயிரோட்டமுள்ள பச்சை காய்கறியோ பழமோ சாப்பிடுவதால், உடனடி பலன் என்னவென்றால் உங்கள் தூக்கத்தின் தேவை மிகவும் குறைந்துவிடும்.
முக்கியமாக நீங்கள் உங்கள் சக்தியை எப்படி கையாள்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் சுறுசுறுப்பு இருக்கும். நீங்கள் தியானம் செய்ய விரும்பினால், மனம் மட்டுமல்ல, உங்களின் சக்தி நிலை சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். சாமான்யமாக யோக பாதையில் இருப்பவர்கள் இருபத்திநான்கு கவளம் உண்ண வேண்டும் என்று சொல்லப்பட்டது, ஒவ்வொரு கவளத்தையும் இருபத்திநான்கு முறை வாயில் மென்று பின் முழுங்க வேண்டும் என்று சொன்னார்கள். இதனால் உங்கள் உணவு உள்ளே செல்லும் முன் வாயிலேயே செரிமானத்திற்கு தயார் செய்யப்படுகிறது. இதனால் சோம்பேறித்தனம் உண்டாகாது.
இதை நீங்கள் இரவு உணவு உண்ணும்பொழுது கடைபிடித்தீர்களானால், நன்றாகத் தூங்கி, தியானம் செய்ய தயாராக காலை மூன்றரை மணிக்கு எழுந்து விடுவீர்கள். யோக கலாச்சாரத்தில் இந்த நேரத்தை ‘பிரம்ம முஹூர்த்தம்’ என்று அழைத்தார்கள். அந்நேரத்திற்க்கு எழுந்து பயிற்சி செய்வதுதான் மிக சிறந்தது, ஏனென்றால் இயற்கையே உங்கள் சாதனாவுக்கு அந்த நேரத்தில் உதவி புரியும். விடியற்காலை தலைக்கு குளித்து விட்டு, ஈரத்தலையுடன் சாதனாவை துவங்கினால் சுறுசுறுப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருப்பீர்கள். காலை உணவிலும் இருபத்திநான்கு கவளங்கள் உணவு உண்டால், இரவு உணவு நேரம் வரை தூக்கமே வராது. ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் கழித்து உங்களுக்கு பசி எடுக்கும். அப்படி உணர்வது நல்லது. ஆனால் பசி எடுக்கும்போதெல்லாம் உண்ண வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. தண்ணீர் குடியுங்கள் அது போதும் உங்களை சுறுசுறுப்பாக, சக்தியாக நாள் முழுவதும் இருக்க முடியும். உங்கள் உடல் நீங்கள் உண்ட உணவை, வீணாக்காமல் நன்று உபயோகப்படுத்திக்கொள்ள தெரிந்து கொள்ளும். இயற்கை சூழலுக்கும், பொருளாதார சூழலுக்கும் இது மிக உகந்தது - இப்படி உணவு பழக்கம் இருந்தால் உங்கள் ஆரோக்கியமுமும் நன்றாக இருக்கும்.