விநாயகர் சதுர்த்தியன்று, சத்குரு நமக்கு, கணபதி எவ்வாறு அவரது தனித்துவமான தலை மற்றும் குறிப்பிடத்தக்க புத்திசாலித்தனத்தைப் பெற்றார் என்பதைப் பற்றிய கதைகளைக் கூறுகிறார். மேலும், இன்று நமது வயிற்றை நிரப்புவதோடு மட்டுமல்லாமல், மூளைத் திறன்களை அதிகப்படுத்திக்கொள்வதற்கும் உகந்தநாள் என்பதையும் அவர் விளங்கக் கூறுகிறார்.

சத்குரு:

சிவன் சற்றே நாடோடியான கணவன். அவர் அடிக்கடி வருடக்கணக்கில் எங்கேயாவது அவரது கால்போன போக்கில் சென்றுவிடுவார். அந்த நாட்களில் அலைபேசியும் மின்னஞ்சலும் இல்லை, அதனால் சிவன் அப்படிச் சென்றுவிடும்போது, பார்வதிக்கு அவருடன் எந்த விதத்திலும் தொடர்பே இல்லாமலிருந்தது. இப்படியே பல நாட்கள் அவள் தனிமையில் இருக்க நேர்ந்தது. சிவனுடைய இயல்பின் காரணமாக – அவர் யக்ஷஸ்வரூபன் அல்லது மனித மூலம் இல்லாதவர் என்று கருதப்பட்டார் – பார்வதியால் அவருடைய கருவைச் சுமக்க இயலவில்லை.

அவள் தன்னிலிருந்து ஒரு பகுதியாக, தன் உடலில் பூசியிருந்த சந்தனத்தை எடுத்து அங்கேயிருந்த மண்ணுடன் கலந்து, ஒரு குழந்தையின் உருவத்தைச் செய்து அதற்குத் தன் மூச்சைக்கொடுத்து உயிர்ப்பித்தாள்.

அதனால் அவளுடைய தனிமை, ஆசை மற்றும் தாய்மையின் உந்துதலின் காரணத்தால், அவளே ஒரு குழந்தையை உருவாக்கி அதற்கு உயிர்கொடுக்க முடிவுசெய்தாள். அவள் தன்னிலிருந்து ஒரு பகுதியாக, தன் உடலில் பூசியிருந்த சந்தனத்தை எடுத்து அங்கேயிருந்த மண்ணுடன் கலந்து, ஒரு குழந்தையின் உருவத்தைச் செய்து அதற்குத் தன் மூச்சைக்கொடுத்து உயிர்ப்பித்தாள். இதை நம்புவது கடினமாகத் தோன்றலாம், ஆனால் இதற்கு ஒப்பான விஷயங்களை இன்றைக்கு அறிவியல் கூறிக்கொண்டிருக்கிறது. உங்களிடமிருந்து ஒரு செல்லை எடுத்து வைத்திருந்தால், பின்னொரு நாளில் அதிலிருந்து வேறு ஏதோ ஒன்றை நாம் செய்யமுடியும். ஆகவே பார்வதியும் தானே உருவாக்கிய வடிவத்துக்கு மூச்சைக் கொடுத்து உயிரூட்டியதும், சிறுவன் ஒருவன் பிறந்தான்.

சிலவருடங்களுக்குப்பின், அந்தச் சிறுவன் பத்துவயதாக இருக்கும்போது, சிவன் தன் கண பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார். பார்வதி அப்போது குளித்துக் கொண்டிருந்தார். ஆகவே அந்தச் சிறுவனிடம், அந்த வழியாக ஒருவரும் வராதவாறு பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்றிருந்தார். சிறுவன் சிவனை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்பதால், அவர் வந்தபோது சிவனை அந்தச் சிறுவன் நிறுத்தினான். சிவன் அப்போது ஒருவிதமான உணர்வில் இருந்தார் – எவராலும் தடுக்கப்பட விரும்பாத நிலை – ஆகவே அவர் தன் வாளை உருவி எடுத்து, அந்தச் சிறுவனின் தலையைக் கொய்துவிட்டு, பார்வதியிடம் வந்தார்.

சிவனுடைய ரத்தம் படிந்த வாளைப் பார்த்தவுடன் என்ன நடந்திருக்கக்கூடும் என்று பார்வதி அறிந்துகொண்டார். அங்கே சிறுவன் தலையில்லாமல் விழுந்துகிடப்பதைக் கண்டதும் அவள் மிகுந்த கோபம் கொண்டாள். சிவன் பார்வதியைச் சமாதானம் செய்யும் முயற்சியில், “பரவாயில்லை, அவன் உண்மையில் உன் மகனல்ல. அவனை நீ உருவாக்கினாய். நான் அவனை முடித்தேன். அதனால் என்ன பிரச்சனை,” என்று கூறினார். ஆனால் அதைக் கவனிக்கும் மன நிலையில் பார்வதி இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கணபதியின்பிறப்பு

இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்காக, சிவன் தன்னுடைய கணங்களுள் ஒன்றின் தலையை எடுத்து சிறுவனுடைய உடலின் மீது பொருத்தினார். தலை மாற்றிப் பொருத்திய இந்த நாள்தான் விநாயகர் சதுர்த்தி. கணங்களின் தலைவனுடைய தலையைக் கொய்து, இந்தச் சிறுவனின் மீது பொருத்திய காரணத்தினால், சிவன் அச்சிறுவனிடம், “இப்போதிலிருந்து, நீ ஒரு கணபதியாவாய். நீதான் கணங்களின் தலைவன்”, என்று கூறினார். பின்னாட்களில், ஏதோ ஒரு காலகட்டத்தில், காலண்டர் கலைஞர்கள் இந்தப் படைப்பைப் புரிந்துகொள்ள முடியாமல் யானையின் முகத்தை வரைந்து விட்டனர். எப்படி எலும்புகள் இல்லாத கை கால்கள் கணங்களுக்கு இருந்தன என்பது குறித்து மரபுவழி ஞானம் பேசுகிறது.

சிவன் தன்னுடைய கணங்களுள் ஒன்றின் தலையை எடுத்து சிறுவனுடைய உடலின் மீது பொருத்தினார். தலை மாற்றிப் பொருத்திய இந்த நாள்தான் விநாயகர் சதுர்த்தி.

இந்தக் கலாச்சாரத்தில்,எலும்பில்லாத கைகள் என்றால், ஒரு யானையின் தும்பிக்கை என்பது பொருள். அதனால் வரைகலைஞர்கள் அதை யானைத் தலையாக வரைந்தனர். நீங்கள் மானசரோவரின் கரைகளில் யானைகளைக் காணப்போவதில்லை, ஏனென்றால் அந்த நிலப்பரப்பு யானைக்குச் சரியானதல்ல. ஒரு யானைக்குப் போதுமான தாவரவகை அங்கு இல்லை. ஆகவே சிவனும் யானைகளை வெட்டியிருக்க முடியாது. இதன் காரணமாக, அவர் கணேசன், கணபதி, வினாயகர் என்று பலவாறாக அழைக்கப்படுகிறார், ஆனால் அவர் கஜபதி அல்ல.

கணங்கள் சிவனின் நண்பர்கள். அந்த கணங்கள் எங்கிருந்து வருபவை என்பது நமக்குத் தெரியவில்லை, ஆனால் அவைகள் இந்த பூமியை சேர்ந்த உயிர்கள் இல்லை என்று பொதுவாக மரபு விவரிக்கிறது. அந்த உயிர்களின் தன்மை, நாம் இங்கு உயிர் என்பதை எப்படி அறிந்திருக்கிறோமோ, அதிலிருந்து மிகவும் வித்தியாசமானது.

ஒரு ஒற்றை-உயிரணு பிராணியிலிருந்து, பல்வேறு சிக்கலான வடிவங்களாகவும், மேலும் ஒரு மனிதனாகவும் இருப்பதென்பது என்ன ஒரு அதிசயமான மாற்றமாக உள்ளது என்பதைப்பற்றி, இன்றைக்கு நவீன உயிரியல் மிகவும் தெளிவாக உணர்கிறது. ஆனால் உயிரின் அடிப்படையான இயல்பு ஒன்றேதான் – அது மாற்றமடைந்திருக்கவில்லை. அது மென்மேலும் சிக்கலாகிக்கொண்டு மட்டும் இருக்கிறது. இருப்பினும், கணங்கள் இதேவிதமான உயிரின் இயல்பில் இருக்கவில்லை. அவர்கள் பூமியின் மீது உருவாக்கப்படவில்லை. தவிர அவர்களுக்கு எலும்புகள் இல்லாத கை கால்கள் இருந்தன.

உங்களது உடம்பைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்துவதற்கு நீங்கள் முயற்சி செய்தால், ஆசனங்கள் செய்ய முயன்றால் உங்களுக்கு எலும்புகள் இல்லாமல் இருப்பதை விரும்பியிருப்பீர்கள். எனக்குப் பதினொரு வயதிருக்கும்போதே நான் யோகா செய்ய ஆரம்பித்தேன். இருபத்தைந்து வயதில் நான் ஹடயோகா கற்றுக்கொடுக்கும்போது என்னைப் பார்த்து மக்கள், “ஓ, உங்களுக்கு எலும்புகள் இல்லை. நீங்கள் எலும்புகள் அற்றவர் என்று கூறினர். ஒவ்வொரு யோகிக்கும் இது ஒரு கனவு: என்றைக்கோ ஒருநாள் அவருக்கு எலும்புகளற்ற கை கால்கள் அமையும்; அப்போது அவர் விரும்பும் எந்த ஆசனத்தையும் அவரால் செய்ய இயலும்.

நன்கு உணவருந்திய அறிஞர்

பல ஆயிரக்கணக்கான வருடங்களாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. கணபதி இந்தியாவின் மிகவும் பிரபலமான, அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் தெய்வங்களுள் ஒருவர். அவர் மிகவும் இணக்கமானவர். பலவடிவங்களிலும், நிலைகளிலும் அவர் தோற்றமளிக்கிறார். கற்றலின் கடவுள்; அறிவிற்சிறந்த கல்விமான். அவருடைய கல்வித் திறன்களைக் குறிக்கும் விதமாக எப்போதும் ஒரு புத்தகம், பேனாவுடன் அவர் சித்தரிக்கப்படுகிறார். சாதாரண மனிதத்திறங்களையும் கடந்த அறிவாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் கொண்டிருந்தார்.

உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரிடமும், எல்லாவற்றுடனும் நீங்கள் முழுமையாக இசைந்திருப்பதும், குறைந்தபட்ச அளவிலான உராய்வுடன் உங்களுக்குள்ளும் வெளியேயும் வாழ்வை நீங்கள் உணர்ந்து செல்வதும் புத்திசாலித்தனத்தின் அறிகுறி.

அவருக்கு உணவு மிகவும் பிடித்தமான விஷயம். வழக்கமாக ஒருவர் அறிஞராகத் தோன்றவேண்டுமென்றால், அவர் மெலிந்த தோற்றம் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இவர் நல்லவிதமான, ஊட்டமளிக்கப்பட்ட அறிஞர். அவருடைய பெரிய தொப்பையைப் பார்த்து, இந்நாளில், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நன்றாகச் சாப்பிடுவது மட்டும்தான் என்று பொதுவாக மக்கள் நம்புகின்றனர்.

மக்கள் பெருத்த தொந்தியை மட்டும் பார்த்துவிட்டு, அவரது புதிய தலைக்குள் இருந்த மிகப் பெரிய மூளையைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அதுதான் மிக முக்கியமான விஷயம். அவருடைய தொந்தி பிற்பாடு வளர்ந்தது. அவ்வளவு பெரிய தலையுடன், நடப்பதென்பதையே அவர் உணராமல் இருந்திருக்கலாம்! ஆனால் முக்கியமான விஷயம், அவருடைய புத்திசாலித்தனம் பல்கிப் பெருகியது. அதனால் இது உணவு அருந்துவதற்கான நாள் மட்டும் அல்ல. இந்த நாள், உங்கள் வயிற்றை அல்ல, மூளையைப் பெருகச் செய்வதற்கான ஒரு நாளாக இருக்கிறது.

நல்லவரா?வல்லவரா?

மனித இனம் எப்போதும் நல்லவர்களை உருவாக்கும் ஆபத்தான தவறைச் செய்து வந்துள்ளது. நமக்கு நல்லவர்கள் தேவைப்படுவதில்லை, நமக்கு வல்லவர்கள் தேவைப்படுகின்றனர். உங்களுக்குப் புத்தியிருந்தால் நீங்கள் சரியான விஷயத்தையே செய்வீர்கள். புத்தி இல்லாததால்தான் மக்கள் முட்டாள்தனமான விஷயங்களைச் செய்கின்றனர்.

புத்திசாலித்தனம் என்பது விவேகமாக இருப்பதையோ, திறமைசாலியாக இருப்பதையோ குறிப்பதில்லை. நீங்கள் உண்மையாகவே புத்திசாலியாக இருந்தால், நூறு சதவிகிதம் இந்த பிரபஞ்சத்தோடு இசைந்து இருப்பீர்கள். வேறு எப்படியும் புத்திசாலியாக இருக்க வாய்ப்பில்லை. உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரிடமும், எல்லாவற்றுடனும் நீங்கள் முழுமையாக இசைந்திருப்பதும், குறைந்தபட்ச அளவிலான உராய்வுடன் உங்களுக்குள்ளும் வெளியேயும் வாழ்வை நீங்கள் உணர்ந்து செல்வதும் புத்திசாலித்தனத்தின் அறிகுறி.

விநாயகர் சதுர்த்தி, உங்கள் புத்திசாலித்தனத்தைப் பெருக்குவதற்கான முயற்சிகளைத் துவக்குவதற்கு உரியநாள். நீங்கள் காலையில் ஆசனங்கள் செய்து எலும்பில்லாத அங்கங்கள் பெறுவதற்கு முயன்றால், அது நிகழக்கூடும்!

 

சத்குரு App... இப்போது தமிழில்! இப்போதே டவுன்லோட் செய்யுங்கள்... இலவசமாக!

சத்குருவின் கருத்தாழமிக்க செய்தியை குருவாசகமாக உங்கள் மொபைலில் பெற்று, தினசரி உங்கள் நாளினை புதுத் தெளிவுடன் துவங்க சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.